திங்கள், ஜூலை 27, 2009

நவீன நீர்க் கொள்ளையர்கள்!

இந்தியாவின் விவசாயப் பாரம்பரியம் சிந்து நதி நாகரிகத்துடன் தொடர்புள்ளது. அண்மைக்காலக் கல்வெட்டு எழுத்தியல் ஆய்வுப்படி அது திராவிட பாரம்பரியம் என்றும் சொல்லப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துநதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி உணவை உற்பத்தி செய்து, நூலில் நெய்யப்பட்ட உடை தரித்து வாழ்ந்த இந்தியத் திராவிடர்கள் நாகரிக மிதப்பில் வாழ்ந்தபோது, ஐரோப்பிய மனித இனம் காட்டுமிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்போராகவும் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே தலைசிறந்த நீர்நிர்வாகத்தை இந்திய மன்னர்கள் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. ""வெள்ளாளர்'' என்ற சாதிப்பெயர் உண்மையில் ஒரு தொழில்பெயரே. வெள்ளத்தைத் தடுத்து விவசாயம் செய்யக்கூடிய தொழில்நுட்ப விளைவால்தான் மேட்டில் ஓடும் நதியைக் கால்வாய் மூலம் ஒரு ஏரியில் சேமித்து நிறைந்ததும், பள்ளத்தில் உள்ள அடுத்த ஏரிக்கு வடியவிட்டுப் பின் அடுத்த ஏரி, அடுத்த ஏரி என்று ஏரிகளின் சங்கிலிப்பிணைப்பு உருவானது.

உதாரணமாக மதுராந்தகம் ஏரி மிகப்பெரியது. அந்த ஏரிக்கு சுமார் மேற்கு திசை மேட்டுப் பகுதியில் உள்ள 20 ஏரிகள் (சிறியவை) நீர் வழங்குகின்றன. சில ஏரிகள் இயல்பான பள்ளங்கள். சில ஏரிகள் மனிதனால் வெட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் ஏராளமான ஏரிகள் சோழர்காலம் - பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகச் செப்பேடுகள் கூறும். நீர்த்தேக்க வரலாற்றில் கரிகாலன் கட்டிய கல்லணை, தாஜ்மகாலைவிட உயர்வான உலக அதிசயம். வெள்ளநீர்த் தடுப்புக்குக் கொள்ளுமிடம் கொள்ளிடமாவதெல்லாம், கல்லணையின் பழைய கட்டுமானங்களைக் கவனித்தால் புரியும். காவிரி முக்கொம்பில் பிரிந்து, ஸ்ரீரங்கத்தை ஒரு தீவாக்கி கல்லணையில் கலந்து, கொள்ளிடமாகவும் வெண்ணாறாகவும் காவிரி வெள்ளம் திருப்பிவிடப்படுகிறது.

1925 காலகட்டத்தில் காட்டன் துரையால் கல்லணையில் வெண்ணாறிலிருந்து புது ஆறு வெட்டப்பட்டு புதிய டெல்டாப் பகுதி தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை-பேராவூரணி-அறந்தாங்கி வட்டங்களில் உருவாகி, தஞ்சை நெற்களஞ்சியம் விரிவானது. ஒரு அகண்ட காவிரி பழைய டெல்டாப் பகுதியான திருவையாறு - சுவாமிமலை - குடந்தை - மயிலாடுதுறை கடந்து பூம்புகாரில் ஒரு சிற்றாறாகிக் கடலில் கலக்கிறது.

மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரும் நதிநீரை ஆங்காங்கே தேக்கி முழுப்பயனையும் பெற்ற பெருமை இன்று நேற்றல்ல, சங்க காலத்திலிருந்து இன்றும் நீடித்து வருகிறது.

நெல் விளைந்த தஞ்சைத் தரணியில் மக்காச் சோளமும் கரும்பும் ஊடுருவியுள்ளது. நஞ்சையைப் புஞ்சை உயர்த்தித் தென்னை நடவும் செய்கின்றனர். இந்தப் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். நமது பாரம்பரிய நீர் நிர்வாகத்தில் என்ன குறை உள்ளது? இப்போது இந்தியா முழுவதும் ஏ.சி. அறையில் அமர்ந்தபடி விவசாயம் - நீர் நிர்வாகம் செய்யும் மேல்நிலை விஞ்ஞானிகளின் புலம்பல் எதுவெனில் "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'... "வாட்டர் ஷெட்'. ஆங்கிலத்தில் ‘Water Shed’ தமிழில் "நீர் வடிமுனை மேம்பாடு'.

இது இந்தியாவுக்கு வந்த கதை தெரியுமா?

1980-களில் வேளாண்மை அமைச்சரகச் செயலாளராக இருந்த ஒரு வேளாண் விஞ்ஞானி அமெரிக்காவில் உள்ள டென்னசி மலைப்பள்ளத்தாக்கைப் பார்வையிட்டபோது அங்குள்ள மலைச்சரிவு வடிகால் மழை சேமிப்புக் கட்டமைப்புகளைக் கவனித்து அதே முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்பினார். விரும்பியதோடு நிற்கவில்லை. செயல்படுத்தியும் விட்டார்.

அமெரிக்காவில் உள்ள புவியியல் - பருவச் சூழ்நிலையில் தொடர்மழைப்பொழிவு உள்ள சூழலுக்கு அது சரி. இந்தியாவில் உள்ள வறட்சி சூழ்நிலைக்கு ஆண்டில் மூன்றுமாதம் மட்டும் சுமார் 100 மணிநேர மழைப்பொழிவுள்ள இடங்களுக்கு இந்தக் கட்டுமானங்கள் பொருந்தாது. எதற்குத்தான் அமெரிக்க மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. அமெரிக்கா என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணம் வளர்ந்துவிட்டது. இந்த டென்னசி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு மாதிரிகளை 40 முன்னோடித் திட்டங்களாகத்தான் இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இத்திட்டங்கள் வெற்றியுடன் செயல்பட்டனவா என்பதை ஓராண்டு முடிவில் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யாமலேயே மேலும் 2000 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் மறு ஆண்டில் செயல்படுத்தினார்கள்.

காலம் கடந்த நிலையில் விவசாய விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்தாலும், உலக வங்கிப் பணத்தை அபேஸ் செய்யும் வாய்ப்பு போய்விடுமே என்று அரசு அம்மறுப்புகளை நிராகரித்துவிட்டது. இதனால், "வாட்டர் ஷெட்' ஒரு தொழிலாகிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்துத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை / ஆகியவர்கள், இத்தொழிலைச் செய்து வருகிறார்கள். மழைநீரை எந்த அளவு சேமித்தார்கள்?

இதற்கான கட்டுமானச் செலவுக்கு ஏற்ப மழை அறுவடை லாபமா என்ற கேள்விகள் முக்கியமில்லை. இதில் உலக வங்கிப் பணத்தைச் சுடுவதில்தான் தொழில் திறமை உள்ளது. மழைநீர் சேமிப்பு / நீர்வடிப்பகுதி மேம்பாடு போன்ற "வாட்டர் ஷெட்டுகள்' யாவும் அமெரிக்க இறக்குமதி. ஆனால், இதில் நகைப்புக்கு இடமான விஷயம், அமெரிக்கா இந்திய மாதிரியைப் பின்பற்றுவதுதான்.

அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு நீர் ஆதாரங்களான ஏரி நீர்ப்பாசனத்தின் "வாட்டர் ஷெட்டுகளை' ஆய்வு செய்து, மழை நீர் சேமிப்புக்கு அம்மாதிரிகளைச் சிறந்த உத்திகள் என்று போற்றிக் கண்காட்சிகளாக வைத்துள்ளதுடன், அவற்றைப் பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். உதாரணத்திற்கு டெக்சாஸில் உள்ள ஏ.எம். பல்கலைக்கழகத்தில் இம்மாதிரிகளைப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை - வேளாண் பொறியியல் துறை டென்னசிப் பள்ளத்தாக்கு மாதிரியைச் சிறப்பாகக் கருதுகிறது.

அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் நமது மாதிரிகளை உயர்வானது என்று கூறியும், நமக்குப் புத்தி வரவில்லை. நமது பாரம்பரிய நீர்ப்பிடிப்பு உத்திகளை நமது பொறியாளர்களோ, விஞ்ஞானிகளோ ஒரு நுண்ணறிவுடனும் அக்கறையுடனும் கவனிப்பதில்லை. அப்படியெல்லாம் கவனித்தால் நம்மவர்களுக்கு அமெரிக்கப் பயணங்கள் ஓசியில் கிட்டுமா? "வாட்டர் கேட்டை' நினைத்துக் கொண்டு அமெரிக்காவின் "வாட்டர் ஷெட்டு மாதிரிகளை' இறக்குமதி செய்வதன் மூலம், இந்திய விஞ்ஞானிகளும், இந்தியப் பொறியாளர்களும் வாழ்க்கையில் வெளிச்சம் பெறுகிறார்கள்.

அதுபோதுமே! இது ஒருபக்கம். நவீன நீர்க்கொள்ளையர்கள் யார்? அவர்களிடமிருந்து இவர்களுக்குப் பங்கு வருகிறதா? இந்தக் கேள்விகளுக்கு உலக வங்கியின் வாட்டர் ஷெட் திட்ட ஒருங்கிணைப்பாளர்களால்தான் பதில் கூற முடியும். இருப்பினும் உலக வங்கியின் வடிமுனைப் பகுதிப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, நிஜமாக என்னதான் நடக்கிறது என்று கண்டறியும் பணியை மேற்கொண்டுவரும் "ஸ்வராஜ்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் குமாரராஜாவை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து விலகியவர் என்ற முறையில், அவர் கூறிய செய்திகள் திடுக்கிட வைத்தன. "சேது சமுத்திரத் திட்டத்தில் தூர்வாரிய மண்ணை எவ்வாறு அளவிட முடியாதோ அதுபோலவேதான் இதுவும்' என்ற பீடிகையுடன் அவர் கூறியபோது, ""செலவு செய்ததாகக் கணக்கு இருக்கும். ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டு ஒரு கணக்கு. குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு ஒரு கணக்கு'' என்று பேச்சைத் தொடங்கினார்.

"தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்'. எதில்தான் கையாடல் இல்லை? அதைவிடுங்கள். ஏன் இந்த உலக வங்கி, இவ்வளவு ஊழல் இருந்தும்கூட, விடாப்பிடியாக வாட்டர் ஷெட்டைப் பிடித்துக் கொள்வது ஏன்? இதற்கு நான் பெற்ற பதில்தான் இக்கட்டுரைத் தலைப்பு.

இந்த வாட்டர்ஷெட் அல்லது நீர்வடிப்பகுதி மேம்பாடு என்பதும் மழைநீர் சேமிப்பு என்பதும் ஒன்றுதான். குடிநீர்த்திட்டம் என்றாலும் சரி கூடுதல் பாசன வசதி என்றாலும் சரி போர் போடுவது அதாவது ஆழ்துளைக் குழாய்களை இறக்குவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு ஆழ்துளைக் குழாய்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், மேல்மட்ட நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. உலக வங்கியின் கொள்கை அதுவல்ல. பாசனப் பகுதியை விஸ்தரித்தல். ஒருபோகம் விளையும் நிலத்தில் பாசன வசதியளித்து இருபோகமாகவோ, மூன்று போகமாகவோ மாற்றுவது. நீர்வடி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் கொள்ளளவு உயர்ந்த பின்னர் ஆழ்துளைக்குழாய் இறக்கும் பணியும் அதிகமாகும்போதுதான் பாசன நிலம் கூடுதலாகும்.

பாசன நிலம் கூடும்போது உணவுப் பயிர்களைச் சாகுபடி செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் விரும்பும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்து, பன்னாட்டு விதை நிறுவனங்களையும் ஏற்றுமதியையும் உயர்த்துவது மறைமுகமான நீர்திருடல். நேரடியான நீர்த்திருட்டு என்பது குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெப்சி, கோகோ கோலா போன்ற மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு வாட்டர் அளிப்பதும் நவீனமான அல்லது நாகரிகமான நீர்க் கொள்ளை.

பெரிய அளவில் பெப்சி, கோகோ கோலா கம்பெனிகளின் அக்வாஃபினா, கின்லே போன்றவை ஒருபுறம். உள்ளூரிலேயே மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்றவையும் ஆங்காங்கே மினரல் வாட்டர் உற்பத்தித் தொழில் நிலையங்களை அமைத்துள்ளனர். பல சுதேசித் தனியார் நிலையங்களும் மினரல் வாட்டர் உற்பத்தி - விற்பனையில் இறங்கிவிட்டனர். அரசாங்கக் குழாய் வழிவரும் குடிநீர் பெரும்பாலும் குளியலுக்கும், துணி துவைக்கவும் பயனாகிறது. நான் வசிக்கும் சின்னாளப்பட்டி போன்ற சின்ன ஊரில்கூட குடிநீர் வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. 1 லிட்டர் புட்டி முதல் 25 லிட்டர் ரிஃபில் வரை நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. ஆகவே உலக வங்கியின் மூலதனம் ""வாட்டர் ஷெட்'' என்ற பெயரில் மினரல் வாட்டர் விற்பனைக்கு ஊக்கம் அளிப்பதாயுள்ளது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று பாரதியார் கேட்டால், "1 லிட்டர் அக்வாஃபினா மினரல் வாட்டர் குடித்தால் தணிந்துவிடும்' என்கிறது உலக வங்கி. ""நமது தேசபக்தியைச் சற்று மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு, "எல்லாம் உலகமயமடா' என்ற தாரக மந்திரத்தை தினம் நூறு தடவையாவது கோஷமிட்டு, அமெரிக்காவை அணைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று நமது பிரதமர் கூறுகிறார். பாரதியார் புத்தகத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, "அடிமைவாழ்வே ஆனந்தமடா' என்று நாம் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம். வாழ்க பாரதம்!

-ஆர். எஸ். நாராயணன்

நன்றி: தினமணி 23-07-2009

2 கருத்துகள்:

sahridhayan சொன்னது…

நாம் எல்லோரும் சுய‌ ப‌ரிசோத‌னை செய்ய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம்,

ந‌ன்றி,

ச‌ஹ்ரித‌ய‌ன்

பெயரில்லா சொன்னது…

you are creating very good awareness, good keep it up

கருத்துரையிடுக