திங்கள், ஜூன் 29, 2009

ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்


தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள்.

கானுயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கவலைப்படும் இவர்களுக்கு போக்குவரத்து நெரிசலால், தொழிற் பெருக்க புகையால் ஏழைகள் படும் அவதி தெரியாது. தெரிந்தாலும் எழுதி அதிகார வர்க்கத்தை பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

Environmental Romanticism is much safer than Environmental Activism.

இதற்கு எதிர்நிலையில்-மக்கள் தரப்பில் இருந்து செயல்படுகின்றன ஐங்கரநேசனின் எழுத்துகள். “இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை” என்ற பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல் ஒன்றின் தலைப்பில் முன்னுரையை தொடங்கியிருக்கும் ஆசிரியர் மீதமிருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்.
ஈழத்தமிழரான இவர் சென்னையில் முதுநிலை தாவரவியல் படித்துள்ளார். எனினும் இவரது அறிவு தாவரவியலையும் தாண்டி வரலாறு, சமூகவியல், பொருளியல், சட்டம், அரசியல் என அனைத்து திசைகளிலும் பயணிக்கிறது. சூழல் குறித்த விரிந்த பார்வையின் காரணமாக பூவுலகில் உள்ள செல்வங்கள் குறித்தும், அவற்றை சூறையாடும் பன்னாட்டு சதிகள் குறித்தும் தெளிந்த பார்வையோடும், அதை உலகுக்கு உணர்த்தும் இயல்பான மொழியோடும் இந்த நூலை படைத்துள்ளார்.

புவி வெப்பம் குறித்த கட்டுரையுடன் ஆரம்பமாகும் நூல், அடுத்த அத்தியாயத்திலேயே அதற்கு காரணமான அமெரிக்காவை விமர்சனம் செய்கிறது. சூழல் என்பது சமூகம் மட்டுமே சார்ந்த அம்சம் அல்ல என்பதை உணர்த்தும் நோக்கிலும் கட்டுரைகள் உள்ளன. நவீன சமையலறையில் உள்ள பாத்திரங்களே நஞ்சாகும் அவலம், நாகரீக உடையான ஜீன்ஸ் சூழலுக்கு எவ்வாறு எதிரானது, செல்லிட பேசிகள் விளைவிக்கும் அபாயம், கோக்-பெப்சி போன்ற பூச்சி மருந்துகள், பிளாஸ்டிக், அஸ்பெஸ்டாஸ் போன்றவை குறித்து அபாய மணி அடித்து கட்டுரைகள் எச்சரிக்கை செய்கின்றன.

சிலந்தி, வண்ணத்துப்பூச்சி, தவளை, கடற்குதிரை ஆகியவை குறித்த கட்டுரைகள் நமது வாழ்நாளிலேயே பல உயிரினங்கள் அழிவை சந்திக்கும் அவலத்தை சொல்கின்றன. இவற்றின் அழிவு, என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை கூறவும் தவறவில்லை.

மனிதக் குரங்குகளையும், குரங்கு மனிதர்களையும் அடையாளம் காட்டும் கட்டுரை மிகவும் ரசனையுடனும், ஆழ்ந்த அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக சிம்பன்சி, போனபோ வகை குரங்குகளின் பாலியல் வாழ்வை ஒப்பிடுவதன் மூலம் மானுடவியலின் துவக்கத்துக்கான அடிப்படை சுட்டிக்காட்டப்படுகிறது.

ஓரின, ஈரின சேர்க்கை மட்டுமல்லாமல் சுயஇன்பத்திலும் போனபோ வகை குரங்குகள் ஈடுபடுகின்றன என்பது பலருக்கும் புதிய தகவலாக அமையும். ஆனால் இந்த குரங்குகளுக்கு, வேட்டைக்காரர்கள் முதல் நவீன தொழில் நுட்பத்தின் சோதனைச்சாலைகள் வரை ஏற்படும் ஆபத்துகளை விவரிக்கும் போது நவீன உலகின்மீது ஒரு சிறு கோபம் கிளர்ந்தெழுகிறது.

சூழல் என்பது தாவரம், விலங்குகள் போன்ற உயிரினங்கள் மட்டும் சார்ந்தது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அறிவுச் சொத்துரிமை சட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்படுகிறது. அறிவுச்சொத்துரிமை என்ற மோசடி கருத்தியலுக்கான அடிப்படைகளில் ஒன்றாக இருக்கும் மரபணு மாற்றம் என்ற திரிபுவாத வணிக நுட்பமும் விளக்கமாக சுட்டப்படுகிறது. ஆதி மனிதர்களின் அறிவைக் கவரும் நோக்கில், அவர்களது பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் சதியாக மொழியை அழிக்கும் போக்கும் கண்டிக்கப்படுகிறது.

இவையெல்லாம் பொதுவாக இருந்த போதும் ஈழம் குறித்த கட்டுரைகள் சிறப்பு கவனத்திற்குரியன. யாழ்ப்பாணத்தில் பாழாகும் கிணறுகள் குறித்த கட்டுரையும், யாழ்ப்பாணம் பாலையாகுமா என்ற கட்டுரையும் தாயகம் மீதான அவருடைய அக்கறையை உணர்த்துகிறது.

சிங்கம் குறித்த கட்டுரையில் கீழ்க்கண்டவாறு வரலாற்று விமர்சனத்தையும் ஆசிரியர் முன் வைக்கிறார்: “சிங்களர்கள் தங்களது தேசியத்தை சிங்கத்துடன் அடையாளப்படுத்த விரும்பியமைக்கு அவர்கள் பின்பற்றுகின்ற பெளத்த மதமும் ஒரு காரணம் ஆகும். அசோகச் சக்கரவர்த்தி புத்த நெறிகளை பரப்பும் நோக்கில் இலங்கைக்கு தனது மகள் சங்கமித்திரையைப் போதிமரக்கிளையுடன் அனுப்பி வைத்த்தாக மகாவம்சம் கூறுகிறது. அசோகச் சக்கரவர்த்தி பெளத்த போதனைகளைப் பதிப்பித்த கல்தூண்களின் தலைகளில் இருந்த சிங்கங்கள் இலங்கையின் சிங்களத் தலைமைகளில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்பது திண்ணம். எவ்வாறாயினும், இலங்கை பல்லினத்துவமுடைய ஒரு தீவு. அதன் தேசியக்கொடியில் பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கத்தைப் பொறித்தமையானது இன-மத சமத்துவத்தை வேண்டிய அசோகரின் போதனைகளுக்கு முரணானதாகும். அதுவும், சிங்கத்தை வாளேந்த வைத்தமை, கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த மதக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது. இந்தப் பேரினவாத சிங்கம்தானே, தமிழனைக் கொல்வோம் என்பதன் குறியீடாக நின்று இன்றுவரை தமிழர்களை நரவேட்டையாடி வருகிறது. சிங்களத் தேசியம் கற்பனைக்கு இடங்கொடாது, சிங்களவர்களினதும், தமிழர்களினதும் பூர்விக நிலங்களில், இலங்கைக் காடுகளின் அரசனாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுத்தைப்புலியை இலங்கையின் பொதுவான குறியீடாகத் தேர்வு செய்திருந்தால், தமிழர்கள் தங்களுக்கான தனியான தேசிய அடையாளங்களை தேடவேண்டிய அவசியம் நேர்ந்திராது. இலங்கைத் தீவு இத்தனை இரத்தக்களரிகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியமும் நேராமல் போயிருக்கும்.”

இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவம் அமைதி ஏற்படுத்துதல் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் இறையாண்மையை சூறையாடிய அதேநேரத்தில் “பார்த்தீனியம்” என்ற விஷ களைச்செடியை இலங்கை மண்ணில் குடியேற்றிய அவலமும் இந்தத் தொகுப்பில் சூழல் நோக்கில் விவரிக்கப்பட்டுள்ளது.

சூழல் கேடுகளுக்கு பெருகி வரும் மக்கள் தொகையே காரணம் என்றும், இல்லை என்றும் முதலாளித்துவ-மார்க்சிய சொல்லாடல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அதற்கான தீர்வை ஆசிரியர் முன்வைக்கிறார்: “வளர்முக நாடுகளின் வள ஆதாரங்களைச் சுரண்டிக் கொழுத்து வாழும் மேற்கு நாடுகள் தங்களைப் போன்ற பணக்கார நாடுகளுக்கே உலகம் சொந்தம் என்று கருதுகின்றன. இதனால் ஏழை நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தங்களது உணவைத் தட்டிப்பறிக்க மேலதிகமாக வந்து சேர்ந்த “ஒரு வாய்” என்றே பார்க்கின்றன.

ஆனால், ஏழை நாடுகள் பிறப்பைக் கொண்டாட வேண்டியுள்ளது. ஒவ்வொரு குழந்தையின் வருகையும் அன்றாட வருமானத்துக்குக் கைகொடுக்க வந்த “இரண்டு கைகள்” ஆகவே அவை நினைக்கின்றன. இந்த வித்தியாசம் இருக்கும் வரையில் ஏழை நாடுகளில் குடும்பக் கட்டுப்பாடு என்பது யதார்த்தப்பூர்வமானதல்ல மாறாக, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஏழை நாடுகளின் வாழ்க்கைத் தரத்திலும் கல்வியறிவிலும் ஏற்படும் வளர்ச்சியே, அதன் மக்கள்தொகையை தானாகக் கட்டுக்குள் கொண்டுவரும். இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களின் ஆடம்பரமான மிகை நுகர்வை சற்று குறைத்துக் கொண்டாலே போதுமானது.”

இந்த நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும்கூட பல கருத்துகளை வலுவாக முன்வைக்கின்றன. தவளைகள் குறித்த கட்டுரையில் வேதி நச்சுகளால் மரபணு குளறுபடி ஏற்பட்டு ஒற்றைக் கண், குறைந்த அல்லது அதிக கால்களுடன் பிறந்து துள்ளித் திரிய இயலாமல் மாண்ட தவளைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. வேதி நச்சுகளே இந்த விளைவுகளை ஏற்படுத்தும்போது தாவர மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய உணவை உட்கொள்ளும் மனிதக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகள் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைக்கின்றன.

வணிகமும், பொருள் சேர்த்தலுமே அறமாக இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் கனமான விஷயங்களோடு கூடிய இந்த நூலை அழகுற வடிவமைத்து வெளியிட்ட சாளரம் பதிப்பக உரிமையாளர் வைகறை பாராட்டுதலுக்கு உரியவர்.

படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க உகந்த இந்த நூலை தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக நோக்கமுள்ள மேலும் பல நூல்கள் வெளிவரும்.

வெளியீடு:

சாளரம், 2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை – 600091.

விலை: ரூ 250.00 பக்கங்கள்: 431

வியாழன், ஜூன் 25, 2009

திருவண்ணாமலையில் ஜிண்டால் சுரங்கம் - தோண்டத் தோண்ட ஊழல்

மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தால் பாதுகாக்கப்பட்ட காடுகளாக (Reserve Forest) அறிவிக்கப்பட்டுள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலைப்பகுதிக்குள் சுமார் 4 லட்சம் மரங்கள் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த மலைப்பகுதிகளில் சுமார் 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மலைப்பகுதியில் சுமார் 607.20 ஹெக்டேர் நிலத்தில் இரும்புத்தாதுவை பிரித்தெடுக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) கடந்த 26.5.2000 அன்று தமிழ்நாடு அரசிடம் மனு செய்தது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மலைப்பகுதி பாதுகாப்பு அதிகார அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதல் பெற்று இந்த மலைப்பகுதியில் 325 ஹெக்டேர் பகுதியில் சுரங்கம் அமைத்து இரும்புத்தாதுவை பிரித்தெடுக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் கனிமவள இயக்குநரகம் பரிந்துரை செய்தது.

இதற்கிடையில், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை பகுதியில் இரும்புத்தாது பிரித்தெடுக்கும் சுரங்கத் தொழிலில் ஜிண்டால் குழுமத்தை தனியார் துறை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு செயல்பட டிட்கோ முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஜிண்டால் குழுமமும், டிட்கோவும் இணைந்து "எஸ்கார்ட் ஒப்பந்தம்" என்ற அடிப்படையில் இணைந்து "தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம்" (Tamil Nadu Iron Ore Mining Corporation - TIMCO) என்ற புதிய நிறுவனமாக செயல்படுவதற்கான ஒப்பந்தம் கடந்த 24-05-2005 அன்று கையெழுத்தானது. 'எஸ்கார்ட்' என்ற சொல் பரவலாக பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரை பணயம் வைத்து முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு 'ஜிண்டால்' என்ற முக்கிய நிறுவனத்திற்கு அத்தகைய பாதுகாப்பை 'டிட்கோ' நிறுவனம் வழங்குகிறது. அதிகாரிகளின் உயிருக்கு பதிலாக திருவண்ணாமலை பகுதி வாழ் மக்களின் உயிரைப் பணயம் வைத்து 'ஜிண்டால்' குழுமத்தை பாதுகாக்க 'டிட்கோ' முடிவெடுத்துள்ளதுபோலும்! இதற்கான ஒப்பந்தம் வெறும் 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாளில் தயாரிக்கப்பட்டு, பதிவுகூட செய்யப்படாமல் உள்ளது.

இந்த நிறுவனத்தில் 99 சதவீத பங்குகள் ஜிண்டால் குழுமத்திடமும், 1 சதவீத பங்கு 'டிட்கோ' நிறுவனத்திடமும் இருக்கும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மில்லியன் டன் இரும்புத்தாதுவை பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் வெறும் 1 சதவீத பங்கை மட்டுமே கொண்டிருக்கும் 'டிட்கோ' நிறுவனத்திற்கு, 'டிம்கோ' நிறுவனத்தின் நிர்வாகத்தில் என்ன அதிகாரம் இருக்கும் என்பது வெட்டவெளிச்சம்.

இதற்கிடையில், இந்த 'டிம்கோ' நிறுவனம் சார்பில் கவுத்திமலை - வேடியப்பன் மலைப் பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு விரைவில் அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் "டிம்கோ" ஒரு அரசு நிறுவனம் அல்ல!" என்று மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 'டிம்கோ' நிறுவனத்தில் 'டிட்கோ' நிறுவனம் எந்த முதலீடும் செய்யவில்லை என்றும், எதிர்காலத்தில் 'டிட்கோ' நிறுவனத்திற்கு 0.02 சதவீத பங்குகளை (மட்டுமே) ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'டிம்கோ' என்ற பெயரில் 'டிட்கோ' நிறுவனமும், 'ஜிண்டால்' குழுமமும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி 'டிம்கோ' நிறுவனத்தில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் லாபம் வந்தால் தமிழக அரசுக்கு வெறும் 20 லட்ச ரூபாயும், 'ஜிண்டால்' நிறுவனத்துக்கு மீதமுள்ள 99 கோடியே 80 லட்ச ரூபாயும் கிடைக்கும். அதாவது இயற்கை வளங்களையும், அப்பகுதி மக்களுடைய வாழ்வுரிமையையும் பலி கொடுக்கும் தமிழ்நாடு அரசுக்கு வெறும் 0.02 சதவீதம் (அதுவும்கூட லாபக் கணக்கு காட்டினால்தான்), மீதமுள்ள அனைத்தையும் ஜிண்டால் குழுமம் அள்ளிச் சென்றுவிடும்.

இந்த அபத்தமான ஒப்பந்தம் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாடு அரசுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதால் திரைமறைவு பலன் அடையப்போகும் நபர்கள் யார்? யார்? என்பதை எல்லாம் உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை ஜிண்டால் குழுமத்தின் நிழல் நிறுவனமான டிம்கோ நிறுவனத்துக்கு மாற்றி வழங்க வேண்டும் என்று 'டிட்கோ' நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் தொழில் துறையிடம் கோரியுள்ளது.

மேலும் கவுத்திமலை - வேடியப்பன் மலைப் பகுதியில் அழிக்கப்படவிருக்கின்ற மரங்களைப் போல இருமடங்கு மரங்களை 'ஜிண்டால்' நிறுவனம் நடுவது குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் பரிந்துரை பரிசீலனையில் உள்ளதால், இந்த மனு மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.

வனப்பகுதியில் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு செய்தால், அதன் பின்னர் சுரங்கம் அமைப்பதற்கான "துல்லிய நிலப்பகுதி" (Precise Area) வரையறுக்கப்பட்டு மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன் பின்னர் மற்றொரு மத்திய அரசு நிறுவனமான "இந்திய சுரங்க நிறுவனம்" (Indian Bureau of Mines) என்ற அமைப்பு சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும். அதற்குப்பின் மாநில அரசுத் தரப்பில் சுரங்கம் அமைப்பதற்கு முறைப்படியான அனுமதி வழங்கப்படும்.

கவுத்திமலை - வேடியப்பன் மலை விவகாரத்திலோ, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே 'பிரசைஸ் ஏரியா' இதுவரை வரையறுக்கப்படவில்லை. ஆனால் இந்திய சுரங்க நிறுவனமோ, கவுத்திமலை - வேடியப்பன் மலை பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கான திட்ட வரைபடத்தை அனுமதித்துள்ளது. 'பிரசைஸ் ஏரியா'வே குறிக்கப்படாத நிலையில் 'இந்திய சுரங்க நிறுவனம்' எப்படி அனுமதி வழங்கியது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

தற்போதைய நிலையில் சுரங்கம் அமைப்பதற்கு 'டிட்கோ'வின் பெயரில் பதிவு செய்த மனுவை, 'டிம்கோ' நிறுவனத்தின் பெயரில் மாற்றுவதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் 'ஜிண்டால்' குழுமத்தின் இந்த முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மலைகளை அழித்து சுரங்கம் அமைக்கும் அளவிற்கு நாட்டில் இரும்புத்தாதுவுக்கு தேவை ஏற்பட்டுள்ளதா? என்று பார்த்தால், இந்தியாவில் ஏற்கனவே உள்ள சுரங்கங்களில் கிடைக்கும் இரும்பு, இந்தியாவின் தேவையைவிட அதிகமாகவே இருக்கிறது. எனவே இந்தியாவின் இரும்புத் தேவையைவிட, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் கொள்ளை லாபத்திற்காகவே ஜிண்டால் குழுமம், திருவண்ணாமலைப் பகுதியில் சுரங்கம் அமைக்க முயற்சிக்கிறது என்பதே உண்மை.

'ஜிண்டால்' குழுமத்தின் கொள்ளை லாப வெறிக்காக, தமிழ்நாடு அரசு நிறுவனமான 'டிட்கோ' எதற்காக 'டிம்கோ' என்ற பெயரில் அரசு நிறுவனம் போன்ற தோற்றம் தரும் ஒரு நிழல் நிறுவனத்தை தொடங்கி, 'ஜிண்டால்' நிறுவனத்துக்கு தாரை வார்க்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை.

பின்குறிப்பு: அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது இப்பகுதியில் பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திருவண்ணாமலை பகுதி மக்கள் தங்களுக்கு வாக்களித்தால், 'ஜிண்டால்' குழுமம் அமைக்கும் சுரங்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் 'ஜிண்டால்' குழுமமும், 'டிட்கோ' நிறுவனமும் தமிழ்நாடு அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதோடு திருவண்ணாமலை பகுதி வாழ் மக்களுடைய வாழ்வாதாரங்களை பறிக்கும் ஒப்பந்தங்கள் முதன்முதலாக உருவாக்கப்பட்டன.


-சுந்தரராஜன்

-பூவுலகு, ஜூன்-ஜூலை 2009

வெள்ளி, ஜூன் 19, 2009

"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ் - விற்பனைக்கு கிடைக்கும்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பூவுலகு சுற்றுச்சூழல் இருமாத இதழ் கடந்த ஜூன் பதிமூன்றாம் தேதி வெளியிடப்பட்டது.



இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இதழை வெளியிட திரைப்பட இயக்குனர் வசந்த பெற்றுக் கொண்டார். சூழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகப்படுத்திப் பேசினார். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை பாதுகாத்துவரும் பால் பாண்டிக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


பூவுலகு இதழுக்கான கொடை விவரங்கள்:

புரவலர் கொடை: ரூ. 1,000/-

ஐந்தாண்டு கொடை: ரூ.500/-

ஆண்டு கொடை: ரூ.100/-

தொகையை “Poovulagin Nanbargal” என்ற பெயருக்கு காசோலை அல்லது வரைவோலையை எடுத்து பூவுலகின் நண்பர்கள், A-2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வியாழன், ஜூன் 11, 2009

"பூவுலகு" இதழ் வெளியீட்டு விழா - இடம் மாற்றம்



பூவுலகு சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழாவிற்கான இடம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில்
ஜுன் 13ம் தேதி சனிக்கிழமை
மாலை ஆறு மணியளவில் நடைபெறும்.

அனைவரும் வருக.


Photobucket

புதன், ஜூன் 03, 2009

“பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா

பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த
"பூவுலகு" சுற்றுச்சூழல் இதழ்
சூழல் ஆர்வலர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

தற்போது மீண்டும் "பூவுலகு" இதழ் வெளிவருகிறது.
நமது சூழலை காக்கும் இதழ் வெளியீட்டு விழாவிற்கு தமிழ் மக்கள் பெரும் திரளாக வந்து இதழ் வளர்ச்சிக்கு ஆதரவளி்கக வேண்டும் என்று
"பூவுலகின் நண்பர்கள்" சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.



Magazine Launch