புதன், செப்டம்பர் 14, 2011

வண்ணத்துப்பூச்சி - நிறங்களைக் கையாளும் சூப்பர் ஜீன்கள்

"ஒரு வனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்" என்பார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். சிறு பூச்சிகளும், வண்டுகளும் வனத்தின் கணையம்,கல்லீரல், மண்ணீரல் என எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் என்பது வனவியலாளர் உல்லாஸ் கரந்தின் கருத்து. வண்ணத்துப்பூச்சிகளின் பிரதான வேலை அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது என்ற போதும், சிறு உயிரிகள், பறவைகளின் பிரதான உணவாகவும் திகழ்கிறது. இவை உணவாக்கப்படுவதும், படாமல் போவதும் அதன் இறகுகளில் பூசியிருக்கும் வண்ணங்களால் தான் என்ற உண்மை இப்போதுதான் அறிவியல் உலகிற்கே தெரியவந்துள்ளது. இவை தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டவை என்ற உண்மை அழகியலாளர் முதல் அறிவியலாளர் வரை புருவத்தை நிமிர்த்தக்கூடிய செய்தியாக உள்ளது. மாறும் வண்ணம் தொடர்பான மர்மம் தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றாற் போல் வண்ணத்தை மாற்றிக் கொள்வதும், பின் இயல்பு நிறத்திற்குத் திரும்புவதையும் ,விஞ்ஞானிகள் கண்டறிந்து ஆச்சரியமுறுகின்றனர். இந்த ஆய்வு ஐரோப்பிய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மரபணு தொடர்பான நீண்ட ஆய்வுகளை நடத்திய வேல்ஸ்,பேட்ஸ், டார்வின் போன்றோர் கூட இது தொடர்பான ஐயங்களைக் கொண்டிருந்தனர். ஒரு நாள், சில பறவைகள் ,சில வண்ணத்துப்பூச்சிகளை உணவாகக் கொள்வதைக் கண்டனர். அடுத்த நாள் அதே வகை வண்ணத்துப் பூச்சிகள் வேறு நிறத்தில் இருப்பதையும், பறவைகள் அவற்றை வெறுத்து விட்டதையும் பார்த்து, இது ஏதோ பறவைகளின் உணவுத் தேர்வு தொடர்பானது என விட்டு விட்டனர். அதே சமயம்,இவ்வாறு பறவைகள் பூச்சிகளை சாப்பிடாமல் ஒதுக்குவது "மனிதக் கண்களுக்குத் தெரியாத மாற்றம் பறவைகளை அறுவறுக்கச் செய்கிறது" என ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறார் வேல்ஸ். இங்கிலாந்து பல்கலைக்கழகமும், பாரீஸ் பல்கலைக்கழகமும் இணைந்து முதன் முதலாக நீண்ட, ஆழமான , வண்ணத்துப்பூச்சிகளின் மாறும் வண்ணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் உத்தியாக இந்த வண்ண மாறுதலை அவை மேற்கொள்கின்றன எனக் கண்டறிந்தனர். இந்த ஆய்விற்காக ,இவர்கள் அமேசான் வகை வண்ணத்துப்பூச்சியான "ஹெலிகோனியஸ் நுமட்டா" என்ற பூச்சிகளைத் தேர்ந்தெடுத்தனர். மிக நீண்ட, அதிக செலவு பிடித்த இந்த ஆய்வில் பல வகை வண்ணத்துப்பூச்சிகளும் உட்படுத்தப்பட்டன.

மழைக் காடுகளில் மட்டுமே வாழும் நுமட்டா வகை வண்ணத்துப் பூச்சிகளே தங்களை இவ்வாறான நிற மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் என்ற தங்கள் கருத்தாக்கங்களை ,வெப்ப மண்டல வகையினங்களும் மாறுதலுக்கு உள்ளாகி ,தகர்த்தெறிந்தன. ஒரே இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் ,தங்கள் இறகுகளில் பல வித வண்ணங்களைக் கொண்டிருந்தன.சில, பறவைகளுக்கு உணவானதும், தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொண்ட மற்றவை, அவற்றின் முன்பே பறந்தாலும் ,உணவாகமல் இருப்பதையும் கண்டனர். இந்தியாவில் அதிகம் காணப்படும் மோனார்க் வகை பூச்சிகளின் நிறத்தை ஒத்த சில வகை நுமட்டோக்களே இவ்வாறான நிறமாற்றத்தைக் கொண்டன. இந்த மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சிகளே அதிவேகமாக, அதிக தொலைவு, கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும்.

குரோமோசோம்களின் நிலைப்பாடே இவ்வாறான நிற மாற்றத்திற்கு முக்கிய காரணம் .பொதுவாக வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களும், அவைகளின் நிற மாறுபாடுகளும், குரோமோசோம்களில் அடங்கிய குறிப்பிட்ட ஜீன் தொகுப்பால் உருவாக்கப்படுகிறது. இந்த வகை ஜீனை விஞ்ஞானிகள் "சூப்பர் ஜீன்" என்றழைக் கின்றனர். இந்தத் தொகுப்பு ஜீன்கள் வண்ணத்துப்பூச்சிகளின் தற்காப்புக்காவும், உணவு களைத் தக்க வைக்கவும், பிற இனத்தோடு இணை சேரவும் உதவுகிறது. இந்த வகை மாற்றங்கள் நத்தை இனங்களிலும் ஏற்படுகிறது. சில நத்தைகள், ரோஜாப் பூக்களின் ரோஸ் நிறத்தைக் கண்டவுடன் இந்நிறத்தை ஒத்து தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. இவ்வாறான நிற மாற்றம், இவை பிற பறவைகளால் அடையாளம் காண முடியாத சூழலை உருவாக்கும். அதே சமயம், நத்தைகள் இருப்பதை அறியாத தேனீக்களும், பிற பூச்சிகளும் பூவை அணுகும் போது அவை கொல்லப்படுகின்றன. இவ்வாறான சூப்பர் ஜீன்கள் இயற்கையின் மாற்றத்தில் பெரும் பங்காற்றுகின்றன என்கிறார் டாக்டர். ஃபெப்பர். இவர் ஸ்மித்சோனியன் ஆராய்ச்சி மையத்தில் பூச்சியியல் தொடர்பான ஆய்வாளர்.

பாரீஸை சேர்ந்த டாக்டர் மாத்யூஷோரன், "நாங்கள் இவ்வாறான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ந்து விட்டோம்" என்றார். பூச்சிகள் உலகில் நிகழும் செயற்கையான உருமாற்றங்களை இந்த ஆய்வு அறிவியல் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டது. இனி இது தொடர்பான,தேவையான ஆய்வுகளும் நடத்தப்படும் என்றார் பேராசிரியர் ரிச்சர்ட் பிரின்ஸ். இது இயற்கையின் தேர்வு --காலா காலத்திற்கும் நடந்து கொண்டே இருக்கும். நமக்குத் தேவையான அறிவியல் உபகரணங்களும், குறிப்புகளும் இப்போதுதான் கிடைத்துள்ளது. எனவே நாம் இப்போது தான் அறிந்துள்ளோம் என்றார். இது தொடர்பான ஆய்வுகள் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டனில் துவங்கியது. குரோமோசோம்களின் தரவரிசை, மாறுபாடுகளை உண்டாக்கும் சூப்பர் ஜீன்களை உருவாக்குவதுதான். இது இயற்கையின் மாபெரும் நிகழ்வு. மேத்யூஷோரன், கிரிஸ் ஜிக்கிள் என்ற இரு விஞ்ஞானிகள் வண்ணத்துப்பூச்சிகளின் உணவுத் தேடலில் குரோமோசோம்களின் பங்களிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் N,YP,SB,H குரோமோசோம்களின் நிலைப்பாடு, பெரும் பங்காற்றுவதைக் கண்டறிந்தனர். தவிர இவை உணவுத் தேடல், பொறாமை கொள்ளல் என்ற உணர்வுகளையும் தூண்டுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

விஷமுள்ள வண்ணத்துப்பூச்சிகள், பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவை. இவை அதிகம் வண்ணங்களை மாற்றிக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, துர்நாற்றத்தை தங்கள் மலக்குழாய் வழியே பீய்ச்சியடித்து எதிரிகளை நிலைகுலையச் செய்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் சிவப்பு நிற உருவாக்கத்தை "ஆப்டிக்ஸ்" என்ற ஜீன் வழங்குகிறது. இது ஆபத்தை சுட்டிக் காட்டுவதோடல்லாமல், பிற உயிரிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞையாக, தான் காதலில் உள்ளதை, அதிக காமமுற்று உள்ளதை, நோய்வாய்ப்பட்டிருப்பதை, போன்றவைகளின் குறிப்பேற்று அறிகுறிகளாகவும் பயன்படுத்துகிறது. இந்தச் சிவப்பு நிறம், பொதுவாக அவைகளின் கண்களில் அதிகம் உருவாக்கும். ஓம்மோ குரோம் நிறமிகள் இதனுடன் சேர்ந்து இறகுகளின் நிறமியை உருவாக்கும். இந்த வகை குரோமோசோம்களின் கட்டமைப்புகள் பிராந்தியம் சார்ந்தும், சூழ்நிலைப் பொறுத்தும் வெகு எளிதாகச் செயல்படுகின்றன.

-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா

நன்றி: உயிரோசை இணையம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக