வெள்ளி, அக்டோபர் 05, 2012

கூடங்குளம் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை கண்டித்து வழக்கறிஞர்களின் அறப்போராட்டம் !!



மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி,  பிரிட்டிஷ் அரசை விமர்சித்து யங் இந்தியாபத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக 1922ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124(A) பிரிவின்படி தேசத்துரோக குற்றம் சாட்டியது ஆங்கிலேய அரசு. இந்த வழக்கு விசாரணையின்போது "இந்த அரசுக்கும் ஆட்சிக்கும் எதிராக எழுதுவதும் பேசுவதும் எனக்கு உணர்வுப் பூர்வமான விஷயமாக உள்ளது. தேசப்பற்று என்பதைச் சட்டத்தின் மூலம் உருவாக்கவோ, முறைப்படுத்தவோ முடியாது. இந்த 124(A)  என்கிற சட்டப் பிரிவு என்பது கருத்துச் சுதந்திரத்தை அடக்கவும் ஒடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்களில் முதன்மையானது'' என்று காந்தி குறிப்பிட்டார்.

 1951-ல் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, நாடாளுமன்றத்தில் "இதுபோன்ற கண்டனத்துக்கு உரிய சட்டப் பிரிவு எதுவுமே இருக்க முடியாது என்றும், இதை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ அவ்வளவு நல்லது!” என்றும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த சட்டத்தை உருவாக்கிய ஆங்கிலேயரே இச்சட்டத்தை 2010ம் ஆண்டில் அவர்கள் நாட்டிலிருந்து முழுமையாக அகற்றிவிட்டனர். ஆனால் இங்கிலாந்திலிருந்து சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் இந்தியாவிலோ இந்த கருப்புச் சட்டம் இன்றும் அமலில் உள்ளது.

இன்றைய இந்திய அரசை விமர்சிப்பவர்கள் மீதும் இந்த கருப்புச்சட்டம் இரக்கமின்றி ஏவப்படுகிறது. சராசரி இந்தியக்குடிமகனின் மனசாட்சியாக விளங்கும் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் அரசின் மருத்துவக்கொள்கைகளை விமர்சித்த மருத்துவர் பிநாயக் சென் போன்றவர்களையும் இந்த சட்டம் முற்றுகையிடத் தவறவில்லை.

தங்கள் வாழ்வுரிமைக்காக நடைபெறும் மக்கள் போராட்டங்கள் அனைத்தையும், தம் ஆட்சியை கவிழ்க்கும் சதியாகப் பார்த்து பீதியடையும் ஆட்சியாளர்கள், போராடும் மக்களை ஒடுக்குவதற்கு அறமற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துகின்றனர்.

இன்று தங்கள் வாழ்வுரிமைக்காக போராடும் கூடங்குளம் பகுதி மக்களையும் இவ்வாறே அடக்கி ஒடுக்கும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்திற்கு சுமார் 25 ஆண்டு கால வரலாறு உள்ளது. 1986ம் ஆண்டிலேயே இந்த போராட்டம் தொடங்கிவிட்டது. நெடுஞ்செழியன், அசுரன், பாமரன், டி.என்.கோபாலன், ஞாநி, ஏ.எஸ். பன்னீர் செல்வம், நாகார்ஜுனன் போன்ற பத்திரிகையாளர்கள்-எழுத்தாளர்கள்; செ. நெ. தெய்வநாயகம், வி.டி. பத்மநாபன், புகழேந்தி, ரமேஷ் போன்ற மருத்துவர்கள்; அன்டன் கோமஸ், சுப. உதயகுமார் போன்ற சமூகத் தலைவர்கள் – ஆர்வலர்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வந்தனர். கூடங்குளம் அணுஉலைக்கு முறையே அப்போதைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, அப்போதைய குடியரசு தலைவர் திரு.ஆர். வெங்கட்ராமன், அப்போதைய தமிழக முதல்வர் திரு. கருணாநிதி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, மக்களிடம் இருந்த எதிர்ப்பின் காரணமாக இந்த விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு, ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணு உலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு எதிரான பரப்புரைகள் பெருகின. அணுஉலைகளால் ஏற்படும் ஆபத்து குறித்த அச்சம் அனைத்து மக்களையும் ஆட்கொண்டது.  இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரவேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மாறாக கூடங்குளம் மக்களைச் சந்தித்து அவர்களது பீதியை அதிகப்படுத்தும் அளவிலான வகுப்புகளை அணுமின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.

'அணு உலை வெடிச்சா, நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? முகத்தை மூடிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடணும்என்று தொடங்கி 'ஆறு மாதங்களுக்கு ஊருக்குள் நீங்கள் வரக்கூடாதுஎன்பது வரை வார்த்தைகளால் ரத்தத்தை உறைய வைத்தனர். தாங்கள், சாவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதை கூடங்குளம் மக்கள் அப்போதுதான் உணர ஆரம்பித்தனர். உடனே, 'கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெருமுனைப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். மாதத்துக்கு ஒரு கிராமத்தில் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட, பெண்கள் மட்டும் இதில் கலந்துகொள்வது என்று முடிவானது. முதலில் கூடங்குளம்... அடுத்து இடிந்தகரை... கூத்தங்குழி... பெருமணல்... வைராவிக் கிணறு... கூடுதாழை... செட்டிக்குளம் என்று போராட்டம் பரவியது. மாதத்துக்கு ஓர் ஊர் என்று இருந்ததை, தொடர் உண்ணாவிரதமாக மாற்றினர். இடிந்தகரையில் பந்தல் போட்டு 127 பேர் உட்கார்ந்தனர். இதனைத் தொடர்ந்து கூடங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது தமிழக அரசு. இந்த தடை இன்று வரை நீக்கப்படவில்லை.

 இவ்வாறு ஆரம்பித்து கடந்த சுமார் 400 நாட்களை கடந்தும் வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காமல் தொடரும் இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 10-9-2011 முதல் 29-12-2011 வரை மட்டும் அரசு மக்களுக்கு எதிராக 107 குற்ற வழக்குகளைப் பதிவு செய்தன. 55795 பேருக்கு எதிராக இத்தகைய வழக்குகள் உள்ளன. குறிப்பாக 6800 பேர்மீது “தேசத்துரோகம்” மற்றும் அல்லது “தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல்” ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வழக்குகள் இன்று வரை தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் மீது பதிவு செய்யப்படுகின்றன.  

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அல்லது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்கூட ஒரு காவல்நிலையத்தில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் இத்தகைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! இது சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் செயலாகும். அமைதியான வழியில், ஜனநாயக முறையில் போராடும் மக்கள் மீது இத்தகைய வழக்குகளை பதிவு செய்வது, எதிர் கருத்துகளை நசுக்குவதற்கே! சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு அல்ல!!

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியதை அடுத்து, கடந்த செப்டம்பர் 10, 11 தேதிகளில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.  போராட்டத்தை அடக்குவதற்கு எவ்வித அடிப்படை நியாயங்களும் இல்லாமல் காவல்துறை மக்கள் மீது புரிந்த வன்முறைகள் ஊடகங்கள் மூலம் உலகதிற்கு வெட்டவெளிச்சமானது.

ரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரையில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையை அவர் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட கேள்வி குரூரத்தின் உச்சம்: ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?'' இது ஒரு உதாரணம்தான்!

 ''கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சிச் சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது அரசு இயந்திரம்! '' என்பதை போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன் வெளிப்படுத்தியுள்ளார்.

"போராட்டக்களத்தில் இருந்தவர்களை மட்டுமல்ல, கூடங்குளம், இடிந்தகரை, வைராவிக்கிணறு உள்ளிட்ட கிராமங்களில் அவரவர் வீடுகளில் இருந்தவர்களையும் காவல்துறை பலவிதங்களிலும் துன்புறுத்தியுள்ளது. சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரையும் தாக்கியும், கீழ்த்தரமான வார்த்தைகளால் ஏசியும், பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்" என்று மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் கூடங்குளம் சென்ற உண்மை அறியும் குழுவின் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

 இதைத் தொடர்ந்து 7 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளத்தை சேர்ந்த கருணாசாகர், முத்துகுமரேசன், வைராவிக்குளத்தை சேர்ந்த ராஜகுமார், இடிந்தகரையைச் சேர்ந்த கிஷன் ஆகிய நால்வரும் 16 வயதுகூட நிரம்பாத இளஞ்சிறார்கள்...சட்டப்படி சிறுவர்கள்! இவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு!  இவர்கள் மட்டும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அரசின் கருத்தை விமர்சிப்பதும், மாற்றுக்கருத்தை முன்வைப்பதும் மனித உரிமையே!

வாழ்வுரிமை கேள்விக்குறியாகும்போது போராடுவது அரசியல் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமையே!

மத்திய மாநில அரசுகளே
#  வாழ்வுரிமைக்கு போராடும் கூடங்குளம் மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசதுரோக வழக்குகளையும் மற்ற அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறு !

# கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து அமலில் உள்ள 144 தடை உத்தரவை உடனே திரும்ப பெறு !

# கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும்  உறுதி செய் !

-சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக