திங்கள், மே 11, 2009

உலக உணவு நெருக்கடிக்கு வளர்ந்த நாட்டு கொள்கை, நுகர்வே காரணம்

லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உணவுக் கொள்கை பேராசிரியர் திமோத்தி லாங், உணவுத் துறையில் முன்னணி சிந்தனையாளர். உணவு பாதுகாப்பு, உணவு ஏற்றத்தாழ்வு, ஊட்டச்சத்து, உணவு சுதந்திரம்-உணவு கட்டுப்பாடு இடையிலான போட்டி ஆகியவை தொடர்பாக விரிவாக எழுதியுள்ளார். உலக சந்தையில் அடிப்படை உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிரடி உயர்வு அவருக்கு ஆச்சரியம் தருவதாக அமையவில்லை. இந்த நெருக்கடி தொடர்பாக உணர்ந்து கொள்ளாமல், உலகம் தூக்கத்தில் நடப்பது போல சென்று கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். உலக உணவு நெருக்கடி பற்றி அவரது சிந்தனைகள்:

-
உணவு நெருக்கடிக்கு நவீன தொழில்நுட்பங்களால் தீர்வு கண்டுவிட முடியுமா?

1970
களில் சூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளை பஞ்சம் தாக்கியது. அப்போது உணவு நெருக்கடி பெரிய பிரச்சினையாக எழுந்தது. அப்பொழுது பசுமை புரட்சி மூலம் பயிர்களில் கலப்பினத் தொழில்நுட்பம் புகுத்தப்படுவது நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்ததால், உற்பத்தி சார்ந்த அணுகுமுறை உணவு நெருக்கடியை மீட்டது. ராக்பெல்லர் அறக்கட்டளை மற்றும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற முக்கிய உணவுப் பயிர்களில் அப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் பசுமைப் புரட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தைப் போலவே, தற்போதைய உணவு நெருக்கடியை மரபணு மாற்றம் சீரமைத்துவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இன்று நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினையின் விரிவு மற்றும் ஆழத்தை பார்க்கும்போது மரபணு மாற்றம் போன்ற தொழில்நுட்பங்களால் உணவு நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதே எனது நம்பிக்கை.

-
உணவு நெருக்கடியை விரிவாக எப்படி விளக்குவீர்கள்?

உணவு நெருக்கடியை பாதிக்கக் கூடியதாக எட்டு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்:

எரிசக்தி: ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. 95 சதவிகித உணவுப் பொருட்கள் கச்சா எண்ணெய் போக்குவரத்தை சார்ந்து இயங்குபவை. விவசாய உற்பத்தியில் கிடைக்கும் லாபங்கள் அனைத்தும் உரம் மற்றும் இயந்திரமயமாக்கலை (கச்சா எண்ணெயைச்) சார்ந்துள்ளன. கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரிஎரிபொருள்களைக் கருதுவது இனிமேலும் சரி என்று சொல்ல முடியவில்லை. உயிரிஎரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரித்தால் உணவு உற்பத்திக்கான நிலம் குறையும். அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து எரிபொருள் தேவையில் 10 சதவிகிதத்தை உயிரிஎரிபொருள்கள் மூலம் பூர்த்தி செய்ய, 30 முதல் 70 சதவிகித உணவுப் பயிர்களை கைவிட வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் சாத்தியமில்லாதது.

உணவுப் பொருள் விலை: உணவுப் பொருட்களின் விலை அதிவேகமாக உயருகிறது. இதற்கு யூக வணிகம் காரணமல்ல. பல பத்தாண்டுகளாக சேமிப்பு அளவுகள் மிகக் குறைவாகவே இருந்தன. 1980களில் இருந்து தலைக்கு இவ்வளவு என்று கிடைக்கும் உணவின் அளவு குறைந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு 2006யைவிட, 2007ல் 5 சதவிகிதம் அதிகரித்தது. இதற்கு உமி நீக்கிய தானியம், உணவு எண்ணெய் ஆகிய இரண்டின் விலை உயர்வே காரணம். உயிரிஎரிபொருள் உற்பத்தியில் அதிகம் இடம்பெறும் தானியங்கள் இவை. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு 2008ல் 13 சதவிகிதம் அதிகரிக்கும் என்று உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது வளர்ந்த நாடுகளுக்கு கடினமான ஒன்றாகவும், வளரும் நாடுகளுக்கு பயங்கரமானதாகவும் மாறக்கூடும்.

மக்கள்தொகை: அதிவேகமாக உயர்ந்து 2007ல் மக்கள்தொகை 660 கோடியாக உள்ளது. 2050ம் ஆண்டுக்குள் இது 910 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நகர்மயமாக்கம் முற்றுப்புள்ளி வைக்க முடியாதது போலத் தோன்றுகிறது. 1961ம் ஆண்டில் 100 கோடி பேர் நகரங்களில் வாழ்ந்தனர், 1986ல் அது 200 கோடியானது, 2003ல் அது 300 கோடியானது. 2018ல் அது 400 கோடியாகவும், 2030ல் அது 500 கோடியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1798ம் ஆண்டில் தாமஸ் மால்தூஸ் எச்சரித்தது என்னவென்றால், மக்கள்தொகை ஜியோமெட்ரிக் முறையில் அதிகரித்தாலும், உணவு விநியோகம் அரித்மெடிக் முறையில் அதிகரிக்கிறது என்று கூறினார். இந்தக் கொள்கை முன்பு உண்மையில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் மக்கள்தொகை வளர்ச்சியும், உணவுத் தேவைகளும் கணக்கிட முடியாதவையாக இருக்கின்றன. ஆனால் அனைவரது வயிற்றையும் நிரப்பியாக வேண்டுமே. அதற்கு அதிவேக நடவடிக்கை தேவைப்படுகிறது. இதற்கு உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் அல்லது வேளாண் முறைகளை மாற்ற வேண்டும். எது நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொழிலாளர்: இது முந்தை பிரச்சினையுடன் தொடர்புடையது. நகர்மயமாக்கம் தவிர்க்க முடியாதது என்றால், கிராமப்புறங்களில் யார் வேலை பார்ப்பார்கள்? நிலப் பயன்பாட்டு மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எப்பொழுதும் வாழ்க்கை கடினமாக இருக்கிறது, அதற்கான வெகுமதியோ மிகக் குறைவாக இருக்கிறது, பாதுகாப்பின்மை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அரசு கொள்கைகள் பெரிய விவசாயிகளை மையமிட்டதாக உள்ளன. ஏனென்றால் உபரி உற்பத்தி செய்வதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகளே. அவர்களுக்குத்தான் புதிய வசதிகள் செய்துதர வேண்டும். தீர்வின் ஒரு பகுதியாக அவர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு மாற்றாக இனிமேலும் கச்சா எண்ணெய் கிடைக்காது என்ற நெருக்கடி உருவாகும்போது, இயந்திரமயமாக்கலின் அர்த்தம் என்னவாக இருக்கும்? கச்சா எண்ணெயை சார்ந்து இயங்கி வரும் உலகம், மீண்டும் வயல்களில் வேலை செய்ய தொழிலாளர்களை நாடப் போகிறதா? பார்ப்போம்.

நிலம்: பயிர் செய்வதற்கு உரிய நிலப் பகுதிகள் என்பது கடல்மட்டம், வடிகால் வசதி, முதலீடு போன்றவற்றைப் பொருத்தது. தற்போது உள்ளதைவிட இன்னும் 12 சதவிகித நிலத்தை பயிர் உற்பத்திக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லையில் உள்ள நிலங்கள் குறைந்த உற்பத்தியை தருவதாகவும், அதிக செலவு பிடிக்கக் கூடியதாகவும் இருக்கும். காலநிலை மாற்றம், நிலப் பயன்பாட்டு மாற்றங்களை பெருமளவு மாற்றக் கூடியது. சமீபத்தில் பிரிட்டனில் நடந்த ஓர் ஆய்வில், அங்குள்ள நுகர்வோர் பயன்படுத்தும் உணவின் அளவு, அவர்களிடம் உள்ள நிலம் மற்றும் கடலைவிட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்தது. பிரிட்டன் மக்கள் நிலங்களை அகங்காரத்துடன் பயன்படுத்துகிறார்கள்.

நமது 'திறன்மிக்க உணவு அமைப்பு', உண்மையில் மற்ற மக்களின் நிலத்தில் இருந்து சுரண்டப்பட்டது. நவ காலனியத்தை அடிப்படையாகக் கொண்ட சந்தையில், நம்மிடம் உள்ள அதிகப்படியான பணம் இதை சாத்தியமாக்குகிறது. 60 ஆண்டுகளாக அறிவியல்பூர்வமான வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மத்தியில் பிரிட்டன் நுகர்வோர் தற்போதும் உற்பத்தி செய்யப்படும் உணவில் 25 சதவிகிதத்தை வீணாக்குகிறார்கள். வரலாற்று ரீதியில் பார்த்தால், இது பழைய வகையான வீணாவதில் இருந்து (நிலம் சீர்கேடு அடைதல் மற்றும் கிடங்கில் வீணாதல்), புதிய வகையான வீணாவதாக மாறியிருக்கிறது (வீடுகளில் வீணாவது, நிலத்தை தோண்டி மேடாக்குவது)

நீர்: உலகள அளவில் உள்ள குடிக்கத்தக்க நன்னீரில், வீடுகளில் 10 சதவிகிதம், தொழிற்சாலையில் 20 சதவிகிதம், விவசாயத்தில் 70 சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது 92 சதவிகித மக்களுக்கு நன்னீர் போதிய அளவு கிடைத்து வருகிறது. 2025ல் இது 62 சதவிகிதமாகக் குறைந்துவிடும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு நன்னீர் தேவைப்படுகிறது என்பது, அப்பொருள் வெளியிடும் பசுமையில்ல வாயு அளவுக்கு இணையாக முக்கியமானது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவு பொருள் விற்பனையில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தணிக்கை செய்து வெளியிட வலியுறுத்த வேண்டும். இப்படி முத்திரையிடுவது பெரும் பலன் தரும்.

எதிர்காலத்தில் பெரும் தண்ணீர் நெருக்கடி காத்திருக்கிறது என்பதால், ஊதாரித்தனமாக தண்ணீரை பயன்படுத்துவதை முதலில் கைவிட வேண்டும். பிரிட்டனில் அதிக நன்னீர் இருப்பது போலப் படுகிறது. ஆனால் உண்மை என்ன? சமூகநீதிக்கு புறம்பாக மற்ற மக்களின் நன்னீரை நாம் சுரண்டி வருகிறோம். ஒரு கிளாஸ் பீருக்கு 75 லிட்டர் தண்ணீர், ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூசுக்கு 190 லிட்டர் தண்ணீர், ஒரு ஹம்பர்கர் (உணவுப் பண்டம்) 2,400 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.

வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், உணவு வர்த்தகம் என்பது எல்லைகளைத் தாண்டி தண்ணீரை இடம்பெயர்த்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஒவ்வோர் ஆண்டும் 20 நைல் நதிகளில் ஓடும் அளவு தண்ணீர், வளரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பிரெட் பியர்ஸ் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம்: இது நமது பட்டியலில் உள்ள மிகப் பெரிய ஆபத்து. ஸ்டெர்ன் அறிக்கையின்படி காலநிலை மாற்றத்துக்கு காரணமாக உள்ள பசுமையில்ல வாயுக்கள் வெளியீட்டில் 14 சதவிகிதம் விவசாயத்தை சார்ந்தது. வேளாண் மாசு வாயு வெளியீட்டில், 38 சதவிகித உரங்கள் காரணமாகவும், 31 சதவிகிதம் கால்நடை வளர்ப்பு காரணமாகவும் உருவாகின்றன. காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு ஆகும் செலவை தனது அறிக்கையில் சேர்க்கத் தவறிவிட்டதாக ஸ்டெர்ன் தெரிவித்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் உணவு அமைப்பை மாற்றியமைப்பது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். இந்தப் பிரச்சினை எதிர்காலத்தில் கடுமையாக தாக்காமல் இருக்க, எப்பொழுதும் போல சுற்றுச்சூழல் தவறுகளை தொடர்ந்து கொண்டிருப்பதை முதலில் கைவிட வேண்டும்.

ஊட்டச்சத்து மாற்றம்: இந்தச் சொல் பொருளாதார வளம் பெருகுவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பானது. வளரும் நாடுகளில் தற்போது இது நிகழ்ந்து கொண்டுள்ளது. அங்கு உடல்நலத்துக்கான செலவு தற்போது பெரும் அழுத்தமாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளில் நுகர்வோரின் உணவுப் பழக்கம் மாறுகிறது. சர்க்கரை, குளிர்பானம், இறைச்சி, பால் பொருட்களை அவர்கள் அதிகம் உண்டு வருகின்றனர். இதன்காரணமாக நோய் தாக்கும் முறைகள் மாறி வருகின்றன. உணவு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் உருவாகும் தீராத நோய்களான இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, உடல்பருத்தல் உள்ளிட்டவை தொடர்பான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. வளரும் நாடுகளில் ஏற்கெனவே மிக மோசமான நிலைமையில் ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த அதிகரிப்பு நிகழ்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

-
இவற்றை அடிப்படையாகக் கொண்டு எப்படி தீர்வு காண்பது?

மேற்கண்ட எட்டு அம்சங்களும் உலக உணவு கொள்திறளை பாதிக்கும் மிகப் பெரிய அடிப்படைக சவால்களாகும். இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. ஒருங்கிணைந்து மாபெரும் கொள்கை மாற்றங்களை உருவாக்கக் கோருபவை. இதை கொள்கை மதிப்பீட்டாளர்கள் உணர்ந்து வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் உணரவில்லை. உணவு நெருக்கடி பிரச்சினைக்குத் தீர்வாக 'சந்தை சக்திகளிடம் விட்டுவிடுவோம்' அல்லது 'விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்', 'உதவி வழங்குதல் மற்றும் சந்தையை அணுகும் நடைமுறையை எளிதாக்கினால் எல்லாம் சரியாகிவிடும்' என்று அரசியல்வாதிகள் பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருகின்றனர்.

பூமியின் வளங்கள் கணக்கற்றது என்று முன்முடிவுடன் மனிதர்கள் இனிமேல் செயலாற்றக் கூடாது. இப்பொழுதுள்ள நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றை தொடரலாமா? கட்டாயம் மாற்றம் செய்தாக வேண்டுமா? என்று தீர்மானகரமாக முடிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

-
தற்போதைய உணவு நெருக்கடிக்கு காரணம் யார்?

தற்போதைய உணவு நெருக்கடி வளரும் நாடுகளை மட்டும்தான் பாதிக்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். வளரும் நாடுகள் இப்படி அவதிப்படுவதற்கு, வளர்ந்த நாடுகள் எடுத்த முடிவுகள்தான் காரணம்.

இந்த உணவு நெருக்கடிக்கு வளர்ந்த நாடுகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்களும் அளவுகடந்து நுகரும் நாடுகளும் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதன் மீது இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். மேலே நான் கூறிய எட்டு அடிப்படைகளுக்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது முக்கியம். மேற்கத்திய சந்தைகளை வெளிச்சக்திகள் தடுமாறச் செய்கின்றன என்று அந்நாடுகள் கூறி வருகின்றன, இது அப்பட்டமான பொய்.

-
உணவு உற்பத்தி, உலக மக்களின் பசியைத் தீர்த்திருக்கிறதா?

'
கடந்த 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போல உணவு அமைப்பை தீவிரப்படுத்த வேண்டும். 'உற்பத்திமயம்' என்று கூறப்படும் முறையைத் தொடர வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உணவை உற்பத்தி செய்து, உணவு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் 'உற்பத்திமயம்' கூறியது. அறிவியலும், முதலீடும் உற்பத்தியை அதிகரித்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடும் என்று உற்பத்திமயத்தை உருவாக்கியவர்கள், கொள்கை வகுப்பாளர்களிடம் சமாதானம் செய்திருந்தார்கள். 1940களில் இது பலன் தந்தது. ஆனால் இன்று பலன் தராது.

சுற்றுச்சூழலில் உணவு உற்பத்தி என்ன வகையான பாதிப்புகளை உருவாக்குகிறது என்று ஆராய வேண்டும். வளங்குன்றாத உணவு அமைப்பை உருவாக்க வேண்டும். பூமியில் எதை உற்பத்தி செய்ய முடியும், மனிதர்களுக்கு என்ன தேவை என்ற இரண்டு அம்சங்களையும் சமநிலையில் வைக்க வேண்டும். இது மிகக் கடினமானது. பூமிக்கும், மனித உடல்களுக்கும் ஒரு சேர நலன் பயக்கும் வளங்குன்றாத உணவை கண்டு பிடிக்க வேண்டும்.

'
உலக உணவு அமைப்பு' பற்றி இரண்டு பார்வைகள் உண்டு. 'உற்பத்தியமயம்' கொள்கைப்படி பார்த்தால் 'உலக உணவு அமைப்பு' வெற்றிகரமாகச் செயல்படுகிறது எனலாம். கடைகளில் உணவுப் பொருள்கள் வழிந்து நிரம்பியிருக்கின்றன.

ஆனால் வளங்குன்றா வளர்ச்சி நோக்கிலிருந்து பார்த்தால், 'உலக உணவு அமைப்பு' என்பது உலகை முழு சீர்குலைவுக்கு அழைத்துச் செல்வது போலிருக்கிறது. நமது கொள்கைகள் மூளைக் கோளாறு கொண்டதாக இருக்கின்றன. ஒரு பக்கம் ஒட்டுமொத்த வெற்றி போலத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் ஒட்டுமொத்த தோல்வியும் உண்டு. உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், உற்பத்தி அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அதற்கு மிகப் பெரிய விலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

-
இதற்கு தீர்வு காண்பதற்கு முன் நம் முன் உள்ள பிரச்சினைகள் என்ன?

நமது அடிப்படைத் தத்துவம் வளங்குன்றா வளர்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், உடல்பருத்தல், ஊட்டச்சத்து குறைவு ஆகிய புதிய அக்கறைகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அப்படிப் பார்த்தால் நிறைய கேள்விகள் தோன்றுகின்றன. கச்சா எண்ணெய் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும்? நிலத்தை முறையாக பயன்படுத்துவற்கான எல்லை என்ன? நகர்மயமாகிவிட்ட உலகில், வேளாண் அமைப்புகள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும்? ஆரோக்கியமான, வளங்குன்றாத உணவு அமைப்பு எது?

-
உணவு நெருக்கடிக்கான தீர்வு எப்படி உருவாகும்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, 'ஒழுங்கு கொண்ட மாற்றம்' சாத்தியம் என்றே நம்பினேன். இப்பொழுது அது சாத்தியம் என்று தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது 'நிகழ்வுகள்'தான் அனைத்தையும் திறம்பட வழிநடத்தி வருகின்றன. இனிமேல் அதிர்ச்சிதான் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பகுத்தறிவாளர் என்ற வகையில், அந்த அதிர்ச்சி சிறியதாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

அதிர்ச்சிகள் குழப்பமானவை, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. தவறான உணவுக் கொள்கைகள் காரணமாக, ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் சாலைகளில் நாம் நடைபிணம் போல் நடந்து கொண்டிருப்போம் என்று தோன்றுகிறது. கண்டுகொள்ளப்படாத அந்தத் தவறான கொள்கைகளை தடுப்பதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். உணவுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு பதிலாக, உணவு சுதந்திரத்தின் பக்கம்தான் நாம் நிற்க வேண்டும்.

(தமிழில்: ஆதி வள்ளியப்பன்)

சனி, மே 09, 2009

புவி வெப்பம் = மாரடைப்பு, சுவாசக்கோளாறு

காலநிலை மாற்றத்தால் உலக சுகாதாரம் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும். நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார் விஞ்ஞானி அந்தோனி மெக்மைக்கேல். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல். அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகிறார்:

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி... கடந்த இருபது ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர் அமைந்திருப்பது தெரிகிறது. உலகின் வெப்பமான பகுதிகளில் மட்டுமே பரவி வந்த மலேரியா தற்போது கிழக்கு ஆப்பிரிக்க மேட்டுப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிஸ்டோசோமியாசிஸ் (Schistosomiasis) என்ற தண்ணீர் நத்தைகளால் தொற்றும் நோய் சீனாவின் வடக்குப் பகுதிக்கு பரவிவிட்டது. இந்த நத்தைகளை முன்பு இந்தப் பகுதியில் பார்க்க முடியாமல் இருந்தது.

உணவாகப் பயன்படும் சிப்பிமீன் நச்சாவது தொடர்பாகவும் தகவல்கள் வருகின்றன. அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்த இந்த சிப்பிமீன், தற்போது அப்பகுதியில் மிகச் சாதாரணமாக பார்க்கக் கிடைக்கிறது. அலாஸ்கா பகுதி கடல்நீரின் வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும் தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில் சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா? வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தால், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அன்றாட வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளின் தாக்கம் உயர்வதன் காரணமாகவே இந்த இறப்புகள் பெருமளவு ஏற்படுகின்றன. வளரும் நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.

இது போன்ற பிரச்சினைகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? முதியவர்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், குறைந்த தரமுள்ள வீடுகளில் வாழும் ஏழைகள் ஆகியோர் வெப்பஅலைகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ வெப்பஅலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சிறிய-காற்றோட்ட வசதிகள் இல்லாத அடுக்குமாடிகளில் வாழ்ந்தவர்கள்தான். கடுமையான வெப்பத்தால் சமூக அமைதி கெடும் என்பதாலும் மேலும் சிலர் இறந்ததாக தகவல்கள் வந்தன. வெப்பநிலை அதிகரிப்பால் பெரும்பாலோர் அடுக்குமாடிகளில் குடியிருப்பு வீடுகளுக்குள் அடைந்து கொண்டதால், நடத்தை சார்ந்த மனநோய் பாதிப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும் தகவல்கள் வந்தன.

வேறு என்ன சுகாதார பிரச்சினைகள் ஏற்படும்? ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் வாழும் இனுயிட் மக்களிடம் ஏற்படும் உடல் பருத்தல் மற்றும் காலநிலை மாற்றம் இடையிலான சுவாரசியமான தொடர்பாகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில் உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும் சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.

இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்? இந்தியாவின் பெருநகரங்களில் வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம் மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.

காலநிலை மாற்றத்துக்கு தகவமைத்துக் கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? 10 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட மாற்றங்கள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கால ஆபத்துகள் தொடர்பாக நமக்கு முழுமையான புரிதல் இல்லை என்றாலும்கூட, ஆபத்துகளின் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வருகிறது. அனைத்து ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்குவது சாதகமான ஒரு சூழ்நிலை அல்ல.

குறிப்பாக தெற்கு ஆசியாவின் உணவுதானிய மகசூலில் காலநிலை மாற்றம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை அதிகரிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும். மண்வளம் அதிகமாக சுரண்டப்படும், நீர்நிலைகள், நன்னீர் ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் நிலை என்ன?
பொருளாதார வளர்ச்சி பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமே உலக வங்கி முதன்மை அக்கறை செலுத்தி வந்தது. மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களும் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவை என்று தற்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை உலக சுகாதார நிறுவனம் பழைமை மனப்பான்மையுடனே அணுகுகிறது. இந்த ஆண்டுதான் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, காலநிலை மாற்றம் முக்கிய பிரச்சினை என்று முதன்முறையாக கூறியுள்ளது. இது மிகப் பெரிய முன்னெடுப்பு.

தமிழில் : ஆதி வள்ளியப்பன்
நன்றி: டவுன் டு எர்த்

புதன், மே 06, 2009

உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!


சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்து மதத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் ஆத்திகமே கதியென்று கிடக்கிறவர்களுக்கு, சுற்றியிருக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு உணர்வையே இந்தத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. திருவிழா காலங்களை நம்பியே மட்பாண்டம் செய்யும் குயவர்கள், பொம்மை விற்பவர்கள், சின்னச்சின்ன பொருட்களை விற்கும் எளிய மனிதர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைத் தவிர, இந்தத் திருவிழாக்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. இதுவும் எவ்வளவு நாள் நீடித்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. விரைவில் இவற்றுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது மட்டும் நி்ச்சயம்.

Garbage in Chennai
காரணம், ஒரு காலத்தில் பண்ருட்டியில் இருந்து மண் பொம்மைகள், சேலத்தில் இருந்து கல்சட்டிகள், ராமநாதபுரத்தில் இருந்து பனையோலை முறங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி தொலைவில் இருந்து வருவதெல்லாம் நின்றுவிட்டது. அதைவிட இன்னும் சோகம், இந்தத் திருவிழாவின்போது, பனையோலை முறத்தைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் முறத்தை நான் பார்த்தேன்.

மயிலையில் ஆண்டுதோறும் மிகப் பெரிதாக நடக்கும் விழா பிரம்மோத்சவம்-63 நாயன்மார்கள் விழா. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து, அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடைபெறுகிறதாம். 1909ல் 50,000 பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் பாடலான "பீப்பிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து" என்ற புத்தகத்தில் இந்தத் திருவிழா காலத்தில் நடத்தப்படும் "கிளாஸ்காரன் தண்ணீர் பந்தல்" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போதிருந்து திருவிழாவில் தண்ணீர் பந்தல் நடப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது.

இந்த விழாக்களின்போது போக்குவரத்து மாற்றப்படும். ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், ஜனநெருக்கடி அதிகரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. பிரம்மோத்சவம் விழாவின் போது, மயிலாப்பூர் பஸ் டெபோ அல்லது மயிலை குளம் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக ஆர்.கே. மடம் சாலையில் உயரஉயரமான பந்தல்கால்களை நட்டு பந்தல் அமைக்கப்படும். அந்தப் பந்தல்கள் யாருக்கு நிழல் தரும் என்று தெரியவில்லை. ஆனால் உற்சவம் வரும் சாமி அந்த இடங்களில் நின்று செல்லும் என்று நினைக்கிறேன். இவை போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் சாலையின் நடுவில்தான் இந்தப் பந்தல்களை அமைப்பார்கள்.

ஏப்ரல் முதல் வாரம் அறுபத்து மூவர் திருவிழா நடந்த நேரத்தில் பகலில் போக்குவரத்து சுற்றிவிடப்பட்டது. அதிக மக்கள் கோயிலை நோக்கி வருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களைத் தடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரவில் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கண்ட காட்சி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

லஸ் கார்னர் துவங்கி, மந்தைவெளி அஞ்சல் நிலையம் வரை, குளத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் ஏதோ பெரிய போரி்ல் அனைவரும் குத்துப்பட்டு சாய்ந்து கிடந்தது போல, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், சில பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள். இவற்றோடு பாதி தின்றுவிட்டு பிடிக்காமலும், அவசரத்திலும் கீழே போட்ட உணவுப் பண்டங்கள், சோறு, இனிப்பு எல்லாம் கலந்து மயக்கத்தை வரவழைக்கும் நாற்றத்தை சந்தோஷமாகப் பரப்பிக் கொண்டிருந்தன. எல்லா குப்பையையும் ஜனக்கூட்டம் தன் சக்தியைச் செலவழித்து மிதிந்து போயிருந்தது. அதனால் எல்லாம் நசுங்கி கெட்டுப் போகத் துவங்கியிருந்த நிலையில்தான் அந்த நாற்றம் எழுந்தது. குப்பைக்குள் மாணிக்கம் தேடு்ம் சிலரைப் போல், தளராத மனதுடன் குப்பையள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அந்த இரவிலும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அநேகமாக அடுத்த நாள் காலை வரை அவர்கள் குப்பையை அள்ளியிருக்க வேண்டும். அவ்வளவு குப்பை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியை கடந்து சென்றபோதும்கூட, சூட்டில் நிறைய பிளாஸ்டிக் பைகள் தார்ச்சாலையோடு ஒட்டிக் கிடந்தன. நாற்றமும் நீங்கயிருக்கவில்லை.

வருபவர் என்ன சாதி, மதம் என்றெல்லாம் கேட்காமல் அன்னதானம் கொடுப்பது நல்ல பண்புதான். ஆனால் அந்த தானம் உலகை, இயற்கையை சூறையாடுவதாக இருக்கலாமா? பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடும். இவர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். அதேநேரம், இத்தனை பெரிய கூட்டமும் நோய் தொற்றிக் கொள்ளாமல், சுகாதாரமாக இருக்க வேண்டாமா? அடியார்களுக்கு உணவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ள விரும்புபவர்கள், அதோடு குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா? இல்லையென்றால் இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.

பிளாஸ்டிக் கோப்பைகள் புழக்கத்துக்கு வருதற்கு முன் இப்படிப்பட்ட பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டிக்கின் விலைதான் அதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் என்பது எந்த வகையிலும் நிலையான ஒரு தீர்வல்ல. வளங்களை சூறையாடுவது. அன்னதானம் வழங்க வேண்டும், அதிகமாகச் செலவும் ஆகக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தொன்னைகளும், பாக்குமட்டை தட்டுகளும் இருக்கின்றன. அதேநேரம், அவற்றை பயன்படுத்திய பின்னரும் முறைப்படி அகற்றுவது அவசியம்.

அன்னதானம் வழங்குகிறவர்கள் குப்பையை முறைப்படி அகற்ற குப்பைப் பெட்டிகள் வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் மாநகராட்சி திருவிழா நேரங்களிலாவது இதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்குவதற்காக கோயிலின் வாசல் அருகிலேயே மொபைல் டாய்லெட் வைக்கிறார்கள். அது பத்து நாட்களுக்கு அங்கே நின்று நாறிக் கொண்டிருக்கும். ஆனால் கீழே போடும் குப்பையை அகற்ற ஏற்பாடு கிடையாது.

நாம் எந்த வகையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையானால் கவிச்சி சாப்பிடாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். புரட்டாசி மாசம், ஐப்பசி மாசம் கறி சாப்பிடாதவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்கு குளிக்காமல் போகக் கூடாது என்கிறார்கள். செருப்பை கழற்றி வைத்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையலாம் என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் அறிவிக்கப்படாத ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றுவோர், ஏன் அன்னதானம் வழங்கப்படும்போது, சாப்பிட்டுவிட்டு அதே இடத்திலேயே பிளாஸ்டிக் தட்டையும் கோப்பையையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்? சாமி சார்ந்த நடவடிக்கைகளில் சுத்தத்தை கடைப்பிடிப்பவர்கள், கோயிலுக்கு வெளியிலும் அதை கடைப்பிடிப்பதை எந்த அம்சம் தடுக்கிறது?

தன் வீட்டில் யாராவது குப்பையை இறைத்து வைத்துக் கொள்ள விரும்புவோமா? வெளியில் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இறைப்பது ஏன்? தன் வீடு குப்பையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், சாலை, பார்க், பீச், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு குப்பையை போடுகிறோம். ரயில் பயணங்களில் அடுத்தவர் முகத்தில் தண்ணீரும், உணவுப் பருக்கைகளும் தெறி்ப்பது மாதிரி கழுவுவதில், குப்பையை தூக்கியெறிவதில் கைதேர்ந்தவர்கள் நாம். சுற்றுலா தலமானாலும், ரயில் பயணம் என்றாலும் பொது இடத்துக்குப் போகும்போது குப்பையை சரியான இடத்தில் போடுவதுதான் முறை. இந்த எளிய பழக்கத்தை என்றைக்கு நாம் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் நாகரிக சமூகம் என்று அழைத்துக் கொள்கிற தகுதி நமக்கு இருக்கிறது. 

- ஆதி வள்ளியப்பன்
(valliappanpress@gmail.com)