சனி, ஜனவரி 11, 2014

‘கட்டபொம்மனா... எட்டப்பனா..?’ - நம்மாழ்வார் (மலரும் நினைவுகள்...!)

 ‘‘மோர்ல வெண்ணெய் எடுக்கத் தெரியாதவ... முறத்துல தங்கம் எடுப்பாளா?’’ என்கிற சொலவடையைப் போல், வயலுக்குப் போடும் உரத்திலேயே எது நல்ல உரம்... எது கெட்ட உரம் எனத் தெரியாமல் கண்டதையும் அள்ளிப் போடுபவர்கள் நம் அப்பாவி விவசாயிகள். அப்படியிருக்கும்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் (பி.டி.) பற்றி பரவிக்கிடக்கும் எதிரெதிர் கருத்துக்களால் குழம்பாமலா இருப்பார்கள்?




இந்தக் குழப்பத்துக்கு விடை தேடும் முயற்சியாக பொங்கலை முன்னிட்டு, கடந்த (2007 ஜனவரி) 13-ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன 'மனித உரிமை-சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர் குழு' மற்றும் 'தோழமை' ஆகிய அமைப்புகள். மரபணு மாற்றப்பட்ட விதைகள் உழவர்களின் வளர்ச்சிக்கா.... நிறுவனங்களின் வளர்ச்சிக்கா..?’ என்ற தலைப்பில் நடந்த விவாத அரங்க நிகழ்ச்சியை வழக்கறிஞர்கள் குழுவின் செயலாளர் சுந்தரராஜன் துவக்கி வைத்தார்.


'உழவர்களின் வளர்ச்சிக்கே' என்றபடி முதலில் மைக் பிடித்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தாவர மூலக்கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் சதாசிவம், ‘‘மரபணு மாற்று தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வறட்சி, உப்பு தன்மையைத் தாங்கி வளரும் தாவரத்தையும், பூச்சி நோய் தாக்காத பயிரையும் வளர்க்க முடியும். அமெரிக்காவுல இருக்கும் ஹவாய் பகுதியில் விளையும் பப்பாளியில் வட்டபுள்ளி நோயின் தாக்கம் அதிகமிருந்தது. எந்த மருந்தடிச்சும் சரியாகலை. பிறகு மரபணு மாற்று தொழில் நுட்பத்தில் வட்டப்புள்ளி நோயை எதிர்க்கும் பப்பாளியை வெளியிட்டாங்க. அதனால வட்டபுள்ளி நோய் தடுக்கப்பட்டதோடு, விளைச்சலும் நல்லா இருந்தது. பி.டி. விவசாயிகளுக்கான கண்டுபிடிப்புதான். இதனால விவசாயிங்களுக்குதான் லாபம்’’ என்று உலக மேற்கோள்களை எல்லாம் சுட்டிக்காட்டி உட்கார்ந்தார்.

வழக்கமான கலகலப்போடு பேசிய 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், ‘‘இந்தியாவில் 55 சதவிகித குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் பாதிப்பு இருக்கு, மூளை வளர்ச்சியும் குறைவாகவே இருக்கு. அதனால் பி.டி-யில் உருவான கோல்டன் அரிசி சாப்பிடுங்கள். இதில் வைட்டமின் ஏ சத்து அதிகமிருக்கிறதுனு சொல்றார் வெளிநாட்டு விஞ்ஞானி. அதே வைட்டமின் ஏ... கேரட், இறைச்சி, முருங்கைக் கீரை இதிலெல்லாம் இருக்கே. அதைச் சாப்பிடச் சொல்லவேண்டியதுதானே? விவசாயம் இன்று வியாபாரமாகிவிட்டது. நம்மை அடிமையாக்க பலரும் துடிக்கிறார்கள்’’ என ஆக்ரோஷமாக பேசினார்.

பெங்களூரு உயிரியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த குருமூர்த்தி நடராஜன் பேசும்போது, ‘‘இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பத்தாண்டுகளில் பூச்சி மருந்து உபயோகிக்கும் அளவு கிட்டதட்ட 14 சதவிகிதம் குறைந்துள்ளது. இப்படி விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தால் நிறுவனங்கள் எப்படி வளர முடியும்? நாம் சாப்பிடும் அரிசியை பாலீஷ் செய்வதால் அதில் உள்ள வைட்டமின் போய் விடுகிறது. அதே சமயம் கோல்டன் அரிசி ஒரு சதவிகிதமாவது பலன் கொடுத்தால் நமக்கு நன்மைதானே’’ என்று வாதம் செய்தார்.

ஆவேசமாக மைக் பிடித்த உழவர்-உழைப்பாளர் கட்சியின் அகில இந்தியப் பிரதிநிதியான நல்லா கவுண்டர், ‘'ஆடு, மாடு, மனுஷனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வாங்க. எங்கேயாவது விதைக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வாங்களா..? அந்த மாதிரியான வேலைகளை அமெரிக்கா மாதிரியான பைத்தியக்கார நாடுங்கதான் செய்யும். இதெல்லாம் இங்க எப்படிங்க சரிப்பட்டு வரும்? ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக் காட்டலாம். எங்களுக்கு இருப்பதே ஒரு வயிறுதான். தயவுசெய்து அந்த வயித்துல அடிக்காதீங்கய்யா’’ என சொன்னபோது ஒட்டுமொத்த கூட்டமும் உச்கொட்டியது.

அடுத்துப் பேச வந்தவர் கலகலப்பு பார்ட்டியான 'வானொலி புகழ்' துகிலி சுப்ரமணியம், ‘‘நாம பயன்படுத்தும் பல பொருட்கள் வெளிநாட்டுல இருந்து வந்ததுதான். அதுலயும் பல பாதிப்புகள் இருக்கத்தான் செய்யுது. ஆனால், அதை எல்லாத்தையும் தேவை கருதி ஏத்துக்கிட்டோம். அதேபோல இந்த பி.டி. வகையையும் ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அந்தக் கம்பெனி பூச்சி மருந்து ஒரு மூடி, இந்த கம்பெனி மருந்து ஒரு மூடினு நீங்களாவே யார் யாரோ சொன்னதை எல்லாம் அடிச்சுக்கிட்டு, இப்போ விளைச்சல் வரலைனு யாரையும் குற்றம் சொல்லக் கூடாது’’ என்று வழக்கமான பாணியில் போட்டுத்தாக்கினார்.

கடைசியாக பேசிய ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 'அரச்சலூர்' செல்வம், ‘‘அமெரிக்க பத்திரிகை ஒன்றில் எங்களிடம் பி.டி. விதை அலர்ஜிக்கு மருந்து கிடைக்கும்என்று விளம்பரப்படுத்தியது ஸ்டர்லிங்கான் என்ற நிறுவனம். மரபணு மாற்றம் மூலம் மக்காச்சோளத்தை அறிமுகப்படுத்தியதே அந்த நிறுவனம்தான். இதில் இருந்தே உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். இந்த விதைகளால் பாதிப்பு இல்லை. அப்படி பாதிப்பானால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என இங்கிருக்கும் யாராவது உத்தரவாதம் கொடுக்க முடியுமா?’’ எனக் கேட்டார். அதற்கு யாரும் பதில் கொடுக்காத நிலையில் விவாதம் முடிவுக்கு வந்தது.

பி.டி. ஆதரவு வரிசையில் 'ராசி' விதை நிறுவன மேலாளர் டாக்டர் தியாகராஜனும் எதிர்ப்பு வரிசையில் டாக்டர் சிவராமனும் கருத்துக்களை முன் வைத்துப் பேசியது கூட்டத்தைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.


அடுத்துக் கேள்வி நேரம் தொடங்கியபோது 'துகிலி'யாரை நோக்கி, ‘‘அந்த உரத்தைப் போடுங்க, இந்த மருந்தை போடுங்கனு நீங்கதானே ரேடியோவுல சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டுத்தானே பயிரிட்டோம். நிலம் கெட்டு போச்சு. இப்ப பி.டி. பருத்தியால் லாபம்னு வேற சொல்றீஙகளே’’ என்று கண்ணையன் என்பவர் குரல் உயர்த்தினார்.

அதற்குப் பதிலளித்த துகிலி, ‘‘அப்போ அரசாங்கம் என்ன சொன்னதோ அதைத்தான் நாங்களும் சொன்னோம். அதயும் மீறி இயற்கை உரத்தை போடுங்கனு உரக்க சொன்னவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன்’’ என்று சளைக்காமல் பதில் கொடுக்க... கூட்டத்தில் ஏக சலசலப்பு.
சட்டென்று மைக் பிடித்த நம்மாழ்வார், ‘‘நாம எல்லோரும் கட்டபொம்மனா இருக்க போகிறோமா... இல்ல எட்டப்பனா மாறப்போறோமா? என்பதை முடிவு செய்றதுதான் இப்ப முக்கியம்’’ என்று உணர்ச்சி பிழம்பாக வெடிக்க... சலசலப்பு ஓய்ந்தது.
''இந்த விவாதம் ஒரு ஆரம்பம்தான். மீண்டும் மீண்டும் இதுபோன்ற விவாதங்கள் நடத்தப்பட்டால் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று சொல்லி விவாதத்தை முடித்து வைத்தார், விவாத அரங்கின் நடுவரான லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட்.
நன்றி: பசுமை விகடன், 10-02-2007

வியாழன், ஜனவரி 09, 2014

இந்திய விவசாயத்துக்கு சமாதி கட்டும் காங்கிரஸ்! பாழாய் போன பாலி ஒப்பந்தம்...

'வளர்ந்த நாடுகள், விவசாயத்துக்குக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தும் வரை, விவசாயத்தைத் தடையற்ற உலக வணிக ஒப்பந்தத்தில் சேர்க்கக் கூடாது’
-2013 டிசம்பர் 5 வரை, இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால், 6-ம் தேதியன்று அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, 'உலக ஜோதி'யில் இந்தியாவையும் சேர்த்துவிட்டிருக்கிறது, இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு. இதன் மூலமாக, இந்தியாவின் எதிர்கால விவசாயத்துக்கு ஒரேயடி யாக சமாதி கட்டும் வேலையைத் தீவிரமாக இந்த அரசு முடுக்கி விட்டிருக்கிறது என்றே வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கிறது!
1995-ம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டது. அன்று முதல், பல்வேறு பிரச்னைகளில் உலக நாடுகளிடையே ஒருமித்தக் கருத்து எட்டப்பட்ட போதும்... விவசாயத்துக்கான மானியம், இறக்குமதி வரி, சேவை இவை மூன்றிலும் கருத்து வேறுபாடுகளே நிலவிவந்தன. குறிப்பாக, 'விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பின் வரையறைக்குள் விடவே கூடாது' என்று வளரும் மற்றும் ஏழை நாடுகள் விடாப்பிடியாகக் கூறிவந்தன.
2001-ம் ஆண்டு தோஹாவில் நடந்த உலக வர்த்தக மந்திரிகள் மாநாட்டில், பங்கேற்ற அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் 'முரசொலி' மாறன், 'வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு மானியங்களை அள்ளித் தருவதை நிறுத்தும் வரை, விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பின் வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது’ என்று ஓங்கி ஒலித்தார். இதே கருத்தை முன் வைத்துதான் இந்தியாவிலிருக்கும் பல்வேறு விவசாயச் சங்கங்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம், 'உணவுப் பொருட்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று வளர்ந்த நாடுகள் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருந்தன. காரணம், தங்கள் நாடுகளில் விளைந்து கிடக்கும் பொருட்களை... வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கொண்டு வந்து கொட்டி, பணம் பண்ணுவதற்காகத்தான். இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து, ஒவ்வொரு முறையும் தோல்வி கண்ட வளர்ந்த நாடுகள், தற்போது கிட்டத்தட்ட வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டன! டிசம்பர் 3 முதல் 6 வரை... இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் நடைபெற்ற, உலக வர்த்தக அமைப்பில் (WTO) இடம்பெற்றுள்ள நாடுகளின் மந்திரிமார்களின் ஒன்பதாவது மாநாட்டில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டு விட்டது!
'நல்ல ஒப்பந்தம் கையெழுத்து ஆகா விட்டாலும் பரவாயில்லை, கெட்ட ஒப்பந்தத் துக்கு ஒருபோதும் துணைபோக முடியாது’ என்று, மாநாட்டின் தொடக்கத்தில் மார்தட்டினார் இந்திய வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா. 'மானியம் கொடுத்து ஏழை விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதிலும், அவற்றை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்குவதிலும் யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டோம். ஏழைகளுக்கு சோறு போடுவது எங்கள் உரிமை. 82 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அவசியம். மாதம் 5 கிலோ உணவு தானியம் கொடுப்பதாக உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றி உள்ளோம். எங்கள் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு நாங்கள் கொடுக்கும் மானியம், அதாவது குறைந்தபட்ச ஆதார விலையைத் தொடர்ந்து கொடுப்போம். மலிவு விலையில் ஏழைகளுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்களைக் கொடுப்போம். இது எங்களுக்காக மட்டுமல்ல... உலகில் உள்ள 400 கோடி ஏழைகளுக்கான குரல்...'' என 'உக்கிரபுத்திரன்' கணக்காக பேசிய ஆனந்த் சர்மா, மாநாட்டின் நிறைவு நாளில்... வளர்ந்த நாடுகள் கொண்டுவந்த தடையற்ற வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, '23-ம் புலிகேசி'யாய் மாறிப் போனதைப் பார்த்து... அத்தனை நாட்டு மந்திரிகளும் ஆடித்தான் போனார்கள்.
''இந்தியாவில் உள்ள நடுத்தட்டு மக்களின் எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகம். அந்த நடுத்தட்டு மக்களின் வாங்கும் சக்தி கூடி இருக்கிறது. எனவே, என்ன விலை கொடுத்தும் ஒப்பந்தம் நிறைவேற வேண்டும். இந்திய சந்தைதான் நமது ஒரே கனவு''
- இது உலக வர்த்தக அமைப்பின் ஐந்தாவது மந்திரிகள் மாநாட்டில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளியிட்ட பிரகடனம். அந்தக் கனவு, இப்போது நிறைவேறியுள்ளது.
இனி, உணவுச் சந்தையிலும் உலக நாடுகளின் குப்பைகள், கழிவுகள் எல்லாம் கொண்டு வந்து கொட்டப்படும். கொழுத்த மானியத்தில் விளைந்த அமெரிக்க நாட்டின் கெட்டுப்போன உணவு தானியங்கள், அதாவது மரபணு மாற்றப்பட்ட விஷ தானியங்கள், தயாரிப்புகள், ஐரோப்பாவின் பால், பால் பொருட்கள் (இவையும் கொழுத்த மானியத்தில் பிறந்தவைதான்) என்று பலவும்... இந்திய சந்தையில் தடையின்றி வலம் வரும்.
'உலக நாடுகள், தங்கள் நாட்டின் பொருட்களை இந்திய சந்தையில் விற்க வசதியாக, நவீனத் துறைமுகங்கள், நவீன விமான நிலையங்கள், நவீன ரோடுகள் போட்டுத் தரவேண்டும். இந்திய சந்தையில் விற்பனை செய்வதில் சிறுதடங்கலும் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அபராதம் விதிக்கப்படும்’ என்றெல்லாம் எழுதப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல்... 'இது வரலாற்று நிகழ்வு’ என்று ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஆனந்த் சர்மா.
ஆம், பேரழிவும்... ஒரு வரலாற்று நிகழ்வுதானே!
'வளரும், ஏழை நாடுகளில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% மேல் இருக்கக் கூடாது’ என்பதுதான் வளர்ந்த நாடுகளின் நிபந்தனை. இதுவரை வளர்ந்த நாடுகள், விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியங்களைக் குறைத்ததாக தகவல் இல்லை. சொல்லப்போனால் கூடுதலாகத்தான் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த ஆண்டுகூட... 130 பில்லியன் டாலர்கள் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பத்தில் ஒரு பங்குகூட இந்தியாவில் இருக்கும் 70 கோடி விவசாயிகளுக்கு இல்லை. ஏதோ கணக்கு காட்ட உர மானியம் என்று கொஞ்சம் போல கொடுக்கிறார்கள். அதுவும் நேராக உரக் கம்பெனிகளுக்குத்தான் செல்கிறதே தவிர, வளர்ந்த நாடுகளில் விவசாயிகளுக்குக் கிடைப்பதுபோல, நேரடியாக இந்திய விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.
இன்று, வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் கோதுமை 1,700 ரூபாய்க்கு விற்கிறது. நெல், 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. ஆனால், அரசு கோதுமையை 1,400 ரூபாய்க்கும், நெல்லை 1,360 ரூபாய்க்கும்தான் கொள்முதல் செய்கிறது. இதில் அரசு மானியம் எங்கிருந்து வந்தது? சொல்லப் போனால், விவசாயிகள்தான் அரசுக்கு மானியம் கொடுத்து வருகிறார்கள்.
ஆக, விவசாயிகளை ஒழித்து, கொள்ளை அடிக்க ஏதுவாக பாலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மத்திய அரசு. இதன் மூலம் இந்திய விவசாயம் அழிவின் விளிம்புக்குத் துரத்தப்படும்; வேலைகள் பறிபோகும்; 82 கோடி பிச்சைப் பாத்திரங்கள், 100 கோடிக்கும மேலாக வளரும். ஆம், இதுதான் நிதர்சனம். ஒரு சில பன்னாட்டு கம்பெனிகள் பணத்தில் கொழுப்பதற்காக... 70, 80 கோடி மக்களின் ஜீவாதாரமும்... இந்தியாவின் இறையாண்மையும் காவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கெனவே, அமெரிக்காவில் இருந்து கோதுமை மூலம் வந்த சீதனங்கள்தான்... பார்த்தீனியம் என்ற விஷச் செடி, வேலி கருவேல் முள் இவையெல்லாம். இந்த பாலி ஒப்பந்தம் மூலமாக, இன்னும் எத்தனை விஷச் செடிகள் வரவிருக்கின்றனவோ தெரியவில்லை.
மொத்தத்தில்... பாலி ஒப்பந்தம், விவசாயி களைப் பொருத்தவரை பாழாய்ப்போன ஒப்பந்தமே!

-தூரன் நம்பி
நன்றி: பசுமை விகடன், 10-01-2014