புதன், மே 25, 2011

''ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு... ஃபினிஸிங்ல பிரச்னை பண்ணிடாதீங்க..!'’ -கோவணாண்டி

மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டி... மூணாவது முறையா முதலமைச்சரா பொறுப்பேத்து இருக்குற தங்கத் தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு, வணக்கம்... வாழ்த்து... எல்லாத்தையும் சொல்லிக்கறான் இந்தக் கோவணாண்டி.


'ஆகா, இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள கிளம்பிட்டான்யா... கிளம்பிட்டான்'னு நினைக்காதீங்க. ஆரம்பிக்கறதுக்கு முன்னதானே நிறுத்த முடியும். நான் ஆட்சியை ஆரம்பிக்கறத பத்தி சொல்லலீங்க... எங்களுக்கு நல்லது செய்றேன்கிற பேருல, யாரு யாரு பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு, நீங்களா திட்டங்கள ஆரம்பிச்சுடக் கூடாதுங்கறத சொல்றேன்!

நாங்கள்லாம் ரொம்ப பாவப்பட்ட ஜென்மங்கம்மா. இந்தத் தடவை ஒங்க முகத்துல தவழற அமைதியையும் பக்குவத்தையும் பார்த்தா... நிஜமாலுமே இந்தப் பயலுகளுக்கு நல்லபடியா ஆட்சியை நடத்தி, நாலு நல்லது செய்து பார்த்துடுவோம்'னு நீங்க நினைக்கற மாதிரிதான் எங்களுக்குத் தோணுது. அதனால, ஏற்கெனவே இருந்த ஒங்க ஆட்சியில நடந்தது... நேத்தைய ஆட்சியில நடந்தததுனு அநியாய, அக்கிரமங்கள மறந்துட்டு, நிஜமாவே ஒரு நல்ல ஆட்சியை நடத்தித்தான் பாருங்களேன்!

இப்ப நீங்க நடந்துக்கறத பார்த்தா... கொஞ்சம் நம்பிக்கை வரத்தான் செய்யுது. பதவியை ஏத்துக்கிட்ட அடுத்த நிமிஷமே சுறுசுறுப்பாயிட்டீங்க. அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி மணிக் கணக்குல ஆலோசிச்சிருக்கீங்க. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவோட ஆலோசகர் பொன்ராஜை வெச்சு அமைச்சர்களுக்கு வகுப்பெல்லாம் எடுத்திருக்கீங்க. அதுலயெல்லாம் ரொம்ப நேரத்தை, விவசாயத்தை மேம்படுத்துறதுக்காகவே செலவழிச்சதாவும்... 'இரண்டாவது பசுமைப் புரட்சி' கொண்டு வர்றதுக்கான முயற்சிகள நீங்க முன்னெடுக்கப் போறதாவும்... பேசிக்கறாங்க.

இதுலதான் கொஞ்சம் கிலி கிளம்புது! அதாவது... ஓப்பனிங் நல்லா இருக்கு. ஆனா, ஃபினிஸிங்ல பிரச்னையாகிடுமோனுதான் பயமா இருக்குதுங்கம்மா.

இப்ப விவசாயத்துக்காக நீங்க பெருமுயற்சி எடுக்கற சேதி தெரிஞ்சதுமே... நன்கொடையை நீட்டுற பூச்சிமருந்து கம்பெனிக்காரன், விதைக் கம்பெனிக்காரன்; ஆராய்ச்சி பண்ணி பண்ணி மூளையில இருந்து அறிவு ஆறா ஒழுகி ஓடிக்கிட்டிருக்கற அறிவாளி; உலகம் பூரா இருக்கற வெவசாயத்தை அலசி ஆராய்ஞ்ச விஞ்ஞானினு ஆளாளுக்கு ஒங்கள வட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க... ஆரம்பிப்பாங்க. அவங்க சொல்றதையெல்லாம் கேட்டு அசந்து போய், நீங்க பாட்டுக்கு கன்னாபின்னானு திட்டங்கள தீட்ட ஆரம்பிச்சுடாதீங்க. 'அவங்க புடுங்கறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்'.

'என்னடா இவன் எடுத்ததுமே இப்படியெல்லாம் பேசறானே?'னு மேற்கொண்டு படிக்காம நிறுத்திடாதீங்க.

அதாவது, இந்த விவசாயத்தை நிலைநிறுத்த... இயற்கையான விஷயங்கள புரிஞ்சுகிட்டு, அதோட ஒட்டி உறவாடினாலே போதும்கிறதுதான் உண்மை. இதை நான் சொல்லலீங்க. உலகத்தை அறிஞ்ச... தெரிஞ்ச பெரிய மனுஷங்க சொன்னது. நம்ம ஊரு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்... மகாராஷ்டிராவோட சுபாஷ் பாலேக்கர் மட்டுமில்லீங்க. நாடறிஞ்ச வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் இதைத்தான் இப்ப சொல்றாரு! வேணும்னா நீங்களே கூப்பிட்டுக் கேட்டுக்கோங்க!

முதலாம் பசுமைப் புரட்சி நடந்த பஞ்சாப்ல இப்ப பசுமை வறட்சி தாண்டவமாடுது. உரத்தையும், பூச்சிமருந்தையும் கொட்டிக் கொட்டி, நிலமெல்லாம் வளமிழந்து போனதால, தலையில துண்டு போட ஆரம்பிச்சிருக்காங்க அந்த ஊரு விவசாயிங்க. இதைப்பத்தி கூட சுவாமிநாதன் அய்யாகிட்ட கேட்டுக்கலாம்.

அப்புறம் ஒங்க கெழுதகை நண்பரு குஜராத் முதல்வர் மோடியோட ஆட்சியில அந்த மாநிலத்துல விவசாயம் சிறப்பா இருக்கறதா ஊரே பேசிக்குதுனு நீங்களும் ஏமாந்துடாதீங்க. 'அங்க சுற்றுச்சூழல் டண்டணக்கா ஆகிக்கிட்டிருக்கு'னு அபாய எச்சரிக்கை அடிக்கறாங்க சூழல் ஆர்வலர்கள். ஊரைச் சுத்தி தொழிற்சாலைகளா தொடங்கிட்டு, அதுல விவசாயத்தை எப்படி வளர்த்தெடுக்க முடியும்?

அதனால, ஆளாளுக்கு சொல்ற யோசனைகளையெல்லாம் செயல்படுத்தறேன் பேர்வழினு, மறுபடியும் விவசாயத்துக்கு மரண சாசனம் எழுதிப்புடாதீங்க. முக்கியமா செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு விவசாயியா சிலதைச் சொல்றேன். இதையெல்லாம் செயல்படுத்தினாலே... வெவசாயத்தை நல்லாவே தூக்கி நிறுத்திப்புடலாம்ங்க! எல்லாமே... போன ஆட்சியிலயும் நான் புட்டுப்புட்டு வெச்சதுதான்நீங்களாச்சும் காது கொடுங்க!

அதாவது... மு.க. ஆட்சியில மோட்டரை போட்டுட்டு, மடையைத் திருப்புறதுக்குள்ள காணாம போயிடும் கரன்ட்டு. 'வாம்மா மின்னல்’னு சொல்ற மாதிரி... வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது. இந்த அரைகுறை கரன்ட்டு காரணமா... பல சம்சாரிக மோட்டாருக்கு காயில் கட்டியே கடனாளியாகிட்டாங்க. அதனால... ஒரே சீரா கரன்ட்டு கிடைக்கறதுக்கு உடனடியா ஏற்பாடு செய்ங்க!

உங்க கூட்டாளி 'கருப்பு எம்.ஜி.ஆர்.' கூட, தேர்தல் நேரத்துல, 'மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க ஒரு திட்டம் வெச்சிருக்கேன். ஆனா, இப்ப சொன்னா கருணாநிதி காப்பி அடிச்சிடுவாரு. தேவைப்படும்போது சொல்றேன்’னு வசனமெல்லாம் பேசிக்கிட்டிருந்தாரு. அது சிறப்பா இருந்தா, சீக்கிரமா செயல்படுத்துங்க.

தேர்தல் அறிக்கையில சொன்ன மாதிரியே எல்லா விவசாயிகளுக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தையும் சட்டுபுட்டுனு அமைச்சுக் கொடுத்துடுங்க. இப்ப செலவாகுற தண்ணியில 25 சதவிகிதம்தான் செலவாகும்; விளைச்சலும் கூடும்; ஏகப்பட்ட மின்சாரமும் மிச்சமாகும்!

அங்கங்க இருக்கற ஆறு, குளம், குட்டை, கண்மாய், ஏரி இதெல்லாத்தையும் தூர் வாரினாலே... பெய்யுற மழையை முறையா சேமிக்க முடியும். கூடவே, ஆறுங்கள்ல அங்கங்க தடுப்பு அணையையும் கட்டி வெச்சீங்கனா... ஆத்துப் பாசனத்துல உள்ளவங்களுக்கும் வசதியாயிடும். அதுக்குப் பிறகு பாருங்க... மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சற அவசியமே இல்லாம போயிடும்.

முக்கியமான பிரச்னையே கட்டுபடியான விலை கிடைக்கலங்கறதுதான். கரும்புக்குக் கட்டுப்படியான விலை கேட்டு போன ஆட்சியில விழுப்புரத்துல கலக்கி எடுத்த உங்களுக்கு தெரியாதா எங்க கஷ்டம். தேர்தல் அறிக்கையிலயே 'ஒரு டன் கரும்புக்கு 2,500 ரூபாய்'னு சொல்லிட்டீங்க. எப்ப எப்பனு எங்காளுங்க காத்துக்கிட்டிருக்காங்க. கரும்பு மாதிரியே மத்த எல்லா விளைபொருளுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்கறதுக்கு உருப்படியா ஒரு யோசனையைப் பண்ணி நிறைவேத்த பாருங்க... புண்ணியமா போகும்!

நம்ம ஊருல கொஞ்ச நஞ்சம் உழைச்சிக்கிட்டிருந்த விவசாயிகள, நிலத்தை தரிசா போட வெச்சு, கூலி வேலைக்கு வெறட்டிவிட்ட பெருமையான திட்டம்... 'ஊர் கூடி குளத்துல கும்மியடிக்குற திட்டம்'! அதாங்க, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். நூறு நாள் வேலை வாய்ப்புக் திட்டம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன். ஆத்தை வெட்டுறேன்... குளத்தை வெட்டுறேன்... ஏரியை வெட்டுறேன்னு மேலாப்புல புல்லை மட்டும் சொரண்டிட்டு, கணக்கு காட்டினதுதான் அந்தத் திட்டத்ததோட சாதனை.

இதே திட்டத்த வெச்சு, 'ஆடு மேய்ச்ச மாதியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’னு கேரளாவுல விவசாய வேலைகளோட இணைச்சு... அழகா அங்க நடைமுறைபடுத்திக்கிட்டிருக்காங்க. அதேமாதிரி நம்ம ஊருலயும் மாத்திட்டீங்கனா... பட்டம் தவறாம பயிர் விளையும், விவசாயமும் செழிக்கும்.

அம்பது வயசு வரைக்கும் உணவுக்கு செஞ்ச செலவைவிட, அம்பது வயசுக்கு மேல ஆஸ்பத்திரிக்கு அதிகமா செலவாகுது. காத்து, தண்ணி, மண்ணு, உணவு எல்லாமே விஷமா மாறிக்கிட்டு வருது. இதுக்குக் காரணம் விவசாயத்துல பயன்படுத்துற ரசாயனம்... ஒரேயடியா பெருகிக்கிட்டே போற தொழிற்சாலைங்க. இதுல இருந்து தப்பிக்கறதுக்கான ஒரே வழி... இயற்கை விவசாயம்தான். இந்த விஷயத்தை ஒங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆளிருக்காங்களானு தெரியல. தேவைப்பட்டா இதுக்காகவே உழைச்சுக் கிட்டிருக்கற நம்ம ஊரு நம்மாழ்வாரைக் கூப்பிட்டு பேசுங்க.

விவசாயிகள என்னிக்குமே கடனாளியாக்காத... பூமியை புண்ணாக்காத... உணவை விஷமாக்காத 'இயற்கை விவசாயம்தான் நிலைச்ச நீடிச்ச விவசாயம்'கிறதுதான் நிஜம். இதை சர்வதேச உயிரியல் விஞ்ஞானிகள் மாநாட்டுலயே சொல்லி இருக்காங்க. இதுல இருக்கற உண்மைகள நீங்களே நேரடியா அலசி ஆராய்ங்க. விஞ்ஞானிகள இறக்கி விட்டா... மறுபடியும் குழப்பிடுவாங்க ஜாக்கிரதை!

இதையெல்லாம் விட்டுட்டு... 'என்ன ஆனா என்ன, அடுத்த அஞ்சி வருஷத்துக்கு நம்மள எவனும் அசைச்சிக்க முடியாது. அதுக்குப் பிறகு, ஒரு அஞ்சி வருஷம் ஓய்வு கொடுப்பானுங்க. மறுபடியும் நம்மகிட்டதான் திரும்பவும் வந்தாகணும். இந்தப் போக்கத்த பயலுகளுக்கு வேற யாரு இருக்கா?'ங்கற நெனப்புல திரிய வேணாம்... பீ கேர் ஃபுல்.

எங்களச் சொன்னேன்!


இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன் 10-ஜூன்-2011

4 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

நல்ல பகிர்வு !

பெயரில்லா சொன்னது…

Good Work, Keep it up

Jey சொன்னது…

// 'ஊர் கூடி குளத்துல கும்மியடிக்குற திட்டம்'! அதாங்க, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். நூறு நாள் வேலை வாய்ப்புக் திட்டம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன். ஆத்தை வெட்டுறேன்... குளத்தை வெட்டுறேன்... ஏரியை வெட்டுறேன்னு மேலாப்புல புல்லை மட்டும் சொரண்டிட்டு, கணக்கு காட்டினதுதான் அந்தத் திட்டத்ததோட சாதனை.//

நல்ல பகிர்வு. நன்றி.

இந்த வேலைவாய்ப்பு திட்டம் சம்பந்தமா ஒரு பதிவு எழுதியிருந்தேன் படிங்க.
http://pattikattaan.blogspot.com/2010/07/1-80.html

Jayadev Das சொன்னது…

ஆஹா, எல்லாம் நல்ல யோசனைதான், யார் செயல் படுத்துவாங்கன்னுதான் தெரியல!

கருத்துரையிடுக