சனி, பிப்ரவரி 26, 2011

ஆமை ஆண்டு 2011

அது என் பள்ளிப் பருவம். என் நண்பனைப் பார்க்க வீரபாண்டி போய்விட்டுத் திரும்பும்போது, முத்துதேவன்பட்டியில் அடைமழை பெய்யத் துவங்கியது. இனிமேலும் சைக்கிளில் செல்ல முடியாத நிலை .அருகிலிருந்த காளி கோவிலில் ஒதுங்கினேன். காலுக்கடியில் அரித்துச் செல்லும் மழை நீர். அதில், அடித்து வந்தது ஒரு ஆமைக் குஞ்சு. நீரின் போக்கிற்கு எதிராகப் போராடி, சாலையைக் கடக்க முனைந்தது. நடு விரல் நீளமே கொண்ட அந்த ஆமை குஞ்சு என் அப்போதைய ஆசைப் பொருள் ஆனது. பார்ப்பதற்கு சிறிய பொம்மை போல், காபி பொடி வர்ணத்தில் இருந்த அதன் உடல் அமைப்பு, மேல் அமைந்த ஓடு, குட்டி குட்டியான கால்கள், நிமிடத்திற்கு ஒரு முறை தலையைச் சுருக்கி ஓட்டினுள் பதுக்கி ,பின் வெளிநீட்டும் பாங்கு, வெளியில் "ஜோ" என கொட்டும் மழை , இடையிடையே வீசும் குளிர் காற்று , யாரும் இல்லாத ஏகாந்தமான சூழல் என, என் மனதினுள் நினைத்தவுடன், இன்றும் பட்டென வெளிச்சமிடும் பிரகாசமான நினைவாய் நின்று போனது. மழை விட்ட பிறகு அதை எதிரிலிருந்த ஒரு நன்னீர் கிணற்றில் விட்டுவிட்டேன்.


அது1920 ல் ஜானகி அம்மாள்--- ராசுச் செட்டியார் அவர்களால் வழிப்போக்கர்கள் தண்ணீர் தாகத்தை தீர்த்துக் கொள்ள அமைக்கப்பட்ட கிணறு. இன்று பயன்பாடற்றுப் போய்விட்டது! இன்றும் அந்த ஆமை உயிரோடு இருக்கிறது! என் நண்பர்களுக்கும், திருமணமான புதிதில் என் மனைவிக்கும், என் குழந்தைக்கும் என, என் "25 வருட பொக்கிஷத்தைக்" காட்ட, பலமுறை சென்று அதைப் பார்த்து வருகிறேன். இன்று உள்ளங்கை அளவே வளர்ந்திருக்கிறது. சில பேர் நீ விட்ட அந்த ஆமைதான் என்பதற்கு என்ன சாட்சி? அதுதான் இது என்று எப்படிக் கூறுகிறாய்? என்றெல்லாம் கேள்வி கேட்பதுண்டு. .அதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை, அது தேவையும் இல்லை. நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடையாளம் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு முறை , நான் எட்டிப் பார்க்கும் போதும் , அதுவும் தன் குட்டிக் கழுத்தை வெளியே நீட்டி என்னைப் பார்க்கும் .சின்னச் சின்ன நிகழ்வுதான்! எவ்வளவு சந்தோஷத்தை அள்ளித் தருகிறது.!

ஆமைகள் , இந்த பூமிக் கோளத்தில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக ஜீவித்திருக்கின்றன என ஓர் அறிவியல் ஆய்வு கூறுகிறது. பரிதாபகரமாக இன்றும் ,இவை பற்றிய தவறான பகுத்தறிவற்ற கருத்துக்களே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஒரு வீட்டிற்குள் ஆமை நுழைந்து விட்டால் (இன்று ஊருக்குள் ஆமைகளைப் பார்ப்பதே மிக அரிது),அந்த வீடு ஏதோ ஒரு துக்ககரமான நிகழ்வுக்கு ஆட்படப் போகிறதாய் எண்ணம் இன்றும் நிலவுகிறது. அதே சமயம், கரையோரம் வசிக்கும் மீனவக் குடும்பத்தில் வேறுவிதமாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் வசிக்கும் குடிசைக்குள் நுழைந்து விட்டால், அதிர்ஷ்டம் வந்துவிட்டதாகவும், அது எழுப்பும் கரகரப்பான ஒலி மங்கல ஓசை என்றும் கைகூப்பி வணங்குகிறார்கள். சிறிது களி மண்ணை அதன் ஓட்டின் நடுப்பகுதியில் இட்டு அதில் ஊதுபத்திகளை செருகி வைக்கிறார்கள். அதே நிலையில் அது குடிசையை சுற்றி வரும்போது, புகையால் அவர்கள் வசிப்பிடம் சுத்தமடைகிறது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்நிகழ்வைப் பார்த்த ரோம் விட்டேகர், "பார்க்க வேடிக்கையாக உள்ளது " என்கிறர்ர். இவர் முதன்முதலாக சென்னை சோழ மண்டலத்தில் ஆமைகளுக்கான காப்பகம் அமைத்தவர்.


ஆமைகளின் வாழ்நாள் பற்றிய ஆய்வு இதுவரை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.80 வருடம் வாழ்நத சரியான குறிப்பேடு மட்டும் அமெரிக்காவில் உள்ளது. அவை எப்போது பருவம் எய்கிறது என்பதும் இன்றுவரை புதிராகவே உள்ளது. குறைந்தது 25 வருடங்களாவது ஆகும் என்கிறார் டாக்டர் ராபின்சன். 3--4 வருடங்களுக்கு ஒருமுறை முட்டையிடும் ஆமைகள் குறைந்தது 40---200 முட்டைகள் இடும் . ஏழு இடங்களில் தன் வளைகளை அமைத்து, அதில் முட்டையிட்டு மண்ணைக் கொண்டு மூடிவிடும். இரவில் மட்டுமே முட்டையிடும் பண்பைக் கொண்டதால், இந்நிகழ்வைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஆமைகளில் ,ஆண் ,பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அதன் வளைகள் விளங்குகின்றன. கதகதப்பாக அது இருக்கும்போது உள்ளே இருக்கும் முட்டைகள் கிட்டத்தட்ட பெண்ணாகப் பொரிகின்றன. மிகவும் ஜில்லிட்ட வளைகள், ஆண்களை அதிக விகிதாசாரத்தில் பொரிக்கின்றன. தற்போதைய கணக்குப்படி பெண் ஆமைகளே அதிகம் உள்ளதாகத் தெரிய வருகிறது. வளையின் வெப்பம், எவ்வாறு பாலினத்தை நிர்ணயிக்கிறது என்பது அறிவியலுக்கு விடப்பட்ட சவாலாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். ஆமை வகைகளில் பாதிக்கும் மேல் அழிவின் விளிம்பில் உள்ளன. பூமி சூடேற்றம், சுற்றுச்சூழல் மாசு, கடல் மாசு என எல்லா வகையிலும் தாக்குதல் இதன் மேல் பிரயோகிக்கப்படுகின்றன.

ஆமைகள், நம் "இயற்கைப் பாரம்பரியத்தின் அடையாளம் ." காவியம் ,ஓவியம், கலாச்சாரம் என இவைகளின் பங்களிப்பு இடம்பெறாத அம்சமே இல்லை. "உணவு வலையின் மையப்புள்ளியாக இவை திகழ்கின்றன." என புகழாரம் சூட்டுகிறார் விட்டேகர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கலாச்சார பிரதிபலிப்பாகவும், வளர்ப்புப் பிராணியாக, உணவுக்காக, மருந்திற்காக என பல வகைகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை ஆய்விற்கு எடுத்துக் கொண்ட டினா ஓல்சன் என்ற பல்லுயிர் ஆய்வாளர், கடலுக்கடியில் விளையும் புற்களை இவை உணவாக உண்கின்றன. அவை தொடர்ச்சியாக வெட்டப்படும் போதுதான், புதிதாக தழையும், பெருகும். ஆக, ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் "சார்புக் கொள்கை" சாத்தியமாகிறது. புற்களுக்கு இடையில் வாழும் ஜெல்லி, மீன், நத்தை, கடல்குதிரை, போன்றவைகளுக்குப் புற்களின் இளம் குருத்துக்கள் பருவகால உணவாகப் பயன்படுகிறது. ஆமைகளின் எச்சம், புற்களின் வளர்ச்சிக்கு முக்கியமாகிறது. இவை கடலின் ஆதார சக்தி என்று கூறினால் மிகையாகாது என தன் ஆய்வுக் கட்டுரையை முடிக்கிறார். ஓடை, ஆற்றோரக் கரைகள், குளங்கள், கழிமுகப் பகுதியில் வாழும் ஆமைகள் மாமிச உண்ணிகளின் ,பிரதான உணவாகிறது. ஓல்சன் உலக நாடுகளோடு இணைந்து, இவை பற்றிய விழிப்புணர்வை ஊட்ட முனைந்து வருகிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது, பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர், திருமணம் முடித்த தாய்மார்கள். ஏனோ இந்தியா அவருக்கு இதுவரை எந்த இசைவும் தரவில்லை. இந்நிலையில், பங்களாதேஷ், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

நன்னீர் வாழ் ஆமைகளில், 50 சதவீதம் அழிந்து விட்டதாகவோ அல்லது அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவோ கூறலாம். ஆமை வகைகளில் உள்ள அனைத்து இனங்களும், அமெரிக்கப் பண்ணை ஒன்றில் பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன. இதன் காப்பாளரான ஜான் ரூட்ஸ், உலகின் அனைத்து ஆமைகளிலும், 20 சதவீதம் அழிந்துவிட்டதாகவும், வருடத்திற்கு 2 லட்சம் ஆமைகள் உலகெங்கும் கொல்லப்படுவதாகவும் கூறுகிறார். மேலும் சீனா போன்ற "அனைத்து உயிர் உண்ணும் தேசத்தில்" 4 கண் ஆமைகள் முற்றோடு அழிந்து விட்டன. பிற வகைகள், உணவிற்காக வளர்க்கப்பட்டாலும் அவைகளின் வாழ்விடம் ,ஆரோக்கியமற்றதாகவும், எல்லா பருவத்தினவையும் மானாவாரியாக கொல்லப்படுவதாலும் அதன் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து போனது..நகர் மயமாக்கப்படுவதில் குளம், ஏரி, ஓடை போன்றவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதாலும், அங்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் வருகை அதன் ஈர்த்தலுக்கு சவாலாக இருப்பதாலும், நசுங்கிப் போவது என்பது கண்கூடான உண்மையாகிறது.


ஆமைகள் ஒரு முறை முட்டையிட்டு பழகிய இடத்தை மறப்பதில்லை. அவை பல கிலோ மீட்டர் பயணித்தாலும் பழைய நினைவுகளோடு, முதல் முட்டையிட்ட இடத்திற்குத் திரும்புவது மிகுந்த ஆச்சரியமூட்டும் ஒன்று. இவ்வகையான பண்பு, மனிதர்கள் தவிர்த்து வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள், ஆமைகள் போன்றவைகளிடம் கண்டு நான் வியந்திருக்கிறேன். லெதர் பேக் டர்டிஸ் போன்ற ராட்சச ஆமைகள், பசிபிக் பெருங்கடலில் வசிப்பவை. உணவிற்காகவும், ஓட்டிற்காகவும் பெருமளவு கொல்லப்படுகிறது. இதன் முட்டைகள்,பறவைகள், பிற உயிரினங்கள் தவிர்த்து, மனிதர்களால், அதிகளவு புரதச் சத்து கொண்டவை என விரும்பி உண்ணப்படுகிறது. ஒரு பெண் ஆமையின் ஓட்டுப் பகுதியில் டிரான்ஸ்மீட்டர் கட்டி விடப்பட்டு செயற்கைகோள் மூலம் அதன் பயணம் கண்காணிக்கப்பட்டது. அது தன் முட்டையிடும் பிரதேசமான பாப்புவா நியூ கினியா கடற்கரைக்கு 647 நாட்கள் பயணித்து ,12,744 மைல் தொலைவு கடந்து சரியான இலக்கை அடைந்தது. பெரும் சாதனையாகக் கருதப்படினும் ,வழியெங்கும் சொல்லொணாத துன்பங்களையும், ஆபத்துக்களையும் சந்தித்தவாறே வந்தது. இது ஆமைகளின் தினசரி வாழ்வு எவ்வளவு நெருக்கடியானது என்பதை உலகிற்கு எடுத்துரைத்தது. ஆமைகளின் நுரையீரல் பெரிதாக இருப்பதால் ஒருமுறை கடலின் மேல் பகுதிக்கு வந்து தேவையான ஆக்ஸிஜனை ஒரே முச்சில் உறிஞ்சி, கடலுக்கடியில் பல மணி நேரம் பயணிக்கிறது. இதன் உடலும், தேவையற்ற விஷ வாயுக்களை உறிஞ்சுவது இல்லை. இது இயற்கை அளித்த பரிசு எனலாம். கடலில் மிதக்கும் எண்ணெய்க் கழிவுகளும், கப்பலில் இருந்து வெளியேறும் பிற கழிவுகளுமே இதன் உயிர் விடுத்தலுக்குப் பிரதான காரணம்.

"டர்டில் நின்ஜா " போன்ற கார்ட்டூன் கதாநாயகன் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்துகிறான். தன்னைப் பணயம் வைத்து வீர தீரச் செயல்களில் ஈடுபட்டு ,தீய சக்திகளை ஒழிப்பான். அவன் உயிருக்கு உத்தரவாதமில்லை. நிஜ வாழ்க்கையில், ஆமைகளும் பாதுகாப்பாக இல்லை. மனிதர்கள் அசுர உருவமெடுத்து ,நிஜ நின்ஜாக்களைக் கொன்றொழிக்கிறார்கள். இந்த விதமான போக்கு தவிர்க்கப்படவேண்டும். WWF இந்த ஆண்டை ஆமை ஆண்டாகப் பெயர் சூட்டும் படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆண்டை மட்டும் பெயர் சூட்டிப் பெருமை கொள்வதில் எந்த உபயோகமும் இல்லை. உண்மை உணர்தல் அவசியம். ஏனெனில் இது கதையல்ல .....நிஜம்!

-எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா

kannan233@gmail.com

நன்றி: உயிரோசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக