வியாழன், செப்டம்பர் 27, 2012

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?


ரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

 இன்று வரை லவீனாவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பெண்கள் முன்னணி யில் நிற்கும் இடிந்தகரைப் போராட்டத்தில், அவர்களைப் பின்வாங்கச் செய்ய, காவல் துறை எதேச்சதிகாரத்தின் அனைத்து உத்திகளையும் கையாள்கிறது. ஆனால், அதையும் தாண்டி போராட்டத்தில் தன்னார்வத்துடன் பங்கெடுக் கிறார்கள் பெண்கள். தடியடி நடந்த அன்று கைதுசெய்யப்பட்ட 65 பேரில் 7 பேர் பெண்கள். அவர்கள் யாரும் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலேயே, 36 மணி நேரச் சட்ட விரோதக் காவலுக்குப் பிறகு, ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 36 மணி நேரத்தில் அவர்களை இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட அனுமதிக்கவில்லை காவலர்கள். அந்தப் பெண்களிடமும் லவீனாவிடம் கேட்டது போலவே உதயகுமாருடன் தொடர்பு படுத்திப் பேசி வசைச் சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

''கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சி சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது காவல் துறை!'' என்றார் போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன்.

நியாயத்தை மட்டுமே துணையாகக்கொண்டு அற வழியில் போராடுபவர்களை எப்படி எல்லாம் ஒடுக்க முடியுமோ, அப்படி எல்லாம் ஒடுக்க முயல்கிறது காவல் துறை.

பெண்களின் நிலையைக் காட்டிலும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது அங்கே இருக்கும் குழந்தைகளின் நிலைமை. மனரீதியாகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகள் இரவுகளில் திடீர் திடீரெனத் தூக்கம் தொலைத்து எழுந்துவிடுவதாகவும், 'போலீஸ் வருமா’ என்று அச்சத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார் இடிந்தகரை வெண்ணிலா. இங்கு உள்ள குழந்தைகளுக்கு முறையான, முழுமையான கவுன்சிலிங் உடனடித் தேவை.

தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் பாளையங்கோட்டை சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று பெயிலில் வெளியே வந்திருக்கும் கிஷனிடம் பேசினேன். மிரண்ட குரலில் மருண்ட கண்களுடன் பேசத் தொடங்கினான். ''நான் வீட்டுக்குள் இருந்தப்போ போலீஸ் வந்துச்சு. பயந்துபோய் இன்னொரு வீட்ல ஒளிஞ்சுக்கிட்டேன். அங்கேயும் வந்து என்னைப் பிடிச்சுட்டுப் போனாங்க. வழியில வண்டியிலவெச்சு அடிச்சாங்க. கூடங் குளம் போலீஸ் ஸ்டேஷன்லயும் அடிச்சாங்க'' என்றவனிடம் ''தேசத் துரோகம் என்றால், என்னவென்று தெரியுமா?'' என்று கேட்டேன். ''அப்படின்னா..?'' என்று உதட்டைப் பிதுக்கினான். கிஷனைப் போல 16 வயதுகூட நிரம்பாத நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். காசா காலனி என்று அழைக்கப்படும் சுனாமி குடியிருப்பில், வீடுகளுக்குள் புகுந்து காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களுக்குச் சாட்சியாக ஜன்னல்கள், டி.வி, ஃபிரிஜ், பாத்திரங்கள்... எல்லாம் உடைந்து கிடந்தன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. பந்தலில் இருந்த மூன்று ஜெனரேட்டர்களில் இரண்டைக் 'கொள்ளை’ அடித்துச் சென்ற போலீஸ், மூன்றாவதை உடைத்து மணலை அள்ளிக் கொட்டிவிட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் மக்கள்.

சுனாமி நகரில் நடந்தவற்றைப் பற்றி கண்ணீருடன் விவரித்தார் அனிதா.

''சுனாமி நகர்ல போலீஸ்காரங்க செஞ்ச அட்டூழியங்களை நேருக்கு நேர் பார்த்தேன். எப்ப போலீஸ் வந்து அடிச்சு விரட்டிருமோங்கிற பயத்துல வீட்ல தங்காம மாதா கோயிலுக்கு வந்தோம். இங்கே நாங்க அசந்த சமயத்துல உள்ள புகுந்த போலீஸ் மாதா சிலையை உடைச்சு, சிலைக்குக் கட்டியிருந்த சேலையைக் கழட்டிப்போட்டு, பீடத்து மேல அசிங்கம் பண்ணிவெச்சுட்டுப் போயிருக்காங்க. எங்க கோயில் அவங்களுக்கு கக்கூஸா என்ன? மாதாவை நாங்க நம்புறோம்னு மாதாவை அவமானப்படுத்தினாங்க. உதயகுமார் சாரை நம்புறோம்னுதான் நடக்க முடியாத பொண்ணுகிட்டகூட, அவரை வெச்சு தப்புத் தப்பா பேசுறாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். கடற்கரைக்கார மனுஷங்களைப் பத்தி இன்னும் அவங்களுக்குத் தெரியலை. உதயகுமார் சார் சொன்ன வார்த்தைக் குக் கட்டுப்பட்டுத்தான் நாங்க அமைதியா இருக்கோம். இல்லேன்னா, நடக்குறதே வேற'' என்று ஆவேசமும் அழுகையுமாக முடித்தார்.
இடிந்தகரையில் மக்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய நாளன்று, விமானம் தாழப் பறந்ததால் அந்த அதிர்ச்சியிலேயே உயிர் இழந்த சகாயத்துக்கு மூன்று பெண்கள் உட்பட நான்கு குழந்தைகள். மனைவி சபீனா இன்னும் கணவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கிய   தமிழக அரசு, சகாயத்தின் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை சகாயம் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படவில்லை.

பொதுச் சமையல் செய்து உண்டு ஆண்களும் பெண்களும் பேதமற்று வாழும் கொம்யூன் வாழ்க்கை போன்றே இடிந்தகரை மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கிறது. வீடுகளில் சமைப்பது இல்லை. லூர்து மாதா ஆலய வளாகத்தில்தான் சாப்பாடு தயாராகிறது. அதைத்தான் சாப்பிடுகிறார்கள். பால், தண்ணீர் விநியோகம் இல்லை. இடிந்தகரையில் இருந்து வெளியே சென்று தண்ணீர் லாரி ஒன்றில் மக்கள் தண்ணீர் சுமந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய். பகல் முழுக்க மின் தடை. இரவில் மட்டுமே மின்சாரம். மருந்துப் பொருட்கள் இல்லை. பேருந்து வசதியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டது அரசு.

மளிகைப் பொருட்கள், காய்கறி என்று எதுவும் ஊருக்குள் வருவது இல்லை. கடல் வழியாகப் படகுகளில் வரும் உணவுப் பொருட் களை வைத்தே பொதுச் சமையல் நடக்கிறது. நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட போர்ப் பிரதேசம்போல இருக்கிறது இடிந்தகரை. பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணைப் பத்திரிகை யாளர்கள் வந்த வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.

யாரிடம் பேசினாலும் ஒரு கட்டத்துக்குப் பின் அழுகிறார்கள். அந்தக் கண்ணீர் கழிவிரக் கத்திலோ, சுய பச்சாதாபத்திலோ வந்த கண்ணீர் அல்ல. ஒருங்கிணைந்த போராட்டம் என்றால் என்ன என்று உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஒரு போராட்டத்தில் விளைந்த நெகிழ்ச்சி, ஆவேசம் எல்லாம் கலந்த உணர்ச்சிப் பிரவாகம். அந்தக் கண்ணீர் வரலாற்றில் இடம்பெறும்!

''தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காது!''
பொது மக்களின் பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டிச் சென்று சுப.உதயகுமாரனையும் போராட்டக் குழுவினரையும் சந்தித்தேன். தன்னை இடிந்தகரை பெண்களுடன் இணைத்துப் பேசும் காவல் துறையினரின் போக்கைக் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கும் உதயகுமார், ''கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் ராதாபுரம் காவல் நிலையத்தில் மிகவும் தரக்குறைவான முறையில் நடந்திருக்கிறார் ஓர் அதிகாரி. மற்றோர் அதிகாரி, 'உதயகுமார், லூர்து மாதா கோயிலின் உள்ளே பெண்களுடன் நேரம் செலவழிக்கிறார்’ என்று முன்னரே கொச்சையாகப் பேசி இருக்கிறார். மக்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல், மிகத் தரக் குறைவாக நடந்துகொள்கிறது காவல் துறை'' என்கிறார்.

''லூர்து மாதாவுக்கு அடுத்து உதயகுமாரன்தான் எங்கள் தெய்வம் என்கிறார்களே இடிந்தகரை மக்கள்?''
''அவர்களுடைய அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால், போராட்டக் குழுவினர் வழிகாட்டும் வழியில்தான் நான் செயல்படுகிறேன். தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காத ஒன்று. போராடும் மக்களிடையே இப்படியான உணர்வு இருப்பதை மாற்றுவோம். இது ஒரு கூட்டுப் போராட்டம். என்னை மட்டும் இதில் முன்னிறுத்து வதை நான் விரும்பவில்லை. இந்த எண்ணத்தை யும் நாளடைவில் சரிசெய்வோம்!'' என்கிறார் தீர்க்கமாக.

-கவின் மலர்
படங்கள் : ஆ.வின்செண்ட் பால்
நன்றி: ஆனந்தவிகடன் 03-09-12

புதன், செப்டம்பர் 26, 2012

வாங்கித் தந்தார் காந்தி தாத்தா...வித்துப்போட்டார் சோனியா ஆத்தா !


இந்தப் புண்ணிய பூமியோட மகாபிரபு... மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வேறவழியே இல்லாம வணக்கம் சொல்லி, கச்சேரியை ஆரம்பிக்கறான்... பாரத தேசத்து பரிதாப ஜீவன்கள்ல ஒருத்தனான இந்தக் கோவணாண்டி!

''டும்... டும்... டும்... இதனால, சகல உலகத்தினருக்கும் அறிவிக்கறது என்னன்னா... இன்னியிலிருந்து இந்தப் பெருமை வாய்ந்த இந்தியா விற்பனைக்குத் தயாரா இருக்கு. காசு வெச்சு இருக்கற யாரு வேணும்னாலும்... செவ்வாய் கிரகத்தச் சேர்ந்தவங்களா இருந்தாலும்.. எங்க நாட்டுல வந்து கடைவிரிக்கலாம். எங்க நண்பர் அமெரிக்க அதிபர் ஒபாமா... எங்க தலைவி இத்தாலி அன்னை சோனியா ஆசைப்படி... ஆணைப்படி... அவங்களோட 'கைப்பிள்ளை'யாகிய மன்மோகன் சிங் ஆகிய நான் அறிவிக்கிறேன்... டும்... டும்...டும்...''னு உடுக்கை அடிச்சுட்டீங்கனு ஒங்கமேல ஏக கோவத்துல இருக்கறாருங்க எங்க ஊரு இங்கிலிபீசு வாத்தியாரு.

வழக்கம்போல கோணவாய்க்கா மதகுல குந்திக்கிட்டு, இங்கிலீஸ் பேப்பரை கையில வெச்சுக்கிட்டு, போறவன்... வர்றவனெயெல்லாம் கூட்டி உக்கார வெச்சுக்கிட்டு உருமி அடிக்கறாருங்க.

'ஏதோ பொருளாதாரச் சீர்திருத்தம் செய்யறதா சொன்னாங்க. கரன்ட் கட்டு நின்னு போகும்; நின்னுபோன பனியன் கம்பெனிக, நூல் மில்லுக எல்லாம் மறுபடியும் வேகமெடுத்து ஓடும்; வெளிநாட்டுல பதுங்கிக் கெடக்கிற கறுப்புப் பணம் நம்ம ஊரு தெருவுல வெள்ளமா ஓடும்; குடும்பத்துக்கு ரெண்டு லட்சம் வீதம் கிடைக்கும்... இப்படியெல்லாம் கனவா கண்டுக்கிட்டிருந்தா, கடைசியில திங்கற சோத்துல மண்ண அள்ளிப் போட்டுட்டாரு மன்மோகன் சிங். சிலிண்டருக்குக் குடும்பக் கட்டுப்பாடு, டீசல் விலை ஏத்தம், பன்னாட்டுக் கம்பெனிங்களுக்கு வாசலைத் திறந்துவிடறது(51% அன்னிய முதலீடு)னு நாட்டையே அந்நியனுக்கு வித்துப்புட்டாரு சிங்' - இப்படி இந்தத் தள்ளாத வயசுல... பேசிப்பேசியே மதகுல சரிஞ்சு கிடக்கறாருங்க அந்த வாத்தியார்.

பாவம்ங்க அவரு... வெள்ளைக்காரனுங்கள விரட்டி விரட்டி அடிக்கற அளவுக்கு காங்கிரஸ் வீரியமா இருந்த காந்தி காலத்துல பொறந்தவரு. இன்னிக்கு, கதர் கூட்டமே கொள்ளைக் கூட்டமா மாறிப் போயிருக்கற நிலையில... அவரால புலம்ப மட்டும்தான் முடியுது.

நானும் தெரியாமத்தான் கேட்கிறேன்... சீர்திருத்தம்னா, நாட்டை அந்நியனுக்குக் கூறுபோட்டு விக்கிறதுதானுங்களா?

இப்படி கேட்டாக்கா... 'அந்நிய நிறுவனங்கள் கடை திறந்தால், இந்திய விவசாயிகளின் விளைபொருளுங்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்க்கை மலரும்'னு பக்கம் பக்கமா விளம்பரம் கொடுத்து, எங்களயும் இழுத்துவிடறீங்க. கதர் சட்டைங்க காசு பண்றதுக்கும்... கமிஷன் பார்க்கறதுக்கும்... இளிச்சவாயன் நாங்கதான் கிடைச்சோமா?

'மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் கிராமங்கள்ல செலவிடப்படும்'னு வேற சொல்லியிருக்கீங்களே... அப்படினா, ஒட்டுமொத்தமா கிராமங்கள்ல இருக்கற நிலங்கள, பன்னாட்டு முதலைங்களும் வளைச்சு வளைச்சு வாங்கிப் போடறதுக்கு வழியைக் காட்டிட்டீங்க, அப்படித்தானே! 'ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'னு வேற கதையளந்திருக்கீங்க. எல்லாமே கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, கேப்பையில நெய் வடியாதே!

'கறை நல்லது’னு டி.வி-யில விளம்பரம் வர்றது கணக்கா... 'டீசல் விலை உயர்வு நல்லது... பொருளாதாரம் வளரும்... நாடு நல்லப் பாதையில பயணிக்கும்..'னு கலர்கலரா கதையளந்திருக்கீங்க. நீங்க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கி, இதுவரைக்கும் நூறு, நூத்தம்பது தடவை டீசல் விலையை ஏத்தியிருப்பீங்க. 

அப்படியிருந்தும் இதுவரைக்கும் ஏனுங்க ஒங்க பொடலங்கா பொருளாதாரம் உசரவே இல்ல! ஒருவேள நீங்க சொல்ற மாதிரி ஒசந்திருக்குனு வெச்சுப்போம். விவசாய விளைபொருட்களான நெல்லு-கொள்ளு... ஆவக்கா-கோவக்கா... தேங்கா-மாங்கா... பால்-பருத்தி...னு எல்லாத்தோட விலையையும் ஏத்துங்க... அப்பவும் பொருளாதாரம் வளரத்தானே செய்யும்.

'ஈமு கோழியை நம்பி பணம் கட்டுறவனுங்கதானே... எதை வித்தாலும் வாங்கிடுவாங்க'னு ரொம்ப நம்பிக்கையோடத்தானே அந்நியனுக்கு கதவைத் தொறந்துவிட்டிருக்கீங்க. பரவாயில்ல... சீக்கிரமே, ஒட்டுமொத்தமா எல்லாத்தையுமே அந்த அந்நிய முதலைங்க வளைச்சுடப் போறாங்க. அதுக்குப் பிறகு, அவுங்க கடையில விக்கிற விஷத்துல (மரபணு மாற்றுப்பயிர்) விளைஞ்ச கத்திரிக்கா முதல், கருவாடு வரைக்கும் அவுங்க சொல்ற விலையில... அவங்க கொடுக்கற அளவுலதான் வாங்கிச் சாப்பிட வேண்டியிருக்கும். சீனாவுக்கு போனா... பாம்பு சூப் பத்து ரூபா... வெஜிடபிள் சூப் நூறு ரூபாய்னுதான் விக்கும். அதேபோல இவனுங்களும் 'மரபணு மாத்தின காய்கறி 20 ரூபா... இயற்கைக் காய்கறி வேணுமா... 200 ரூபாய்'னு சொல்லுவான்!

நம்ம ஊரு நாட்டுத் தக்காளி... சின்னது, பெருசு... வளைஞ்சது, நெளிஞ்சதுனு இஷ்டத்துக்கு விளைஞ்சு கிடக்கும். உங்க ஊரு விவசாயிக்கு விளைவிக்க தெரியல... இங்க பார்த்தீங்களா... 'சும்மா 15 செ.மீ. ரவுண்டுக்கு ஒரேமாதிரியா விளைஞ்ச தக்காளி'னு விஷத்துல விளைஞ்சத பளபளப்பா இறக்குமதி பண்ணி விப்பான்.

நம்ம ஊருலதான் கோட்-சூட் போட்டு டை கட்டிக்கிட்டு வர்றவன், கழுதை விட்டையை பொட்டலம் கட்டி வித்தாகூட... 'திஸ் ஈஸ்... விட்டமின்- பி'னு சொல்லிக்கிட்டே வாங்கி முழுங்கறதுக்கு ஆளுங்க இருக்கே.
ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2 ஜி ஊழல் எல்லாம் தாண்டி, இப்ப நிலக்கரி ஊழல்ல வந்து நிக்கறீங்க. நாடே இதைப் பத்தித்தான் இப்ப உருமி அடிக்குது. 'ஏண்டா... இந்தியானு ஒண்ணு இருந்தாதானே... ஊழல்பத்தியெல்லாம் பேசுவீங்க. ஒட்டுமொத்தமா அந்நியனுக்கு வித்துட்டா என்ன செய்வீங்க?'னுதானே 'சீர்திருத்தம்'ங்கற பேருல... அன்னை சோனியா காந்தியோட உத்தரவுப்படி நாட்டை விலை பேசியிருக்கீங்க.

'கேட்டாக்கா... வெறும் 51% சதவிகிதத்தைத்தான் தந்திருக்கோம். என்ன இருந்தாலும், இந்தியாவோட சட்டதிட்டங்கள மதிச்சுதான் அவங்கள்லாம் நடந்துக்குவாங்க. நம்மள மீறி எதையும் செய்ய முடியாது... சட்டப் பாதுகாப்பு இருக்குது'னு வியாக்கியானம் வேற பேசறீங்க.

ம்க்கும்... காவிரி ஆணையத்தோட தலைவர்னு சொல்லிக்கிட்டு உக்கார்ந்திருக்கீங்க நீங்க. ஆனா, நீங்க தலையிட்ட பிறகும்கூட தமிழ்நாட்டுக்கு காவிரித் தண்ணியைத் தரமுடியாதுனு சொல்லிட்டு, உங்க மூஞ்சியில அடிச்ச மாதிரி ஆணையக் கூட்டத்தைவிட்டே வெளியில எழுந்திருச்சி போயிருக்கார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். உள்ளூர்க்காரன்கிட்டயே ஒங்க அதிகாரம் செல்லுபடியாகல. இதுல வெளிநாட்டுக்காரன் மட்டும் கேட்டுடுவானாக்கும்?

இந்தியாவே திரண்டு பந்த் நடத்திக்கிட்டிருக்குது ஒங்களோட முடிவுகளை எதிர்த்து. ஆனா, அதே தினத்துல... 'அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி... சட்டம் அமலுக்கு வந்தது'னு வீம்பா அறிவிக்கறீங்க. நாட்டுமேல என்னமோ ஒங்களுக்கு மட்டுமே அக்கறை இருக்கற மாதிரி தடலாடியா முடிவெடுக்கறீங்க. இதெல்லாம் நல்லதுக்கே இல்லீங்க. 'மோகன்தாஸ் காந்தி வாங்கித் தந்ததை... சோனியா காந்தி விலை பேசி வித்துப்புட்டாங்க'ங்கற கெட்ட பேரு வேணாமுங்க.

'தற்சார்புப் பொருளாதாரத்தை அழிச்சு... புறசார்புப் பொருளாதாரத்தை அனுமதிச்சா... நாடு நாசமாகும்'கறது... தொல்காப்பியர், நாலடியார், திருவள்ளுவர் காலத்துல இருந்தே நம்ம நாட்டுல கடைபிடிச்சுட்டு வர்ற கொள்கை. ஆனா... 'மாப்பிள்ளை செத்தா என்ன... பொண்ணு செத்தா என்ன... மாலை பணம் கிடைச்சா போதும்'கிற மனநிலையில் இருக்கிற நீங்க... இதையெல்லாம் எங்க காதுல ஏத்திக்கப் போறீங்க?

வாழ்க பாரதம்... வாழ்க ஜனநாயகம்!

-கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 10-10-12

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

அணுஉலைக்கு எதிரான ஒரு கைக்கூலி உருவான கதை..!



அவன் ஒரு கைக்கூலி.  வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன்.  ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன்.  மக்களை மிரட்டுபவன்.   பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன்.  அயோக்கியன்.   அமெரிக்க கைக்கூலி.   இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன.  விஷயத்தை விசாரித்தால், அவை அத்தனையும் உண்மை என்றே தெரிய வருகிறது.


நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன்விளை என்ற ஊரில் பிறந்தான் ஒருவன்.   அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம்.  அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.   போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல.   வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிரசின் கோட்டையாக இருந்த அந்த ஊரில் திராவிடர் கழக கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், அவர் தாக்கப்பட்டதை பல முறை தன் தங்கைகளோடு நின்று தடுத்திருக்கிறான்.   அதனால் போராட்டங்கள் அவனுக்கு புதிதல்ல.

அவன் அம்மா கல்லுப்பட்டியில் உள்ள காந்திய ஆசிரமத்தில் படித்தவர்கள் அவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில்.  அவர் அப்பா திமுக என்றால் அம்மாவோ தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்.   நேரெதிரான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவனின் தாய் தந்தையரின் சிறப்பான வாழ்வில் அரசியல் பிடிப்புகள் பிளவை ஏற்படுத்தவில்லை. இரண்டு அரசியல் சிந்தனைகளுக்கும் அந்த வீட்டில் இடம் இருந்தது.   அவன் தந்தையின் விருப்பப்படி வீட்டில் பெரியார் அண்ணாவின் படங்கள் இருந்தன. அவன் தாய் விருப்பப்படி, காமராஜர் படமும் வீட்டில் இருந்தது.    அவன் குடும்பம் இந்துக் குடும்பம்.  ஆனாலும் அவன் அம்மா சமூக நலத்துறையில் செய்து வந்த பணியின் காரணமாக பால்வாடி மற்றும் பல வீடுகளுக்கு சென்று வந்ததால் அந்த வீடுகளில் கிறித்துவ மதத்தினர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து, தனது பிள்ளையையும் பிரார்த்தனை செய்யச் சொல்வார். 

அவனுக்கு கிறித்துவ மதத்தின் மீது மரியாதை உண்டு. அவன் அம்மா கிறித்துவ மதத்தினர் போல பிரார்த்தனை செய்தாலும் அவன் வீட்டின் அருகிலிருந்த சுடலைமாடன், இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்வதையும் தவிர்த்ததில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை உடைய அவன் தந்தை இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை. 

நாகர்கோயிலில் உள்ள டிவிடி மேல்நிலைப் பள்ளியில் படித்தான்.  அவன் படித்தது தமிழ் மீடியம் என்றாலும், ஆங்கில மொழி மீது இருந்த ஆர்வம் காரணமாக ஆங்கில மொழியை ஆர்வத்தோடு கற்றான்.   அவன் தந்தை அவனை இன்ஜினியர் ஆக்க விரும்பினாலும், அவன் தனக்கு விருப்பமான, சமூக அறிவியலைப் படித்தான். சமூக அறிவியலை படித்ததாலோ என்னவோ சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவனாக மாறினான். கேரளாவில் ஆங்கில இலக்கியம் படித்தான். பின்னர்  புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவன் அறிவை விசாலமாக்கியது.   மார்க்சியம் கற்று, மார்க்சியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், மார்க்சியம் அமல்படுத்தப்பட்ட எத்தியோப்பியாவின் யதார்த்த நிலைமைகள் அவனை மார்க்சியம் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது.   
மெங்கிஸ்டு ஹெல்மெரியம்
ஆசிரியர் வேலை கிடைத்து எத்தியோப்பியாவுக்கு பயணம் செய்த அவன், அப்போது எத்தியோப்பியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த மெங்கிஸ்டு ஹெல்மெரியம் என்பவர் கம்யூனிசம் என்ற பெயரில், சோவியத் ரஷ்யா துணையோடு தனி மனித சுதந்திரத்தை ஒடுக்கியதையும், பார்த்து மனம் வெறுத்தான். 1987 வரை எத்தியோப்பியாவில் பணியாற்றினான் அந்தக் கைக்கூலி.   யுனெஸ்கோ துணையோடு, எத்தியோப்பியாவிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணியாற்றினான்.  அவன் பணியை எதியோப்பிய அரசாங்கம் நட்பாக பார்க்கவில்லை.  எத்தியோப்பிய அரசாங்கத்தின் உளவுப்படை அவனை கண்காணிப்புக்கு உள்ளாக்கியது.   யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக, எத்தியோப்பிய அரசாங்கத்துக்கு எதிராக அவன் செயல்படுகிறான் என்று அந்த அரசாங்கம் சந்தேகித்தது.  நிம்மதியாக பணியாற்ற முடியாத சூழல்.  அந்தச் சூழலில், அவன் மேலும் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காமல் திரும்பி வந்தான். 

எத்தியோப்பியாவில் பணிக்குச் செல்வதற்கு முன்பே, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அணுசக்திக் கப்பல்கள் நிலை கொண்டிருப்பதை எதிர்த்து, இந்துமகா சமுத்திர அமைதிக் குழு என்ற ஒரு அமைப்பை தன்னுடைய 21வது வயதில் ஏற்படுத்தினான்.  வளர்ந்த நாடுகளுக்கிடையிலான பனிப்போர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குழு பணியாற்றியது. அணு ஆயுதம் தாங்கியுள்ள அந்தக் கப்பல்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு நேரும் பேரழிவைப் பற்றி பேசியது அந்தக் குழு.

அந்த சமயத்தில்தான் அவனுக்கு அணு ஆயுதங்கள், அணு சக்தி தொடர்பான விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டது.  அணு சக்தியும், அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது அணு ஆயுதத் தயாரிப்புக்காகவே அணு சக்தி என்ற சிந்தனையே உருவானது என்பதை புரிந்து கொண்டான். 

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் பல்கலைக்கழகத்தில் தன் மேற்படிப்பை தொடர்ந்தான். அங்கே மேற்படிப்பு முடிந்ததும், ஆஸ்திரேலியா சென்று உதவித்தொகையோடு படிப்பை தொடர்ந்தான்.  அங்கே ஒரு பேராசிரியரின் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டே, முனைவர் படிப்பையும் அவன் முடித்தான். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வேலை கிடைத்தது.  அங்கும் பணியாற்றி விட்டு, 2001ல் முழு நேரமாக இந்தியாவுக்கு திரும்பினான்.

இந்தியாவில் பிஜேபி அரசு செய்த அணு ஆயுதச் சோதனையின் விளைவுகள் இதற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமையை அவனுக்கு உணர்த்தியது. வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்து அப்பாவி முகமூடி போட்டுக்கொண்டு வலம் வரும் ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி ஆகிய அமைப்புகளைப் பற்றியே அவன் முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்திருந்ததால்,  இது பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவனுக்கு எளிதாக இருந்தது. 

பிஜேபி அரசாங்கம் இந்தியாவில் பதவியேற்றதும், இந்தியா சந்திக்கப்போகும், ஆபத்துக்கள் குறித்து அவன் தொடங்கிய பிஜேபி அரசு கண்காணிப்புக் குழுவில்  இந்து ராம்,  கே.எம்.பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏ.ஜி.நூராணி, அஸ்கர் அலி இன்ஜினியர் ஆகியோர் அதில் இணைந்தார்கள். பாரதீய ஜனதா கட்சி பதவியிழக்கும் வரை அந்த அமைப்பு தொடர்ந்தது.  அந்த அரசு வீழ்ந்ததும், இந்த அமைப்பை கவர்மென்ட் வாட்ச் என்ற அமைப்பாக மாற்றி தொடர்ந்து அதில் செயல்பட்டு வந்தான்.   

2001ல் பழவிளை என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி தன் மனைவியோடு சேர்ந்து, அங்கே ஒரு பள்ளியைத் தொடங்குகிறான். பழவிளை என்பது ஒரு கிராமம்.   அவனின் கல்வி பின்புலத்திற்கும், அறிவாற்றலுக்கும், திருநெல்வேலியில் நல்ல கல்விக்கு இருந்த வற்றாத தேவைக்கும் ஏற்ப, அவன் நெல்லை நகரத்தில் இந்தப் பள்ளியைத் தொடங்கியிருந்தால், இன்று ஜேப்பியார் போலவோ, ஏ.சி.சண்முகம் போலவோ ஒரு கல்வித்தந்தை ஆகியிருப்பான்.  ஆனால் கிராமப்புற மக்களுக்குத்தான் கல்விக்கான தேவை இருக்கிறது என்பதற்காக அந்தக் கிராமத்திலேயே அந்தப் பள்ளியை தொடங்கினான்.   வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டத்தோடு இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல் போன்றவற்றையும் அவன் பள்ளியில் அந்தப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தான். பெற்றோர்களிடத்தில் பத்து ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் பள்ளியை நடத்தினான்.    அவன் தொடங்கிய பள்ளியின் பெயர் சாக்கர்.  (SOCCER) சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் எஜுகேசன் ரிசர்ச் என்பதுதான் அதன் விரிவாக்கம். அவன் இருந்த பகுதியில், மத மோதல்களுக்குப் பஞ்சமே இல்லை.  வலதுசாரி இந்து அமைப்புகள் எப்போது பிரச்சினையைக் கிளப்பலாம் என்று காத்துக் கொண்டிருக்கும்.  ஒருவன் நல்ல பள்ளியை நடத்தி, சுற்றுப்புற மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்கினால் மதவாதிகளுக்குப் பொறுக்குமா என்ன ?

அந்தப் பள்ளிக்கான ஆதரவை குலைக்க வேண்டும் என்பதற்காக, சாக்கர் என்பது கிறித்துவ அமைப்பு. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விஷப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.   ஆனால் இந்தப் பிரச்சாரங்கள் அந்தத் தரமான பள்ளியின் புகழை குலைப்பதில் வெற்றி பெறவில்லை. வழக்கமான பள்ளியாக இருந்தால் ஒரு வேளை புகழ் குறைந்திருக்கும்.  ஆனால் அந்தப் பள்ளியில் கல்வி வித்தியாசமாக அல்லவா வழங்கப்பட்டது...!!! கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அந்தப்பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்தார்கள். கல்லூரிகளில் நடத்துவது போன்ற செமினார்கள் பள்ளியில் நடத்தப்பட்டன.  

இயல்பாகவே சுற்றுச் சூழல் குறித்து இருந்த அவனது ஆர்வம், கூடங்குளம் அணு உலை நோக்கி அவனது கவனத்தை திருப்பியது.  அணு உலையை எதிர்க்கும் அவனது பொதுநலத்தில் சுயநலமும் கலந்திருந்தது.   அவனது தாத்தா பாட்டிகளில் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருந்தனர்.  அவனது அப்பாவின் அம்மாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.   பாட்டி என்றால் உயிர்.  அந்தப் பாட்டி, அவனுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று பல்வேறு கதைகளைச் சொல்லி அவன் அறிவை விரிவாக்கியிருந்தார்.    அந்தப் பாட்டி கதை சொல்லும் அழகும் திறமையுமே பின்னாளில் அவன் பேச்சுத்திறனுக்கு உந்துசக்தியாக அமைந்தது.   

அந்தப் பாட்டிக்கு புற்று நோய் வந்தது.  அந்த நோயை, உரிய நேரத்தில் கண்டுபிடிக்காமல் விட்டதால் நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது.  புற்றுநோயால் பாட்டியின் கன்னத்தில் ஓட்டை விழுகிறது.  எந்தப் பாட்டி தனக்கு கதை சொல்லி அவன் அறிவை விரிவாக்கினார்களோ, அந்தப் பாட்டிக்கு அன்போடு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத கொடுமையை அவன் அனுபவித்தான்.   அவன் சொந்த ஊரான இசங்கன்விளையில் பலர் புற்றுநோயால் அவதிப்பட்டதை பார்த்துப் பார்த்து, அணு உலை மற்றும் அணு சக்திக்கு எதிரான அவனது உணர்வுகள் பலப்பட்டன. 

அவன் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்த சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடுப் புதூர், கொட்டில்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் புற்றுநோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  இது குறித்து அவன் ஆய்வில் இறங்கியபோது, அக்கடற்கரைப் பகுதியில் தோரியம் கிடைப்பதைக் கண்டறிந்தான்.  தோரியம் கதிரியக்கம் கொண்டது என்பதையும் கண்டு கொண்டான்.   அந்த மணலை தோண்டியெடுத்து ஏற்றுமதி செய்யும் ஆலைகள் அந்தக் கதிரியக்கத்தை அதிகப்படுத்துவதையும் கண்டுபிடித்தான்.   அந்தப் பகுதியில் வசிக்கும் ஆண்களுக்கு விரைப்பையில் புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணம், அந்த மணல் மீதே அமர்ந்து வலைப்பின்னுதல், சீட்டாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது என்பதைக் கண்டறிந்தான். உலகிலேயே நார்வே, துருக்கி மற்றும் இந்தியாவில் மட்டும்தான் தோரியம் கலந்த மணல் இருக்கிறது என்பதையும், அந்த மணலை ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்பதை கண்டுபிடித்தான்.  

2001ல் இந்தியா வந்தபிறகு, கூடங்குளம் அணு உலையைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கிறான்.

20 நவம்பர் 1988ல், இந்தியாவுக்கும், அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.  இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த செர்னோபில் விபத்தைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் சோவியத் யூனியனோடு இந்த ஒப்பந்தத்தைப் போடுகிறது இந்தியா. சோவியத் யூனியன் உடைந்ததும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிறது.  1997ல், அப்போதைய பிரதமர் தேவகௌடாவும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸினும் மீண்டும் ஒரு கூடுதல் ஒப்பந்ததைப் போட்டு, அணு உலைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள். முதன் முதலில் 1988ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூடங்குளம் அணு உலைக்கு ஆவதாக மதிப்பிடப்பட்ட செலவு 6000 கோடி.  இதே தொகை 1997ல் 17,000க கூடுகிறது.  முதலில் அணு உலைக் கழிவுகளை திருப்பி எடுத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்த ரஷ்யா, பின்னாளில் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டது. 

கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 20 நவம்பர் 1988ல் கையெழுத்தான உடனேயே அடுத்த மாதமே, 19 டிசம்பர் 1988 அன்று சமத்துவ சமுதாய இயக்கம் ஒன்ற ஒரு இயக்கத்தை அணு உலைக்கு எதிராக தொடங்குகிறார் டேவிட் என்பவர்.   இந்த அமைப்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேருகின்றன.

1989ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன.  தொடர்ந்து நடந்து வந்த இந்தப் போராட்டங்கள் 1989ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று போகின்றன.  அணு உலையின் எதிர்காலம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு முடிந்துவிட்டது என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.  

1998ல் ரஷ்யாவோடு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, போராட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன.  மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு கூடங்குளம் அணு உலையின் ஆபத்து குறித்து மாநாடு நடத்துகின்றது.   பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் அணு உலைக்கு எடுக்கப்பட்டால், எப்படி அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது விரித்துரைக்கப்படுகிறது.  

இதற்கிடையே அணு உலைக்கான வேலைகள் தீவிரமாக மத்திய அரசால் தொடங்கப்படுகின்றன.   2001 நவம்பர் 10 அன்று அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மதுரையில் உருவாக்கப்படுகிறது.   அந்தக் கூட்டமைப்பு உருவானதில் முக்கியப் பங்கு வகிக்கிறான் அவன். 

2002 ஜனவரி முதல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கருத்தரங்குகள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், என்று பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.   அத்தனையும், இவன் ஒருவனின் முன் முயற்சியால் நடைபெறுகின்றன. கிராமம் கிராமமாகச் சென்று, அணு உலைக்கு எதிராக தெரு முனைக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறான். 

ஆனால், இவன் சொல்வதை யாருமே காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அந்த அணு உலையால் கடுமையாக பாதிக்கப்படும் கூடங்குளம் மக்களே கூட இவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில், மத்திய உளவுத்துறையின் ஆதரவில், சில போக்கிலிகள் இவன் கூட்டம் நடத்தும் இடங்களுக்கு வந்து இவனையும், இவனோடு இருந்தவர்களையும் விரட்டி அடிக்கின்றனர்.

2001 முதல் இவன் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கான பலன், 2007 முதல் லேசாகத் தெரியத் தொடங்குகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இவன் பிரச்சாரம் செய்தபோதெல்லாம், அம்மக்கள், சிங்கப்பூராக மாற இருக்கும் கூடங்குளத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறான் என்றே நினைத்தார்கள்.   அணு உலை வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் வரும், தங்கும் விடுதிகளைக் கட்டி வாடகைக்கு விட்டால், இங்கே தங்க வருபவர்களின் மூலம் ஏராளமான வருமானம் வரும் என்றே நம்பினார்கள்.  இந்த நம்பிக்கையால் கூடங்குளம் ஊருக்குள்ளே அவன் அனுமதிக்கப்பட்டதேயில்லை. 

அந்தப் பகுதியில் பெரும்பாலாக இருந்த நாடார் இன மக்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  நாம் சம்பாதித்து பெரிய ஆளாக ஆவதை தடுப்பதற்காக பிரச்சாரம் செய்கிறான் என்றே நினைத்தார்கள்.   2007ல் தான் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. அணு உலை வேலைகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது, இவர்கள் சொன்ன மாற்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லையே என்பதை அம்மக்கள் உணரத் தொடங்குகின்றனர்.  

அதன் பிறகு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், எல்லா இடங்களுக்கும் பயமின்றி சென்று பிரச்சாரம் செய்ய முடிந்தது.  இந்த புதிய உத்வேகத்தில், நண்பர்களின் உதவியோடு துண்டுப் பிரசுரங்கள் போடுவது,  தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று தன் பணியை வேக வேகமாகச் செய்யத் தொடங்கினான்.  

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் ?  கூடங்குளம் அணு உலை ஆபத்தில்லாதது, கூடங்குளத்தை சிங்கப்பூராக்கும் என்ற அவர்களின் பிரச்சாரத்துக்கு அவர்களே வேட்டு வைத்தார்கள். 2011ல் மார்ச் 11 அன்று ஜப்பானின் புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து இந்திய அணு சக்தியாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.  என்னடா இது.. ஏற்கனவே இந்தப் பயல்கள் அணு உலை என்றால் ஆபத்து என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த விபத்து வேறு நடந்திருக்கிறது.   விட்டால் இதை வைத்தே இவர்கள் மக்களைத் திரட்டி விடுவார்கள்.  அவனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளலாம் என்று மத்திய அணு விஞ்ஞானிகள் களம் இறங்கினார்கள். 

ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துப் போல விபத்து ஏற்பட்டால், அனைவரும் வீட்டுக்குள் புகுந்து கொள்ள வேண்டும்.  வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு வெளியாகும்.   வேகமாக மூச்சு விடக் கூடாது.  இந்த இடத்திலிருந்து உங்களை அப்புறப்படுத்த அரசு வாகனங்கள் வரும்.  30 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். ஆறு மாதத்துக்கு ஊருக்குள் வரக்கூடாது.  அரசு உத்தரவிட்ட பிறகே ஊருக்குள் வர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.
  
அத்தனை நாள் அரசு சொல்லும் அத்தனை விஷயங்களையும் கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களுக்கு அடடா, உதயகுமாரும் அவரோடு இருக்கும் மற்றவர்களும்  இத்தனை நாட்களாக சொல்லி வந்த விஷயத்தை தற்போது அரசு அதிகாரிகளே சொல்லுகிறார்களே என்பது உறைக்கத் தொடங்கியது. 
புக்குஷிமாவுக்குப் பின் கதிர்வீச்சுக்காக சோதிக்கப்படும் ஜப்பானியக் குழந்தை

அதுவும் புக்குஷிமா விபத்து நடந்து அது தொடர்பான விவகாரங்களை பொதுமக்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதன் பிறகு மக்களிடம் விபத்துக்கான ஒத்திகையும் நடத்தியாயிற்று.   இந்த நேரத்தில் அணு உலையைத் திறந்தால், மக்களிடம் எதிர்ப்பு வலுக்கும் என்பது புரிய வேண்டாமா… ? நாராயணசாமி போன்றவர்கள் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தால் அரசு எப்படி செயல்படும்…  இப்படித்தான்..   புக்குஷிமா விபத்து நடந்து முடிந்து, ஒத்திகையும் நடத்தி முடித்த ஒரு சில வாரங்களில், கூடங்குளம் அணு உலை தொடங்கப்போகிறது என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.   ஜுன் 1, 2011ல் கூடங்குளம் அணு உலையில் பரீட்சார்த்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அணு உலை புகைப்போக்கியிருந்து வெள்ளை நிறப்புகை வெளியேறுகிறது.  அந்தப் பாமர மக்கள், அந்தப் புகையே நம்மைக் கொன்று விடும் என்று அஞ்சுகிறார்கள்.   ஏற்கனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மக்களுக்கு சொல்ல வேண்டுமா ?  இத்தனை நாட்களாக இந்த அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிச் சொன்ன அவனைக் கடவுளாகப் பார்க்கிறார்கள்.  அய்யா, எங்களைக் காப்பாற்று, எங்கள் உயிரைப் பறிக்க வருகிறார்கள் அணு விஞ்ஞானிகள் என்று அவனிடம் தஞ்சம் புகுகிறார்கள். 

2001 முதல் தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருந்த அவனுக்கு மக்கள் திரளாக வந்து, எங்களுக்காக போராடு என்று கோரிக்கை வைத்தால் கசக்குமா என்ன..?  ஒரு படைத் தளபதியைப் போல களத்தில் இறங்கினான்.   வாருங்கள் நான் இருக்கிறேன்… மோதிப் பார்த்து விடுவோம் என்று போர் முரசறைந்தான்.    ஊழல் செய்து சொத்து சேர்த்து, அதைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் போன்றவனா அவன் ?  அவனிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது…. அவன் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட அவனுக்கு வேறு என்ன பேறு அமைய முடியும் ?

இறங்கினான் களத்தில்.   அவன் ஒலித்த போர் முரசம் டெல்லியை நடுநடுங்க வைத்தது.  மக்கள் அவன் பின்னால் திரண்டார்கள்.   ஆகஸ்ட் 16ம் தேதி இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 

நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது.  அத்தனை நாள் வரை அவனை எதிரியாகப் பார்த்தவர்கள், அவனோடு சேர்ந்து அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிறு ஓடையாக இருந்த போராட்டம் நதிப்பிரவாகமாக பெருக்கெடுத்தது. 

அது வரை டெல்லியின் சந்து பொந்துகளில் அலைந்து திரிந்து இரை தின்றுக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு நரி, அவனைப் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது.   அந்த நரியின் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய உளவுத்துறை, சிபிஐ போன்றவற்றை அவன் மீது கட்டவிழ்த்து விட்டது. 

நேரடியாக அவனோடு பேரம் பேசியது அந்த நரி.  குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிடு.  அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள்.  அவன் நான் இந்தியாவுக்கு விபச்சாரம் செய்ய வரவில்லை என்று திருப்பியடித்தான். அவனைக் கடத்தி வைத்து விட்டு, அவன் மக்களை நிர்கதியாக்கிவிட்டு ஓடி விட்டான் என்று பிரச்சாரம் செய்ய முயற்சித்தார்கள்.  அது பலிக்கவில்லை.

அவனுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்று அந்த நரி, ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஊளையிட்டது.  அவன், அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நான் பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன்.  கொடுக்கவில்லையென்றால், நரி விலகுமா என்று கேட்டான்.  அது குறித்து அந்த நரி வாயே திறக்கவில்லை.  அவன்தான் பேரத்திற்கு படியவில்லை.  அவனோடு இருப்பவர்களை விலைக்கு வாங்கலாம் என்று அந்த நரி முயற்சித்தது.  அவர்களோடு இருப்பவர்கள், அவனை விடத் தீவிரமாக இருந்தனர்.

அந்த நரிதான் அப்படி ஊளையிடுகிறது என்றால், அந்த நரிக்கும் மற்ற நரிக்கூட்டத்திற்கும் தலைவனாக தலைப்பாகை அணிந்த ஓநாய் ஒன்று இருந்தது.  அந்த ஓநாய் ஒரு நாள், அவன் வெளிநாட்டில் பணம் வாங்குகிறான் என்று வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தது.  அவன் அந்த ஓநாய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான்.  அன்று பம்மிய அந்த ஓநாய் இன்று வரை வாய்த் திறக்கவில்லை. 

அவன் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளான்.   கருப்புப் பணம் பதுக்கியுள்ளான் என்றது அந்த நரி.   ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள், கண்ணப்ப நாயனார் சிவபெருமானை கல்லால் வழிபட்டது போல, மலர்களாக அவன் மீது விழுந்தன. 

அவன் போராட்டத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடியில் வந்து, கூடங்குளம் மக்களோடு நான் ஒருத்தி.   உங்கள் கவலைகள் தீர்க்கப்படும். பயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.   அவனும் அவனோடு சேர்ந்த மக்களும் மகிழ்ந்தனர்.  ஆர்ப்பரித்தனர். 

அந்த மக்கள் கருப்பாக இருக்கிறார்கள்.  ஜெயலலிதா சிகப்பாக இருக்கிறார்.  அவர் எப்படி அம்மக்களில் ஒருத்தியாக முடியும்.  உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாளே, காவல்துறையை இறக்கினார்.  காவல்துறையின் பெரும்படை நீண்ட நாட்களாக இரையின்றி கட்டி வைக்கப்பட்டிருந்த வேட்டை நாயாக காத்திருந்தது.   அந்த “உங்களில் ஒருத்தி” பாண்டிச்சேரி நரியின் சதிக்குப் பலியானார்.   அந்த நரி என்ன நடக்கவேண்டுமென்று விரும்பியதோ, அதை முழு வீச்சோடு நடத்தினார்.

அவனை மிரட்ட அடுத்து என்ன செய்வதென்று, அவன் மீதும், அவனோடு இருந்த தோழர்கள் மீதும் தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.  ஒரு வழக்கு இரு வழக்கு அல்ல.  இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள். கலவரம் ஏற்படுத்தியது, வன்முறையைத் தூண்டியது.  தேசத்திற்கு எதிராக போர்த் தொடுத்தது, என்று சரமாரியாக வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். .  
  
அது மட்டுமா… ?  அவன் தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதி நடத்திய பள்ளியை அடித்து நொறுக்கினர்.  சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை வைத்து, அவன் பள்ளி மற்றும் ட்ரஸ்டுகளில் சோதனை நடத்தினர்.  மடியில் கனம் இருந்தால்தானே அவன் பயப்படுதவற்கு… ?  சோதனை நடத்துவதை பிரபலமாக விளம்பரப்படுத்திய அரசு நிர்வாகம், சோதனையில் எதுவும் கிடைக்காத விவகாரத்தை வெளிப்படுத்த மறுத்தது.   அவன் நடத்திய போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் வந்த கலந்து கொண்டார்.  அந்த ஜெர்மானியரை இரவோடு இரவாக நாடு கடத்தி, அவனை வெளிநாட்டு உளவாளி என்று சித்தரிக்க முயற்சி செய்தனர்.  அதுவும் வெற்றி பெறவில்லை.  அடுத்ததாக மாவட்ட ஆட்சியரோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது, சங் பரிவாரக் கும்பல்களால் அவனும் அவன் குழுவினரும் தாக்கப்பட்டனர்.   அவதூறான வார்த்தைககள் அவனை நோக்கி வீசப்பட்டன.  ஆனால் அவன் கலங்கவில்லை. 

தான் எடுத்த போராட்டத்திலிருந் பின் வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான். ஆரம்ப காலத்திலிருந்து அவனோடு உடன் இருந்த பிரஜாபதி அடிகளார், போன்றவர்களை பாண்டிச்சேரி நரி சதி வேலையால் அவனுக்கு எதிராக திருப்பியது.  பிரஜாபதி அடிகளார் அவனுக்கு எதிராக பேட்டியளித்தார் அவர்.  அவன் மன உறுதியை குலைக்க பல வேலைகளில் ஈடுபட்டனர் அவன் எதிரிகள்.    

அவன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களை அவன் சமாளித்தான். ஆனால் வெளிநாட்டிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறான் என்ற குற்றச்சாட்டை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.  இந்தாருங்களடா… பார்த்துக் கொள்ளுங்கள்.  என்னிடம் இருக்கும் சொத்துக்கள் இவ்வளவுதான் என்று பகிரங்கமாக அறிவித்தான்.

அடுத்ததாக அவன் மீது தாக்குதல் தொடுக்க ஊடகத்தை கட்டவிழ்த்து விட்டனர்.  

எழுத்து விபச்சாரம் செய்யும் ஒரு நாளிதழை வைத்து, அவனது உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது அந்த நாளிதழ்.  அவனும் அவன் கூட்டாளிகளும் திருட்டுத்தனமாக தின்று விட்டு உண்ணாவிரதம் என்று நடிக்கிறார்கள் என்று எழுதியது அந்த நாளிதழ்.   காலையில் இட்லியும் பூரியும் தின்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை கூசாமல் எழுதியது.  அறிவில்லா அரசு என்ற மண் தொலைக்காட்சியின் நிருபர், காவல்துறை வீசிய எலும்புகளை பொறுக்கிய விசுவாசத்தில் அவனுக்கு எதிராக விஷத்தைக் கக்கினார்.   அதே தொலைக்காட்சியின் நாம செல்வராஜ் என்ற நிருபர், அவனுக்கு நக்சலைட்டோடு தொடர்பு உள்ளது என்று அவர் பங்குக்கு அவன் மீது அவதூறை அள்ளி வீசினார்.  ஆனால், மக்களுக்கான போராளி மீது இது போன்ற அவதூறுகள் வீசப்படத்தானே செய்யும்.  அவன் அந்த அவதூறுகளை புறந்தள்ளி விட்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தான்.

தங்கள் முயற்சி இப்படிக் கேவலமாக தோல்வியிடைந்து விட்டதே என்று பாண்டிச்சேரி நரியும், டெல்லி ஓநாயும் மனம் வெதும்பின.  ஆனாலும் விட்டு விடுவார்களா என்ன ?  எங்கள் வேலை முடிந்து விட்டது, நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள் என்று ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர்.  சிகப்பு ஜெயலலிதாவுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவோ அரசியல் ஞானமோ இருந்திருந்தால், நான் ஏன் அம்மக்களை விரட்ட வேண்டும்… நான் ஏன் அம்மக்களுக்கு விரோதியா வேண்டும்.. அது பாண்டிச்சேரி நரி செய்ய வேண்டிய வேலை என்று சொல்லியிருக்க வேண்டும்.   ஆனால் கருணாநிதி விரிக்கும் வலையில் எப்போதும் விழுந்து விழுந்து பழக்கப்பட்ட ஜெயலலிதா, நரி வலையிலும் விழுந்தார்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று நரி சொன்னதும் சிகப்பு ஜெயலலிதா துடித்தார்…  போராடும் மக்களை உடனே விரட்ட வேண்டுமே என்று பதறினார்.   காத்திருந்த காவல்துறையை ஏவினார்.  

மக்கள் அடித்து விரட்டப்பட்டனர்.  தடியால் தாக்கப்பட்டனர்.  துப்பாக்கியால் சுடப்பட்டனர்.  வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  அந்த வன்முறை அம்மக்களை அச்சப்படுத்தும், அவர்களை அவனிடமிருந்து அந்நியப்படுத்தும், அம்மக்கள் வன்முறையை கண்டு பயந்து, அவனை வெறுத்த ஒதுக்குவார்கள் என்று எதிரிகள் நம்பினர். 

ஆனால் அம்மக்களை அவன் ஆடு மாடுகளாக வைத்திருக்கவில்லை.  அம்மக்கள் ஒவ்வொருவரையும் கற்றறிந்த போராளியாக மாற்றி வைத்திருந்தான்.  போராட்ட களத்தில் இருக்கும் போராளிக்கு வேண்டிய உத்வேகத்தோடு அவர்கள் அவன் பின்னால் திரண்டனர்.   அவனைக் கைது செய்யப் போகிறோம் என்று அரசாங்கம் மிரட்டியது.  தம்மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக அவன் சரணடைய முன் வந்தான்.  ஆனால், அவனை உயிராக நேசிக்கும் மக்கள் அவனைச் சரணடைய விடவில்லை.   நீ சரணடையாதே… எங்களுக்கு தலைமையேற்று போராட்டத்தை நடத்து… இறுதி வெற்றி நமதே என்று முழக்கமிட்டார்கள்.     அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… ? அவன் அம்மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டான்.  

போராட்டத்தை தொடர்ந்து நடத்த இசைந்தான். அவனைத்தான் துரோகி என்கிறார்கள்.  அவனைத்தான் வெளிநாட்டின் கைக்கூலி என்கிறார்கள்.  

அவன் வேறு யாருமல்ல தோழர்களே… கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் சுப.உதயக்குமார்தான் அந்தக் கைக்கூலி. 

நான் அந்தக் கைக்கூலியை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். இப்படி ஒரு கைக்கூலி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோமே என்று பெருமைப்படுகிறேன். அந்தக் கைக்கூலியைப் பாராட்டி என் உயிர் இருக்கும் வரை எழுதுவேன், பேசுவேன்.  நீங்கள்... .. ?

-"சவுக்கு" சங்கர்

Courtesy: www.savukku.net

சனி, செப்டம்பர் 15, 2012

கூடங்குளம்: தண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...


கூடங்குளத்தின் கடல் ஓரத்தில் நடந்துவந்த போராட்டத்தை, நாடு முழுவதும் பரவ வைத்தது மட்டும்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரே சாதனை. 'ஈரைப் பேன் ஆக்கி பேனைப் பெருமாள் ஆக்குவது’ என்று கிராமத்தில் சொல்வார்கள். போலீஸ் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால், அமைதிப்படுத்துவதை விட தங்களது அதிகாரத்தை நிலைநாட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்பது  ஆட்சியாளர்களுக்கு இன் னமும் தெரியாமல் இருப்பது, தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்!

 கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டி, அதற்கான வேலைகள் தொ​டங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, இதை எதிர்த்து முழக்கமிட்டவர்கள் சில நூறுபேர்தான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் அதிக மானதைத் தொடர்ந்து, போராட்டத்தில் அதிகம் பேர் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் சாயப் பட்டறைகள், கடலூர் கெமிக்கல் நிறுவனங்கள், திண்​டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றோடு கூடங்குளமும் பேசப்படும் நிலைக்கு வந்தது.

கடந்த ஆண்டு, ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணு உலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு எதிரான பிரசாரங்கள் பெருகின. அது தமிழகத்திலும் பற்றிக்கொண்டது. இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரவேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டது. கூடங்குளம் மக்களைச் சந்தித்து அவர்களது பீதியை அதிகப்படுத்தும் அளவிலான வகுப்புகளை அணுமின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.

'அணு உலை வெடிச்சா, நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? முகத்தை மூடிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடணும்’ என்று தொடங்கி 'ஆறு மாதங்களுக்கு ஊருக்குள் நீங்கள் வரக்கூடாது’ என்பது வரை வார்த்தைகளால் ரத்தத்தை உறைய வைத்தனர். தாங்கள், சாவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதை கூடங்குளம் மக்கள் உணர ஆரம்பித்தனர். அப்போதுதான், 'கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெருமுனைப் பிரசாரம் செய்யத் தொடங்கினனர். மாதத்துக்கு ஒரு கிராமத்தில் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட, பெண்கள் மட்டும் இதில் கலந்துகொள்வது என்று முடிவானது. முதலில் கூடங்குளம்... அடுத்து இடிந்தகரை... கூத்தங்குழி... பெருமணல்... வைராவிக் கிணறு... கூடுதாழை... செட்டிக்குளம் என்று பரவியது. மாதத்துக்கு ஓர் ஊர் என்று இருந்ததை, தொடர் உண்ணாவிரதமாக மாற்றினர். இடிந்தகரையில் பந்தல் போட்டு 127 பேர் உட்கார்ந்தனர். அணு உலையை எதிர்க்கும் அமைப்புகளும் வைகோ உள்ளிட்ட ஒருசில அரசியல் தலைவர்கள் மட்டுமே ஆதரித்த நேரத்தில்... இதற்கான எண்ணெய் வார்த்தவர் முதல்வர் ஜெயலலிதா.

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் தூத்துக்குடியில் பேசிய அவர், 'உங்களில் ஒருத்தியாக நான் அங்கேயே வந்து போராடத் தயார்’ என்ற அவருடைய அறிக்கைதான், கூடங்குளம் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து போராட்ட ஆர்வத்தைத் தூண்டியது. 'மக்களின் அச்சத்தைக் களைந்த பிறகுதான் அணு உலைப் பணிகளைத் தொடர வேண்டும்’ என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். போராட் டக்காரர்களை அழைத்துப் பேசினார். அதையே அமைச்சரவைத் தீர்மானமாகவும் ஆக்கினார். டெல்லிப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்​பட்டன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு முதல்வர் கோரிக்கை வைத்தார். 'அணுஉலை ஆபத்தானது. நான் உங்களோடு சேர்ந்து போராடுவேன்’ என்று அறிவித்த அவர், 'அணு உலையைத் திறக்க வேண்டும்’ என்று உத்தரவிடும் போதாவது கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களை நேரில் அழைத்து மனமாற்றம் செய்திருக்க வேண்டும். அல்லது அந்தப் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து இருக்க வேண்டும்.
ஓர் ஆண்டு காலமாக கூடங்குளத்தைச் சுற்றி இருக்கும் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதம் இருப்பது, ஓர் அரசாங்கம் சமாதா னப்படுத்தும் பிரச்னையாகத் தெரியவில்லையா? முதல்வர் செல்லவில்லை... இன்று முதல்வருக்கு அடுத்த நிலை முக்கியஸ்தர்களாகச் சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் அகியோராவது சென்றார்களா? தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருக்கும் தேபேந்திரநாத் சாரங்கிக்கு கூடங்குளம் எந்தத் திசையில் இருக்கிறது என்பது தெரியுமா? சட்டம் ஒழுங்கையும் உளவுத் துறையையும் ஒருசேரக் கவனிக்கும் டி.ஜி.பி. ராமானுஜம் ஒரு முறையாவது அந்தப் பகுதிக்குப் போய் வந்திருப்பாரா? அந்த மக்களைச் சந்தித்து இருப்பாரா? 

அவருடைய போலீஸ் வாழ்க்கை ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில்தான் ஆரம்பித்தது. அந்தப் பாசமாவது இருந்திருக்க வேண்டாமா? காதி கிராமத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஒரே ஒரு முறை உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்றார். உதயகுமாரனும் புஷ்பராயனும் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாதது மட்டுமல்ல... அந்தக் கேள்வியைக்கூட உள்வாங்கிக்கொள்ள செந்தூர்பாண்டியனால் முடியவில்லை. தமிழக அரசாங்கம் அமைத்த குழுவினராவது அந்த உண் ணாவிரதப் பந்தலுக்குப் போனார்களா? அணு உலையை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.

இப்படி எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் ஜெயலலிதா, விவகாரத்தை அடக்குவதற்குத் தேர்ந் தெடுத்த நபர் ராஜேஸ் தாஸ். தென் மண்டல ஐ.ஜி. கேரளாவுக்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்திய தேனி, பெரியகுளம் மக்களைப் பார்த்து, கோப வார்த்தைகளைச் சொல்லிச் சீண்டிவிட்டு, அடிதடிக் கலவரமாக அந்தப் போராட்டத்தை மாற்றியவர். ஒரு ஜான் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவரைப் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்க்கத் தெரியாமல்... தடுத்து... துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேர் கொலையான சம்பவமும் இவரது காலத்தில்தான். இப்போது, அவருக்குக் கூடங்குளம் அசைன்மென்ட். 'ஒழுங்கா இருங்க... இல்லைன்னா உதயகுமாரைத் தூக்கிடுவேன்’ என்று, எந்தப் போலீஸ் அதிகாரியாவது, கொந்தளித்து இருக்கும் மக்கள் முன்னால் சொல்வாரா? ஐ.ஜி. ஓர் இடத்தில் இருந்தாலே, கீழே உள்ள போலீஸ்காரர்கள் துணிச்சலாக அடிக்க ஆரம்பிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே. ஊருக்குள் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை சமாதானப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல்... அவர்களைக் கடலுக்குள் விரட்டிவிட்டு... அவர்களுக்கு ஆதரவாக சென்னை தொடங்கி எல்லா இடங்களிலும் போராட்டத்தைப் பரவவிட்டு... அதன்பிறகு, 'மீனவர்கள் மாய வலைகளுக்குள் சிக்க வேண்டாம்’ என்று அறிக்கை விடுவதுதான் ஒரு முதலமைச்சரின் விரைந்து முடிவெடுக்கும் திறனா?

இது ஏதோ ஜெயலலிதாவின் சொந்தப் பிரச்னை என்பது மாதிரி, மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தன் வாய், கண், காது மூன்றையும் மூடிக்கொண்டு விட்டது. உண்ணாவிரதம் இருப்பதும் போராட்டம் நடத்துவதும் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், அந்த மக்கள் கிளப்பும் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மத்திய அரசாங்கம்தான். அவர்கள் அமைத்த விசாரணைக் குழுவினரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வரவில்லை. அமைச்சர் நாராயணசாமி மட்டும் தெரியாத்தனமாக ஒரு முறை வந்தார். அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. 'அணு உலை பாதுகாப்பானது என்றால், உங்கள் மாநிலத்தில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும்தான் கடல் இருக்கே’ என்று, மக்கள் கிண்டல் செய்ததைப் பார்த்து நொந்துபோய், 'மக்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி விட்டுப் போனார். தமிழகத்தை டெல்லியில் பிரதிபலிக்கக்கூடிய ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் மக்களை மனமாற்றம் செய்ய வரவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டி.வி.க்களில்களில் மட்டுமே பேசினர். 'இரண்டு வாரத்தில் அணுஉலை செயல்படத் தொடங்கும்’ என்பதைச் சொன்னாலே அணுஉலை செயல்பட ஆரம்பித்து விடும் என்று மத்திய அரசு மௌனமாக இருந்தது. இப்போதுகூட அது ஜெயலலிதாவின் சுமை என்ற அலட்சியம்தான் டெல்லி காங்கிரஸ் தலைகளுக்கு இருக்கிறது.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவதில் கை தேர்ந்த கருணாநிதி, இப்போது புதிய புத்தராகப் பரிமாணம் பெற்றுள்ளார். 'மத்திய, மாநில அரசுகள் போராட்டக் குழுவி​னரிடம் பேசி ஆபத்து ஏற்படாது என உத்தரவாதம் தர வேண்டும். காவல்துறையை வைத்துக்கொண்டு போராட்டத்தை ஒடுக்க ஜெயலலிதா கருதிவிடக் கூடாது’ என்று உபதேசம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்தே சொல்லாமல் இருந்த கருணாநிதி, திடீரென கடந்த பிப்ரவரி மாதம், 'கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் அலைய வேண்டும். கூடங்குளத்தை செயல்பட விடாமல் ஏன் வைத்துள்ளீர்கள்? போராட்டக்காரர்களுடன் ஏன் முதல்வர் பேசுகிறார்? அவர்களை இவரே தூண்டி விடுகிறாரா?’ என்று பேசியதன் மூலமாகத்​தான் ஜெயலலிதா சினம்கொண்டு... உடனே நடவடிக்​கைகளில் இறங்கினார். யாரோ போட்ட உத்தரவுக்காக அன்று தூண்டிவிட்ட கருணாநிதி... இன்று அப்படியே மாற்றிப் பேசுவது எத்தகைய நாடகம். 'கூடங்குளம் பிரச்னை ஒன்று போதும், தென் மாவட்டத்தில் நாம் ஜெயிக்க!’ என்று இப்போதே சில  தி.மு.க. பிரமுகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம். அந்த அளவுக்கு அரசியல் கொக்குகள் மீன்களுக்காகக் கரையில் காத்திருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், மற்றவர்களைவிட ஜெய லலிதாவுக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது. மத்திய அரசாங்கம், இந்தியாவில் உள்ள அணு உலைகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கச் சொன்னது. அதன்படி அமைக்கப்பட்ட குழு 11 விதிமுறைகளைக் கொடுத்தது. அதில் இதுவரை 6 மட்டுமே கூடங்குளத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவும் அதை விளக்கி கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் செய்யவும் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும். அந்த மக்களிடம் அவர் பேச வேண்டும். அப்போதுதான் தென் மண்டலம் அமைதியாகும்.
ஜெ. நினைத்தால் அமைதிப்படுத்தலாம். ராஜேஸ் தாஸ்களால் நிச்சயம் முடியாது!

ப.திருமாவேலன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்,
ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார்

நன்றி: ஜூனியர்விகடன், 19 செப்டம்பர் 2012

புதன், செப்டம்பர் 12, 2012

கூடங்குளத்தில் நடப்பது என்ன?


கூடங்குளத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களுக்கும், ஆளும் அரசாங்கத்திற்கும் இடையேயான ஒரு யுத்தம். இந்த யுத்தத்தின் மையக் கரு என்னவென்றால்,
 “நாட்டின் வளர்ச்சி பற்றியும், நில, நீர், கடல் வள ஆதாரங்களின் பயன்பாடு பற்றியும் தீர்மானிப்பதில், அவற்றோடு நெருங்கிய தொடர்புடைய மக்களுக்கு உள்ள அதிகாரத்திற்கும், மக்களால் என்றோ ஒரு நாள், ஒரு நபர்-ஒரு வாக்கு முறை முலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கப் பிரதிநிதிகளின் அதிகாரத்திற்கும் உள்ள முடிவெடுக்கும் அரசியல் முரண்பாடாகும்.

இது நாள் வரை, ஏட்டளவில் மட்டுமே பார்த்து படித்து வந்த ஜனநாயகம் (மக்களாட்சி) இன்று உண்மையில் இடிந்தகரை மக்களின் ஒருமித்த சக்தியின் வெளிப்பாடாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

“அணு மின்சார மாய வலை” 

ஆளும் அரசாங்கங்களின் பிரதிநிதிகளாக உள்ள பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர், அவரது உத்தரவுக்காக காத்திருந்து செயல்படும் அமைச்சர்கள், அரசின் செயல் இயந்திரங்களான மாவட்ட நிர்வாகம், காவல் துறை என அனைத்து துறைகளும்,.. அது மட்டுமா... அரசின் கொள்கைகளை மக்கள் நலனுக்காக வகுக்கும் அதிகாரமும், பொறுப்பும் கொண்ட சட்டமன்ற எதிர்கட்சிகள் என அனைத்து “ஜனநாயகத்தின் தூண்களும் இன்று கூடங்குளம் அணு உலையை மக்களை பலி கொண்டாவது இயக்கிவிட துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் பின்னணியில், அணு உலையை அமைப்பதிலும், அதன் இயக்கத்திலும் அக்கறை கொண்ட கூலிக்கும், பட்டம், பதவிக்கும் மாரடிக்கும்  “விஞ்ஞானிகளும் தேசியக் கட்சிகளின் கூலிப்படையும் சேர்ந்து கொண்டு அம்மையார் சொன்ன ‘அணு மின்சாரம் என்ற மாய வலையை விரித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.  

இந்த மாய வலையில் விவரம் கெட்ட, மக்கள் அரசியல் புரியாத தான்தோன்றிகள் வேண்டுமானால் விழமுடியும்.  இடிந்தகரை மக்கள் போன்று சுய புத்தியால் ஆய்ந்து அறிந்த எவரும் விழமுடியாது.

யாருக்கு உரிமை

தென் தமிழக நிலப்பரப்பிற்கு சொந்தக்காரர்கள் சொல்கிறார்கள் இன்று அணு உலை வேண்டாம் என்று. இதை எங்கோ இருந்து கொண்டு ஆட்சி செய்யும் அதிகார வர்க்கம் தவறு என்றும் அந்த நிலப்பரப்பில் தான் நினைத்ததை செய்ய தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்ற தொனியிலும் செயல்பட்டு வருகின்றது. நீதி மன்றங்களும் இதையே நிலைநாட்டுகின்றன.  இந்த அதிகார வர்க்கங்கள், கடலையும், கடற்கரையையும் காலம், காலமாக மனித வளர்ச்சிக்கு பயன்படுத்தி பாதுகாத்து வரும் மக்களை ஒன்றும் தெரியாத ஏமாளிகள் என்று பட்டம் சூட்டுகின்றன. அதிகார வர்க்கத்தின், குறிப்பாக அரசின் இந்த பொய்ப் பிரச்சாரத்தை தோலுரிக்க எழுந்ததே இடிந்தகரை மக்கள் போராட்டம்.

இன்று வரை, இடிந்தகரை ஊருக்குள் மக்கள் இருக்கும் போது சென்று விளக்கம் சொல்லத் திராணியில்லாத அரச அதிகாரம், மக்கள் முற்றுகைப் போராட்டத்திற்காக கடற்கரையில் குழுமியிருக்கும் போது ஊருக்குள் புகுந்து தேவாலயத்தையும், மக்களின் பொது சொத்துக்களையும் நாசம் செய்துள்ளது.  போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயனைக் கைது செய்துவிட்டால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அதிகார வர்க்கமும், அரசியல் கட்சி அல்லக் கைகளும் கணக்கு போடுகின்றன.


ஆனால், இன்று நடக்கும் யுத்தம் சொல்வது என்ன தெரியுமா? இது மக்கள் அரசியல், மக்கள் அறிவு, மக்கள் பலம். அணு உலை கூடாது என்பது மக்களின் கொள்கை. அணு உலை என்பது அணு குண்டு தயாரித்து புவியை அழிக்கவே பயன்படும் ஒரு தொழில் நுட்பம். அதனால் நீடித்த மின் தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. மின்சாரம் தயாரிக்க பல வழிகள் உண்டு. ஆனால், தென் தமிழக புவியியற் பரப்பையும், அங்குள்ள வளங்களையும் நீடித்த மனித பயன்பாட்டிற்கு காக்க மக்களால் மட்டுமே முடியும். ஆகவே, கூடங்குளம் வட்டாரப் பகுதி மக்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு என்பதே மக்களின் அரசியல். 



இந்த அரசியலை ஏற்காத ஆதிக்க, அதிகார கும்பலே அணு உலை வேண்டும் என்ற அரசியலை செய்து வருகிறது. உதயகுமார், புஷ்பராயன் மற்றும் அவர்களது போராட்டக் குழுவினால் மட்டுமே மக்களின் அரசியலை அதிகார வர்க்கத்திடம் பேசி வாதிட முடியும் என்று மக்கள் நம்பியிருக்கிறார்கள். அவர்களே மக்களின் உண்மையான நண்பர்கள். ஆனால், மத்திய மாநில அரசுகளும், அதன் கைக் கூலிகளும், மக்கள் நண்பர்களுக்கு எந்த அளவுக்கு கொடுமை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து வருகின்றனர். பல அவதூறுகள், இழி சொற்கள் என நெருப்பு வார்த்தைகளை கூறிவருவதோடு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடுவதற்கான சட்ட ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கின்றனர்.

இருப்பினும், நமது மக்கள் நண்பர்கள் மக்களிடமிருந்து பெறும் ஆதரவு சக்தி என்பது மேற்சொன்ன அனைத்து தீய சக்திகளையும் தவிடு பொடியாக்கும் வல்லமை பெற்றது. இந்த மக்கள் சக்தி, இவர்களை வரலாற்று போராளிகளாகவும், சமூகத்தின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற மனிதர்களாகவுமே மாற்றி வருகிறது. இன்று, இடிந்தகரையானது,  மக்கள் நண்பர்கள் துவண்டு விடாதபடி தாங்கிப் பிடிக்கும் பஞ்சு மெத்தையாக விரிந்துள்ளது. இதே பஞ்சு மெத்தை, இரும்புக் கரங்களாகவும் நீண்டு, அணு உலை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்தும்... வெற்றி கிட்டும் வரை...

-கல்பனா சதீஷ்
(kalpsat@yahoo.co.in)