ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

நம்மாழ்வார் தொடுத்த போர் !

நம்மாழ்வார் இறப்புச் செய்தி வெளியான நாளிதழ்களின் மறுபக்கம் மற்றுமொரு செய்தியும் வெளியாகி இருந்தது. அது எம்.எஸ். சுவாமிநாதனின் மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்துதான். இது தற்செயலானதாகத் தோன்றினாலும், இந்திய விவசாய வரலாற்றின் திசைகளைச் சுட்டிக் காட்டும் இரு வேறு பாதைகளின் வரைபடம் என்றும் இணையாததாகவே உள்ளது. கடந்த 50,60 வருடமாக நாம் அதிகமாக நோயுற்று இருக்கிறோம், நோய்களின் பெயர்களும் நமக்கு நெறைய நேரம் தெரிவதில்லை, மருந்துக்கடைகளில் மருந்து வாங்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், மருத்துமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது, மருத்துவர்கள் கட்டடங்களுக்கு மேல் கட்டடங்கள் கட்டுகிறார்கள், வியாபாரம் அமோகம், கல்லாபெட்டி நிரம்பி வழிகிறது. 80 சதவீத மக்களின் நோயுற்ற உடல்களின் காரணம் என்ன? ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை நோய்களினால் முடக்கிப் போட அடிப்படை காரணமாக உணவு இருக்கிறது. ஒரு பன்னாட்டு அரசியல் காரணமாக நம்முடைய உணவு முறையும், விவசாய முறையும் மாற்றப்பட்டது, நம் முந்தைய அரசின், அரசியல்வாதிகளின் துணையோடு, 1960 களில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் நம்முடைய விவசாய முறை மாற்றப்படுவதற்கு, விடுதலை கிடைப்பதற்கு முன்பே போடப்பட்ட இந்த சதிதிட்டத்திற்கு பல்வேறு தொடர்ச்சியான காரணங்கள் உள்ளன.
நம்மாழ்வார் ஆரோவில் பெர்னார்டுடன் 
புகைப்படம் உதவி- பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ஆரம்பித்த நாளிலிருந்தே நம்முடைய பாரம்பரிய விவசாய முறையும், கல்வி முறையும் மாற்றப்பட்டு, அது இழிவானதாக சுட்டிக்காட்டும் போக்கு ஆரம்பித்து விட்டது. மக்களே தம்முடைய வாழ்க்கையை நாகரிகமற்றதாக எண்ணும் போக்கை ஆங்கிலேயர்கள் உருவாக்க ஆரம்பித்த காலத்திலிருந்து விடுதலை கிடைப்பது வரை பல்வேறு உலக நாடுகளின் விவசாய ஊடுருவல் நம்முடைய நாட்டில் இருந்தன. காந்தி புகழ்பெற்ற தலைவராயிருந்த போதிலும், அவரோடு இணைந்து பணியாற்றிய, தற்சார்பு சிந்தனைகளை விதைத்த ஜே.சி. குமரப்பா போன்றவர்களை நேருவின் படையினர் புதிய, நவீன இந்தியாவை உருவாக்குவதில் தடையாக இருக்கக்கூடும் என்று முதலிலேயே கண்டுகொண்டனர். பிரமாண்டமான இந்தியாவை உருவாக்குவற்காக ஜே.சி. குமரப்பா போன்ற சிறியவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். விவசாயத்தைப் பற்றிய ஆழமான கருத்துக்களை வைத்திருந்தாலும், பன்னாட்டு நவீன தொழில்நுட்பத்தை எதிர்த்து, 5000 வருட இந்திய விவசாய வரலாற்றை முன்வைத்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டார். அவருடைய எச்சரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. நாம் நோயுற்று இருப்பதின் முதல் விதை இதுதான்.

 பப்ளிகேசன் டிவிசன் 1960 களில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஒன்று Food weapon,(உணவு ஆயுதம்), இரண்டு weather weapon(தட்ப வெப்ப ஆயுதம்). இந்த இரண்டு புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தவர் வைகை குமாரசாமி, நாம் நோயுற்று இருப்பதை முதலில் உணர்ந்த தலைமுறையைச் சார்ந்தவர் அவர். புத்தகத்தின் கருத்துகள் எளிமையானவைதான், எல்லா அபாயங்களையும் போல, ஒரு நாட்டை அடிமையாக்குவற்கான எதிர்காலத் தொழில்நுட்பத்தை வலுவாக அப்புத்தகங்கள் முன்வைத்தன. ஒரு நாட்டின் உணவு முறைகளையும், தட்பவெப்பத்தினையும் மாற்றி அமைப்பதன் மூலம் அந்நாட்டை அடிமையாக்க முடியும் என்பதுதான். இதற்கான திட்டங்களின் முதல் படிதான் பசுமைப்புரட்சி.

 1960 களில் இச்சதித்திட்டம் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா தன்னுடைய போரை இந்தியாவின் மீது தொடங்கியது. போரை மிகவும் வெற்றிகரமாக நடத்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, சென்னையில் இருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லாமல் விவசாய விஞ்ஞானிக்கான விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை போரும் தொடர்கிறது. விருதுகளும் தொடர்கின்றன. எம்.எஸ். சுவாமிநாதனைத் தவிர இப்போரில் இந்தியாவின் மிக முக்கிய பார்ப்பனர்கள் ஈடுபட்டனர், அல்லது இந்த இந்த பார்பனர்தான் வேண்டும் என்று அமெரிக்கா அடம்பிடித்து சிவராமன் போன்ற பார்ப்பனர்களை நியமித்தனர். இந்த சிவராமன்தான் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அழித்து, நம் நிலக்காட்சிகளின் அழகையும், 500 வருட தமிழ்க்காட்சிப் படிமங்களையும் மாற்றியவர். கருவேல மரத்தை வலுக்கட்டாயமாக திணித்தவர், நம்முடைய காமராஜர் அல்ல. காமராஜர் ஆட்சிக்காலத்தில் சிவராமனால் திணிக்கப்பட்டது. இவ்வாறு தமிழனின் உடலையும், மனதையும் நிலைகுலையச் செய்யும் போர் இன்று வரை உக்கிரமாகத் தொடர்கிறது. போரின் விளைவுகள் தெரிந்ததே, மரணங்களும், துயரங்களும் . ஈழஇனப்படுகொலைக்குப் பின்னர் ‘ஒவ்வொறு அழிவுக்குப் பின்னரும் நெறைய வாய்ப்புகள் உள்ளன’ அன்று கூவிய எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இம்மரணங்களும், துயரங்களும் நடக்கும் என்று தெரிந்தேதான் பசுமைப்புரட்சியை அரங்கேற்றினார். இரண்டு லட்சங்களுக்கு மேலான விவசாயின் தற்கொலைகளுக்குப் பின்னும் அமெரிக்க பயணம் இன்றும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இரண்டு வருடங்களுக்கும் மேலான கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை வழிநடத்தும் சுப.உதயக்குமார், ‘பார்பனத்துவம், அணுத்துவம்’ என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அணுசக்தி துறையின் பெரும்பாலன அனைத்து தலைவர்களும், அதிகாரிகளும் பார்பனர்களே, இந்தியாவின் அணுசக்தி கொள்கைக்கும், அணு உலையினால் மக்கள் கொல்லப்படுவதற்கும் பார்பனர்களின் சதியே காரணம் என்று ஆராய்ந்து விளக்குகிறார் உதயக்குமார். அதே வாதம் பசுமைப்புரட்சிக்கும் பொருந்தும். மேல் நிலையிலிருந்து, நம்முடைய விவசாய முறை தவறு என்றும், பசுமைப்புரட்சியை அறிமுகப்படுத்தாவிடில் உணவுத்தட்டுப்பாடு காரணமாக பஞ்சம் வந்து எல்லோரும் சாக வேண்டியதுதான் என்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு முன் உணவுத்தட்டுப்பாடு வந்தது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதுதான். அதற்கான ஆதாரங்கள் உள்ளது. மேலும் இச்சதித்திட்டம் இந்திய விவசாயிகளின் மத்தியில் சுலபமாக நிறைவேற்றப்படவில்லை, நெறைய எதிர்ப்புகள் இருந்தன. அதிகாரத்தின் மூலமும், அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலியின் மூலமும், தினமணி போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சியான தலையங்களாலும் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் உச்சபட்சமாக ஹலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் போன்ற கொடிய விஷங்கள் நிலங்களில் தூவப்பட்டன. அதன் விளைவுகள் இன்னும் பயங்கரமாக உள்ளது. நாம் நோயுற்றதற்கான போர் இப்படித்தான் நடந்தேறியது. இக்கொடிய வரலாற்றை அறிந்தவர் சிலர், அறியாதவர் பலர். மருத்துவர்கள் கார்ப்பொரேட்டுகளாக மாறியதும் இதனால்தான். அனேக மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பாவர்களே தவிர, நீங்கள் நஞ்சான உணவு உட்கொள்ளுகிறீர்கள், உணவை மாற்றுங்கள் நோய்கள் குணமாகும் என்று சொல்வதில்லை.

 நம்மாழ்வார் குறித்த அஞ்சலிக்கட்டுரைக்கு இவ்வரலாறே அதிகம் என நினைக்கிறேன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பல்வேறு அழிவுகள் நடந்து விட்டன. சுற்றுச்சூழல் முன்னோடியான ரேச்சல் கார்சன் தன்னுடைய ’மொளன வசந்தம்’ புத்தகத்தில் முதலில் பூச்சிக்கொல்லியின் கொடுமையால் எவ்வாறு நிலமும், உயிரினங்களும் அழிந்தன என்பதை விளக்க ஆரம்பித்தார். ஒற்றைவைக்கோலில் புரட்சியை ஆரம்பித்தார் ஃபுகோகா சதித்திட்டங்கள் அம்பலமாக தொடங்கின. இந்தியாவிலும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் அமெரிக்க எம்.எஸ். சுவாமிநாதன் சதிகளை அம்பலப்படுத்தத் தொடங்கினர். வந்தனா சிவா, கிளாட் ஆல்வாரிஸ், ரிச்சார்யா போன்றோர் ஊடகங்களில் போரின் கொடுமையை விளக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் எஸ்.என், நாகராஜன், வைகை குமாரசாமி போன்றோர் மூர்க்கமாக இதை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். புளியங்குடியில் கோமதி நாயகம் விவசாய இயக்கம் இவர்களின் சிந்தனைப் புரட்சிகள் சிறப்பாக செயல்படுத்தியது. சிறுபத்திரிக்கைகள், குறுங்குழுக்கள் மத்தியில் வேகமாக பரவ ஆரம்பித்தன. இச்சூழலில்தான் விவசாயத்துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து பூச்சிக்கொல்லியின் கொடுரங்களை உணர்ந்து, புகோகாவின் தத்துவங்களைத் தரிசித்து வேலையை உதறி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு எதிராகத் தலைமையேற்று பெருந்திரள் விவசாய இயக்கமாக மாற்ற தன்னையே அர்ப்பணித்தார் நம்மாழ்வார். அன்றிலிருந்து அவர் சாகும் வரை எந்த கூட்டத்திலும் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன்களின் பேரை அவர் உச்சரிக்க மறந்ததில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஞானம், விவசாய வரலாற்றில் நேரடி அனுபவம், மண்ணோடும், சகதியோடும் கரைந்த விவசாய அறிவு என்று தமிழகத்தையும், உலகத்தையும் வலம் வரத் தொடங்கினார் நம்மாழ்வார். அவரது பயணங்கள் அசாத்தியமானது. தீவிரவாத இயக்களின் தலைவர்கள் போல இருஇரவுகள் அவர் ஒரே ஊரில் தங்கியதில்லை. பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு அவர் மூச்சாயிருந்தது. நோயுற்றவர்களும், விவசாயிகளும், இளைஞர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். பின் தொடர்ந்த படித்த இளைஞர்கள் விவசாயிகளாக மாறினர். அவரது நேரடியான விவசாய செயல் முறை விளக்கங்கள் மந்திரத்தன்மையுடையதாய் வசீகரமாக இருந்தது. சிந்தனையிலும் செயலிலும் சளைக்காத போராளியாக இருந்தார். 5000 வருட தமிழக விவசாய அறிவைத் தேடி அவற்றில் மூழ்கித் திளைத்தார். சிறு விவசாயச் செயல்பாடுகளும், கண்டுபிடிப்புகளும் அவரை குதூகலிக்கச் செய்தன. சிலந்தி வலைத் தொடர்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். சிலந்தி இல்லாமல் விவசாயம் இல்லை!

 நான் ஒரு மாத காலம் அவரோடு இரவு பகலாக பயணித்திருக்கிறேன். பயணங்களின் கவனக்குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். தன்னைத் தேடி வந்த இளஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தார். வெவ்வேறு ஊர்களில் பன்முகமான விவசாய பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒரு வறட்சியான ஊரையை மக்களின் துணையோடு காடாக மாற்றியிருந்தார், வெறு மரங்கள் நடுவதே சில ஊரில் செய்தார், கால்வாயிலிருந்து மீன்கள் விவசாய நிலத்திற்கு வந்து இரவு முழுவதும் எச்சமிட்டு அதிகாலையில் கால்வய்க்குத் திரும்பும் முறைகளை சில ஊர்களில் ஏற்படுத்தியிருந்தார், கால்நடைகளோடு இணைந்த விவசாயப் பண்ணை, தேனீக்களோடு இணைந்த பண்ணை, மண்புழு எரு மட்டுமே கொண்ட பண்ணைகள் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விவசாயமுறை என்றே அவர் பணி இருந்தது. ஒரே விவசாய முறையை எல்லா ஊர்களிலும் திரும்பத் திருப்பச் செய்யும் விசயத்தை அவர் ஒரு போதும் அவர் செய்வதில்லை. பெரும்பாலும் நீரில்லாத, விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களைத் தேர்தெடுத்து அதனை பசுமைப் பூமியாக மாற்றுவதில் அவருக்கு அதிகம் உற்சாகம் இருந்தது. எல்லாமே பசுமையாக மாறியது.

 விவசாயத்திற்கு பிறகு, அவர் பசுமைப் புரட்சியின் கொடுமைகளை ஊர் ஊராக விளக்குவதில் நாட்டுப்புறப் பேச்சாளராக மாறியிருந்தார். 2000 த்திற்குப் பிறகு பயணம் மட்டுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. நகரங்களில் பசுமைப் புரட்சியின் விளைவுகள், விதைகளைப் பாதுகாப்பது, பன்னாட்டு அரசியல் போன்றவை விரிந்தாலும், கிராமங்களில் நேரடியான கள அனுபவம், செயல்முறை விளக்கங்கள் என்று பேச்சைக் குறைத்தார். இடது சாரி சிந்தனை, திராவிட இயக்களின் பேச்சாற்றல், பெரியாரியம், தொல் தமிழ் அறிவு, போன்றவை கலந்து கதம்பமாக மிளிரின. 1960 களில் இவ்வளவு பெரிய கொடூரம் நிறைவேறியது எப்படி என்று இடதுசாரி இயக்கங்களோ, அரசியல் இயக்கங்களோ, தெரியாமல் இருந்தன?. மக்களின் வாழ்வையும், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிப்போடும் பசுமைப்புரட்சிக்கு இந்தியாவில் எல்லா அரசியல் இயக்கங்களும் எப்படி துணை போயின? என்ற கேள்வியும் எழுப்பினார். அதற்குப் பிறகும் கூட இடது சாரி இயக்கங்கள், தன்னைத் தனியாக விட்டுவிட்டன, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 பயணத்தில் நானும் அவரும் ஒரு பள்ளியில் தங்கினோம், இரவு உணவு வழங்கப்பட்டது. சமையல் நன்றாக இருந்தது என்றார், பாவமாய் ஓர் அம்மாவைக் கூட்டி வந்து, இவர்தான் சமைத்தார், இவருடைய கணவர் இறந்து விட்டார், மிகவும் துயரம் என்று ஒருவர் அறிமுகப்படுத்தினார் பரிதாப உணர்வோடு. "அற்புதம்! உன்னைப் பிடித்த கஷ்டம் ஒழிந்தது, விட்டு விடுதலையாகி நிம்மதியாக உன் வாழ்க்கையைத் தொடரு, இனிதான் உனக்கு விடிவு காலம்" என்றார் அந்த அம்மாவைப் பார்த்து, எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டனர், பின்னர் சிரித்தனர், அவர்தான் நம்மாழ்வார்.

 நம்மாழ்வாரின் திடீர் மரணம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இப்பொழுதுதான் எல்லாம் கூடிவருகிறது, மெதுவாகப் பற்றிப் பரவுகிறது என்று உற்சாகமான காலகட்டத்தில் நம்மைவிட்டு மறைந்து விட்டார். எனினும் நம்மாழ்வார் என்பது ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சி, அம்மரபின் நெருப்பை அணைக்காமல் பிறருக்கு கொண்டு செல்வதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

 ஏன் அதனை நெருப்பு என்று குறிப்பிடுகிறேன் என்றால், அது அவிக்கக்கூடியது. ஆனால் பசுமைப்புரட்சியின் சதிகாரர்களை அம்பலப்படுத்தி அவர் கூறியதை யாரும் மறந்து விடக்கூடாது, அவர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும், எந்தப் பூச்சிக்கொல்லிக்காகக் கடன் வாங்கி, அதனால் மனம் உடைந்து அதே பூச்சிக்கொல்லியை அருந்தி, தான் வேலை செய்த மண்ணில் விழுந்து, கைகளால் மண்ணைக்கட்டிக் பிடித்து தற்கொலை செய்தார்களோ, அந்த விவசாயிகளுக்கு நீதி வேண்டும், அதையே நம்மாழ்வாரின் நெருப்பு என்கிறேன். இந்த நெருப்பை நிறுத்தி விட்டால் நம்மாழ்வார் இல்லை, இந்த அரசியல் நெருப்பை அறியாமல் அவரை படிமக்குறியீடாக மாற்றுவதை எதிர்ப்போம். அவர் சாமியாரோ, அன்பானவரோ, ஜக்கி வாசுதேவோ இல்லை?

 2012 முதல் நம்மாழ்வாரின் பணி உக்கிரமடைந்தது, பாலாறு அழிவை மக்களுக்கு செய்தியாக்கி நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். பனை காக்க நடந்தார், கெயில் கேஸ்க்கு எதிராக விவசாயிகளோடு கைகோர்த்தார், அணுஉலைகளை எதிர்த்தார், விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடும் மீத்தேன் வாயுத் திட்டதை எதிர்த்தார். முதலில் அடையாளமாக உண்ணாவிரதம் இருந்தவர், இது கதைக்குதவாது என்று நேரடியாக மக்களைச் சந்தித்து வீரவுரையாற்றினார். உக்கிரமான போர் என்றே சொல்ல வேண்டும், அவர் இறப்பதற்கு முதல் நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை கடுமையாக எதித்துப் பேசினார். இறுதியாக அவரின் செய்தியாக மீத்தேன் வாயுக்காக விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த கற்களையும், வேலிக் கல்லையும், பிரித்துப் போட ஆணையிட்டார், விவசாயிகள் அக்கல்லைப் பிடுங்கி வீசினார். இது நம்மாழ்வாரின் செய்தி, அவர் தொடுத்த போர், போரைத் தொடர்ந்து நடத்துவோம், நம்மாழ்வாரை, உயிர்ப்பிப்போம்.

 -ஆர்.ஆர்.சீனிவாசன் 

 (தீராநதி பெப்ரவரி 2014 இதழில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்)