ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

தண்ணீர் - ஒரு வாழ்வுரிமைத் தேவை

“நீர்இன்று அமையாது உலகு” என 2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப், பெருந்தகையும், “மாமழைப் போற்றதும் மாமழைப் போற்றுதும்” என இளங்கோவடிகளும் “வாழ உலகினில் பெய்திடாய்” என ஆண்டாளும் புராண காலங்களிலேயே நீரின் அவசியத்தை உணர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஒன்று மிகுதியாய் காணப்படும் போது அதன் அவசியம் நமக்கு எளிதில் புலப்படுவதில்லை. ஆன போதிலும் நீர் மிகுதியாய் நிரம்பி வழிந்த சூழலில் தான் மேற்கண்ட தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் நீர் வளம் குன்றிவிட்ட இன்றைய சூழலில் நம்மால் நீரின் அவசியமும், நீரின் மகத்துவமும் சரியாக உணரப்படவில்லை என்பதே நிதர்சனம்.

இன்றைய நிலை :

ஆற்றின் கரையோரங்களில் தான், நமது நாகரீகம் வளர்ந்தது எனவும், நம் நாடெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது எனவும் வராலாற்றின் வாயிலாக அறிய வருகிறோம். ஆனால் அக்கூற்றுகள் அனைத்தையும் இன்று ஏடுகளில் வெறும் எழுத்து வடிவங்களாய் மட்டுமே காண முடிகிறது. மக்கள் தொகையின் அதீத வளர்ச்சியின் காரணமாகவும், சமூகத்தின் நாகரீகப் போக்கின் காரணமாகவும், இன்று தண்ணீர் அரியதொரு பொருளாகிவிட்டது. எங்கு நோக்கிலும் வறட்சி கோரத் தாண்டவமாடுகிறது. தண்ணீரின் தேவை முன்னிலும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் தண்ணீர் வளம் வெகுவாகக் குறைந்தும் வருகிறது. பயன்பாட்டின் காரணமாகத் தண்ணீர் வளம் குறைந்து வருகிற போதிலும் ஒரு சாராரால் திட்டமிட்டுத் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது. தமிகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துள்ளது என மத்திய நிலத்தடி நீர்; ஆணையம் கூறியுள்ளது. சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்னதாக, வெளியூர் சென்று ஊர் திரும்பும் யாரேனும் ஒரு கையில் பெட்டியுடனும் மறு கையில் தண்ணீர் புட்டியுடனும் வந்தால் அச்செயல் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்று அதே செயல், மிகுந்த அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. உலகில் மிக அதிகமாக மழை பொழியும் இடமான சிரபுஞ்சியில் கூட இன்று வருடத்தில் பாதி நாள் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.


உலகமயமாக்கலின் தாக்கம் :

இன்றைய தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்கு வானம் பொய்த்துவிட்டது. பருவமழை தவறவிட்டது. ஆறுகள் வறண்டுவிட்டன எனக் கூறி நமக்கு ஏதும் சம்பந்தமில்லாமல் அனைத்தும் நடந்துவிட்டதைப் போல நாம் இயற்கையின் மீது முழுவதுமாகப் பழிசுமத்தி விட்டு எளிதாகத் தப்பித்துக் கொள்கிறோம். ஆனால் இத்தகைய கொடூரமான நிலைக்கும், வறட்சிக்கும் முழுபொறுப்பும் மனித சமூகத்தையேச் சாரும். இதில் இயற்கையின் மீது பழிசுமத்துவதில் எள்ளளவும் மெய்யில்லை. அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய நீர் இன்று புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலமாக தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. உலகமே பாலைவனமாக்கப்படும் சூழல் நிலவுகிறது.

தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களால் வேகமாக சுரண்டப்படுகிறது. தமிழகத்திலுள்ள 390000 ஏரி, குளங்கள் 180000 கிணறுகள் இன்று வானம் பார்த்த பூமியாக்கப்பட்டுவிட்டன. கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெக்திகனி, மகாராஷ்டிராவில் வதா, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள படமாத்தூர் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான அடிதூரம் நிலத்திற்குள் தோண்டப்பட்டு கோக் நிறுவனத்துக்காக நீர்; உறிஞ்சப்படுகிறது. நாம் கண்ணெதிரிலேயே பகல்கொள்ளை நடைபெறுகிறது. நாமும் கையாலாகா நிலையில் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டும் நமது பணியை முடித்துக் கொள்கிறோம்.

நகர்மயமாக்குதலின் காரணமாக நாட்டிலுள்ள தொழில்களெல்லாம் இயந்திரமாக்கப்பட்டு தொழிற்சாலைகள் மிகுதியாக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாய் தற்போது முன்னிலும் மிகுதியாக நீரின் தேவை அதிகரித்து வருகிறது. இயற்கையின் கொடையான நீர்; இங்கு பொருளாதார அரசியல் காரணிகளில் மேம்பாடு உடையவர்களுக்கு மட்டுமானதாக்கப்பட்டு வருகிறது. சூயஸ், விவாண்டி, தேம்ஸ், பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் இங்கே தண்ணீர் விற்பனையில் முற்றுரிமையாளர்களாகக் கோலோச்சி வருகின்றனர். இங்கே விளை நிலங்களும், நீராதார பகுதிகளும், வீட்டடி மனைகளாக, அயலகத் தொழிற்சாலைகளாக, தனியார் கட்டிடங்களாக, வணிக வளாகங்களாக உருமாற்றம் பெற்று வருகின்றன. திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட புதிய பேருந்து நிலையங்களும், அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்ய வேண்டிய இடமான மதுரை உயர்நீதிமன்ற கிளை கட்டிடமும் குளம் இருந்த பகுதியில் தான் கட்டப்பட்டுள்ளது.


தண்ணீர் பணம் கொழிக்கும் தொழிலாகவும், இலாபகரமான பண்டமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. சட்டீஸ்கர் மாநிலத்தில் “சியோநாத”; எனும் நதி, சில ஆண்டுகளுக்கு முன் 20 ஆண்டுகால குத்தகைக்கு ரேடியஸ் வாட்டர் லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்க்கப்பட்டது. திருப்பூர், டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் குடிநீர்த் திட்டம் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டில் தான் பாட்டில் நீர்; பரவலாக்கம் இங்கு துவங்கப்பட்டது. அதன் பின்புதான் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான அளவு தண்ணீரை, மிகக் குறைந்த செலவில் மிகுதியாக ஈட்டிக் கொள்கின்றனர். இங்கே நீர் எளியவர்களிடமிருந்து திட்டமிட்டு சட்டப்பூர்வமாக அபகரிப்பு செய்யப்படுகிறது. தாராளமயம் எனும் பெயரில் இங்கே சுற்றுச்சூழல் மிகுதியாக சீர்கேட்டிற்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாலின் விலையைக் காட்டிலும் தண்ணீரின் விலை இங்கே அதிகம.; அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு ஒப்பான செயல் :

தெரிந்தோ, தெரியாமலோ சூழலைச் சீர்கேடுகளுக்குள்ளாக்குவதின் மூலமாக நமக்கு நாமே எதிரிகளாகி வருகிறோம். வரலாற்று ஏடுகளின் வாயிலாக அப்போதைய மன்னர்கள் ஊர் தோறும் குளம் வெட்டினார்கள். சாலையோரங்களில் மரம் நட்டார்கள் என்பதைப் படிக்கும் போது அதன் பின்னனி, அதன் தேவை குறித்து ஆராய்ந்திடாமல் அந்நிகழ்வைக் கேலிக்குள்ளாக்குகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் நாட்டில் நீர் பற்றாக்குறையின்மைக்கு மேற்படி நிகழ்வுகளே அடி நாதங்களாக விளங்கியுள்ளன என்பதை நாம் உணரத் தவறுகிறோம். நம் முந்தைய தலைமுறையினர் தங்கள் எதிர்காலச் சந்ததியினர்களின் வாழ்க்கை குறித்து அக்கறை கொண்டதால்தான், நாம் போதுமான அளவில் இயற்கை வளங்களை நுகர்ந்து வருகிறோம்.

நாம் மலைகளையும், நிலங்களையும் போட்டி போட்டுக் கொண்டு அழித்து வருகிறோம். இயற்கையின் பெருங்கொடையான நீருக்கு மாற்றோ, நெருங்;கிய பதிலியோ வேறு எதுவும் இங்கு இல்லை என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது. மனிதன் உயிர் வாழ்ந்திட அடிப்படை தேவைகளான நிலம், நீர், காற்று போன்றவற்றை நாம் பல்வேறு வழிகளில் மாசுபடுத்துவதின் காரணமாக புவியை தொடர்ந்து வெப்பமுறச் செய்து வருகிறோம். இச்செயல் மனிதகுலம் தனக்குத்தானே தவணை முறையில் செய்து கொள்ளும் தற்கொலையே ஆகும்.

நீர் குறித்து சட்டங்கள் :

“தண்ணீர் பொதுச் சொத்து, சாதி, மத, பொருளாதார, இனப்பாகுபாடு காட்டாமல் அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது”. இருக்கிற நீர் ஆதார மூல வளங்களை சரியாகப் பயன்படுத்திட வேண்டுமென்பது ஒவ்வொரு குடிமக்களின்; கடமையாகும என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. “ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைத்தரம் உயரவும் அவனது குடும்பத்தின் சுகாதாரமான வாழ்க்கைத்தரம் மேம்படவும் அடிப்படையான ஒரே தேவை என்பது சுத்தமான தண்ணீர் ஆகும். சுத்தமான தண்ணீரை பெறுவது உலகெங்கும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும்” என அகில உலக மனித உரிமைகள் பிரகடனம், 1948 இன் விதி 25இல் கூறப்பட்டுள்ளது. ஐ.நாவின் “குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை” 1989 இன் 24வது விதியில் “ஆரோக்கியத்திற்கான உரிமை” எனும் தலைப்பிற்குள் “ஒவ்வொரு குழந்தையும் அதிகபட்ச ஆரோக்கியமான உடல்நலத்தை அனுபவித்திட உரிமை உண்டு என்றும் அதிகபட்ச ஆரோக்கியமான உடல்நலம் என்பது சத்தான உணவையும், தூய்மையான குடிநீரையும் உள்ளடக்கியது என்றும் கூறுகிறது.

ஊட்டச்சத்துக் குறைவையும், நோய்களையும் எதிர்;த்திட போதுமான சத்தான உணவையும், தூய்மையான குடிநீரையும் வழங்கிட அந்தந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் சத்தான உணவு, சுத்தமான குடிநீர் ஆகியவற்றின் அவசியத்தையும் குறித்த அடிப்படையான அறிவை அனைத்து தரப்பினருக்கும் வழங்கிட வேண்டியது கடமை” என்று கூறப்பட்டள்ளது. ஐ.நா.வின். “பெண்களுக்கெதிரான அனைத்து வகை பாகுபாடுகளையும் அகற்றுவுதன் மீதான உடன்படிக்கை” 1979இன் விதி 14 உட்பிரிவு (2)இ (4) இல் “கிராமப்புற பெண்களுக்கு போதுமான வாழ்க்கைச் சூழலை, முக்கியமாக வீட்டுவசதி, சுகாதாரம், மின்வசதி மற்றும் நீர்வசதி சம்பந்தமானவற்றை அனுபவிப்பதற்காக உரிமை உள்ளது” என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலகின் அனைத்து இயற்கை ஆதாரங்களின் மீதும் அரசு சட்டரீதியான கடமை கொண்ட பொறுப்பாட்சி பெற்றதாகும். நீர், நிலம், காற்று மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதுகாத்து மக்களின் உபயோகத்திற்கு அளிக்கின்ற கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு. தண்ணீர் நமது வாழ்வுரிமை. இந்த அரிய வாழ்வாதாரங்களை எந்தவொரு தன்னாட்சி நிறுவனத்திற்கோ, தனியாருக்கோ தனியுடமையாக்கிடவோ மாற்றிடவோ முடியாது. மாற்றிடவும் கூடாது” என முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியிருக்கிறார். தண்ணீர்; சட்டம், 1974 மற்றும் தண்ணீர் தொடர்பான இதர சுற்றுச் சூழல் மேம்பாட்டுச் சட்டங்கள் பல, “தண்ணீர் குறித்தும், அது அனைவருக்கும் சமமானதேயன்றி, எவருக்கும் தனிப்பட்ட உடமையோ, உரிமையோ அல்ல” என்பதை தெளிவாக விளக்குகிறது. நமது அரசானது மக்கள் நல அரசாகும். மக்கள் நலனைப் பேணக் கூடிய அரசானது மக்களுக்கு அடிப்படையான இன்றியமையாத் தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டியது அவசியம்.

நீர் மாசுபாடு :

உலக அளவில் காணப்படும் தண்ணீரில் மூன்று விழுக்காடு மட்டுமே பயன்படுத்தக் கூடிய அளவில் உள்ளது. அதிலும் முழுமையாக இரண்டு விழுக்காடு உறைந்து பனிக்கட்டியாக இருப்பதன் காரணமாக ஒரே ஒரு விடுக்காடு மட்டுமே இன்று நமக்குப் பயனாகி வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.

இங்கு கைக்கு எட்டக்கூடிய தூரத்திலுள்ள நீர், நம்மால் மாசுப்படுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தைச் செழிப்புறச் செய்து வந்த நொய்யல், காவேரி, பாலாறு போன்ற பெருவாரியான ஆறுகள் சாயப்பட்டறைகளின் கழிவுகள் கலக்கப்பட்டதன் காரணமாக, ஆறுகள் இருந்த சுவடுகளேத் தெரியாமல் இன்று ஊருகுலைந்து போய்விட்டன. மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக, ஊரின் மிகுதியான கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் ஆறுகளோடு இணைந்து விடப்பட்டதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே நதியான தாமிரபரணி ஆறும் மாசுப்படுத்தப்பட்டுவிட்டது. இதுபோன்ற காரணங்களால் இன்று திண்டுக்கல் மாவட்டமே நீரற்றுப் போய்விட்டது. பாலாறு பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதின் காரணமாக வேலூர், ஆம்பூர் வாணியம்பாடி, இராணிப்பேட்டை, போன்ற பகுதிகளில் இன்று மிச்சமிருக்கும் நிலத்தடி நீரும் மாசடைந்துவிட்டது. கொடைக்கானல் பகுதியில் இரசாயனத் தொழிற்சாலை காரணமாக நீர் சீர்கேடு அடைந்துவிட்டது.

1980களின் வரையிலும் கூட தமிழகத்தில் ஆறுகள் நீண்டும், அகண்டும், பரந்து விரிந்து காட்சியளித்தன. ஆனால் நகர்மயமாதல், சூழல்சீர்கேடு போன்ற எண்ணிலடங்கா காரணங்களால் இன்று கண்ணுக்குப் புலப்படும் ஆறுகள் சுருங்கிப் போய்விட்டன. வற்றாத ஜீவநதிகள் என அறியப்பட்ட கங்கை, யமுனை நதிகளும் இன்று நம்மால் பாழடிக்கப்பட்டுவிட்டன. இல்லாத நீரைக் குறித்து கவலைகொள்ளும் நாம், அதே சமயத்தில் இருக்கின்ற வளத்தை மாசுபடுத்தாமல் சிக்கனமாகப் பயன்படுத்தி சேமித்திட வேண்டியது அத்தியாவசியம். ஒரு காலத்தில் ஆறுகளுக்கு இருந்த பெயர்கள் இன்று சில மனிதர்களின் பெயர்களாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. வற்றாத ஜீவநதிகள் ஓடிய புண்ணிய தேசத்தில் நிலவிடாத பஞ்சமும், பட்டினியும்;, வறட்சியும் இன்று தலைவிரித்தாடுகின்றன. அரசுகளின் தவறான கொள்கைகள் மற்றும் அணுகுமுறையால் இருக்கின்ற நீர் ஆதாரங்களும் அழிக்கப்படுகின்றன.

விளைவுகள் :

“தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பரவும் நோயின் மூலம் எட்டு விநாடிக்கு ஒரு குழந்தை வீதம் இறந்து கொண்டிருக்கிறது” தண்ணீருக்காக உலகமெங்கம் நூறு கோடி ;பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்” என ஐ.நா. சபை தெரிவிக்கிறது. இன்றைய சூழ்நிலையில் “மூன்றாவது உலகப் போர் ஒன்று நிகழுமாயின் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்” என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிகழும் தண்ணீர் சுரண்டல் எதிர்வரும் காலத்திலும் தொடர்ந்தால் கோரமான இறப்பு, இழப்பு, புதிய நோய்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.

ஓவ்வொரு ஆண்டும் 22 இலட்சம் மக்கள் மாசடைந்த நீரால் உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனார் குழந்தைகள் உலகில் தண்ணீரின் தேவை ஒவ்வொரு இருபது ஆண்டுகளுக்கும் இருமடங்கு அதிகரித்து வருகிறது.

நாகரீகம் வளர, வளர மனித உணர்வுக்கும், உயிருக்கும், மாண்புக்கும் சமூகத்தில் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக இங்கே கிராமங்கள் விரைவாக காலியாகி நகரங்களுக்குக் குடிபெயர்தல் முறை அதிகரித்து வருகிறது. இது ஆபத்தானதும், தவிர்க்கப்பட வே;ணடியதுமான நிகழ்வாகும். எதிர்கால சமூகம் அனைத்தையும் உடையதாகயிருந்தாலும் தண்ணீரின்றி தவித்தப்டியே வாழ்க்கையைக் காலந்தள்ள வேண்டியது வரும். உலகின் அழிவைத் தண்ணீர் பஞ்சமே தீர்மானிக்கும்.

ஐ.நா.சபை உலகளாவிய அளவில் தண்ணீரின் தரம் குறித்து 122 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியா 120ஆவது இடத்தில் இருக்கிறது. ஒரு பங்கு மணல் அதைப் போன்று மூன்று மடங்கு நீரைத் தேக்கிட உதவும். ஆனால் நம் அதீத மணல் சுரண்டலின் காரணமாக நீர்வளம் குன்றி வருகிறது.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு பல புதிய புதிய தொழில் நுட்பக் கருவிகளைக் கொடுத்து, பொருட்களைத் தயாரிக்க வைத்து தேவையான பாகங்களை மட்டும் வாங்கிச் செல்கின்றன. இதன் காரணமாக பொருட்களின் மூலமான கழிவுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே தங்கிவிடுகின்றன. அந்தக் கழிவுகள் நிலத்திலும். நீரிலும் கலக்கப்பட்டு நீர் மாசுக்குள்ளாக்கப்படுகிறது.

மேற்கொள்ள வேண்டிய யுத்திகள் :

தண்ணீர் குறித்த விழிப்புணர்வு போர்க்கால அடிப்படையில் பரவலாக்கம் செய்யப்பட வேண்டிய தருணமிது. நீர் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் மக்கள் தாங்களாகவே உணர்ந்து ஏற்கும் நிலையை உருவாக்கிட வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காரணமாகக் காட்டி மனிதனின் அதீத நுகர்வு போக்குச் சூழலால் மணல் அள்ளப்படுதலும், விளைநிலங்கள், வனங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு வருவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தனைக்கும் பின்னர் இன்னமும் தண்ணீரின் மகோன்னதத்தை அரசுகளும், மக்களும் உணர்ந்ததாகவேத் தெரியவில்லை. சாலையோரங்களிலும், மலைச் சரிவுகளிலும் தரிசு நிலங்களிலும் மிகுதியாக மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

இந்தியாவின் வறட்சியான மாநிலமான இராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் இன்று இராஜேந்தர்சிங் போன்ற தன்னார்வலர்களின் திட்டமிட்ட, சரியான செயற்பாடுகளின் காரணமாக போதுமான அளவுக்குத் தண்ணீரைப் பெற்று வருகின்றார்கள்.

தண்ணீர் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வெறுமனே ஏட்டளவில் சட்டங்கள் இயற்றப்படுவதால் மட்டுமே எங்கும் சரியான தீர்வையும் இலக்கையும் அடைந்து விட முடியாது என்பதே நடைமுறை உண்மை. அதற்கு சமீபத்திய உதாரணம் தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பான சட்டமியற்றல். எந்த ஒன்றும் அது சென்றடையப் போகும் மக்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப அமைக்கப்பட்டால் தான் அதன் அடிப்படை நோக்கத்தை நோக்கிய பயணம் சிறப்பாக அமையும் அதை விடுத்து வெறுமனே ஏட்டளவில் சட்டமியற்றலின் காரணமாக மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது. இயற்றப்படும் சட்டமானது எதிர்கால நோக்குடன் நன்கு பரிசீலிக்கப்பட்டு நடைமுறைக்கு உகந்ததாக அமைந்தால் தான் அது மக்கள் பங்கேற்புடன் அதன் இலக்கை நோக்கிப் பயணிக்கும்.

குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். 20 மைக்ரான் அளவுக்கு குறைவாகத் திறன் கொண்ட பாலித்தீன்களின் உபயோகம் தவிர்க்கப்பட வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து விவாதித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தெளிவான சரியான தொலை நோக்குப் பார்வை கொண்ட விவாதங்களுடன் கூடிய மழைநீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் மேம்பாட்டு செயல், வேறுமனே ஒரு திட்டமாக மட்டும் பார்க்கப்படாமல் இன்றியமையாத் தேவையாக பார்க்க வேண்டியது அவசியம். மிகுந்த முக்கியவத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்பட்டு தண்ணீர் மேம்பாடு குறித்து முழுமையான விழிப்புணர்வு முன்னெடுத்துச் செல்லப்பட்ட வேண்டும். இல்லாத வசதிகளைக் குறித்து பேசிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, இருக்கிற வளங்களைக் கொண்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதே சிறப்பானதாக அமையும்.

நம் மூதாதையர்கள் ஆறு நிறைய நீரைப் பார்த்தார்கள். நம் பெற்றோர்கள் ஆற்றில் நீரைப் பார்த்தார்கள். நாம் நிலத்துக்கடியில் நீரைப் பார்க்கிறோம். நாளை நம் சந்ததியினர் எதில் நீரைப் பார்க்கப் போகிறார்கள் என்பது நம் கையில் தான் இருக்கிறது.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

( robertckumar@gmail.com)

நன்றி: கீற்று.காம்

வியாழன், ஏப்ரல் 21, 2011

ஊழிக்கு தயார் செய்யும் அணுகுண்டுகள் !

பூமியின் இறுதிப் பயணம்?

டக் டக் டக்

யாரது?

நான் ஒரு வெடிகுண்டு

வெடிகுண்டு என்றால்?

அனைத்தையும் அழிப்பவன்

எந்த வகையில் நீ அழிப்பாய்?

சாதாரணமானது என்றால் இலக்கைத் தாக்கும் அல்லது உயிரியல் ஆயுதமென்றால் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும் அல்லது அணுஆயுதம் என்றாலோ உலகிலுள்ள அனைத்தையும் புல், பூண்டுகூட மிச்சமில்லாமல் எக்காலத்துக்கும் எதுவும் உயிர்த்திருக்க முடியாமல் முற்றிலும் அழிப்பவன் எவனோ அவனே நான், என் பெயர் அணுகுண்டு.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் விண்வெளியில் ஓர் அழகான கப்பல் அமைதியாக சுற்றி வந்து கொண்டிருந்தது சூரியனை. அது நமது பூமி, நிலவை விடவும் நமக்கெல்லாம் பிடித்தமான பூமி. இந்த மென்மையான கப்பல் ஒரு மணி நேரத்துக்கு நூற்றி அறுபது ஆயிரம் கி.மீ. பயணம் செய்கிறது.

விண்வெளியில் இதுபோன்ற எண்ணற்ற கப்பல்கள் நீந்திக் கொண்டுள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும்விட நமது பூமி தனித்துவம் கொண்டதாயிற்றே ஏனென்றால், வேறு எந்தக் கப்பலிலும் படபடவென்று இதயம் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உயிர் இல்லை. பயணிகளைச் சுமந்த ஒரே கப்பல் நமது பூமி மட்டுமே.

நான்கு லட்சம் வேறுபட்ட உயிரினங்கள் இந்த பூமியை தங்கள் தாய்வீடாகக் கொண்டுள்ளன. ஒரு காலத்தில் தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்த பந்தாக இருந்தது இந்த பூமி பிறகு கொஞ்சம் கொஞ்சமாகவே குளிர்ந்தது.

முதல் பயணி வருவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்தன. கடலில்தான் முதல் உயிர் தோன்றியது. அது ஒற்றை செல் கொண்ட நுண்ணிய உயிர். காலங்கள் செல்லச்செல்ல அந்த உயிர் புதிய உருவங்களையும் வடிவங்களையும் அடைந்தது. புதியபுதிய பயணிகள் பூமிக்கு வந்து கொண்டே இருந்தார்கள். இந்தப் பயணிகளில் கடைசியாக வந்தவர்கள் மனிதர்களான நாம்தான்.

இந்தக் கப்பலின் ஆயுள், அதாவது பூமியின் ஆயுளை ஓராண்டு என்று வைத்து கணக்கிட்டால் மனித இனம் 48 நிமிடங்களுக்கு முன்னர்தான் தோன்றியது. நமது அனைத்து நாகரிகங்கள், அறிவியல், கலைகள், வரலாறு எல்லாமே வெறும் இருபத்தியெட்டு விநாடிகளுக்கு முன்னர் தோன்றியவை. இந்த 28 விநாடிகளில் நமது மனித இனம் பூமியை கொழிக்க வைத்திருப்பது மட்டுமின்றி, மேலும்மேலும் அழகாக்கியுள்ளது. நாம் பல மலைகளின் உச்சியைத் தொட்டுள்ளோம். அதேபோல ஆழ்கடலின் மர்மங்களை ஆராய்ந்துள்ளோம். நதிகளின் பாதையைத் திருப்பியுள்ளோம். இருளுக்கு ஒளி பாய்ச்சியுள்ளோம். பாலைவனங்களை பசுமையாக்கி, நெல் அறுவடை செய்துள்ளோம்.

ஆனால் நம்மில் சிலர், அழிவை உற்பத்தி செய்பவர்களாகவும் இருந்துவிட்டார்கள். அவர்களால்தான், அழகு கொஞ்சும் பூமியின் பயணத்தில் கடைசியாக வந்து ஒட்டிக் கொண்ட பயணியான மனிதஇனம், இந்தக் கப்பலின் இருப்புக்கே தற்போது உலை வைப்பவராக மாறிவிட்டது.

கடந்த 40 ஆண்டுகளில், பூமியின் ஆயுளுடன் ஒப்பிடும்போது விரலைச் சொடுக்கும் ஒரு கணமாகக்கூட கருதமுடியாத இந்த காலப் பகுதியில் நாம் அணுகுண்டுகளை விதைத்துள்ளோம். ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கில். இந்த பூமியை ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை அழிக்கப் போதுமானவை இவை.

நாம் கடைந்தெடுத்த முட்டாள்கள் ஆகிவிட்டோமா? மண்ணில் கொட்டிய கடுகை அள்ள முடியுமா? ஒரு முறை அழித்த பூமியைத் தான் மறுமுறை அழிக்க முடியுமா?

பயங்கரத்தின் சில துளிகள்

1945ஆம் ஆண்டு

இரண்டாம் உலகப் போரின் போர் மேகங்கள் மெதுவாக மறைவதற்கான சுவடுகள் தெரிய ஆரம்பித்தன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகி பயத்தில் உறைந்து கிடந்த, மக்கள் அமைதியின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடந்தனர். ஆனால், அப்போது எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல், ஜப்பானின் இரண்டு அழகிய நகரங்கள் அழிவின் கொடூரக் கரங்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

1945 ஆகஸ்ட் 6ந் தேதி ஹிரோஷிமா, ஓஹட்டா நதியின் கரையில் அமைந்திருந்த ஓர் அழகிய நகரம் நிர்மலமான, அமைதியான காலையை எதிர்நோக்கி அந்த நகரம் விழித்தெழுந்தது. ஆனால் அதேநேரம் இலக்கை சரியாகக் குறி பார்ப்பதில் ஓர் விமானிக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை.

திடீரென்று, உலகம் குலுங்கியது

அய்யோ...

1945, ஆகஸ்ட் 9ந் தேதி பூமி மீண்டும் ஒரு முறை உலுக்கியெடுக்கப்பட்டது இந்த முறை நாகசாகியில், அதே ஜப்பானில்.

இந்த இரண்டு நகரங்களையும் அழித்த குண்டுகளின் பெயர் சின்னப் பையன், குண்டு மனிதன். சின்னப் பையனின் சக்தி 12.5 கிலோ டன் டி.என்.டிக்குச் சமம். குண்டு மனிதனின் சக்தி 22 கிலோ டன் டி.என்.டிக்குச் சமம்.

சின்னப் பையன்

பூமியில் இருந்து 1850 மீட்டர் மேலேயே வெடிக்கச் செய்யப்பட்டது. அது பெரும் நெருப்புப் பந்தை உருவாக்கியது.

அந்த அக்னிப் பந்தின் மையத்தில் இருந்த வெப்பநிலை 1 கோடி டிகிரி செல்சியஸ். அந்த அக்னிப் பந்து பூமியைத் தொட்டபோது அதன் வெப்பநிலை 4,000 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்தது.

100 டிகிரி செல்சியஸிலேயே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். கொதிக்கும் நீரை நம் உடல் மீது கொட்டினால் என்ன நடக்கும்? அது நமக்குத் தெரியும்.1,400 டிகிரி செல்சியஸில் இரும்பு உருகி குழம்பாக ஓடும். 3,200 டிகிரி செல்சியஸில் டங்க்ஸ்டன் உருகும். இந்த இரண்டு நகரங்களின் வெப்பநிலை கண் இமைப்பதற்குள் 4000 டிகிரி செல்சியஸ் உயர்ந்தபோது என்னவாகியிருக்கும். சற்று கற்பனை செய்து பார்ப்போம்.

இந்த குண்டு வெடிப்பின் மையத்திலிருந்து 13 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்த 92 சதவீத கட்டடங்கள் அழிந்து உருத்தெரியாமல் போயின. வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் - எல்லாவற்றையுமே தீயின் நாக்கு தீண்டி எல்லாவற்றையும் சாம்பலாக்கிச் சரித்திருந்தது.

சுடுகாடாக மாறிய அந்த இரண்டு நகரங்களுக்குள் மூன்று நாட்களுக்கு யாரும் காலைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை. மருந்து, உணவு, மருத்துவர்கள் - எதுவுமில்லை.

இந்த நிகழ்வைப் பற்றி சில ஒளிப்படங்கள் உள்ளன. ஆனால் அவை நம்மை அதிர்ச்சியடைய வைக்கக் கூடியவை.

இரவு முழுவதும் ஊரை ரோந்து சுற்றிவிட்டு காவல் நிலையத்துக்குள் நுழைந்தார் ஒரு காவலர். கண்இமைப்பதைவிடவும் குறைவான நேரமே ஆகியிருக்கும் எல்லாமே மாயமாய் மறைந்தன. எஞ்சியிருந்தது எல்லாமே வெறும் தீயின் நிழல்கள் மட்டுமே. ஒரு காவலரின் நிழல், அவருக்கு அருகே சுவரில் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த ஏணியின் நிழல்... இவை மட்டும்தான் எஞ்சியிருந்தன.

இந்த குண்டுவெடிப்பின் மையப்பகுதியில் இருந்து தொலைவாக விலகியிருந்தவர்களில் சிலர் மட்டுமே பிழைத்தார்கள். அவர்கள் ஹிபாகுஷா என்று அழைக்கப்படுகின்றனர். அந்த கொடூர நாளில், என்னவெல்லாம் நேர்ந்தது என்பதை எந்த வகையிலும் நம்ப முடியாத அந்த பயங்கரத்தின் சில துளிகளை அவர்கள் ஓவியங்களாக வடித்திருக்கிறார்கள்.

தகிக்கும் வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒஹாட்டா நதியில் கூட்டங்கூட்டமாக மக்கள் குதித்தனர். ஆனால் ஏற்கனவே தண்ணீர் தளதளவென கொதித்துக் கொண்டிருந்தது. அவர்கள் தப்புவதற்கு எந்த ஒரு வழியும் எஞ்சியிருக்கவில்லை. அவ்வளவு காலம் தண்ணீரைச் சுமந்து வந்த ஒஹாட்டா மரண நதியாக சடலங்களைச் சுமந்து கிடந்தது.

தன் மாணவர்களை வெளியே அழைத்து வந்த ஒரு ஆசிரியை அவரவர் பெயரைச் சொல்லி சப்தமாகக் கத்தும்படி கூறிக் கொண்டிருந்தாள் ஏனென்றால், இந்த நிலையில் உங்கள் பெற்றோரால்கூட உங்களை அடையாளம் காண முடியாது என்று அவள் கூறினாள். அவள், அவர்களுக்குச் சொல்லித் தந்த கடைசி பாடம் இது.

ஹிரோஷிமாவில் குண்டுவெடித்த இடத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு தாய் தன் குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய விறகைத் தேடிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கடைசி வரை ஒன்றும் கிடைக்கவேயில்லை. எல்லாம்தான் சாம்பலாகி குவிந்திருந்தனவே.

ஒரு குழந்தை வானில் பறக்கும் விமானத்தைப் பார்த்து ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் குதூகலித்தது. அது ஒரு மரண வாகனம் என்று அதற்குத் தெரியாது. சரேலென்று வந்தது மரணம், மிஞ்சியது வெறும் சாம்பல்.

இந்த பயங்கரம், அழிவுக்கு மத்தியிலும் மனிதநேயம் மெலிதாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. உதவியை எதிர்நோக்கி இருந்தவர்களே மற்றவர்களுக்கு தங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தார்கள். அதுதானே மனிதப் பண்பு.

ஹிரோஷிமா நாகசாகியை அழிக்க வேண்டியது அவசியந்தானா? முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ருமேன் எழுதினார்.

போர் என்றைக்கோ முடிந்துவிட்டது. ஆனால் போரின் இறுதியில் எங்கள் அதிகாரத்தை நிலைநாட்டத்தான் அணுகுண்டை வீசினோம்.

இந்தச் செயல்பாட்டின் பலன் - 3.4 லட்சம் மனிதர்களின் உயிர் பறிக்கப்பட்டது. அதேநேரம் ஹிரோஷிமா, நாகசாகியில் வெடிக்கப்பட்ட அணுகுண்டுகளை பார்க்கும்போது இப்போது நாம் வைத்திருக்கும் அணுகுண்டுகளின் அளவைப் பார்த்தால், அவை வெறும் பட்டாசுகள் போல சாதாரணமாகத் தெரிகின்றன.

பெரும் அழிவை ஏற்படுத்தும் பல மெகா டன் அளவும் பல மடங்கு டி.என்.டி சக்தியும் கொண்ட அணுகுண்டுகள் பலப்பல இடங்களில் இருக்கின்றன.

டி.என்.டி என்றால் என்ன?

டி.என்.டி என்பது டிரை நைட்ரோ டொலூவின். ஒரு வெடிபொருள். அனைத்து வெடிகுண்டுகளின் அழிவு சக்தியையும் அளக்க ஒரு கிராம் டி.என்.டி அடிப்படை அலகாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மெகா டன் டி.என்.டிக்கு இணையான வெடிகுண்டு மருந்தை ஒரு ரயிலில் வைத்தோம் என்றால், அந்த ரயில் 400 கி.மீ. அளவு நீண்டிருக்கும்.

ஆனால் அணுக்கரு பிளவு, அணுக்கரு இணைவு ஆகிய செயல்பாடுகளின் காரணமாக பல லட்சம் மடங்கு சக்தி கொண்ட டி.என்.டியை ஒரு சிறிய வெடிகுண்டுக்குள் அடைத்துவிட முடிகிறது.

பூமி - விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த அழகான, அமைதியான கப்பல் இன்றைக்கு வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல அணுகுண்டுகளை கட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது 20,000 மெகா டன் அளவு டி.என்.டியை இந்த எடையை நாம் ஒவ்வொருவரும் தாங்கிக் கொள்ள நேர்ந்தால் நம் ஒவ்வொருவர் தலையிலும் 4 டன் டி.என்.டி விழும்.

1945ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக மக்கள்தொகை இரட்டிப்பாகிவிட்டது. ஆனால் அணுஆயுதங்கள் அதிகரித்த அளவு என்ன தெரியுமா? 50,000 மடங்குக்கு மேல்

துப்பாக்கி ரவை மருந்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கண்டறியப்பட்டது. அதேநேரம் இன்றைக்கு ஏதாவது ஒன்றிரண்டு அணுகுண்டுகள் வெடிக்கின்றன என்று வைத்துக் கொண்டால் அவை வெளிப்படுத்தும் சக்தி எவ்வளவு இருக்கும் தெரியுமா?

கடந்த 600 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட அத்தனை வெடிபொருள்களின் சக்தியை சேர்த்தாலும்கூட அதற்கு இந்த ஒன்றிரண்டு அணுகுண்டுகள் ஈடாகாது.

இது எல்லாமே நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் கடந்த 50 ஆண்டுகளில் நாம் அனைவரும் சுயஅழிப்பை நோக்கி மேலும்மேலும் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

உலகின் முதல் உயிர்தோன்றிய தாயகமான கடல் இன்றைக்கு இறப்பின் விளைநிலமாக இருக்கிறது. இந்த ஆயுத முட்டாள்தனத்தை விண்வெளிக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சி தொடங்கிவிட்டது. விண்வெளியில் ஆய்வகங்கள் வந்துவிட்டன. லேசர் துப்பாக்கிகளும்கூட பொருத்தப்பட்டுவிட்டன. இவை அனைத்துமே கணினிகளால் கண்காணிக்கப்பட்டு, அவற்றாலேயே கட்டுப்படுத்தவும் படுகின்றன.

எல்லாமே விலைமதிப்புமிக்க கணினிகள். ஆனால் கணினிகள் தவறு செய்யக் கூடியவை, செய்துகொண்டும் இருக்கின்றன. ஒரு நாட்டின் எல்லையைக் கடந்த பறவைக் கூட்டத்தை ஏவுகணைகளின் வீச்சு என்று தவறாகக் கணித்த கணினிகளும்கூட உண்டு. இதன் காரணமாக அண்டை நாட்டின் மீது தானியங்கியாக பதிலடி கொடுக்க எல்லாம் தயார் செய்யப்பட்டது.

கணினிகள் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடியவைதான் என்பதை அறிவியலாளர்கள் ஏற்கின்றனர். கணினி அமைப்புகள் தோல்வியடையவும்கூடும். ஆனால் இதுபோன்ற தோல்விகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்பவை சிறிய தவறுகள் ஏற்படுத்தும் பின்விளைவுகளைவிட பெரிதும் பயங்கரமானவை. அதேபோல கணினிகளால் கட்டுப்படுத்தப்படும் அணுகுண்டுகள் தவறான வகையில் வீசப்பட்டுவிட்டால், வெடித்துவிட்டால் என்ன நடக்கும்? யோசித்திருக்கிறோமா?

எல்லாமே வெடித்துச் சிதறும். வானத்தை அடர்மேகக் கூட்டம் திரையாய் இழுத்து மூடும். அந்த மேகம் ஒரு காளாண் வடிவத்தைப் பெறும் மேகக் கூட்டம் வானத்தில் 24 கி.மீ. தொலைவுக்கு மேலெழும். அதாவது எவரெஸ்ட் சிகரத்தைப் போல் மூன்று மடங்கு உயரத்துக்கு இந்த காளாண் மேகம் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்காக பல நூறு கி.மீ. வேகம் கொண்ட காற்று அதிவேகமாக அந்த இடத்தை வந்தடையும்.

கடும் வெப்பத்தை உமிழும் இந்தப் புயலின் வழியில் எது குறுக்கிட்டாலும் அவை எல்லாமே கண்மூடித் திறப்பதற்குள் சாம்பலாகிவிடும்.

மெதுவாக, காற்றிலுள்ள கதிரியக்க மாசு குளிர்ந்து நிலத்தில் படிய ஆரம்பிக்கும்

கதிரியக்கம் தண்ணீரை, மண்ணை, தாவரத்தை, மரத்தை நெரித்துக் கொல்லும்

தப்பிப் பிழைத்து எஞ்சியுள்ள மனிதர்களின் உடலில் புகுந்து அவர்களது முன்னோர் செய்த குற்றங்களுக்காக அடுத்து வரும் ஏழேழு கோடித் தலைமுறைகளையும் பழிவாங்கும்

ஆயுதங்களின் மீதான கண்மூடித்தனமான மோகத்தால் நாம் எதை இழந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

உலகில் ஒவ்வொரு நாளும் செய்யப்படும் ராணுவச் செலவைக் கொண்டு மட்டும் பூமியில் இருந்து மலேரியா காய்ச்சலை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடலாம்.

ஒரு நவீன பீரங்கியை தயாரிக்கும் செலவில் 1,00,000 பேருக்கு எட்டு நாட்களுக்கு உணவு வழங்க முடியும்

ஒரு பீரங்கி உற்பத்தி செய்யும் செலவில் 30,000 குழந்தைகள் படிக்கக் கூடிய 500 பள்ளிகளை உருவாக்க முடியும்

ஒரு போர் விமானம் உற்பத்தி செய்யும் செலவில் 30,000 கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்த முடியும்

ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டும் செலவில் 23 பரம ஏழையான வளரும் நாடுகளில் உள்ள 1,30,000 குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியும்.


உலகிலுள்ள 20 சதவீத விஞ்ஞானிகள் ஆயுத மேம்பாடு தொடர்பாகவே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் மற்ற விஞ்ஞானிகள் இவர்களை எதிர்க்கவில்லை என்று அர்த்தமல்ல. அறிவியலை தவறான நோக்கங்களுக்கும், அழிவுக்கும் பயன்படுத்துவது கண்டனம் செய்யப்பட்டே வந்துள்ளது. மான்ஹாட்டன் திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியபோது, அதை முதன்முறையாகப் பயன்படுத்துவதையும் அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

அப்பொழுது முதல் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் சாபமான ஆயுதப் போட்டிக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்களை ஓங்கி ஒலித்து வருகின்றனர். அணுகுண்டுகளுக்கு பலியானவர்களுக்காக ஹிரோசிமாவில் கட்டப்பட்ட கல்லறை கல்வெட்டில் கீழ்க்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

எக்காலத்திலும் மீண்டும் செய்யக்கூடாத தவறுக்காக

இவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்கள்

அவர்களுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நாம் காப்பாற்றியுள்ளோமா?

இதைப் படிக்க உங்களுக்கு 20 நிமிடம் ஆகியிருக்கலாம். பூமி என்ற அழகிய கப்பல், இந்த நேரத்தில் சராசரியாக 35,000 கி.மீ. பயணித்திருக்கும் இந்தப் பயணம் காலாகாலத்துக்கும் தொடருமா? முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது.

தமிழில் – ஆதி

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

மீன்கொத்திப் பறவைகள்

பெரும்பாலான என் ரயில், பேருந்து பயணங்களில் ஜன்னல் ஓர இருக்கையே என் விருப்ப இடமாகும். வேடிக்கை பார்க்க வசதி.அதில் ஓர் அலாதியான இன்பம். காட்சிகள் மாறுவது போல, பிரதேசம், மக்களின் வெளித்தோற்றம், பேச்சுவழக்கு, கோவில் வழிபாடு இப்படி எத்தனையோ விஷயங்கள் நம் அருகில் கொட்டிக் கிடக்கும். ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மினசாரக் கம்பியில் சற்றும் பயமேதும் இல்லாமல், உட்கார்ந்து இருக்கும் மீன்கொத்திப் பறவைகள் என்னை அதிகம் கவர்ந்த ஒன்று. நான் செங்கல்பட்டு சேரும் வரை குறைந்தது 10 இடத்திலாவது இப்பறவை அமர்ந்து இருப்பதை அல்லது சட்டென பறந்து போவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது தேனியில், என் வீட்டிற்கு அருகில் இருக்கும் மீறு சமுத்திரக் கண்மாய் கரையோரம், மாலை வேளை நடைப் பயணத்தை நானும், என் மகளும் மேற்கொள்ளும் போது, அவள் மீன் கொத்திப் பறவைகளை சுட்டிக்காட்டியவாறே வருவாள். "மீன் கொத்தி" என்ற அழகான தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில எடிமாலஜியில் "புரியாத தன்மை" என்ற அர்த்தம் தொனிக்க பெயர் கொண்டிருப்பது ஏனோ? இதுவரை தெரியவில்லை.

என் நண்பரும், பசுமைத்தாயகத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைகளை எழுதுபவரான பிரதீப் செல்வராஜ் எல்லோரும் ஏனோ, புலி, சிங்கம், யானை என திரும்பத் திரும்ப அவைகளைப்பற்றியே எழுதுகின்றனர். சுற்றுச்சூழல், வனத்தை பாதுகாப்பதில் பறவைகள், கீரி, நீர் நாய், அபூர்வ மரங்கள் போன்றவற்றின் பங்கும் அதிகம். அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே கிடையாது. நீங்களாவது ஏன் எழுதக்கூடாது என ஒரு முறை அலைபேசியில் கேட்டுக் கொண்டார். அவரின் கூற்றில் நூறு சதவீதம் உண்மை உள்ளது. ஏற்கனவே எழுதி உள்ளேனே என்றேன். போதாது, இன்னும் அதிகம் எழுதுங்கள் என்று பணித்தார். சரி என்று ஒப்புக் கொண்டேன். இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால், பேருயிர் தவிர்த்து சிற்றுயிர்களும், பறவைகளும், பல கோடி மரங்களும், மட்டுமே சுற்றுச்சூழலையும், வனச் செழுமையையும் பாதுகாக்கின்றன. அவைகளின் பங்கீடுதான் அதிகம். ஆனால், நமது அறியாமையின் விளைவாக அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ளன. மீன் கொத்திப் பறவையும் அழிவின் விளிம்பில் உள்ள ஒன்றுதான். ஏறத்தாழ, 4--6 வண்ணங்களை உடலெங்கும் பூசி "குவிக்" என்ற ஒலி எழுப்பியவாறு நீண்ட வால் முன் பின் அசைய கண்சிமிட்டும் நேரத்தில், வேகமாக, தலைகீழாக பாய்ந்து, இரையைக் கொத்தி கவ்வும் அழகு என துடிப்புள்ள ஒரு பறவையாக இனம் காணப்படுகிறது. மின்சாரக் கம்பிகள், காய்ந்த மரக்கிளைகள், பாறை முகடு, ஆற்றோரம், நதியோரம் விளைந்திருக்கும் குற்றுச் செடிகளில் அசையும் நுனி போன்றவை இவை அமரும் இடங்கள். வெகு நிச்சயமாக, இப்போதெல்லாம் நகருக்குள் காண்பது அரிதினும் அரிதே. பல கவிஞர்களும், காதலர்களும், காதலிகளும், இதன் அழகில் மயங்கி, கவிதையாக்கி தூது அனுப்பி வருகிறார்கள்!

நதிக்கரையோரம் வாழ்பவை, மரக்கிளைகளில் வாழ்பவை, நீர் நிலையோரம் வாழ்பவை என இதை வகைப்படுத்துகிறார்கள் பறவையியலாளர்கள். 96க்கும் மேற்பட்ட உள் இனம் கொண்ட இப்பறவையில் ஆண், பெண் பால் வேற்றுமை காண்பது சற்று சிரமம். கிட்டத்தட்ட பெரும்பாலானவை காட்டிலேயே வாழ விரும்புகின்றன. மனிதனாலும் வசப்படுத்த முடியாது. அதாவது, மனித நடமாட்டத்தை அவை விரும்புவதே இல்லை. முகத்துவாரத்தில் அமைந்த பள்ளங்களை, காய்ந்த மரங்களில் காணும் பொந்துகளை, கரையான் புற்றுக்களை, அடர்ந்த புதர்களைக் கூடுகளாக மாற்றிக் கொள்கின்றன. பூர்வீகம் ஆஸ்திரேலியா என்றாலும், 30---40 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய பறவைகளின் படிமங்களில் இவை உள்ளன. அவை மீன்கொத்தியின் மண்டையோட்டை ஒத்திருப்பதால், பல நூற்றாண்டுகளாக பூமிக் கோளத்தில் வாழ்ந்து வருகிறது என்று ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர், வேறு பறவையாகவும் இருக்கலாம் என்று வாதாடுகின்றனர். பனி படர்ந்த துருவப் பிரதேசங்களையும், கடுமையான வெப்பம் தோய்ந்த பாலைவனங்களையும், இவை வாழ்வாதார இடமாக அங்கீகரிக்கவில்லை. தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இவற்றின் எண்ணிக்கை, பிற பறவைகளோடு ஒப்பிடும்போது மிக குறைவு. இந்தியாவிலோ இன்னும் மோசம்.

பொதுவாக தீவுகளையே தன் விருப்ப ஸ்தலமாகச் கொள்கின்றன. சாலமன் தீவுகளில் இவை அதிகம் உண்டு. அடர்ந்த வனமும், வனம்சார் சிறு புனலும், இவை மனம் ஒப்பி வாழ வழி செய்கின்றன. அதிக நிலப்பரப்பை ,ஒவ்வொரு பறவையும் தனதாக்கிக் கொள்கின்றன. பிற பறவைகளின் உணவு எல்லைப் பரப்பும். இதனுடன் கலப்பதால், தாக்குதலுக்கு உள்ளாகி மலை, காடு, மனித நடமாட்டமற்ற மரப்பட்டறை, தோப்பு, தோட்டம் என ஜீவித எல்லையை மாற்றிக் கொள்ளவும் பழகிக் கொள்கின்றன. நீண்ட வாலும், கெட்டியான அலகும், தினசரி வாழ்வில் பேருதவி புரிகின்றன. அதி வேகமாகப் பறக்கும்போது காற்றின் அழுத்தத்தை தீர்மானிப்பதற்கு, நீண்ட வால் துணை புரிகிறது. மேலும் கீழும் அசைந்து துடுப்பு போல் செயல்படுகிறது. இரைகளை ஒரே கொத்தில் பிடிக்கவும், சில சமயம், மண் மரம், பாறை இடுக்குகளைக் குடைந்து, கிளறி உள்ளே வாழும் சிறு பூச்சி இனங்களைப் பிடிக்கவும் அலகு பயன்படுகிறது.

தூர நோக்கி போல இதன் கண்களின் அமைப்பு உள்ளது. தலையை ஆந்தை போல் திருப்பாமல், கண்களை முன் பின் அசைத்து, துல்லியமாக இரையின் இருப்பிடத்தைக் கண்டறிந்து கண்சிமிட்டும் நேரத்தில் அலகால் கொத்திச் செல்லும் பாங்கு அலாதியானது. தண்ணீருக்குக் கீழே உள்ள இரையையும், இதன் கூர்மையான கண் பார்வையால் கண்டறிய முடிகிறது, சூரிய ஒளியின் பிரதிப்பால் கூட இதன் பார்வையில் கூச்சம் ஏற்படுவதில்லை. கண்களின் மேல் படிந்துள்ள தோல் படலம், மூக்குக் கண்ணாடி போல் செயல்பட்டு நீருக்குள் மூழ்கும்போது கண்களைப் பாதுகாக்கின்றன. குட்டையான கால்கள் வலிமையானவை. 4 விரல் அமைப்பு கொண்டவை.மூன்று இரையைப் பிடிக்கவும், பின்புறம் உள்ள நகம் கிளைகளில் அமர கொண்டிபோல் செயல்படுகிறது. மீன்களைத்தான் அதிகம் உண்ணும் என்றாலும், தவளை ,ஓணான், மண்புழு, சிலந்திகள், சில சந்தர்ப்பங்களில் நடுத்தர வயது பாம்புகளையும் உண்ணும். விருப்ப உணவு என்னவோ மீனும், வெட்டுக்கிளியும் தான். பொதுவாக, சிக்கலற்ற, எந்த இடர்ப்பாடும் இல்லாத பிரதேசங்களில் இரையை வேட்டையாட விரும்புகிறது. அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்ப விருப்ப உணவையும் மாற்றிக் கொள்ளும். உதாரணமாக, பாலைவனங்களில் பயணிக்கும்போது ஓணான், மண்பாம்புகளையும், காடுகளில், பூச்சிகளையும், முகத்துவாரங்களில் நண்டு, இறால் மீன்களையும் அதிகம் உண்ணும். சிறு பூச்சிகளை 5 அடி தொலைவிலிருந்து பாய்ந்து பிடிக்கும். புதர்களை அழித்துவிடும் போது வெறும் தரையில், இரையைப் பிடிக்கும் சந்தர்ப்பங்களில் மோதி காயமுறுகின்றன. காய்ந்த மரங்களில் ஒருசிலவற்றையாவது, தோப்பு ,தோட்டங்களில் வெட்டாமல் விட்டுவிடலாம். அனைத்தும் வெட்டப்படுவதால் கூடின்றி தவித்து இடம் பெயர்கின்றன. இடப் பெயர்ச்சி மகிழ்ச்சியாய் அமையும் என்ற உத்தரவாதத்திற்கு இடமில்லை.

பூனை, எலி, பாம்பு, பிற ஊண் உண்ணும் பறவைகளாலும் ஆபத்துக்கள் அதிகம். மரமேறும் உயிகளிடமிருந்து இவைகளைக் காப்பாற்ற சலசலப்பான சத்தம் எழுப்பும், மெல்லிய தகரம், பேப்பர் போன்றவற்றால், கூடு அமைந்துள்ள மரங்களில் 7 அடி உயரத்திற்கு சுற்றி வைக்கலாம்.ஒலி இப்பறவைகளை விழிப்படையச் செய்யும். எனினும், என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மனிதனின் விழிப்புணர்வும் ,உதவியும் மட்டுமே இவைகளைக் காப்பாற்ற முடியும். ஏனெனில் மிகமிக விரைவாக அழிந்து வரும் பறவையாக உள்ளது கவலையளிக்கிறது என்கிறார் டாக்டர் டைலன் கெஸ்லர். இவர் 30 வருடங்களாக மீன்கொத்தி பறவைகளை ஆராயும் அமெரிக்க ஆய்வாளர் .மீன்கொத்திதான் பறவைகளில் அதிக போராட்டமான வாழ்வை மேற்கொள்கின்றன என்கிறார் சலீம் அலி. காரணம், அவைகளுக்கு வாழும் பரப்பளவு அதிகம் தேவைப்படுவதால் பிற உயிர்களோடும், இயற்கையோடும், மனிதனோடும் போராட வேண்டியுள்ளது. இவைகளின் உறவு கவித்துவமானது. ஆணும் பெண்ணும் மனமொப்பி இணைகின்றன. அந்த சந்தர்பத்தில் ,பிற பறவைகள் தலையிடுவது இல்லை. மாறாக ,இளம் பருவத்தினர், அவைகளின் உறவுக்கு உதவுகின்றனர். இவைகள் உறவுகொள்ளும்போது தன்னிலை மறக்கின்றன. அந்த சமயம், பிற ஊண் உண்ணும் பறவைகள் தாக்குதலை நடத்துகின்றன. இவ்வாறான தாக்குதலை ,முன்கூட்டியே அறிந்து, குரல் எழுப்புதல், போரிடுதல் மூலமாக இளம் பருவத்தினர், தங்கள் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஆபத்துகளைக் கருத்தில் கொண்டே உறவுக்காக மரப் பொந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றன. பிரம்மாண்டமான கரையான் புற்றுகளும் புகலிடம் அளிக்கின்றன. பெண் கீழேயும், ஆண் மேலமர்ந்தும், சேவல்--கோழி போல் உறவு நிகழும். சில நிமிட உறவு எனினும், பல முறை உறவு கொண்டு இன்பத்தை நீட்டிப்பதில் ஆர்வம் கொள்கின்றன. 6---10 முட்டைகள் வரை இடும். பளப்பளப்பான வெண்ணிறம் கொண்டவை இவை. அதிக பய உணர்வும், வெட்க உணர்வும் ஆட்டிப்படைக்க, ஆற்றங்கரை, வயல்வெளி, காடுகளின் நடுப்பகுதியைத் தனது முட்டையிடும் காலங்களில் தேர்ந்தெடுக்கின்றன. அப்போது பூச்சிகளை அதிகம் உணவாகக் கொள்வதால், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இது இயற்கையான பயிர் காப்பாளனாக விளங்கி, விவசாயிக்கு உதவுகின்றன என்கிறார் சலீம் அலி. இதையே வேறு வார்த்தையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுக் வோக்கா பறவைகளை வாழவும், வரவழைக்கவும் வழிவகுத்திடுங்கள் அவை பூச்சிகளைப் பார்த்துக் கொள்ளும் ,பூச்சி மருந்தெல்லாம் தேவையில்லை என்கிறார்.

மிசெளரி பல்கலைக்கழக ஆய்வு ஒன்று சமீபத்திய தனது அறிக்கையில் 50,000 வருடம் கட்டிக் காத்த பாரம்பரியம், தனித்துவத்தின் அழிவு, இப்பறவைகளின் அழிவின் மூலம் துவங்கி உள்ளது. தனிமையையும், தனித்துவத்தையும், அமைதியையும், மட்டுமே தனது வாழ்க்கை முழுதும் மேற்கொள்ளும் ஒரு பறவையின் முக்கிய குறிப்பு இது.

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

(kannan233@gmail.com)


நன்றி: உயிரோசை

திங்கள், ஏப்ரல் 18, 2011

வானில் பறக்கும் புள்ளெல்லாம்...! -சு. தியடோர் பாஸ்கரன்

அறிவியல், அதிலும் இயற்கை வரலாறு சார்ந்த தமிழ் சொற்களுக்காகத் தடுமாறும்போது பின்னோக்கி சில பத்தாண்டுகள் போவது பயனளிக்கும் என்பது நான் என் அனுபவத்தில் உணர்ந்தது. பெ.நா.அப்புசாமி, மா.கிருஷ்ணன் போன்றோர் அறிவியல் கட்டுரைகள் பலவற்றை வெகுசன இதழ்களில் எழுதிய நாட்கள் அவை. மிகவும் இயல்பான, தமிழில் சிக்கலான அறிவியல் கருது கோள்களைக்கூட அவர்கள் விளக்குவதைக் காணலாம்.

நம் நாடு சுதந்திரமடைந்த பின், பல தளங்களில் ஒரு மறுமலர்ச்சியைக் கவனிக்க முடிந்தது. இதை நேருவின் கனாக்காலம் (Nehruvin dream) என்று சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காலத்தில் தமிழ் நாட்டிலும் இதன் எதிரொலி இருந்தது. அதிலொன்றுதான் தமிழ் கலைக் களஞ்சியம் வெளியானது. இந்தப் பத்து வால்யூம்களைப் புரட்டும்போது அவை எவ்வளவு சிரத்தையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறதென்பதைக் கண்டு வியக்கிறோம். யாருக்கு எந்தத் தலைப்பைக் கொடுக்க வேண்டும் என்று ஆய்ந்து, சமநிலையுடன், அரசியல் வாடையே இல்லாமல் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதில் காட்டுயிர் பற்றி இருவர் எழுதியுள்ளனர். மா. கிருஷ்ணன். அடுத்தது பி.பி.பானல் (P.B.Bonnel). இந்த திருநெல்வேலித் தமிழர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் உயிரியல் பேராசிரியராக இருந்தார். நான் அங்கு படித்தபோது ஓய்வு பெற்றிருந்தார். ஆனால் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். எப்போதும் கோட்டு, டையுடன் காணப்படுவார். அவருக்குப் பறவைகள் மீது ஈடுபாடு அதிகம். ஆகவே அவரைக் கல்லூரியில் Paradise Bird Bonnel என்று குறிப்பிடுவார்கள்.

கலைக்களஞ்சியத்திற்கு கிருஷ்ணன் பறவைகளைப் பற்றிய 58 குறிப்புகளுடன் கோட்டோவியங்களையும் தீட்டிக்கொடுத்தார். இந்தக் குறிப்புகளை பெருமாள் முருகன் ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். அது மட்டுமல்லாது, இந்திய சரணாலயங்கள் பற்றி மா.கி. கலைக் களஞ்சியத்திற்காக எழுதிய குறிப்பையும், வேடந்தாங்கல் பறவைச் சரணாலயம் பற்றி அவர் எழுதி, 1961இல் வனத்துறை வெளியிட்ட கையேட்டையும் இணைத்துள்ளார். ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் சென்னைப் புத்தக விழாவில் வெளியிடப்பட்டது.


பெருமாள் முருகன் பதிப்பு வரலாற்றில் ஈடுபாடு கொண்டவராதலால் இந்த மூன்று பகுதிகளிருக்கும் விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் முன்வைக்கிறார். ஒவ்வொரு குறிப்பைப் பற்றிய வெளியீட்டு விவரத்தை ஒரு பட்டியலாகத் தந்திருக்கிறார். ஆங்காங்கே அடிக் குறிப்புகள் மூலம் சில சொற்களை விளக்குகிறார். 88 பறவைகளின் தமிழ்ப் பெயர்களும் அவை ஒவ் வொன்றின் ஆங்கிலப் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. முழுமையான பொருளடைவு ஒன்றும் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. நூலின் இந்த அங்கம் அதன் பயனைக் கூட்டுகின்றது. அதிலும் உயிரியல் சார்ந்த நூல்களில் இது மிகவும் இன்றியமையாதது. பெருமாள் முருகனின் நேர்த்தியான பதிப்புரை தமிழில் இயற்கை வரலாறு பற்றிய பிரச்சினைகளைப் பற்றிக் கூறுகிறது. பெருமாள் முருகன், சோ.தர்மன் போன்ற எழுத்தாளர்கள் இயற்கை வரலாற்று சொல்லாடல்களைத் தங்களது நாவல்களில் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழில் ஒரு உயிரினத்திற்குப் பல பெயர்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. திருநெல்வேலியில் ஒரு பெயரால் அறியப்படும் பறவை ஒன்றிற்கு வேலூரில் வேறு பெயர் இருக்கும். காட்டுக்கோழிக்கு அடவி கோழி, கானகோழி என்ற பெயர்களும் உண்டு என்கிறார். அது போலவே கூழைக்கடா (Pelican) என்றறியப்படும் பறவையை வேடந்தாங்கல் மக்கள் ‘மத்தாளி கொக்கு’ என்கின்றனர். கிருஷ்ணன் அவர் அறிந்திருந்த எல்லா பெயர்களையும் பதிவு செய்திருக்கிறார். இம்மாதிரியான அரிய தகவல்களை அடக்கியது இந் நூல்.

வேடந்தாங்கலைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை கிருஷ்ணன் சொல்கிறார். இங்கு கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் 14 வகைப் பறவைகளும் நம்மூரைச் சேர்ந்தவையே. வெளி நாட்டுப் பறவைகள் அல்ல. குளிர் காலத்தில் நம் நாட்டிற்கு வலசை வரும் புள்ளினங்கள் இங்கு இரை தேட மட்டுமே வருகின்றன. ஏனென்றால் மேலை நாடுகளின் தரையில் பனி படர்ந்து இரை தேடுவது சிரமமாக இருக்கும். வலசை வரும் பறவைகள் தாங்கள் இரை தேடிப் போகும் நாடுகளில் கூடு கட்டாது. ஆனால் இன்றும் வேடந்தாங்கல் என்றவுடன் வெளிநாட்டுப் பறவைகள் வந்து கூடுகட்டுகின்றன என்று தமிழ் நாளிதழ்கள் எழுதுகின்றன. வலசை வரும் பறவைகளையும் இந்த சரணாலயத்தில் காணமுடியும். கிளுவை , சிறவி போன்ற நீர்வாத்துகள், உள்ளான் போன்ற புள்ளினம் இவை ஐரோப்பாவிலிருந்து வருகின்றன.

வேடந்தாங்கல் இருநூறு ஆண்டுகளாகப் பறவைப் புகலிடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டிலேயே அதிக ஆண்டுகள் அரசால் பாதுகாக்கப்பட்டது இந்தப் புகலிடம்தான். 1789இல் செங்கல்பட்டு கலெக்டர் இந்தக் கிராமத்து மக்களுக்கு ஒரு நில உடன்படிக்கையைக் கொடுத்தார். அது தொலைந்து போய்விட்டதால் 1858 ஆண்டு ஜி.பி.டாட் என்ற கலெக்டர் அதைப் புதுப்பித்துக் கொடுத்தார். ‘கவுல்’ எனப்படும் அந்த ஆவணத்திலிருந்து ஒரு பகுதி. . .

“உங்கள் கிராமமாகிய மேற் குறித்த வேடந்தாங்கல் ஏரியிலிருக்கிற கடப்ப மரங்களில் நானாவித பக்ஷி சாதிகள் அனாதியாய் வாசஞ் செய்வதாயும், அவைகளை ஒருவரும் சுடாமலும் பிடியாமலும் இருக்கும் பொருட்டு முன்னாலேயே மேஸ்தா ப்ளேஸ் துரையவர்கள் கவுல் கொடுத்ததாயும் அது கை சோர்ந்து போனதாயும் அதற்குப் பதில் வேறு கவுல் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டபடியால் அந்தப்படி இதை உங்களுக்குக் கொடுக்கலாயிற்று.”

வேடந்தாங்கல் பற்றிய கையேட்டிற்கு அன்றைய (1961) வனத்துறை தலைமை அதிகாரி சி.ஏ.ஆர்.பத்ரன் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். காட்டுயிர் பற்றித் தமிழில் நூல்கள் வர வேண்டும் என்று விரும்பிய இவர், பறவைகளின் தமிழ்ப்பெயர்களைத் திரட்டி ஒரு சிறுநூலாக வனத்துறை சார்பில் வெளியிட்டார். கிருஷ்ணனைக் கையேடு எழுதத் தூண்டியவரும் இவர்தான்.

இந்தியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயங்கள் பற்றி கிருஷ்ணன் 1951இல் எழுதிய குறிப்பு அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைக் காட்டுகின்றது. மத்தியப் பிரதேசத்திலுள்ள கான்ஹா சரணாலயத்தில் பாரசிங்கா மான் (நம்மூர் கடம்பை மான் போன்றது.) மிகுந்துள்ளது என்கிறார். இன்றோ அவை அங்கு அரிதாகிவிட்டது. நான் சென்ற ஆண்டு அங்கு சென்றிருந்தபோது ஒரு பாரசிங்காவைக் கூட காண முடியவில்லை (இந்த மானின் கிளைவிட்டு நீண்டு வளைந்த கொம்பில் 12 நுனிகள் இருப்பதால் இந்தப் பெயர்).

நம் நாட்டில் காட்டுயிர் பேணலில் எழப்போகின்ற பிரச்சினைகளைப் பற்றி ஒரு தீர்க்கதரிசி போல எழுதினார்: “வனவிலங்கு பாதுகாப்பில் ஏற்படும் சிக்கல்கள் அப்பாதுகாப்பை அளிக்கும் மனிதனின் ஆதிக்கத்தைப் பொறுத்தது. இயற்கையாகவே நாட்டிற்கு நாடு வேறுபடும். எனவே எங்கோ இன்னொரு நாட்டில் கையாளப்பட்ட வழிமுறைகளை வேறு ஒரு நாட்டில் கையாள்வதில் பலனில்லாமல் போகலாம். இந்தியாவில் வனவிலங்கு புகலிடங்களை ஏற்படுத்த திட்டங்கள் இடுவதில் இந்த முக்கியமான உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.”

இன்று வேங்கைப் பாதுகாப்பில் காட்டுயிரியலாளர்கள் இருதரப்பாகப் பிரிந்து நடத்திக் கொண்டிருக்கும் விவாதத்தை கிருஷ்ணன் முன்பே எதிர்பார்த்திருந்தார் என்று தெரிகின்றது.


நன்றி: உயிர்மை , பிப்ரவரி 2011