வெள்ளி, அக்டோபர் 05, 2012

இடிந்தகரையில் இருந்து ஒரு பெண் குரல்..!

அனுப்புதல்

இடிந்தகரை பெண்கள்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை
திருநெல்வேலி மாவட்டம்

அன்புள்ள சகோதரி,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இது நாங்கள் எழுதும் நான்காவது கடிதம். இந்த முறை உங்களுக்குச் சொல்ல எங்களிடம் அதிக செய்திகள் இல்லை.

நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஆம்! செப்டம்பர் 10ம் தேதி நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆனால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்து இந்திய அணுசக்திக் கழகம் தெரிவிக்கும் முரண்பட்ட தகவல்கள், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்கள் இவற்றுக்கு நடுவே எங்களுடைய வாழ்க்கை அந்தரத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.

அக்டோபர் 8ம் தேதி, நாங்கள் அனைவரும் கடற்கரைக்குச் சென்று வெயிலிலும் கடல் அலைகளுக்கு மத்தியிலும் போராடப்போகிறோம். எங்களுக்கு அழிவுக்கு இட்டுச்செல்லும் கூடங்குளம் அணுமின் நிலையத்தையொட்டிய கடல் பகுதியில் படகுகளில் சென்று ஆண்கள் முற்றுகையிட்டுப் போராடவிருக்கின்றனர். இவற்றுக்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில், செப்டம்பர் 13 அன்று இறந்த சகாயத்தின் 4 குழந்தைகளும், சேவியரம்மாவின் வயதான தாயும், அவரது குழந்தைகளும், செல்வியின் மகனும் கண்ணீருடன் அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அக்டோபர் 8 அன்றும்கூட எங்களுடைய அமைதியான போராட்டத்தைக் குலைக்க அடக்குமுறை ஏவப்படும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். ஆனால், நாங்கள் ஏன் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். எங்களுடைய கேள்விகளுக்கும் அச்சங்களுக்கும் இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஜனநாயக முறையில் எங்களுடன் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. உங்கள் பகுதியில் நச்சு பரப்பும் அமைப்பொன்றை நிறுவ நீங்கள் அனுமதிப்பீர்களா? கதிர்வீச்சுக்கு உங்கள் குழந்தைகளை இரையாக விடுவீர்களா? எங்கள் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் நம்பியிருக்கும் கடல் நீர் மாசுபடுவது பாதுகாப்பானதுதானா? எங்கள் கேள்விகள் இந்த நொடி வரை விடையளிக்கப்படாமலும், செவிமடுக்கப்படாமலும் இருபதை என்ணி நாங்கள் கோபமுற்று இருக்கிறோம்.

ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம். இப்போதும்கூட, இந்த நிலைமையிலும்கூட ஒரு பேச்சுவார்த்தையோ, கலந்தாலோசனையோ நிகழக்கூடும் என்று நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறோம். நீங்கள் இருக்குமிடம், பதவி எதுவாயினும், உங்கள் அதிகாரம் சக்தி அனைத்தையும் அளித்து நீங்கள் எங்களுக்கு உதவவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து 8ம் தேதி உங்கள் கண்கள் எங்களை நோக்கி இருக்கட்டும். தமிழக முதல்வருக்கும், தொடர்புடைய மற்றவர்களுக்கும் தயவு செய்து எழுதுங்கள். காவல்துறையைக் கொண்டு எங்களை பயமுறுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுங்கள். நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. ஆனால், இந்த வேண்டுகோள் எந்தளவுக்குத் தேவை என்பதை நீங்களும் அவர்களும் உணரவேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். அவர்களுடைய தைரியத்தை அவ்வாறு காண்பிப்பதற்கு பதில் எங்களை நோக்கி வரச்சொல்லி அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். சட்டத்தை மீறுவதோ, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. எங்களுக்குத் தீராத இன்னலைத் தரும் ஒன்றை நோக்கிய அமைதியான பயணமாகவே எங்கள் போராட்டம் இருக்கும். உயர் அதிகாரிகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.

தயவுசெய்து அவர்களுக்குச் சொல்லுங்கள். இன்னும் 72 மணி நேரம் இருக்கிறது. இப்போது கூட எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க அவர்களுக்கு நேரம் இருக்கிறது. 

தயவுசெய்து சிறையில் இருக்கும் எங்கள் சகோதரிகளை விடுதலை செய்யக் கோருங்கள். ஆண்கள் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்படிக் கூறுங்கள். இதையெல்லாம் கோருவது சட்டத்துக்குப் புறம்பானதா என்ன?

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு எங்களின் குரலாய் இருங்கள்!

நன்றி

இடிந்தகரையிலிருந்து...
சகோதரிகள்
அக்டோபர் 5, 2012
( எஸ்.அனிதாவிடம் 4.10.2012 அன்று கூறியபடி)

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மக்கள் போராட்டம் என்றும் தோற்றதில்லை, மக்களின் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்படும் எதுவும் வாந்தியாக வந்துவிடும் என்பதில் ஐயமில்லை, கூடங்குளம் மட்டுமல்ல கல்பாக்கம் உட்பட அனைத்து அணு உலைகளுக்கு எதிராக போராட்டங்களை வலுவேற்றினால் மட்டுமே வெற்றியை நோக்கி மக்கள் நகரக் கூடும் ..

பெயரில்லா சொன்னது…

அன்புச் சகோதரிக்கு,

உனது முட்டாள்தனத்தை நினைத்தால் எனக்கு மிகவும் ஆற்றாமையாக உள்ளது. ஏனிப்படி நீங்கள் முட்டாள்தனம் என்ற பெருங்குழியில் விழுந்து புரண்டு கொண்டு எல்லோரும் உன் மேலும் உன்னைச் சார்ந்தவர்கள் மேலும் பரிதாபப்படவேண்டுமென்று நடித்துத் தொலைக்கிறீர்கள். உனது சகோதரன் என்ற முறையில் தான் உன்னை இப்படி உரிமையுடன் கடிந்து கொள்கிறேன்.

கூடங்குளத்தை மூட வேண்டும் என்று சொல்லிவிட்ட பிறகு என்ன எழவுக்கு கலந்து பேச வேண்டுமென்று ஒப்பாரி வைக்கிறீர்கள் என்று புரியவில்லை. அச்சத்தைப் போக்கவேண்டும் என்றால் அச்சம் போவதற்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டுமே....தமிழில் பழமொழி ஒன்று சொல்வார்கள் ..." தூங்குகிறவனை எழுப்பி விடலாம்...ஆனால் தூங்குகிரமாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது" - அது மாதிரி இந்த அச்சம் என்பது நீங்கள் சொல்கிற ஒரு மாய வார்த்தை. அந்த அச்சத்தைப் போக்குவதற்கு எவராலும் முடியாது. அந்த அச்சம் போக வேண்டும் என்று நீங்கள் யாரும் விரும்பவும் இல்லை.

உங்களுக்கு ஒரே குறிக்கோள் என்னவென்றால் உங்கள் எல்லைக்குள் நீங்கள் வேண்டாம் என்று சொல்கிற ஒரு பொருள் நுழையக்கூடாது. கூடிப்பேசி ஓட்டுப் போடும் கூட்டம் பண்ணுகிற ஜனநாயக வன்முறை இது. இதற்க்கு ஒட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளும் கூஜா தூக்குவதால்தான் உங்கள் போராட்டம் ஜாம் ஜாமென நடந்து கொண்டிருக்கிறது. ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளை ஒரு நாளைய அடியில் எம்.ஜி .ஆர் காலத்திலேய அடக்கியவர்கள் உங்கள் போராட்டங்களை வாய் மூடிப் பார்த்துக் கொண்டிருப்பது இந்தப் பாழாய்ப்போன சிறுபான்மை அரசியல் ஓட்டுப் பொறுக்கித்தனம் தான்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரப்போகிறது....அந்த தீர்ப்பு எப்படி இருக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு நல்லதொரு இந்தியக்குடிமகனாக , குடிமகளாக இருக்கப் பாருங்கள். மறுபடியும் அந்த உதயகுமார் பேர்வழியின் பேச்சைக்கேட்டுகொண்டு நாட்டை நாசமாக்காதீர்கள்.

போராட்டம் நடத்துவதற்கு இதை விட முக்கியமான நிறைய காரணங்கள இருக்கின்றன. அவற்றுக்காகப் போராடுங்கள். சிறுபான்மை ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஆணவப்போக்குடன் அணு உலை வேண்டாம்...ஆகாஷ் ஏவுகணை வேண்டாம்...அணுசக்தி கமிஷன் வேண்டாம்... என்ற வெற்றுக்கூச்சல் போராட்டங்களைக் கைவிடுங்கள்.

கடைசியாக ஒன்று ...சுந்தரராஜ் என்ற வக்கீல் என்னை பெயர் போட்டு பின்னூட்டம் போடச்சொன்னார்... ரிசர்வ் செய்கிற கம்பார்ட்மேண்டுக்குத்தான் பெயர் வயசு எல்லாம் ...என்னை பொறுத்தவரை இங்கு வருவது ஜெனரல் கம்பார்ட்மென்ட் மாதிரி தான்......சாரி

பெயரில்லா சொன்னது…

இப்பவும் இலங்கையைச் சேர்ந்த திரு வைக்கோ என்பவர் சமீப காலமாக உங்களின் ஜீவசமாதிப் போராட்டங்களில் கலந்து கொண்டு பெரும் ஆதரவு தருவதாகக் கேள்விப்பட்டேன்... அந்த இலங்கைக்காரர் ஒரு ராசியில்லாத மனுஷன்...அவர் கால் வைத்த இடம் விளங்கியதில்லை.....பாத்து சூதனமா நடந்துக்குங்க...

Tamil News Service சொன்னது…

நெஞ்சம் கனக்கிறது.

ஆட்சியாளர்கள் காதில் விழுமா?

பெயரில்லா சொன்னது…

அமெரிக்க சதி
அமெரிக்க பணம்
கிறிஸ்துவம்
மீனவ சமுதாயம்
மணல்
தேசத்துரோகம்
அறிவிலிகள்
பெண்கள் + குழந்தைகள் கேடயம்
உலக மின்வெட்டு நிவாரணி

இப்படி பட்டியல் தொடர்ந்து கொண்டே போகிறது...இதெல்லாம் தாண்டி இந்த போராட்டம் தொடர்கின்றது...

இம்மாமக்களுக்கு என் ராயல் சல்யுட்...


கபிலன் சொன்னது…

சுத்தமாக தேவையில்லாத பயம். அந்த அளவுக்கு நம்ம டுபாக்கூர் உதயகுமார் பொய் புரட்டுகளை அள்ளி விட்டு பயம்புறுத்தி இருக்கார். உதயகுமார் அடிக்கும் சரக்கிற்கு இடிந்தகரை மக்கள் ஊறுகாயாகிப் போவது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இனியாவது உண்மையைப் புரிந்து அணு உலையை திறக்க ஒத்துழைப்பு தாருங்கள். இது என் பணிவான வேண்டுகோள் !

purushothaman.p சொன்னது…

கபிலன் நீங்க ஏன் உங்க வீட்டில் கூடங்குளத்திலிருந்து ஒரு குடும்பத்தை குடியேற்றிவிட்டு நீங்கள் கூடங்குளத்தில் போய் குடியேறிவிடக்கூடாது, கூடங்குளம் போய் அணு உலையோட மூடியிலே கூட குடியேறி நீங்கள் குடும்பம் நடத்தலாமே... நோ அப்ஜெக்சன்ஸ்

கருத்துரையிடுக