புதன், பிப்ரவரி 09, 2011

நிறம் இழக்கும் சாயத் தொழில்!

பெருவாரியான மக்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி சட்டென தொற்றிக் கொள்ளும் பரபரப்பைக் கூட்டும் நீதிமன்றத் தீர்ப்புகள், அண்மைக் காலமாய் அதிகரித்துள்ளன. அப்படியான தீர்ப்புதான் திருப்பூர் சாய, சலவை ஆலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சாயம் குடித்து சாயம் குடித்து நச்சுச்சாம்பலாய் நலிந்துபோன மண்ணில் நம்பிக்கைத்துளிராய் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர் கொள்கிறார்கள் நொய்யல் ஆற்றங்கரையோரமுள்ள ஆயக்கட்டு விவசாயிகள்.

பனியன் தொழிலைச் சார்ந்து வாழும் சுமார் 4 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தின் மீது இறங்கிய இடியாய், தீர்ப்பு கண்டு கலங்குகிறார்கள் தொழிலாளர்கள்.

நூல் விலை உயர்வால், இந்திய ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் வேளையில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்களுக்கு முதுகெலும்பாய் உள்ள திருப்பூர் சாய ஆலைகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்கள் ஏற்றுமதியாளர்கள்.

எதிர்பார்ப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் விவசாயம், தொழில், சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்று அம்சங்களையும் கவனத்தில் கொண்டு திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்துப் பொது சுத்திகரிப்பு, தனி சுத்திகரிப்பு நிலையங்கள், சாயப்பட்டறைகளை உடனடியாக மூட வேண்டும். ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் சாயக்கழிவுகளைக் கழித்துக்கட்டும் முழுமையான சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் இன்னும் வளர்ந்திடாத நிலையில், திருப்பூரில் தற்போது ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு முறை பின்பற்றப்படுகிறது.

இத்தொழில்நுட்பம் நான்கு தளங்களில் இயங்குகிறது.

பயோலாஜிகல்: சேகரிப்புத் தொட்டியில் சாயக்கழிவு நீருடன் மாட்டுச் சாணத்தையும், காற்றையும் சேர்த்துக் கழிவுநீரைச் சுத்திகரித்தல்.

பயோ-ரியாக்டிபயர்: கழிவுநீரைக் குழாய் மூலமாக மெமரைன் கலக்கப்பட்ட தொட்டியில் நிரப்பி வேதிவினையாக்கத்தால் சுத்திகரித்தல்.

குளோரினேஷன்: கழிவுநீரில் குளோரின் வாயுவைச் செலுத்தி முதல் கட்ட சுத்திகரிப்பில் நீரில் உள்ள நிறத்தையும், நாற்றத்தையும் கழிவுநீரின் கடினத்தன்மையையும் நீக்குதல்.

ஆர்.ஒ.சிஸ்டம் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்): முதல் கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை 40 விழுக்காடு நல்ல நீராக மாற்றி, இரண்டாம் கட்டமாக 40 விழுக்காடு நீரை நல்ல நீராக மாற்றுதல்.

எவாப்ரேட்டர் (ஆவியாக்கல்): மீதமுள்ள 20 விழுக்காடு கழிவு நீரிலுள்ள உப்புத்தன்மையையும், ரசாயன காரத்தன்மையும் நீராவியாக மாற்றும் இறுதிக்கட்ட சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில்தான் சிக்கலும், சிரமமும் ஏற்படுகிறது. எவாப்ரேட்டரில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் தான் உப்புத்தன்மையை முழுவதுமாய் நீக்கும் ஜீரோ டிஸ்சார்ஜ்-இல் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் செய்துவிடுகிறது. அதிகச் செலவு பிடித்தும் இத்தொழில் நுட்பம் 20 விழுக்காடு ரசாயனத் திடக்கழிவை கழித்துக் கட்டமுடியாமல் திணறுகிறது. இவை சேமிக்கும் ரசாயனத் திடக்கழிவை சுத்திகரிப்பு நிறுவனங்கள் டன் கணக்கில் கொட்டிக்குவித்துள்ளன.

உற்பத்தியைப் பெருக்க மாதம் ஒருமுறையேனும் புதுரகக் கருவிகளை அறிமுகப்படுத்தும் பனியன் ஏற்றுமதியாளர்கள் நிகழ்த்தும் கண்காட்சிகளில் சாயக்கழிவை கழித்துக்கட்டும் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டறிய எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. ஆயத்த ஆடைகளின் உற்பத்தியைப் பெருக்க நவீன இயந்திரங்களை வாங்கி லாபத்தைக் கூட்ட, தொழிலாளர்களை வெளியேற்றி தமது வாழ்வை மட்டும் வளமாக்கிக் கொண்டார்கள்.

தேங்கிக்கிடக்கும் துணிகளுக்குச் சாயமேற்றும் அவசரத்தில் சில சாயப்பட்டறைகள் இரவு நேரத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள் என்பதுதான் விவசாயிகளின் குற்றச்சாட்டு.


பொறுப்பற்றுத் திறந்துவிடும் ரசாயனக் கழிவுநீர் விளைநிலம், நீராதாரம், நீர்சார்ந்து இயற்கை உருவாக்கி வைத்துள்ள உயிரினங்களின் வாழ்க்கையென்று ஒரு தொடர் சங்கிலியான சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமாக உள்ளது என்பதுதான், வேளாண் மக்களின் உள்ளக்குமுறல்.

நல்லாற்று ஓடையிலும், நொய்யல் ஆற்றின் கரையோரமும் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட சாய, சலவை ஆலைகளை 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் நிறுவும் ஒரு சட்டவிதியைப் பிறப்பித்திருந்தால் இத்தகைய பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திருக்கலாம்.

உயர் நீதிமன்றம் தொடர்ந்து நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வழிகாட்டி வந்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமது பொறுப்பை நிறைவேற்றியிருந்தால் இந்தத் திடீர் நெருக்கடி நிகழ்ந்திருக்காது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து நீதிமன்ற உத்தரவு வந்திருக்குமேயானால் தமிழகப் பகுதிகளில் உள்ள பல மாவட்டங்கள் பாலைவனமாய் மாறி, நொய்யலைப் போலவே பவானி ஆறும் உருவமும், உயிரும் சிதைந்து எதன் பொருட்டும் மீட்க முடியாதபடி பாழ்பட்டுப்போயிருக்கும்.

தேசிய சுற்றுப்புறச் சூழல் நீர் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் நொய்யல் ஆற்றின் வெவ்வேறு இடங்களில் ஆற்றுநீரை ஆய்வுக்கு எடுத்துப் பரிசோதித்துப் பார்க்கையில் நீரின் உப்புத் தன்மையும், ரசாயன நெடியும் அளவுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது.

திருப்பூரில் உள்ள 739 சாய, சலவை ஆலைகள் நாள் ஒன்றுக்கு 6.5 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் வெளியேறும் கழிவு நீராக தினமும் 4.9 கோடி லிட்டரும், பாதாள சாக்கடையில் 3.5 கோடி லிட்டர் கழிவு நீரும் நொய்யலில் கலக்கிறது.

கோவை மாநகராட்சிப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் பலகோடி லிட்டர் சாயக்கழிவு நீரும், சாக்கடைக் கழிவு நீரும் எந்தச் சுத்திகரிப்பு விதிகளுக்கும் உள்படாமல்தான் நொய்யல் ஆற்றில் கொட்டப்படுகிறது.

இந்தியாவில் 2,100 டி.டி.எஸ். (டோட்டல் டிசால்வ்டு சாலிட்) அளவுள்ள தண்ணீர் வேளாண் தொழிலுக்கு ஏற்புடையதாக அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தண்ணீரில் ரசாயனங்கள் படியும்போது நீரின் இயல்புத் தன்மையும், உப்புத் தன்மையும் 4,700 முதல் 5,500 வரை உயர்ந்து விடுகிறது. இந்தத் தண்ணீரை முறையாகச் சுத்திகரிக்காமல் நொய்யலில் கலக்கும் போதுதான் விளைநிலங்கள் பாழாகி, மண்ணின் நுண்ணுயிர்களும் செத்துவிடுகின்றன. நொய்யல் ஆற்றின் கரையோரம் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உவர்ப்பு நிலமாய் உருமாறிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிடுகிறார்கள்.

வேளாண் மக்களின் கோபக் குரலில் இருந்துதான், இயற்கைக்கு ஊறு விளைவிக்காத தொழில் வளர்ச்சியே நீடித்த வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் ஜவுளித்தொழிலை நம்பியுள்ள மாவட்டங்கள் ஆகும். லட்சக்கணக்கான உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளது. வெறுமனே தொழில் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு சாய, சலவை ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு என்று பலரும் பல கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

குறிப்பாக, அரசியல்வாதிகள் சாயக்கழிவுகளைக் கடலில் கொண்டுபோய் கலப்பதுதான் ஒரே தீர்வு என்று முழங்குகிறார்கள்.

இப்போது மட்டும் எல்லாக் கழிவுகளும் எங்கே கலக்கின்றனவாம்? ஆற்றில் கொட்டும் கழிவுகள் அனைத்தும் கடலில் தானே கலக்கின்றன. எல்லாக் கழிவுகளின் கடைசிப் புகலிடமாய் கடலே விளங்குகிறது. கடலை ஒரு பெரிய கழிப்பறையாகப் பாவிக்கும் மனோபாவம் நம்மில் பலருக்கும் உள்ளது. இதற்குச் சுற்றுச்சூழல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

கடல் என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உயிர்ச்சூழல் மண்டலம். கடலிலும், கடலோரங்களிலும் ஏற்படுத்தும் மாசு, கணக்கற்ற நஷ்டங்களை நமக்கு ஏற்படுத்தும். "நீ என்ன கொடுக்கிறாயோ அது உனக்குக் கிடைக்கும்' என்ற ரமணரின் வார்த்தைகளை இயற்கையோடும் பொருத்திக் கொள்ளலாம்.

சுத்திகரித்து உப்புத் தன்மையற்ற நீரைத்தான் கடலில் கலக்கச் சொன்னோம் என்று பதிலுரைத்தாலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஏன் கடலில் கலக்க வேண்டும். திருப்பூரில் நான்காம், ஐந்தாம் குடிநீர்த் திட்டங்களுக்குக் கால்கோள்விழா நடத்தும் அளவுக்கு திருப்பூரின் புறநகர்ப் பகுதிகளில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவும் சூழலில் சுத்திகரிக்கப்பட்ட நல்லநீரை சாய, சலவை ஆலைகளே திரும்பவும் பயன்படுத்தலாமே?

உயிர்களின் உயிராய் உள்ள நீரை ஊதாரித்தனமாக விரயம் செய்யும் உரிமை எவருக்குமில்லை. தற்போது நிலவும் நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம்.

அதிகச் செலவு பிடித்தும், முழுமையாகச் சுத்திகரிப்பு செய்ய முடியாத தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, புதிய தொழில்நுட்பத்தை அல்லது ஆர்.ஒ. தொழில்நுட்பத்துக்குப் பிறகு எவாப்ரேட்டர் மற்றும் கிரிஸ்டிலைசர் பிரிவுகளில் ஏற்படும் குளறுபடிகளைக் கண்டறிந்து களைய வேண்டிய பொறுப்பு ரூ.12 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியைப் பெறும் மத்திய அரசுக்கு உண்டு.

வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகளின் தலையில் கொட்டிய குப்பைத் தொழில்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவியுள்ளன. இத்தொழிலால் நெடுங்காலமாக உயிர்களின் ஆதாரமாக இருந்த நீர் நிலைகள் நிர்மூலமாகி வருகின்றன. வருங்காலத் தலைமுறையின் நிலையான வாழ்வை நெஞ்சில் தேக்கி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மத்திய, மாநில அரசுகளே மேற்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வுக்கும், நீடித்த வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் ஆகிய அம்சங்களையும் காப்பாற்றும்.
-கோவை. சதாசிவம்

2 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

முக்கியமான கட்டுரை இது. வாழ்த்துகள்.

கண்ணகி சொன்னது…

இத்தனை வருடங்கள் கழித்து எடுக்கப்பட்ட சாயப்பட்டறைகள் மூடல் நடவடிக்கைக்கு அலறுகிறார்கள்..பாதிக்கப்பட்ட விவசாயி எத்தனை நொந்திருப்பார்...நீர ஆதாரங்கள் பாழானபிற்கு பாலைவனம்தான் நமது மாவட்டங்கள்...அப்போதுதான் தெரியும் உண்மை நிலை...நல்ல கட்டுரை...

கருத்துரையிடுக