புதன், ஜனவரி 23, 2013

சிறுதானியங்களைப் புறந்தள்ளிய வணிக அரசியல்! புத்துயிரூட்டும் உணவுத் திருவிழா!!


ரகுச் சோறு, சாமைச் சோறு, குதிரை வாலித் தயிர்ச் சோறு, சோள தோசை, தினைப் பொங்கல், மாப்பிள்ளை சம்பா சாம்பார், பானகம்... எனக் கால ஓட்டத்தில் காணாமல் போன பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தப்போகிறது 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு! 

ஜனவரி 26-ம் தேதி, சென்னை லயோலா கல்லூரியில் 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் தண்ணீர் குறித்த பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கம் நடக்கிறது. காலையில் பழங்குடி மக்களின் பாடல்கள், நடனங்கள், இயற்கை உணவுப் பொருட்கள் கண்காட்சி, நாடகம் என்று களை கட்ட... மாலையில் முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரியத் தானியங்களின் உணவுத் திருவிழாவை நடத்துகின்றனர். 'நல்ல சோறு’ என்ற அமைப்புடன் இணைந்து இதற்கானப் பணிகளை செய்துவருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.
அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சிவராமனிடம் பேசினோம். ''இன்றைய சூழலில் அரிசி, கோதுமை ஆகிய இரண்டும்தான் பிரதான உணவுப் பொருளாக முன்னிறுத்தப்படுகிறது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் ராகி, கம்பு, சோளம் என பல சிறுதானியங்கள் நமது அன்றாட உணவுப் பொருளாக இருந்தது என் பதைப் பலரும் மறந்துவிட்டனர். அந்தத் தானியங்களைப் பயிர்செய்ய அதிக நீர் தேவைப்படாது. ரசாயன உரங்களும் தேவைஇல்லை. அரிசி, கோதுமையைத் தாண்டி இதில் அனைத்து விதமானசத்துக்களும் உள்ளன. ஆனால், அரிசிக்கும் கோதுமைக்கும் பின்னணியில் இருந்த வணிக அரசியல் மற்றும் ஆளுமைத்தன்மை அந்தச் சிறுதானியங்களை முற்றிலும் பின்னுக்குத் தள்ளி ஒழித்து விட்டது. சிறுதானிய வளர்ப்பையும், அதன் அருமைகளையும் நம் மக்கள் மெள்ள மெள்ள மறந்து வருகின்றனர்.

இன்று நம் ஒட்டுமொத்தத் தேசத் துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பவை சர்க்​கரை வியாதி, ரத்தக் கொதிப்பு போன்றவைதான். அரிசி, கோதுமை அதிகம் சாப்பிடுவதுதான் இதுபோன்ற நோய்களுக்கான காரணம் என்று உணவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்கு மாற்று உணவு சிறுதானியங்கள்தான். இதில் உள்ள நார்ச்சத்து பல நோய்களை அண்டவிடாமல் நம்மைக் காப்பாற்றும். மேலும், இப்போதைய சூழலில் விவ சாயிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யப் பரிதவித்து வருகின்றனர். சிறுதானியம் பயிரிட்டால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பாக இருக்கும். மண்ணும் மேம்படும். சிறுதானியங்களின் அருமை, பெருமைகளை மீண்டும் நம் மக்கள் மனதில் ஆழப் பதியவைத்து, அனைவரும் ஆரோக்கியமுடன் வாழ வேண் டும் என்ற நல்ல நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த உணவுத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.

பெரும்பாலும் நம் மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். இந்த தானியங்களைக்கொண்டு சமைக் கும் உணவில் சாம்பார், ரசம் ஊற்றி சாப்பிட முடியுமா? மீன் குழம்பு, சிக்கன் குழம்புக்கு நன்றாக இருக்குமா? பிரியாணி போன்ற உணவு வகைகளை இந்த தானியங்கள்கொண்டு சமைத்தால் ருசியாக இருக்குமா? குழந்தைகள் விரும்பிச் சாப்பி டுவார்களா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்பார்கள். இதற்கு எல்லாம் அந்தத் திருவிழாவில் பதில் கிடைக்கும். உணவு வகைகளைப் பரிமாறும்போதே அதன் செய் முறைகளையும் மக்களுக்கு விளக்கிக் கூறப்போகிறோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானிய உணவுகளில்தான் உண்மையான ருசியும் சத்தும் உள்ளது என்பதை உணர்ந்த திருப்தியோடு செல் லலாம்!'' என்று கூறினார்.

மூதாதையர்களின் வாழ்க்கை முறையையும் ஆரோக்கியத்தின் ரகசியத்தையும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு!
- தி.கோபிவிஜய்

நன்றி: ஜூனியர் விகடன், 27.01.2013

1 கருத்து:

guna சொன்னது…

உணவு வகைகளைப் பரிமாறும்போதே அதன் செய் முறைகளையும் மக்களுக்கு விளக்கிக் கூறப்போகிறோம். pls publish this blog also

கருத்துரையிடுக