புதன், அக்டோபர் 06, 2010

கனிம வள கொள்ளையர்கள்

ராமாயணத்தில் எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று உண்டு. அம்பால் குத்தப்பட்டு , உயிர்விடும் நிலையிலிருக்கும் தவளையைப் பார்த்து ராமபிரான், "என்னை அழைத்திருக்கக் கூடாதா?, கூப்பிட்டிருந்தால் ஓடோடி வந்திருப்பேனே" என்று பதை பதைப்புடன் கேட்பார். அதற்கு தவளையானது, "எப்போதெல்லாம் எனக்குத் துன்பம் வருகிறதோ அப்போதெல்லாம் "ராமா" என்று தான் அழைப்பேன், ஆனால் இப்போதோ நான் வணங்கும் ராமனின் அம்பாலேயே குத்தப்பட்டு துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் போது நான் யாரை அழைப்பது" என்று பதிலுரை பகர்ந்தது. தன் அம்பினால் இறப்புக்கு ஆளான தவளையை எண்ணியும், தன் அறியாமையால் விளைந்த தவறையும் நினைத்து மனமொடிந்து போனார் ராமர்.

உலகெங்கும் உள்ள பழங்குடி மக்களின் நிலை இந்தத் தவளையின் நிலையாகத்தான் இருக்கிறது. அவர்களைக் காக்க வேண்டிய அரசோ, ராமனாக வருந்தாமல், செங்கிஸ்கான் போல் செயல்பட்டு ,அவர்களை வாழிடத்திலிருந்தே அகற்றுகிறது அல்லது கொன்று குவிக்கிறது. ஏனெனில் அவர்கள் வாழும் இருப்பிடங்கள் அனைத்தும் பன்னெடுங்காலமாய் இயற்கையால் உருவாக்கப்பட்டுள்ள பல லட்சம் டாலர் சந்தை மதிப்புள்ள கனிமங்கள் நிரம்பியது.

இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களில் ,அதிக வன வளமும் , மலைவளமும் நிரம்பியது ஒரிசா. அதே போல் பழங்குடி மக்களும் ஏராளமானோர் வாழ்கின்றனர். சிறு சிறு தொகுப்புகளாய் பல பிரிவினர் வாழ்கின்றனர். அவரவர்க்கென்று வாழிடம், கலாச்சாரம், என தனித்துவத்தோடு வாழும் அவர்களைக் குறிவைக்கிறது திறந்த பொருளாதார அமைப்பு .நியாம்கிரிமலை ஒரிசாவில் கிழக்கு மலைத் தொடர்ச்சியாய் அமைந்த ஓர் அமைப்பு. "டோங்கிரியா கோண்டு" என்ற ஆதிவாசிப் பழங்குடியினர் சுமார் 8000 பேர் வாழ்கின்றனர். இவர்கள் 1000 வருடத்திற்கும் மேலாக காட்டையும், மரங்களையும், அடைக்கலம் அடைந்து ,அவைகளையே தெய்வமாக வழிபடுகின்றனர். இங்கிலாந்தின் மிகப்பெரிய கனிம வள ஆராய்ச்சி நிறுவனமான "வேதாந்தா " இந்த நியாம்கிரி வனப்பகுதியில் 17 மில்லியன் டன் பாக்ஸைட் உள்ளதைக் கண்டறிந்து அதை எடுக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற முயற்சிக்கிறது. அலுமினியம் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மூலப் பொருளான பாக்ஸைட் , உலகச் சந்தையில் பெரும் மதிப்புடைய கனிமமாகும் . இவை விரவி பரவியுள்ள இடங்கள் அனைத்தும் டோங்கிரியா கோண்டுகளின் வாழ்வாதாரப் பகுதி. ஆலையின் வருகையால் இவர்கள் பாதிக்கப்படுவர். நிச்சயம் இவர்களைப் பாதுகாப்போம் என ஆலை நிர்வாகம் உறுதிகூறினாலும், கோண்ட் மக்களும், மனித உரிமை ஆணையர்களும், பிற நாடுகளும் கூட சம்மதம் தெரிவிக்க மறுக்கின்றன. இதற்கு உதாரணமாக, லான்ஜிகாரில் இவர்கள் அமைத்துள்ள அலுமினிய சுத்திகரிப்பு ஆலையைக் கூறலாம். அந்நிலமும் பழங்குடிகளின் வாழிடம். அவர்கள் ஆலை நிர்வாகத்தின் பொய்யுரைகளை நம்பி, தங்கள் இடங்களை விட்டுக் கொடுத்தனர். கொடுத்த நேரத்திலே ,வீடுகள் காணாமல் போயின. "தெய்வங்கள் " அனைத்தும் அவர்கள் கண்முன்னே தீயில் பொசுங்கின. இறந்த முன்னோர்களின் ஆவிகள் வாழ்வதாக இத்தனை ஆண்டுகளும் நம்பி வணங்கிய பாறைகள் அனைத்தும் உடைந்து தவிடுபொடியானதைக் கண்ணீர் மல்க அவர்களால் பார்க்கத்தான் முடிகிறது. இதையெல்லாம் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் முன்னோர்களின் ஆவிகளும் உடன் அழத்தான் செய்கிறது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை அமைச்சகம், போன்றவை விதித்த சட்டங்களை மதியாமல், தங்கள் போக்கிற்கு உள்ளூர் அரசியல்வாதிகளையும், அரசையும், "கையில் போட்டுக் கொண்டு" காட்டுத் தர்பார் நடத்தி வருவது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தூசி, புகை, தண்ணீர் என அனைத்திலும் கேட்டை விளைவித்துக் கொண்டிருக்கிறது. அபூர்வ மரங்கள் அழியத் துவங்கியுள்ளது.நீராதாரம் கெடத் துவங்கியுள்ளது. மக்களும், நோயுறத் துவங்கியுள்ளனர். "நாங்கள் காப்போம்" என உறுதி அளித்த நிர்வாகம் கைவிரிக்கிறது. அரசியல்வாதிகள் ,குண்டர்கள் போல் செயல் பட , ஒரு இனமே அழிந்து வருகிறது என்பதை கோண்ட் இன மக்கள் பெரும் அதிர்ச்சியோடு "லான்ஜிகாரை" உதாரணமாக உலகிற்குக் காட்டத் தயங்கவில்லை.

இதனை அடிப்படையாகக் கொண்டு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் , மனித உரிமையாளர்களும், கடந்த 2002 முதல் வழக்குத் தொடர்ந்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம், சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தது அவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மலைச்சரிவில், "படிக்கட்டு வயல் வெளிகளை" அமைத்து கோண்டுகள் தானியங்களைப் பயிரிடுகின்றனர். மலைகளில் கிடைக்கும் பழங்கள், பனையிலிருந்து உருவாகும் "கள்" இவர்களின் பிரதான உணவு. அடர்ந்த காடும் தூய நீர் நிலைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பல உயிர்களுக்கும், ஜீவாதார இருப்பிடமாகத் திகழ்கிறது. இயற்கையை " நியான்ராஜா" என வணங்கும் அவர்கள் ,தங்களை " ஜார்னியா" என அழைப்பதில் பெருமை கொள்கிறார்கள். இதற்கு "வன, நீர் நிலைகளின் காவலன் " என்பது பொருள். ‘வேதாந்தா’வின் 2 மில்லியன் டாலர் முதலீடு ,இவ்வாறு பாதுகாக்கப்பட்ட இயற்கையைப் பெரும் இயந்திரங்களின் உதவியோடு அழிக்க முற்படுகின்றன. பெரும் பாறைகள் உடைக்கப்பட்டு சாலைகள் தயாராகி வருகின்றன. ஓடி வருகின்ற நீர் நிலைகள் வற்றும் அளவு பெரும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உறிஞ்சத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தேர்ந்தெடுத்த இடங்களில் பல நூறு வயதுள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. தடுத்து நிறுத்த முற்படும் கோண்டுகளின் தலைவர்களும், தலைவிகளும் ,யுவர்களும்,யுவதிகளும், கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகிச் சிறை வைக்கப்படுகிறார்கள்.

கடந்த 2002ல் நான்கு பேர் கமிட்டி உச்சநீதி மன்ற ஆலோசனைப் படி அமைக்கப்பட்டது. இங்கு ஆராய்ந்த அவர்கள் தாதுக்கள் அதிகம் உள்ளதை உறுதி செய்தார்கள். பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், சமூக அமைப்பு போன்றவற்றைக் கவனத்தில் கொள்வதாகக் கூறிய அவர்கள் , அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு ஆலைகளும் ,சுரங்கங்களும் அமைக்க நடுவண் அரசுக்குப் பரிந்துரை செய்தார்கள். ஸ்டெர்லைட் மூலம், வேதாந்தா தனது கால்களை இவ்வாறு பதித்தது. இதுதான் கொடூரத்தின் முதல் துவக்கம்.

உலகப் புகழ்பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளரான அருந்ததி ராய்,நல்ல சுற்றுச் சூழல் சமூக ஆர்வலர். இவர் நேரிடையாகப் பல மாநிலங்களுக்குச் சென்று , தகவல்களைச் சேகரித்துள்ளார்." இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னிறுத்தி மலைவளம் சுரண்டப்படுவது அதிகரித்துள்ளது. சத்தீஸ்கரில் 644 கிராமங்களில் 3 லட்சம் பேர் விரட்டப்பட்டுள்ளனர். பீகாரில் 600 கிராமங்கள் அழிக்கப்பட்டு 1 லட்சத்து 10,000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. நிலச்சுவான்தார்களின் கூலிப்படையான ரன்வீர் சேனா இத்தகைய செயலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 ஆண்டுகளில் தான் இத்தகைய சம்பவங்கள் பெருமளவில் நடந்தேறி உள்ளது" என்கிறார். 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஊரக விரிவாக்க சட்டம் ,சுரங்கம் தொழில் நிறுவனங்கள் துவங்க பழங்குடி மக்களின் ,அதாவது அங்கு வாழ்கின்ற பூர்வ குடிகளிடம் சம்மதம் பெற வேண்டும் என்கிறது. இதே போல் அவ்விடத்தின் ஊராட்சிக்கும் "மறுக்கும் உரிமை "உண்டு. இவையெல்லாம் மிக எளிமையாகக் காற்றில் விடப்பட்டுள்ளன.

100 வருடங்களாக நியாம்கிரி மலையில் வாழும் அவர்களின் வாழ்க்கையின் அமைப்பை, உழைப்பின் பலனை எப்படி மாற்றமுடியும் என்ற வாதம் நடுவண் அரசிடம் எடுபடவில்லை. நீதிமன்றமும் பொத்தாம் பொதுவாக ,கம்பெனியின் லாபத்தில் குறிப்பிட்ட பங்கு இம்மக்களின் வாழ்விற்குச் செலவிட்டு ,தொழிலைத் துவங்கலாம் என்கிறது. ஆனால் உலக அளவில் மனித உரிமை ஆணையம் இதை ஏற்க மறுத்துள்ளது. ‘வேதாந்தா’வில் முதலீடு செய்துள்ள "சர்ச் ஆஃப் இங்கிலாந்து" ,தனியார் மூலம் முதலீடு செய்துள்ள நார்வே, தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளன. ! " அடிப்படை மனித உரிமைகளை க் கொன்றும் ,பழங்குடியினரை அழிக்கும் நோக்கிற்கும் நாங்கள் உதவ முடியாது "என தெள்ளத் தெளிவாக அறிக்கை சமர்பித்துள்ளது ,நடுவண் அரசை சற்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மத்திய அரசால் முன்னர் அமைக்கப்பட்ட 4 பேர் கமிட்டி தாங்கள் "மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம்" என மறு அறிக்கையைத் தந்துள்ளது. மத்திய கனிம வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர், "நிறுவனங்கள், நமது வளங்களைக் கொள்ளை அடிக்கின்றன" என நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். சுமார் 3000 மடங்கு ராயல்டி தொகை, குறைக்கப்பட்டு வெறும் 3 சதவீதம் மட்டும் இரும்புத் தாதுக்களுக்கு வழங்கப்படுவது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. ‘வேதாந்தா’விற்கு அளித்த அனுமதியை மறு பரிசீலனை செய்யத் தயாராக உள்ளது என அமைச்சகமும், பிரதமரும் வாயைத் திறந்துள்ளனர். "இயற்கையில் விளைந்துள்ள மூலிகை, பழங்கள் மற்றும் கனிம வளங்கள் சரிவர விலைபேசாமல் கொள்ளையடிக்கப்படுவதால், நக்சல்களும், மாவோயிஸ்டுகளும் எளிதாக உருவாகிறார்கள்" என நமது உள்துறை அமைச்சர்
.சிதம்பரம் கூறியது, அவர் உண்மையை உணரத் துவங்கியுள்ளதைக் காட்டுகிறது.

" வேதாந்தா எங்களை ,எங்கள் மலைவளத்தை அழிக்க வந்திருக்கிறார்கள். எங்களைத் துரத்தி , பிச்சைகாரர்கள் ஆக்க நினைக்கிறார்கள் . எங்களை அகற்ற அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மலையில் கால்வைக்கக் கூட அவர்களுக்குத் தகுதியும், அருகதையும் இல்லை. எங்கள் தலை வெட்டப்பட்டாலும், தலையில்லா உடல் அவர்கள் வருகையை எதிர்க்கும் " -------ராஜேந்திர வடகா (டோங்கிரியா கோண்டு).

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

Vijayarani Sanjay சொன்னது…

எங்களை ,எங்கள் மலைவளத்தை அழிக்க வந்திருக்கிறார்கள். எங்களைத் துரத்தி , பிச்சைகாரர்கள் ஆக்க நினைக்கிறார்கள் . எங்களை அகற்ற அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மலையில் கால்வைக்கக் கூட அவர்களுக்குத் தகுதியும், அருகதையும் இல்லை. எங்கள் தலை வெட்டப்பட்டாலும், தலையில்லா உடல் அவர்கள் வருகையை எதிர்க்கும் " -------ராஜேந்திர வடகா (டோங்கிரியா கோண்டு).

நன்றி

கருத்துரையிடுக