வியாழன், ஆகஸ்ட் 21, 2014

களவாடப்படும் மலைவளம் -சுப. உதயகுமாரன்

“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா?

அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல் லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். ஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது என்று சொன்னார்கள்.

தங்க நாற்கர சாலை தரையெங்கும் வழிப்பாதை என்று முடிவெடுத்த அரசுகள், சாலை ஒப்பந்தக்காரர்களோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்களாம். அதாவது அருகேயுள்ள குன்றுகளை, மலைகளை அடித்து உடைத்து சாலைப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அது. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம், உத்தரவு கிடைத்த பின்னர் ஒரு கணம் சும்மா இருப்பார்களா? ஒரு கல்லையாவது விட்டுவைப்பார்களா? அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும், மலையழிப்பு கனஜோராக இரவும் பகலும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ‘வளர்ச்சி’ பேய் பிடித்தாட்டும் நிலையில், பலருக்கும் மலையழிப்பு வாழ்வளிக்கும் வரப்பிரசாதமாகத் தோற்றமளிக்கிறது.

ஊரெங்குமுள்ள மலைகளை அரசுகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் கபளீகரம் செய்துகொண்டிருக்க, ஆங்காங்கிருக்கும் சில சிறப்பு மலைகளை, குன்றுகளை தனியார் நிறுவனங்கள் விழுங்கத் துடிக்கின்றன. திருவண்ணாமலை நகரின் அருகேயுள்ள இரும்புத்தாது நிரம்பிய கவுத்தி மலை, வேடியப்பன் மலை இரண்டையும் ஜிண்டால் நிறுவனம் தமிழக அரசின் உதவியுடன் விழுங்கி ஏப்பம் விட ஆவன செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த திமுக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், 2008ஆம் ஆண்டு இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மற்றும் மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 325 ஹெக்டேர் வனத்துறை நிலமும், 26,918 ஏக்கர் விளைநிலமும் கையகப்படுத்தப்படும். இந்தப் பகுதியிலிருந்து 9.30 கோடி டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க முடியும். வெறும் 180 பேருக்கு வேலை கிடைக்கும். ஏறத்தாழ 51 கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அரிய மூலிகைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். மலையைத் தோண்டும் அதிர்வுகளால், தூசியால், சத்தத்தால், பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்கள், மக்கள் பாதிக்கப்படுவர். ஆண்டவன் அண்ணாமலையாரின் பக்தர்களின் கிரிவலப் பாதைகூடப் பாதிப்படையும்.

நண்பர்களும் நானும் இந்த மலைகளைக் கடந்த ஜூன் மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். உள்ளூர்த் தோழர்களும் உடன் வந்தனர். எங்கள் வாகனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட அந்தப் பகுதி கிராமப் பெண்கள், நாங்கள் யார், என்ன வேண்டும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். எங்களைப் பற்றிச் சொன்னதும், தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். அனைவருமாக வேடியப்பன் மலைமீது ஏறினோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாம். மனதில் ஒன்றை நினைத்து வேண்டிக்கொண்டு இங்கே வந்து சென்றால், அந்தக் காரியம் நிச்சயம் கைகூடும் என்று ஆண்களும், பெண்களும் அடித்துச் சொன்னார்கள். கோவிலருகேயுள்ள சுனைநீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், நலம் கிடைக்கும் என்று மாசி எனும் பூசாரி சொன்னார். தண்ணீரைக் குடித்துப் பார்த்தபோது, அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

இந்தச் சுரங்கத் தொழிலால் உள்ளூர்ச் சந்தை கொழிக்கும் என்றும், உள்ளூர்த் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என்றும் ஜிண்டால் நிறுவனம் ஆசை காட்டுகிறது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும், நாட்டின் நலன்களும் உயரும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இருப்பதையும் இழந்துவிட்டு ஏதிலிகளாகி விடுவர் இம்மக்கள். கொள்ளை லாபம் பெறும் ஜிண்டால் நிறுவனத்தின் வருமானத்தில் ஒரே ஒரு சதவீதம் பணம் மட்டும் தமிழக அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்குமாம்.

சந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் மலைகளும் வியாபாரப் பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. இவையனைத்துமே மாற்றியமைக்கப்படத்தக்கவை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. கவுத்தி மலை, வேடியப்பன் மலை போன்றவற்றை நாம் கொண்டு வந்தோமா அல்லது கொண்டுதான் போகப் போகிறோமா எனும் ரீதியில்தான் ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் சிந்திக்கின்றன, செயல்படுகின்றன. இம்மலைகளின் வெளிப்புறத் தன்மைகளை, நன்மைகளை, சுற்றுப்புற மனித நல்வாழ்விற்கான பங்களிப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இம்மலைகளுக்குள் புதைந்துகிடக்கும் கனிம வளங்களை அள்ளி எடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும்தான் வளர்ச்சி என்று கொள்ளப்படும்போது, மலையழிப்பதே வாழ்வளிப்பது என்றாகி விடுகிறது.

ஆனால், கவுத்தி மலை, வேடியப்பன் மலைப் பகுதி மக்களோ மலையழிப்பது வாழ்வழிப்பதே எனக்கொண்டு நிராயுதபாணிகளாய் அறவழியில் பன்னாட்டு மலைவிழுங்கி மகாதேவன்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதிப் பெண்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்கள் போன்ற தமிழ்ப் பெண்களால்தான் நம் மலைகளும், கடல்களும், நிலமும், நீரும், காற்றும் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்)

நன்றி: காலச்சுவடு, ஆகஸ்ட் 2014

சனி, ஆகஸ்ட் 16, 2014

அம்பரப்பர் மலையில் அணுசக்திக் கழிப்பறை - சுப. உதயகுமாரன்

கடந்த 2014 பிப்ருவரி மாதத் துவக்கத்தில் நமது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஜம்முவில் நடந்த ‘அரவணைத்துக் கொள்ளும் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள்’ (Innovations in Science and Technology for Inclusive Development) எனும் தலைப்பிலான ‘இந்திய அறிவியல் காங்கிரசு’ நிகழ்வைத் துவக்கிவைத்தார். அப்போது தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு ரூ. 1450 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.

இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கும்போது, அத்திட்டம் கொண்டுவரப் போகும் நலன்களைப் பற்றியெல்லாம் இங்கே தமிழகத்துக்கு வந்து மக்களிடம் விளக்கிப் பேசி அறிவித்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். தமிழர்கள் தலையில் கட்டும் திட்டத்திற்காகக் காஷ்மீரத்தில் காசு அறிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டின் இனிய வெளிப்பாடு. அரவணைத்துக் கொள்ளும் வளர்ச்சி (Inclusive Development) அப்படித்தான் வேலை செய்யும்.

அறிவியல், வளர்ச்சிக்கிடையேயான தொடர்புகள் பற்றிச் சிந்தித்து, நியூட்ரினோ திட்டம் எந்த மாதிரியான அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்களை, வளர்ச்சியைப் பாமரத் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்குத் தரும் என்று நீங்கள் தொடர்ந்து அடுத்த கேள்வி கேட்டால், உங்களுடைய தேசபக்தியைச் சந்தேகிக்க வேண்டிவரும். எந்தத் தொண்டு நிறுவனம் உங்களை இப்படிக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது, எந்த நாடு அந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் உங்களுக்கும் காசு அனுப்புகிறது என்றெல்லாம் இந்திய உளவுத் துறை ஆராய வேண்டியிருக்கும்.

இந்த இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் (Indian Neutrino Observatory - INO) வான்வெளியில் சுற்றித் திரியும் நியூட்ரினோ துகள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமைக்கப்படுகிறதாம். புவியீர்ப்புவிசை அலை பரிசோதனையில் (Gravitational Wave Experiment) இது உலகிலேயே மூன்றாவது மையமாக அமையுமாம். 1954ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட அணு ஆய்வு செய்யும் ஐரோப்பியக் குழுவான CERN (Conseil Européen pour la Recherche Nucléaire) அமைப்பில் நமக்குத் துணை உறுப்பினர் (முழு உறுப்பினர்கூட அல்ல) பதவி கிடைக்குமாம்.

சரி, இந்த அபார அறிவியல் திட்டத்தால் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு எந்த வகையில், என்ன லாபம் என்று தயவு செய்து சிந்தியுங்கள். இந்தியாவில் அறுபது கோடி மக்களுக்குக் கழிப்பறை கிடையாது. நாட்டின் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறை கிடையாது. நாற்பது சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி நோஞ்சான்களாகப் பிறக்கிறார்கள். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நாம் கட்டிக்கொண்டிருக்கும் வரிப்பணத்தைச் செலவு செய்யும் இந்த முறை சரியானதுதானா? அனைத்து இந்தியருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்வரை, இந்தக் காலனி மனப்பான்மையோடு நடத்தப்படும் ஆழ்ந்த அறிவியல் ஆய்வுகள் காத்திருக்க முடியாதா?

இந்தத் திட்டம் பற்றிப் பல வருடங்களாக எழுதிக் கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும் நான் அண்மையில் சில தோழர்களுடன் பொட்டிப்புரம் பகுதியிலுள்ள அம்பரப்பர் மலைக்குச் சென்று நியூட்ரினோ திட்டம் அமைக்கப்படும் இடத்தைப் பார்த்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான அந்த மலை ஒரு ராட்சச சிவலிங்கம் போன்று ஓங்கி நிற்கிறது. மலை உச்சியில் மூன்று வெள்ளைக் கோடுகளைக் கிடை மட்டத்தில் வரைந்து போட்டிருந்தீர்கள் என்றால் சிவ லிங்கம் என்று சொல்லி இந்துத்துவ சக்திகளின் உதவியோடு மலையைக் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்.

நீண்ட தூரத்துக்கு அந்த மலையைச் சுற்றி வேலி அமைத்திருக்கிறார்கள். அருகே ஐம்பது அடி விட்டமும் ஆழமுமுள்ள ஒரு வட்ட வடிவிலான ராட்சச நீர்த்தொட்டியும் கட்டியிருக்கிறார்கள். குழாய் பதித்து முல்லைப் பெரியாரிலிருந்து தண்ணீரும் கொண்டுவந்து விட்டார்கள். விரைவில் கட்டுமானம் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

அந்த மலையில் சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ. பரப்பளவுள்ள, 3,18,181 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு குகைகள் உருவாக்கப்படுமாம். அங்கிருந்து எட்டு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்படுமாம். குகை ஆய்வகத்தினுள் ஒரு லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமென்ட், மணல், உலோகங்களுடன் கட்டுமானம் நடக்குமாம். இந்தப் பகுதி கிராமங்கள் என்ன கதியாகும்? மலைகளும் காடுகளும் பல்வகை உயிரினங்களும் பழங்குடி மக்களும் அரியவகை மரங்களும் மூலிகை களுமாகப் பல்லுயிரியத்தின் அடிப்படையாக இருக்கும் இந்தப் பகுதி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகப் போகிறது.

மலைக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில் தே.புதுக்கோட்டை என்கிற கிராமத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்தோம். ஏராளமானோர் கூடித்தங்கள் மனக்குமுறலைத் தெரிவித்தனர். என்ன செய்வது என்றறியாது திகைத்து நிற்கின்றனர். திட்டத்துக்கு எதிராகப் போராடினால், “வழக்குப் போடுவோம், உள்ளே தள்ளிவிடுவோம்” என்று காவல்துறையினர் மிரட்டுவதாகச் சொன்னார்கள். அந்தக் கிராமத்தை விட்டு நாங்கள் வெளியே வரும்போது, ஒரு வண்டி நிறையக் காவல்துறையினர் ஊருக்குள் போவதைப் பார்த்தோம். பிறகு சோழநாயக்கன்பட்டி, தேவாரம் போன்ற கிராம மக்களிடமும் சின்னமனூர் கிராம இளைஞர்களிடமும் பேசினோம்.

“நியூட்ரினோ திட்டத்தை நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள், ஆனால் கேரளா பக்கமிருந்து மலைக்கு வாருங்கள்” என்றக் கோரிக்கையை முன்னிறுத்துங்கள் என அம்மக்களைக் கேட்டுக்கொண்டேன். சிரித்தார்கள், சிந்தித்தபடியே! இந்த அணுச் சுரங்கத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் இடுக்கி அணையும் 49 கி.மீ. தொலைவில் முல்லைப் பெரியார் அணையும் உள்ளன. நியூட்ரினோ திட்டத்தால் இந்த அணைகளுக்கும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கேரள மக்களுக்கும் ஆபத்து வரும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நிச்சயமாகப் பிற கேரளத் தலைவர்களும் அவரைப் போலவேதான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.

அச்சுதானந்தன் அவர்களும் இன்னும் பலரும் வேறொரு ஆபத்தையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆய்வகம், அக்ரகாரம் என்றெல்லாம் புளுகிவிட்டு அல்லது கொஞ்சக் காலத்தை ஓட்டிவிட்டு, இந்தியாவெங்கும் உருவாகப்போகிற அணுக் கழிவுகளை இங்கே கொண்டுவந்து கொட்டப் போகிறார்கள் என்ற அச்சம்தான் அது. நியூட்ரினோ திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தபோது “அணு உலை/அணு உலை எரிபொருள்/அணு உலைக் கழிவுகள்” என்ற வகையில்தான் விண்ணப்பித்திருக்கின்றனர். மே 6, 2013 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணுஉலைக் கழிவுகளை எங்கேப் புதைப்பது (Deep Geological Repository) என்பதை இந்திய அணுசக்திக் கழகம் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு நேர் எதிராக அமைந்துள்ள வடபழஞ்சி கிராமத்தில் “அணுக்கழிவு ஆய்வு மையம்” ஒன்றை நிறுவும் ஆயத்தப் பணிகளைத் துவக்கியிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா தேனி மாவட்டம் தேவாரத்தில் வரப் போவது என்னவென்று?

தேவாரம் ஊரைச் சார்ந்த தனராசு அவர்கள் வீட்டில் ஒரு திட்டமிடல் கூட்டம் நடத்தினோம். சுமார் நாற்பது பேர் சேர்ந்து “முல்லைப் பெரியார், நியூட்ரினோ, பதினெட்டாம் கால்வாய் போராட்டக் குழு” என்ற பெயரில் ஒரு குழுவை உள்ளூர் தோழர்கள் தோற்றுவித்தனர். கூட்டம் நடந்த வீட்டைச் சுற்றி ஏராளமான உளவுத்துறை அதிகாரிகள் நின்றனர். நாங்கள் தேனி நகருக்குத் திரும்பும்போதும் பின்தொடர்ந்து வந்து இரவு முழுவதும் எங்களைக் கண்காணித்தனர். மறுநாள் காலை மதுரைக்குத் திரும்பும்போது ஒரு வாகனத்தில் காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். எங்களை ஒரு தீவிரவாதக் கூட்டம்போலப் பார்ப்பதற்கு, நடத்துவதற்குப் பதிலாகத் தமிழ் மக்களின் நலனைச் சற்றேனும் கவனத்தில் கொள்ளக் கூடாதா என்று தலையில் அடித்துக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது.

-சுப. உதயகுமாரன்

நன்றி: காலச்சுவடு, ஜூலை 2014



புதன், ஆகஸ்ட் 06, 2014

அழிவின் அருங்காட்சியகம்

எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்
உன் குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைந்த
அந்த பின்மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?
-    சேரன்


சில மாதங்களுக்கு முன்பு ஹிரோஷிமா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அழிவின் பெருநகரமாய் கற்பனை செய்து வைத்திருந்த ஹிரோஷிமாவில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள். ஜப்பானின் அபரிதமான வளர்ச்சி ஹிரோஷிமாவிலும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. உலகின் முதல் அணு குண்டு வீசப்பட்ட நகரமாய் வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஹிரோஷிமா, இன்று அந்த அழிவின் தடங்கள் எதையும் சுமந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் வரலாற்றிலிருந்து கற்ற பாடத்தை  எளிதில் கடக்கவோ, மறக்கவோ ஹிரோஷிமா மக்கள் தயாரில்லை.


ஹிரோஷிமா நகரில் நிறுவப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்க்கும்போது, “வரலாற்றின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுப்பவர்கள், அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார்கள்” என்று அறிஞர் ஜார்ஜ் சாந்தயானா சொன்னதை அந்த நகரத்து மக்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றியது. வரலாறு தங்களுக்கு இழைத்த அநீதிகளிலிருந்து ஹிரோஷிமா மக்கள் கற்றுக்கொண்ட பாடமாய், அவர்கள் உலகிற்கு சொல்ல விரும்பும் செய்தியாய் எழுந்து நிற்கிறது ஹிரோஷிமா அருங்காட்சியகம்.

ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் ஆகஸ்ட் 1955ல் – அணுகுண்டு வீசப்பட்டு பத்து வருடங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டது. ஹிரோஷிமா குண்டு வெடிப்பின் தடங்களை, அது குறித்த வரலாற்று பதிவுகளை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.  சேகுவேரா, போப், அன்னை தெரசா தொடங்கி மானுடத்தை நேசிக்கும் பல தலைவர்களும் இங்கு அமைதியின் வலிமையான செய்தியை பரப்ப வருகை தந்திருக்கிறார்கள்.

அருங்காட்சியகத்தை ஒட்டி செயல்படும் ஹிரோஷிமா அமைதி பூங்கா அணு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைதிப்பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கிறது அணு குண்டு மாடம். குண்டு வெடிப்பின் போது தரைமட்டமாகாமல் தப்பித்த ஒரே கட்டடம் அது. போரின் குரூரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அதை அப்படியே விட்டுவிடுவது என்று முடிவு செய்திருக்கிறது ஹிரோஷிமா நிர்வாகம். உலகிற்கு நாங்கள் சொல்லும் அமைதியின் செய்தி என்று அணு குண்டு மாடத்தை சொல்கிறார்கள் அந்த மக்கள். 1996ல் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது அணுகுண்டு மாடம். இங்கிருந்து ஒரு 200 அடி தொலைவில் இருக்கிறது அருங்காட்சியகம்.

கிழக்கு கட்டடம், பிரதான கட்டடம் என்று 1994ல் விரிவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் கிழக்கு கட்டடத்தில் குண்டுவெடிப்புக்கு முன்பும் பின்பும் ஹிரோஷிமாவின் வரலாற்றை அறியலாம். பிரதான கட்டடத்தில் குண்டு வெடிப்பை புகைப்படங்கள் வாயிலாகவும் குண்டுவெடிப்பில் மிச்சமிருந்த பொருட்களின் வாயிலாகவும் பார்க்கலாம். அருங்காட்சியகத்தை நிறுவியதன் நோக்கமே அணுகுண்டுக்கு எதிரான தரவுகளை பரப்ப வேண்டும் என்பதும், உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.

இதனைப் பார்க்கும்போது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தும்கூட அமைதியின் பக்கம் நிற்கும் ஜப்பான் மக்கள் மீதான மரியாதை அதிகமாகிறது.

ஒரே ஒரு குண்டுவீச்சால் தரைமட்டமாக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு வளம் நிறைந்த நகரமாக ஹிரோஷிமா இருந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அணுகுண்டு மானுடத்துக்கு எதிரான கண்டுபிடிப்பு என்பது மேலும் உறுதியாகிறது. கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா ஜப்பானின் பழமையான இடங்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது ஹிரோஷிமா. அந்நகரின் தோற்றம் முதல் அதன் வளர்ச்சி வரை வரைபடங்கள் மூலமாகவும் புகைப்படங்கள் மூலமாகவும் கிழக்குக் கட்டடத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டு வெடிப்பிற்கு பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சியையும் இந்த பகுதியில் காணலாம்.

ஆனால் மானுடம் மீதான நம்பிகையை அசைத்துப் பார்க்கும் ஆவணங்களை கொண்டிருப்பது பிரதான கட்டடம்தான்.

தட்டாம்பூச்சியை பிடித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளி சிறுவன் மீது, இறந்தாலும் ஒன்றாகவே இறக்க வேண்டும் என்று குழந்தைகளை பிரியாது சுற்றிக்கொண்டிருந்த தாய் மீது, செடிக்கு நீருற்றும் தாத்தாவை பார்த்துக்கொண்டே தோட்டத்தில் விளையாடிய பேரக் குழந்தை மீது, மிட்டாய் வாங்க அம்மா காசு தந்த உற்சாகத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஒரு குழந்தை மீது விழுந்திருக்கிறது அந்த அணுகுண்டு. லட்சக்கணக்கில் மக்களைக் காவுவாங்கிய அந்த அணு குண்டு ஏற்படுத்திய அழிவின் சாட்சியங்களாய் சுமார் 20,000 பொருட்களை கொண்டிருக்கிறது அருங்காட்சியகம். இறந்தவரின் புகைப்படங்கள், எரிந்த நிலையில் துடித்துக்கொண்டிருக்கும் மக்களின் புகைப்படங்கள், ஆயிரக்கணக்கில் புதைக்கப்ப்பட்ட சமாதிகளின் புகைப்படங்களைத் தாண்டி, போரின் கருணையின்மையை, அணு குண்டின் கோர முகத்தை ஏந்திக்கொண்டிருப்பது அந்த பொருட்கள்தான்.

போருக்கு அனுப்பபட்ட தந்தையிடம் காட்டவென்று குண்டுவெடிப்பில் இறந்த மகனின் நகங்களையும் கொஞ்சம் தோலையையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் ஒரு தாய். தாகம் தாங்காமல் விரல்களிலிருந்து வழிந்த சீழ் நீரை குடித்த அந்த மகன் குண்டு வெடிப்பிற்கு அடுத்த நாள் இறந்துவிட்டதாக அருங்காட்சியகத்தின் குறிப்பு சொல்கிறது. சடலமாக கூட கண்டடைய முடியாத 13 வயது மியகோவின் பாதச் சுவடை இன்னமும் தாங்கிக்கொண்டிருக்கும் மர செருப்பு, 54 வயது மொசோரோவின் உருகி சிதைந்த கண்ணாடி, உருக்குலைந்து கூடாக நிற்கும் மூன்று சக்கர வாகனம் என்று அருங்காட்சியகத்தில் இருக்கும் எண்ணற்ற பொருட்கள் இப்போதும் உலகின் எதோவொரு மூலையில் நடந்து கொண்டிருக்கும் போரின் அபத்தங்களையும் ஆபத்துகளையும் ஒரு சேர சொல்கின்றன.

ஆனால் எப்போதும் என்னால் கடக்க முடியாத வலியை தருவது 13 வயது ஓரிமேன் இறக்கும் தருவாயிலும் வயிற்றோடு அணைத்தபடி வைத்திருந்த மதிய உணவைதான். அணு குண்டின் வெப்பத்தில் உலர்ந்து கருகிய உண்ணப்படாத உணவை எப்படி மறக்க?
-பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்


ஆகஸ்ட் 6, 1945 ஹிரொஷிமாவில் அணு குண்டு வீசப்பட்ட நாள். மூன்று நாள் கழித்து, ஆகஸ்ட் 9ந் தேதி நாகாசாகியில் அணு குண்டு வீசப்பட்டது.


செய்தி குறிப்பு:

உலகத்தில் எந்த நாடு அணுகுண்டு சோதனை செய்தாலும் உடனே ஹிரோஷிமா  நாகசாகி மேயர்கள்  தலைவர்களுக்கு கடிதம் அனுப்புகிறார்கள். இந்த சோதனையே கடைசி சோதனையாக இருக்கட்டும்,அனுகுண்டின் அழிவை பார்ப்பதற்கு  எங்கள் நகரங்களுக்கு வாருங்கள் என்று சொல்கிறார்கள்.  இந்தியாவிற்கு இதுவரை 3 கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா, ஜப்பானின் பழமையான ஊர்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது. அந்நகரின் தோற்றம் முதல் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் வரைபடங்கள், ஒளிப்படங்களாகக் கிழக்குக் கட்டிடத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. குண்டு வெடிப்புக்குப் பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சியையும் இங்கே காணலாம்.

நடந்தது என்ன?
ஹிரோஷிமா அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 6, 1945
குண்டின் பெயர்: லிட்டில் பாய்
வெடிபொருள்: யுரேனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு: 10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அனைத்து உயிர்களையும் துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைத்தும் பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
பலியானவர்கள் எண்ணிக்கை: 1.45 லட்சம் பேர் (உடனடியாக 90,000 பேர்).

நாகசாகி அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 9, 1945
குண்டின் பெயர்: பேட் மேன்
வெடிபொருள்: புளூடோனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு: ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.
பலியானவர்கள் எண்ணிக்கை: 75,000 பேர் (40,000 பேர் உடனடியாக).
இரண்டு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப் போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர்