திங்கள், அக்டோபர் 10, 2011

அது...வெள்ளைக்காரன் சட்டம்...இது...கொள்ளைக்காரன் சட்டம்! - கோவணாண்டி

பி.டி. கத்திரி விதை விஷ(ய)த்துல... ச்சும்மா அமெரிக்காவே அதிர்ற மாதிரி விவசாயிகளுக்கு ஆதரவா கர்ஜனை செஞ்சுட்டு, இப்ப விவசாய நிலங்களைக் கைப்பத்துற விஷயத்துல, விவசாயிகளுக்கு வேட்டு வைச்சுக்கிட்டிருக்கற மவராசன்... மத்திய ஊரக வளர்ச்சித் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷுக்கு வணக்கம் சொல்லிக்கிறான்... ஒங்க பாசக்கார கோவணாண்டி!

பி.டி. கத்திரிக்காயை நீங்க கையாண்ட விதத்தைப் பார்த்துட்டு, 'மந்திரிகள்ல மாவீரரு... மனசாட்சி உள்ளவரு... அறிவுள்ளவரு... ஆண்மை உள்ளவரு'னு எங்க கோவணாண்டிங்க ஒட்டுன போஸ்டர் ஈரம் காயறதுக்குள்ளயே... எங்க ஈரக் குலையில ஏறி மிதிச்சுட்டீங்களே... இது நியாயமா?

அய்யா, 'இப்ப இருக்கற நிலம் கையகப்படுத்துற சட்டம், இந்தியா அடிமையா இருந்தப்போ வெள்ளைக்காரன் கொண்டு வந்தது'னு சொல்லிக்கறாங்க. அதை வெச்சுக்கிட்டுதான் இத்தனை வருஷமா விவசாயிங்கள அடிமை கணக்கா உருட்டி, மிரட்டி, அவனோட நிலத்தை வளைச்சுக்கிட்டிருக்காங்க/வளைச்சுக்கிட்டிருக்கீங்க. நாய்க்கு எலும்புத் துண்டை தூக்கிப் போடற மாதிரி, பிச்சைக் காசை விவசாயிகிட்ட விட்டெறிஞ்சுட்டு, இஷ்டப்பட்டவங்களுக்கு எல்லாம் பட்டா போட்டுக் கொடுத்துட்டு இருந்தாங்க/இருக்கீங்க.

'அங்க கார் ஃபேக்டரி வருது. அது நாட்டோட பொருளாதாரத்தை உசத்தும்... இங்க நிலக்கரிச் சுரங்கம் வருது. அது நாட்டோட மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும். இதுக்காக நீங்கள்லாம் கொஞ்சம் தியாகம் பண்ணணும்'னு எங்கள தியாகி ஆக்கிட்டு, ஃபேக்டரி முதலாளிங்களுக்கு விசுவாசியா இருந்து ஸ்விஸ் பேங்க்ல பொட்டி பொட்டியா சேர்த்தாங்க/ சேர்த்துக்கிட்டிருக்காங்க ஒங்க பங்காளிங்க. இப்ப, நீங்களும் அந்தப் பாதையில நடக்க ஆரம்பிச்சுட்டீங்களோனு சந்தேகம் லேசா எட்டிப் பார்க்குதுங்க.

சுதந்திரம் வாங்கின இந்த 60 வருஷத்துல... இப்பத்தான் எங்காளுங்களுக்கும் கொஞ்சம் வீரம் பொறந்து, இந்த அரசியல்வாதிங்க, பண முதலைங்களோட அழிச்சாட்டியத்துக்கு எதிராக லேசா மூச்சுவிட ஆரம்பிச்சுருக்காங்க. ஒங்க கட்சியில இருக்கற தம்பி ராகுல்கூட இப்ப வாய்க்கா, வரப்புனு அதனாலதான் அலைஞ்சு திரிஞ்சுகிட்டு இருக்காரு.

'நிலத்தைக் கையகப்படுத்தற பழையச் சட்டத்துல திருத்தம் கொண்டு வரணும்... விவசாயிகளுக்கு துரோகம் கூடாது... அவங்களுக்கு சாதகமான அம்சங்கள சேர்க்கணும்'னு பலரும் சொல்லிக்கிட்டிருக்காங்க. இந்த விஷயத்துக்காகத்தான் சுப்ரீம் கோர்ட்டுலகூட மாயாவதி முதற்கொண்டு பல அரசியல்வாதிங்களும் வாங்கிக் கட்டிக்கிட்டிருக்காங்க.

இத்தனை நடந்த பிறகும், 'சட்டத்துல திருத்தம் பண்றோம்... விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களைச் சேர்க்கிறோம்'னெல்லாம் சொல்லிக்கிட்டே... மறுபடியும் எங்க தலையிலயே கை வெக்கறதுக்குண்டான ஷரத்துகள அதுல நீங்க சேர்த்துட்டு இருக்கறதா ஊர் பூரா பேச்சா இருக்குது.

நீங்க கொண்டு வரப்போற 'நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்ட'த்துல சொல்லியிருக்கற ரெண்டு, மூணு விஷயங்கள் சம்சாரிகளுக்கு எதிரா இருக்குனு விவரம் தெரிஞ்ச பெரியவங்க சொல்றாங்க. 'பொதுக் காரியத்துக்காகவும், பொதுத் தேவையில் ஈடுபடும் தனியாருக்கும், தனியார், அரசு இணைந்தப் பணிகளுக்காகவும் தேவைப்படும் இடங்களில் நிலம் கையகப்படுத்தலாம்'னு சட்ட வரைவுல சொல்லியிருக்கீங்களாமே! இங்கதாங்கய்யா இடிக்குது.

அரசாங்க ஆபீஸ், ஆஸ்பத்திரி, ரோடு, ரயில் பாதைனு நிலம் வேணுமா... உரிய விலையைக் கொடுத்துட்டு எடுத்துக்கோங்க. ஆனா, கருவாடு விக்குறவங்க, கம்பெனி கட்டுறவங்க, விளக்குமாறு விக்குறவங்க, சாராயம் காய்ச்சுறவங்க, வீடு கட்டுறவங்களுக்காக நீங்க ஏன் புரோக்கர் வேலை பாக்கறீங்கனுதான் கேக்குறோம்.

இடம் தேவைப்படுறவங்க, எங்ககிட்ட வரட்டும், கட்டுப்படியான விலையைச் சொல்றோம், கட்டுப்படியானா வாங்கட்டும்... இல்லைனா போகட்டும். அதை விட்டுட்டு புதுசா ஒரு சட்டத்தைப் போட்டு நீங்க ஏன் மூக்கை நுழைக்குறீங்க. கஷ்டமோ, நஷ்டமோ நாங்களே பாத்துக்கறோம், நீங்க தலையிடாம இருந்தாலே போதும்.

எங்க நிலத்த வாங்கி 10 மாடி, 20 மாடினு குடியிருப்புகளைக் கட்டி, கோடி கோடியா குவிக்க போற ரியல் எஸ்டேட் பெருச்சாளிங்களுக்காக, நாட்டோட முதுகெலும்பான எங்களை உடைக்க சட்டம்ங்கிற பேர்ல சம்மட்டியைத் தயாரிச்சிருக்கீங்களே இது அடுக்குமா?

முதலாளிமாருக ஒண்ணு கூடி, திட்டம் தீட்டி சொன்னதை, நீங்க அப்படியே சட்டமா போட்டுட்டீங்களோனு சந்தேகமா இருக்கு. இந்தியாவுல யாவாரம் (தொழில்) பண்ணி, உழைக்கற மக்களோட ரத்தத்தை உறிஞ்சி, வெளிநாட்டு பேங்குல பணமா குவிக்குற கொள்ளைக்காரங்களுக்காக, தான் பட்டினி கிடந்தாலும் தேசத்துக்கே சோறு போடுற எங்க கோவணாண்டிகளோட கையகல நிலத்தையும் பறிச்சு கொடுக்க சட்டம் போடுறீங்களே... உங்களுக்கெல்லாம் கூச்ச, நாச்சமே இல்லையா?

புதுச் சட்டப்படி விலை நிர்ணயம் செய்றதுலயும் பெரும் மோசடி நடந்திருக்காம்ல. 'நகர எல்லைக்குள் நிலங்களைக் கையகப்படுத்தினா... அரசு வழிகாட்டி மதிப்பைவிட இரண்டு மடங்கு தொகையும், கிராமங்களா இருந்தா... நாலு மடங்கு தொகையும் நில உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்படும்’னு சொல்லுதாம்ல ஒங்க சட்டம். மேம்போக்கா பார்த்தா... சம்சாரிகளுக்கு சகாயம் செஞ்ச மாதிரிதான் தெரியும்.

ஆனா, புட்டு பார்த்தா அத்திப் பழம் கணக்கா... அத்தனையும் புழுவா நெளியுது. நகரத்துல விலை சதுர அடி கணக்குல நடக்குது. அதனால வழிகாட்டு மதிப்பீடு அதிகமா இருக்கு. கிராமத்துல ஏக்கர் கணக்குல விலை சொல்றதால, வழிகாட்டி மதிப்பு கம்மியா இருக்கு.

உதாரணமா... இரண்டாம் கட்ட நகரங்கள்ல தோராயமா ஒரு சென்ட் நிலம் 4 லட்சம்... 5 லட்சம்னு சொல்லுது வழிகாட்டி மதிப்பு. ஆனா, கிராமத்துல அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல வழிகாட்டி மதிப்பு இருக்கறதில்லை. அதனால, கிராமங்கள்ல கையகப்படுத்துற நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பைவிட 20 மடங்கு அதிகமா கொடுக்கணும்னு சொல்றோம்.

இதையெல்லாம் விட்டுட்டு கம்பெனிக்காரங்க போடுற நல்லி எலும்புக்கு ஆசைப்பட்டுக்கிட்டு கோவணாண்டிக வயித்துல அடிச்சுடாதீங்க. அப்படி அடிக்க நினைச்சா ஒங்க எல்லாரோட கதி என்னாகும்கறதுக்கு உதாரணத்தைத் தேடி எங்கயும் அலையத் தேவையில்லை... மேற்கு வங்காளத்தை ஆண்ட கம்யூனிஸ்டுங்களே போதும்.

முப்பது வருஷத்துக்கு மேல மேற்கு வங்காளத்துல கோட்டைக் கட்டி ஆண்ட கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்துக்கே வேட்டு வெச்சது... இந்த நிலப்பிரச்னைதான். சிங்கூர்ல விவசாயிகளோட நிலத்தை அடாவடியா பறிச்சு, டாடா கம்பெனிகிட்ட கொடுக்கற புரோக்கர் வேலையில இறங்கினதுதான் அந்தக் கட்சியோட ஆட்சிக்கே சாவுமணி அடிச்சி, மம்தா பானர்ஜியை ஆட்சியில உக்கார வெச்சுருக்கு.

அந்த உண்மை புரிஞ்சுதான், ஆட்சிக்கு வந்த கையோட நிலத்தை திருப்பித் தர்றதுக்காக சட்டம் போட்டாங்க அந்த அம்மா. தையா தக்கானு குதிச்சுக்கிட்டு கோர்ட்டுக்குப் போன டாடாவுக்கு, இப்ப குட்டு விழுந்திருக்கு. 'மம்தா செய்தது சரிதான். 6 மாசத்துல நிலத்தைத் திருப்பிக் கொடு'னு கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவு போட்டுடுச்சு.

எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு பார்த்து, ஒழுங்கு மரியாதையா எங்களுக்கு உபகாரம் பண்ற மாதிரி சட்டத்தைப் போடுங்க. 'பழசு, வெள்ளைக்காரன் கொண்டாந்த சட்டம்... புதுசு, கொள்ளைக்காரனுங்க கொண்டு வந்த சட்டம்'னு எதிர்காலத்துல மக்கள் பேசுற அளவுக்கு வெச்சுடாதீங்க... ஆமாஞ் சொல்லிப்புட்டேன்.

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன், 25-10-11

1 கருத்து:

வெளங்காதவன்™ சொன்னது…

அடேங்கப்பா!

தெளிந்த எழுத்து!

சூப்பரோ சூப்பர்!

கருத்துரையிடுக