வியாழன், பிப்ரவரி 02, 2012

அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு (2) By ஞாநி


அணுஉலைகளில் விபத்து நடக்காது. நடந்தாலும் போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இருப்பதாக அணுசக்தித் துறை திரும்பத் திரும்பச்சொல்கிறதே?

ஒரு பொய்யைப் பல முறை சொல்லி உண்மையாக்கப் பார்க்கும்
முயற்சிதான் அது. திட்டத்தை உருவாக்கும்போதே குறைபாடுகளுடன் உருவாக்குபவர்கள் அவர்கள். கூடங்குளம் திட்டத்தையே எடுத்துக் கொள்ளலாம். அதற்கு தேவைப்படும் தண்ணீரை எங்கிருந்து எடுக்கப் போகிறார்கள் என்பதே அவர்களுக்கு சரியாகத் தெரியாது. அல்லது தெரிந்திருந்தால் அதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். உலையிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப் போவதாகத்தான் கோர்பசேவுடன் ஒப்பந்தம் போட்டபோது அறிவிக்கப்பட்டது. இதற்கு பேச்சிப்பாறை மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் 2006ம் வருடம் வரை அணுசக்தித் துறையின் திட்டம் பேச்சிப்பாறையிலிருந்து தண்ணீர் எடுப்பதுதான். அப்போது ஏன் இதை மாற்றவேண்டி வந்தது தெரியுமா

 பேச்சிப்பாறை அணையில் போதுமான தண்ணீரே கிடையாது என்பது அப்போதுதான் அணுசக்தித் துறைக்குத் தெரியவந்தது. அதுவும் சுற்றுச் சூழல் அமைப்புகள் பல முறை சுட்டிக் காட்டியபிறகுதான் தெரியவந்தது. 1996ல் உலக வங்கி உதவியுடன் நடத்திய ஓர் ஆய்வில் பேச்சிப்பாறை அணையில் வண்டல்மண் தேங்கி அணையில் கொள்ளளவே பாதியாகக் குறைதுபோய்விட்டது தெரியவந்தது. இந்தத் தகவலே
அணுசக்தித்துறைக்கு 1996லிருந்து 2006 வரை தெரியாது. ரிகார்டுகளில் அணையின் அசல் கொள்ள்ளவு என்று போட்டிருப்பதன்படி தண்ணீர் இருக்கும் என்று அவர்கள் கணக்கிட்டு வந்திருக்கிறார்கள் ! 2006ல் தெரியவந்தபின்னர்தான் கடல் நீரை சுத்திகரிக்கும் டீசாலினேஷன் ஆலைகளை நிறுவி தண்ணீர் எடுக்க மாற்று திட்டம் போட்டார்கள். 

அதிலும் சிக்கல் இருக்கிறது. அணுசக்தி கண்காணிப்பு வாரிய விதிகளின்படி அணு உலைக்கான தண்ணீர் ஒரே இடத்தை நம்பி இருக்கக்கூடாது. மாற்று வழியும் இருக்க வேண்டும். ஏனென்றால் தண்ணீர் கிடைக்காமல் எட்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால், அணு உலை கொதித்துப் போய் உருகி பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே டீசாலினேஷன் ஆலை பழுதானால் என்ன செய்வது

 கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கும் டீசாலினேஷன் முறை இதுவரை அணு உலைகளில் பயன்படுத்தப்படாத புதிய
தொழில்நுட்பம். பழுதானால், வெளிநாட்டிலிருந்து பொறியாளர்
வந்துதான் ரிப்பேர் செய்ய வேண்டும். தண்ணீருக்கு மாற்று வழி
என்ன என்று கேட்டால், அணுசக்தித் துறையிடம் பதில் இல்லை.
இதுதான் அவர்களுடைய திட்டமிடுதலின் லட்சணம்.
  
ஒரிஜினல் திட்டத்திலேயே இதுதான் நிலைமை என்றால், விபத்தில் முன்னெச்சரிக்கை திட்டத்தின் லட்சணத்தை எப்படி நம்பமுடியும் ?
கல்பாக்கத்தில் விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பகுதி மக்களை
பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வது பற்றிய
ஒத்திகை சில வருடங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்
நடத்தப்பட்டது. எந்த லட்சணத்தில் தெரியுமா? அழைத்து செல்ல
வேண்டிய பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன. காவல் அதிகாரிகளின்
வயர்லெஸ் கருவிகள் வேலை செய்யவில்லை. விபத்து ஒத்திகை
நடக்கிறது என்ற தகவலே பாதி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
அன்று அசல் விபத்து நடந்திருந்தால், நம் கதி என்ன
 
நில நடுக்கம், சுனாமி போன்றவற்றிலிருந்து தங்களை
பாதுகாத்துக் கொள்ள உலகிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளை
செய்துவைத்திருக்கும் நாடு ஜப்பான். அங்கே நேர்மையும்
ஒழுக்கமும் நம்மை விடப் பல மடங்கு அதிகம். அதனால்தான் நம்
சுனாமியைப் போல பல மடங்கு பெரிய அழிவு அங்கே ஏற்பட்டும்கூட
ஒப்பீட்டளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நமது விகிதங்களில் அங்கே இல்லை. அழிவு ஏற்பட்ட எந்த ஊரிலும் ஒரு சிறு கடை கூட சூறையாடப்படவில்லை. கடும் பஞ்சத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒழுங்காக கியூவில் நின்று கிடைத்ததை வாங்கிக் கொள்கிறார்கள்.
 
பள்ளிக்கூடத்திலேயே நில நடுக்கத் தற்காப்பு பயிற்சிகள்,
ஒத்திகைகள் மாதந்தோறும் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. அணு உலை விபத்து ஏற்பட்டதும் அருகிலிருக்கும் லட்சக்கணக்கானவர்களை இன்னொரு பகுதிக்கு ஒரே நாளில் குடி பெயரச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே போதாதது என்று அங்கே விமர்சிக்கப்படுகிறது. நம்மால் கூவம் கரை குடிசைவாசிகளுக்கு மாற்று இடம் தருவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை. இலவச வேட்டி சேலை கொடுக்கும் இடத்தில் நெரிசல் தள்ளுமுள்ளுவில் சாகத் தயாராக இருக்கும் சமூகம் நம்முடையது. தலைவர் செத்தால், கடைகளை சூறையாடுவது நம் மரபு. தீர்வுள்ள சாயப்பட்டறைக் கழிவையே தீர்க்காமல் ஊரையும் ஆற்றையும் விவசாயத்தையும் நாசமாக்கியிருக்கிறோம்.

இந்திய அணு உலைகளில் முழு நேரத் தொழிலாளர்களும்
அன்றாடக் கூலிகளும் கடுமையான கதிரிவீச்சுக்கு ஆளாகின்றனர்.
எந்த அளவுக்கு கதிர் வீச்சு என்பதை முறையாக ஊழியர்களுக்குத்
தெரியப்படுத்துவதில்லை. கல்பாக்கத்தில் உள்ளே நடந்த பல கதிர்
வீச்சு விபத்துகள் பற்றி அங்குள்ள தொழிற்சங்கம் பட்டியலிட்டு
நிர்வாகத்திடம் பல வருடங்கள் முன்பே கொடுத்திருக்கிறது. ஆனால்
எதற்கும் முறையான பதில்கள் இல்லை.
 
விபத்துகளில் தினக் கூலிகள் செத்திருக்கிறார்கள். தற்காலிக
தினக்கூலிகளை பக்கத்து கிராமங்களிலிருந்து அழைத்து
வருகிறார்கள். அவர்களுக்கு எந்த அளவு கதிர் வீச்சு பாய்ந்தது என்பது சொல்லப்படுவதும் இல்லை. அவர்கள் யார் எவர் என்ற பட்டியலும் கிடையாது.
 
ரவத்பட்டா அணு உலையை சுற்றியுள்ள கிராமங்களில்
ஏராளமான உடல்நலப் பிரச்சினைகள் மக்களுக்கு வருவதாகப்
புகார் எழுந்ததையொட்டி அணுசக்தி கண்காணிப்பு ஒழுங்குபடுத்தல்
வாரியத்தலைவர் கோபாலகிருஷ்ணன், அந்தப் பகுதி மக்களில்
யாரெல்லாம் தினக்கூலிகளாக பயன்படுத்தப்பட்டார்கள் என்ற
பட்டியலைக் கேட்டார். அணு உலைக்குள் கதிரியக்கம் பாதிக்கக்கூடிய
பகுதிகளில் தினசரி வேலை செய்வோர் யார் யார், அவர்கள் பெற்ற
கதிர்வீச்சு அளவு என்ன என்ற விவரங்களே அணுசக்தித் துறையிடம்
இல்லை என்றும் தன் கேள்விகளுக்கு பதிலே தரப்படவில்லை என்றும் கோபாலகிருஷ்ணன் தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

துறையைக் கண்காணிக்கும் வாரியத்துக்கே பதில்
தராதவர்கள் மக்களுக்கு எப்படி தருவார்கள் ?

அணு உலைகளில் வரும் கழிவுகள் பல லட்சம் வருடங்களுக்கு
கதிரியக்கம் இருக்கக்கூடியவை, அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது பல தலைமுறைகளுக்கு தலைவலி. இந்தக் கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அணுசக்தி துறை ஒழுங்கான பதில் சொல்வதே இல்லை. கூடங்குளம் போராளிகள் கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலே இல்லை.

அணுக் கழிவுகளை பத்திரமாக வைக்க முடியாதா என்ன?
அதில் என்ன சிக்கல் ?

அணு உலைகளிலிருந்து வரும் கழிவுகளை எப்படி பாதுகாப்பாக
வைப்பது என்பதற்கு முழுமையான தொழில்நுட்பம் இன்னும்
உலகத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதுவரை செய்யப்பட்டவை எல்லாம் முழு பாதுகாப்பைத் தரக்கூடியவையாக இல்லை. எனவே பல நாடுகளில் கதிரியக்கம் கழிவுகளிலிருந்து ஆற்றில், கடலில்,நிலத்தடி நீரில் கலந்து ஆபத்தை ஏற்படுத்தி வரும் சமபவங்கள் நடந்தபடி இருக்கின்றன.
 
க் கழிவுகளால் ஏற்படும் சிக்கல்கள், ஆபத்துகள் பற்றித் தனியே
ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அவ்வளவு விவரங்கள் உள்ளன.
1940
களிலிருந்து 1970 வரை பொறுப்பில்லாமல் பீப்பாய்களில் கழிவுகளை அடைத்து கடலில் வீசிக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகுதான் ஈயப்பெட்டிகளில் அடைத்து உப்புப்பாத்திகளில் புதைப்பது போன்ற வழிமுறைகள் வந்தன. எவ்வளவு அடைத்து எவ்வளவு புதைத்து அதன்பின்னர் மேலே கான்கிரீட் ஊற்றினாலும் கதிரியக்கம் சாகாது. 

லட்சக்கணக்கான் வருடம் வைத்துக் காப்பாற்றியாக வேண்டும்.
சோவியத் யூனியனில் 1957ல் மாயக் வளாகத்தில் சுமார் 100 டன்
கதிரியக்கக் கழிவுகள் வெடித்துச் சிதறியதில் மிகப்பெரிய வட்டாரமே
பாதிப்புக்குள்ளாயிற்று. அடுத்த 45 வருடங்களில் மொத்தம்
4
லட்சம் பேர் கதிரியக்க பாதிப்பினால் புற்று நோய் போன்ற
நோய்களுக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த விபத்தை சோவியத்
யூனியன் அரசாங்கம் சுமார் 30 வருடங்கள் வெளியே தெரியாமல்
மறைத்து வந்தது.
 
இந்தியாவில் மன்மோகன் அரசுக்கு அணு உலை விற்க ஒப்ப்ந்தம்
போட்டிருக்கும் பிரெஞ்ச் கம்பெனி அரேவா, டிரிகாஸ்டின் என்ற
இடத்தில் வைத்திருக்கும் அணுக்கழிவுகள் 2008ல் கசிந்தன. மொத்தம் 18 ஆயிரம் லிட்டர் யுரேனியம் சொல்யூஷன் பரவி நிலத்தடி நீரை மாசாக்கியதில், கஃபேரெ, லௌழான் பகுதிகளில் யாரும் எந்த தண்ணீரையும் குடிக்கவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதிக்க வேண்டியதாயிற்று. அந்தப் பகுதித் தண்ணீரில் குளிக்கக்கூட வேண்டாம் என்று தடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் மீன்களை உண்ணமுடியாது.
 
ஜெர்மனியின் அணுக்கழிவுகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில்
ஒன்று அசே சுரங்கம். இது பழைய உப்பு சுரங்கம். இங்கே 2000
அடிக்குக் கீழே ஒரு லட்சத்து 26 ஆயிரம் பீப்பாய்களில் கழிவுகள்
கிடக்கின்றன. எல்லாம் கசிந்து பெரும் விபத்து ஏற்படும் நிலை இப்போது வந்துவிட்டது. உடனே இவற்றை தோண்டி எடுத்து பத்திரமான இடத்துக்கு மாற்றாவிட்டால் பெரும் ஆபத்து. இதற்கு ஆகப்போகும் செலவு 500 கோடி டாலர்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.
 
அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அணுக் கழிவுகள் டன்
கணக்கில் குவிந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் எடுத்துப் போய்
யுக்கா மலைகளில் ஆழமாகப் புதைத்துவிட்லாம் என்று திட்டம்
தீட்டப்பட்டது. இதற்கு மொத்தம் 5400 கோடி ரூபாய் செலவாகும்
இது 150 வருடங்களுக்கு அந்த இடத்தை பராமரிப்பதற்கான செலவு.
அப்புறம் லட்சக்கணக்கான வருடங்கள் பராமரிக்க வேண்டும்.இந்த
திட்டத்துக்காக இதுவரை 1500 கோடி ரூபாய் செலவு செய்தபிறகு இது வேலைக்கு ஆவாது என்று ஒபாமா திட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மாற்று திட்டம் யோசியுங்கள் என்று சொல்லிவிட்டார். காரணம் நாடு முழுவதும் இருந்து டன் கணக்கில் அணுக்கழிவுகளை யுக்கா மலைக்கு கொண்டு போவது பெரிய ஆபத்து. அதனால் எல்லா கழிவும் இப்போது அணுகுண்டு தயாரிப்பு நிலையம் உள்ள இடத்திலேயே இருக்கட்டும் என்று வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் மின் நிலையங்களிலிருந்து மட்டும் 64 ஆயிரம் டன் கழிவு குவிந்திருக்கிறது, வருடத்துக்கு 2 ஆயிரம் டன் சேர்கிறது.
 
ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அணு உலையில்
வருடத்துக்கு 2 டன் அணுக் கழிவு உற்பத்தியாகும். ஒரு அணு
மின்நிலையத்தின் ஆயுள் 30 முதல் 40 வருடம்தான். அதன்பின்னர்
அதில் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியாது. ஆனால் அந்த 40
வருடத்தில் சேர்ந்த அணுக் கழிவுகளை அதன்பின்னர் லட்சக்கணக்கான வருடத்துக்கு பாதுகாப்பாக வைக்காவிட்டால் நம் கொள்ளுப் பேரன்,எள்ளுப் பேத்திகளெல்லாம் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை சந்திக்க நேரிடும். எவ்வளவு முட்டாள்தனம் !
 
மகா முட்டாள்தனம்தான் ? சரி. மூடிய அணு உலையை என்ன செய்வார்கள் ? மோட்டார் தயாரிக்கும் எஞ்சினியரிங் கம்பெனி போன்றவற்றைப் பிரித்துப் போட்டு விற்பது மாதிரி விற்கமுடியுமா?

நிச்சயம் அப்படி பிரித்து விற்கமுடியாது. அது இன்னொரு
தலைவலி. அணு உலையை 30 வருடத்தில் மூடுவது என்பது
வெறுமே மூடிவிட்டுப் போவது அல்ல. அந்த மூடிய உலையையும்
லட்சக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கவேண்டும். மூடிய
ஆலைக்கு பிரும்மாண்டமான சமாதி கட்ட வேண்டும். செர்னோபில்லில் நான்கு லட்சம் கன மீட்டர் அளவு கான்கிரீட்டும் 7300 டன் இரும்பும் செலவிட்டு சமாதி கட்டினார்கள். ஆனால் 25 வருடம் கழித்து அதை மீறி கதிரியக்கம் வெளியே கசிகிறது. எனவே இப்போது 20 ஆயிரம் டன் எடையில் 100 மீட்டர் உயரம், 250 மீட்டர் அகலம், 160 மீட்டர் நீளத்தில் இன்னொரு அடுக்கு சமாதி கட்டப் போகிறார்கள். இது 100 வருடம் வரை கசிவு வராமல் தடுக்கும் என்பது கணக்கு. அப்புறம்? கொள்ளுப் பேரன்களும் கொள்ளுப் பேத்திகளும் வந்து அடுத்த சமாதி கட்ட வேண்டியதுதான்.


புகோஷிமாவில் சமாதி கட்ட ஆரம்பிக்கவே இன்னும்
ஒரு வருடமாகும். கிட்ட நெருங்கமுடியாத வெப்பம். மூன்று
உலைகளில் மேலிருந்து கான்கிரீட் கலவையை ஊற்றி அப்படியே
சமாதி செய்வது திட்டம். நான்காவது உலையில் மேலிருந்து
ஊற்றமுடியாது. அங்கேதான் யுரேனியம் எரிபொருள் கதிர்வீச்சுடன்
கனன்றுகொண்டிருக்கிறது. அதை வெளியே எடுக்கவும் முடியாது. 150 டன் எடையுள்ள பொருளைத் தூக்கும் கிரேன்கள் வைத்து அதை
எடுக்க வேண்டும். அப்படி எடுப்பதையும் திறந்த வெளியில் காற்றில்
செய்யமுடியாது. கதிரியக்கம் காற்றில் பரவும்.
 
தண்ணீருக்குள் வைத்து செய்ய வேண்டும். எப்படி அதைச்
செய்வது ? மொத்த உலையையும் சுற்றி ஒரு பிரும்மாண்டமான
கட்டடம் கட்டி அதை தண்ணீர் தொட்டி போல ஆக்கி அதில் தண்ணீர்
நிரப்பி உலையை மூழ்கடித்தபின் கிரேனில் கதிரியக்க பொருட்களைத்
தூக்கலாம். நம் கோவில் தேரை மூடுவது போல ஷெட் கட்டுகிறார்கள் அல்லவா, அந்த மாதிரி. ஆனால் இந்த உலையின் சைஸை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய தண்ணீர் தொட்டி கட்டவேண்டும் ! 

இதையெல்லாம் செய்ய இன்னும் பல வருடம் தேவைப்படும்.
இத்தனைக்கும் பிறகும் புகோஷிமா உலையிலிருந்து கதிரியக்கம்
பரவும் வாய்ப்பு உண்டு. கீழ்பக்கம் பூமி வழியே கதிரியக்கம் பரவும் !

அப்புறமும் பத்து வருடத்துக்கு ஒரு முறை வீதம் லட்சக்கணக்கான
வருடங்களுக்கு இந்த ச்மாதிகளைப் புதுப்பித்து பாதுகாத்து
வரவேண்டும்.

கல்பாக்கத்திலோ கூடங்குளத்திலோ பெரிய விபத்து நடந்தால்
நாமும் இந்த மாதிரி கொலைவெறி விளையாட்டெல்லாம் விளையாடிப் பார்க்கலாம். கூடங்குளம் இன்னும் இயங்க ஆரம்பிக்காததால், கல்பாக்கத்துக்கு வாய்ப்பு அதிகம். தவிர அங்கேதான் இந்தியாவின் அணு ஆயுத வேலைகளும் நடக்கின்றன. அது தவிர, இந்தியாவின் மொத்த அணுக் கழிவுகளையும் கல்பாக்கத்திற்குக் கொண்டு வந்து அங்கே பூமிக்குக் கீழே புதைப்பதுதான் திட்டம். இப்போது தொட்டிகளில் வைத்திருக்கிறார்கள். உண்மையில் கூடங்குளத்தை
ஆரம்பிக்காதே என்ற கூக்குரலுக்கும் முன்பாகவே கல்பாக்கத்தை
மூடு என்பதைத் தொடங்கியிருக்கவேண்டும்.

ஏனென்றால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட அணுசக்தித்
துறையின் பாதுகாப்புத் திறன நம்பிக்கைக்குரியதாக இல்லை.
மருத்துவ நோக்கங்களுக்காக, கல்விக்கூட ஆய்வுகளுக்காக
பயனபடுத்தப்படும் கதிரியக்கப் பொருட்கள் உடபட் அணு சக்தித்
துறையின் கண்காணிப்பின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கவேண்டும் என்பது இந்தியாவில் சட்டம்.
 
ஆனால் இரண்டு நிகழ்ச்சிகள் அதிரவைக்கின்றன. ஒன்று
ஹைதராபாதில் இருக்கும் அணுசக்தி எரிபொருள் சுத்திகரிப்பு
வளாகத்துக்கு வெளியே இருக்கும் குப்பைமேட்டில் 1982ல் குப்பை
பொறுக்கும் ஒரு சிறுமியும் அவள் சகோதரனும் குப்பைகளைக்
கிளறிக் கொண்டிருந்தபோது அதிலிருந்த ஒரு பொருள் அவர்களை
சுட்டெரித்ததில் இருவரும் தீக்காயங்களால் இறந்தார்கள். அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் என்னுடன் பங்கேற்ற ஓய்வு பெற்ற அணுவிஞ்ஞானியும் மத்திய அரசு கூடங்குளம் மக்களின் பயத்தைப் போக்கஅமைத்த உயர்நிலைக்குழு உறுப்பினருமான் திரு பாலுவிடம் இந்த சம்பவத்தை சொல்லி குப்பை மேட்டில் அலட்சியமாக் ஆபத்தான பொருட்களைத் தூக்கி எறியும் அவர் துறையினரை எப்படி நம்புவது என்று கேட்டேன். அந்தப் பொருள் ஆபத்தானதுதான். ஆனால் கதிரியக்கம் உடையது அல்ல. அது அங்கே வந்திருகக்கூடாதுதான். ஆனால் அணு விஞ்ஞானிகள் எப்போதோ ஒரு தடவை வழுக்கி விழுந்தால், அதற்காக அவர்களுக்கு நடக்கவே தெரியாது என்று சொல்லுவீர்களா?” என்று கேட்டார். நீங்கள் வழுக்கி விழுந்தால் நாங்கள் அல்லவா சாகிறோம்என்று பதில் சொன்னேன்.
இன்னொரு நிகழ்ச்சி 2010 ஏப்ரலில் டெல்லி மாயாபுரி மார்க்கெட்டில்
நடந்தது. அங்கே இருக்கும் காயலான் கடை வியாபாரி ஒருவரும்
அவர் கடைத் தொழிலாளர்களும் மோசமான கதிர் வீச்சு சிக்கலுடன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். கடைக்காரர் இறந்தார்.

மார்க்கெட்டில் ஆய்வு செய்தபோது பல கடைகள் கதிர்வீச்சில்
அங்கே பாதிக்கப்பட்டிருந்தன. கதிர் வீச்சு எதிலிருந்து வருகிறது என்று பார்த்தால் கோபால்ட் 60 இருந்த காமா செல் கருவிதான்.
டெல்லி பல்கலைக்கழக வேதியியல் துறையில் ஆய்வுக்கு
வைத்திருந்த அந்தக் கருவியில் கதிர்வீச்சு செத்துவிட்டது என்ற
தவறான அடிப்படையில் இனி பயனற்றது என்று ஏலத்தில் விடப்பட்டு பழைய இரும்புக் கடைக்கு வந்திருக்கிறது. கதிரியக்கப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் அணுசக்தித் துறை அனுமதி பெற்றுதான் வாங்கவோ விற்கவோ ஏலம் விடவோ முடியும் என்ற சட்டமுள்ள நிலையில் இப்படி நடந்திருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் கூட 2011 மே 30 அன்று, சூரத்
அருகே இருக்கும் காக்ரபார் அணுமின் நிலையத்தில் நான்கு தற்காலிக தொழிலாளர்கள் ஜெயசிங், பாச்சு, தினேஷ், திலேஷ் ஆகியோர் தவறுதலாக கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பயன்படுத்திய எரிபொருளை அனுப்பும் குழாயை சுத்தப்படுத்தி பெயிண்ட் அடிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அந்தக் குழாய் 15 அடி நீளமும் 9 அடி அகலமும் உடையது. அதற்குள் அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோதே, கண்ட்ரோல் அறையில் இருந்தவர்களின் தவறால், அந்த குழாய் வழியே யுரேனியம் எரிபொருள் அனுப்பப்பட்டுவிட்டது. அதனால் தொழிலாளர்களுக்கு கதிர் வீச்சு ஏற்பட்டது.
 
உடல்நலம் பாதிக்கப்பட்ட நான்கு தொழிலாளர்கள் தங்களுக்கு
நிரந்தர வேலை தரப்படவேண்டுமென்று மாவட்ட கலெக்டரிடம்
முறையிட்டபிறகு அவர் விசாரித்ததால்தான் இந்த விஷயம் மூன்று
மாதம் கழித்து ஆகஸ்ட்டில் வெளியே தெரிய வந்தது. வேறு வழியின்றி அணுசக்தி துறை நடந்ததை ஒப்புக் கொண்டது. இல்லாவிட்டால் கமுக்கமாக இருப்பதுதான் அதன் வழக்கம். மனிதத் தவறால் இது நடந்துவிட்டதாக சொல்லியிருக்கிறது. தவறு செய்த கண்ட்ரோல் ரூம் அலுவலர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? ஒரு அலவன்ஸ் கட். அவர்கள் திரும்பவும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்களாம்.
இப்படி இந்தியாவில் யுரேனியத்தைத் தோண்டி எடுக்கும் சுரங்கம்
முதல் கடைசியில் மின்சாரமும் அணுகுண்டும் தயாரிக்கும்
தொழிற்சாலை வரை சின்னச் சின்னதாகவும் பெரிது பெரிதாகவும்
தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இங்கே செர்னோபில்லோ புகோஷிமாவோ இன்னும் வரவில்லையென்பது ஆறுதலே தவிர வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 
யுரேனிய சுரங்கமா ? அவை எங்கே இருக்கின்றன ?
அங்கே என்ன நடக்கிறது ?

ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜாதுகுடா பகுதியில் நெய்வேலி
போன்ற திறந்தவெளி சுரங்கங்களில் 1967 முதல் இந்திய அரசு
யுரேனியத்தை அகழ்ந்தெடுக்கிறது. இந்த சுரங்கங்களுக்கு வேலி
கிடையாது. ஆபத்தான பகுதி என்ற அறிவிப்பு கூட கிடையாது.
சுரங்கத்திலிருந்து மஞ்சள் கேக் எனப்படும் யுரேனியத்தை ஏற்றிச்
செல்லும் லாரிகளுக்கு சரியான மூடு கவசம் எதுவும் கிடையாது.
லோடிங் செய்யும் கூலிகளுக்கும் எந்த பாதுகாப்பு உடையும்
இல்லை.சுற்றிலும் 30 ஆயிரம் ஏழை கிராமவாசிகள் (ஆதிவாசிகள்)
வசிக்கின்றனர்.
 
யுரேனியத்தை மண்ணிலிருந்து பிரித்து கட்டிகளாக்கி அனுப்பியபிறகு இருக்கும் கழிவுகளை சுரங்கப் பகுதியில் மூன்று பெரிய யுரேனியக் கழிவுக் குட்டைகளில் தேக்குகின்றனர். டிசம்பர் 2006ல், இங்கே யுரேனியக் கழிவு நீரை எடுத்து வரும் குழாய் உடைந்து அந்த விஷ நீர் கிராமவாசிகளின் வீடுகளிலும், ஓடை வழியே போய் ஸ்வர்ணரேகா ஆற்றிலும் கலந்தது. ஒவ்வொரு வருடமும் குழாய் உடைந்து விஷக் கழிவு மக்களை பாதிப்பது இங்கே சகஜமாகிவிட்டது. ஜூன் 2008ல் பெய்த பெருமழையில் ஜம்ஷெட்பூர் அருகே இருக்கும் துராம்தி பகுதியில் இருந்த யுரேனியம் கழிவு நீர் குட்டையும் மழை நீரும் கலந்து சுற்றிலும் இருக்கும் கிராமங்கள், குளங்கள், வயல்களில் எல்லாம் பரவிவிட்டது. யுரேனியக் கழிவுக் குட்டையை பாதுகாப்பாக வைக்க இதுவரை அரசு எதுவும் செய்யவில்லை.
 
கழிவுநீர் கிராமத்துக்கு வரும் ஓடையில் தொடர்ந்து கலந்து வருகிறது. அந்த நீரைப் பயனப்டுத்தும் மக்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. பிறவி ஊனம், மலட்டுத் தன்மை, மரபணு சிதைவு என விதவிதமான பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பகுதியில் வாழும் பெண்களில் 47 சதவிகிதம் பேருக்கு மாத விலக்கு சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற அமைப்பான அணுப் போருக்கு எதிரான மருத்துவர் கழகத்தின் இந்தியக் கிளை இங்கே 2007ல் நடத்திய ஆய்வில் இங்கே பத்து சதவிகிதம் குழந்தைகள் பிறந்த உடனே இறப்பதும், பல கிராமங்களில் புற்று நோய் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. முப்பது வருடமாக இந்த யுரேனிய சுரங்கங்களின் ஆபத்தான நிலை பற்றி சூழல் இயக்கங்கள் பல முறை சொல்லியும் அணுசக்தி துறை கண்டுகொள்வதே இல்லை.
 
சுரங்கத்துக்காக மக்களின் நிலத்தை தொடர்ந்து அரசு எடுப்பதை
எதிர்த்து பல போராட்டங்கள் நடந்துவருகின்றன. சரியான இழப்பீடு
தராத பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது. அடுத்து ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் வெட்ட அரசு முடிவெடுத்திருக்கிறது.
ஜார்கண்டிலிருந்து யுரேனியம் கேக்கை ஹைதராபாதில் இருக்கும்
எரிபொருள் சுத்திகரிப்புஆலைக்கு லாரிகளில் அனுப்புகிறார்கள். இந்த
லாரிகள் விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடக்கிறது. ஜூலை 2007ல்
ஸ்ரீகாகுளம் நரசிங்கபேட்டையில் 62 பீப்பாய் நிறைய யுரேனியம் ஏற்றி வந்த கண்டெய்னர் உருண்டு பக்கத்து வயலில் போய் விழுந்தது. ஆனால் எந்தக் கசிவும் ஏற்படவில்லை என்பது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. அக்டோபர் 2011ல் மறுபடியும் இதே இடத்தில் இன்னொரு யுரேனியம் பெராக்சைட் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளாயிற்று. இந்த முறையும் எந்தக் கசிவும் ஏற்படவில்லை என்றது அணுசக்தித் துறை. பல விபத்துகள் வெளியிடப்படுவதே இல்லை. லாரியில் என்ன இருக்கிறது என்பதே மறைக்கப்பட்டுவிடும்.
 
ஹைதராபாதில் இருக்கும் எரிபொருள் சுத்திகரிப்பு வளாகத்தின்
குப்பைமேடு சாதனையை முன்பே பார்த்தோம். இந்த வளாகத்தில்
தினசரி சுமார் 50 ஆயிரம் டன் கதிரியக்க ஆபத்துள்ள கழிவு நீர்
வெளியேற்றப்படுகிறது. இதைக் குட்டை கட்டி தேக்கிவருகிறார்கள்.
இதிலிருந்து கழிவு நீர் பூமிக்கடியில் கசிந்து சுற்று வட்டார நிலத்தடி
நீரை முற்றிலும் கெடுத்துவிட்டது. வளாகத்துக்கு அடுத்திருக்கும்
அசோக் நகர் குடியிருப்பினர் கிணற்று நீரைப் பயன்படுத்தக் கூடாது
என்று அணுசக்தி துறை அதிகாரப்பூர்வமாகவே உத்தரவிடவேண்டிய
நிலை வந்துவிட்டது.

எனவே அணு மின் நிலையங்களினால் தொடக்கம் முதல்
இறுதி வரை ஆபத்துதான். விபத்து நடந்தால் பேராபத்து. பெரிய
விபத்து இல்லாவிட்டாலும், சுரங்கம் முதல் அணு நிலையம் வரை
சுற்றுச்சூழல் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுகிறது. நீர், காற்று, நிலம்
பாழாகிறது. மக்களுக்கு நோய்கள் வருகின்றன. உலகம் முழுவதும்
அணு மின் நிலையங்களை சுற்றி மக்கள் வாழும் பகுதிகளில் இந்த
பாதிப்புகள் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின்
அணு உலைகள் இயங்கும் 65 இடங்களில் சுற்றுவட்டாரங்களில்
ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இங்கே சுயேச்சையான மருத்துவ ஆய்வுகள் செய்ய இந்திய அரசு
சம்மதிப்பதில்லை. கல்பாக்கத்தில் பணி புரியும் ஊழியர்களில் பலர்
புற்று நோயால் இறந்திருக்கிறார்கள். ஒரே பிரிவில் வேலை செய்த
மூவர் அடுத்தடுத்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்கள்.
சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு புற்று நோய், நெஞ்சு
நோய் அறிகுறிகளுடன் வருபவர்களிடம் கல்பாக்கத்தில் இருந்து
வருகிறீர்களா என்று மருத்துவர்கள் விசாரிப்பதும் வேறு இடத்துக்கு
குடி பெயருங்கள் என்று அறிவுரை சொல்வதும் காலம் காலமாக
நடக்கிறது. கல்பாக்கத்தை சுற்றியும் உள்ள கிராமங்களில் புற்று
நோய் அறிகுறிகள், மலட்டுத்தன்மை, பிறவியிலேயே உடல் ஊனம்
போன்ற சிக்கல்கள் உள்ளன. கதிரியக்கம் செல்களை பாதிப்பதால்
ஆறு விரல்களுடன் குழந்தைகள் பிறப்பது அதிகம் காணப்படுகிறது.
இது பற்றி மருத்துவர் புகழேந்தி தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு
வாரிய அதிகாரிகளுக்கும் அணு உலை அதிகாரிகளுக்கும் பல
வருடம் முன்பே தெரிவித்தார். ஆனால் அவர்கள் எந்த ஆய்வையும்
மேற்கொள்ளவில்லை.

அணுசக்தி துறையின் கண்காணிப்பு வாரியம் என்பதே ஒரு
கண்துடைப்பாக ஆக்கப்பட்டுவிட்டது. அதன் தலைவராக 1993லிருந்து 1996 வரை இருந்த கோபாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றபோது தெளிவாகச் சொல்லிவிட்டார்:அணுசக்தித் துறை எல்லாம் ஒழுங்காக இருப்பதாகத் தான் சொல்வதை அரசும் மக்களும் அப்படியே நம்பவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் அப்படி இல்லை என்பதை நிரூபிக்க என்னிடம் ஆவணங்கள் உள்ளன.” 

ஆனால் மின்சாரத்துக்கு வேறு வழியே இல்லை. அணு
மின்சாரத்தைத்தான் நம்பியாகவேண்டும் என்கிறார்களே ?

அது இன்னொரு கடைந்தெடுத்த பொய். அணு மின்சாரம் பற்றி
சொல்லப்படும் நான்கு பிரதானப் பொய்களில் இதுவும் ஒன்று. 1. அணு மின்சாரம் தூய்மையானது. 2. பாதுகாப்பானது. 3.விலை மலிவானது. 4. இதை விட்டால் இனி வேறு வழியில்லை. முதல் இரண்டும் எப்படிப்பட்ட மோசடிகள் என்பதை மேலே பார்த்துவிட்டோம். இனி அடுத்த இரண்டைப் பார்ப்போம்.

விலை மலிவானது என்பது அணுசக்தி துறையின் அடுக்கடுக்கான
பொய்களில் இன்னொன்று. அவ்வளவுதான். எந்த அடிப்படையில்
விலையைக் கணக்கிடுகிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்த
வேண்டும். ஒரு அணு உலையைக் கட்ட 10 முதல் 15 வருடமாகிறது.ஒவ்வொரு அணு உலையும் கட்ட ஆரம்பிக்கும்போது சொல்லும் மதிப்பீடு வேறு. பத்து வருடம் கழித்துக் கட்டி முடிக்கும்போது செலவு பல மடங்கு அதிகம். அப்படித்தான் கூடங்குளம் உலைக்கும் ஆரம்பத்தில் 6000 கோடி என்றார்கள். கடைசியில் இது 13 ஆயிரம் கோடியாகிவிட்டது. அது அதிகபட்சம் 30 வருடம் இயங்கலாம்.பின்னர் மூடுவிழா, சமாதி கட்ட இன்னொரு பத்து வருடம் ஆகும்.
 
இந்த ஐம்பது வருடங்களில் ஆகும் செலவின் அடிப்படையில்
முப்பது வருடங்களில் தயாரித்த மின்சாரத்துக்கு விலை நிர்ணயித்தால் அந்த விலை எவ்வளவு என்று சொல்லவேண்டும். பிறகு அணு உலையையும் கழிவுகளையும் லட்சக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கும் செலவுக்கு எங்கிருந்து பணம் வரும்

வெறுமே உலை இயங்கும்போது ஆகும் செலவை மட்டும்
அடிப்படையாகக் கொண்டு மின்சாரத் தயாரிப்பு செலவைக்
கணக்கிட்டால் கூட இதில் எல்லா செலவுகளையும் கணக்கிட்டு
சொல்வதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு அணு உலைக்கு தினசரி
பத்து லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது. லிட்டருக்கு
எவ்வளவு காசு அடிப்படையில் இந்த செலவு கணக்கிடப்படும்

அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் விலை எவ்வளவு
?
ஆனால் அரசு கொடுக்கும் மான்யம் எவ்வளவு ? கைகா
அணு உலைகளில் பயன்படுத்தும் கன நீர் செலவுக் கணக்கை
மதிப்பிட்டபோது ஒரு உலைக்கு கன நீருக்காக மட்டும் அரசு தரும்
மான்யம் 1450 கோடி ரூபாய் என்பது தெரியவந்தது. இது உலையை
நிறுவிய முதலீட்டுச் செலவில் 17 சதவிகிதம் !

இது தவிர அணு உலைகளில் நடக்கும் விபத்துகளினால் ஆகும்
இழப்பு, செலவு இவற்றையெல்லாம் கணக்கிடவேண்டும். புகோஷிமா
விபத்துக்குப் பிறகு ஜப்பான் அணுமின்சார தயாரிப்புச் செலவில்
விபத்துகளினால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை சந்திக்க ஆகும்
செலவுகளையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்று முடிவு
செய்திருக்கிறது. அப்படிச் செய்தால் விலை அதிகமானது என்று
சொல்லப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை விட அணுமின்சாரத்தின்
விலை அதிகமாகிவிடும்.
 
கல்பாக்கம் அணு உலைகள் 1987ல் இரண்டு வருடங்கள்
சிக்கல்களினால் மூடிக் கிடந்த சமயத்தில் ஏற்பட்ட இழப்பு 30 கோடி
டாலர்கள். இங்கே 2002ல் சோடியம் கசிவு ஏற்பட்ட விபத்தில் இழப்பு
மூன்று கோடி டாலர்கள். . தாரப்பூர் அணு மின் நிலையங்கள்தான்
உலகிலேயே மிக அதிகமான கதிர் வீச்சு சிக்கல்களுக்குள்ளானவை.
இங்கே 1989ல் ஐயோடின் கசிவு எற்பட்ட விபத்தில் இழப்பு சுமார் 8
கோடி டாலர். ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் 1995ல் ஹீலியம் கசிவு ஏற்பட்டு 2 வருடம் பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பு 28 கோடி டாலர்.

விபத்தில் நஷ்ட ஈட்டுக்கு யார் பொறுப்பு ? உலையை நடத்துபவர்கள்தானே ?

அது இன்னொரு பிரச்சினை. இந்தியாவில் இதுவரை எல்லா
அணு உலைகளுமே மத்திய அரசின் அணுசக்தித் துறையால்
கட்டப்பட்டு நடத்தப்படுபவை. அதில் விபத்து, நஷ்ட ஈடு என்றால்
அரசுதான தரவேண்டும். ஆனால் மன்மோகன் அரசு இனி சர்வதேச
தொழிலதிபர்கள், வெளிநாட்டு அரசு கம்பெனிகள், அவர்களுடன்
கூட்டு சேரும் இந்திய தனியார் முதலாளிகளிடம் அணு உலைகளை
கட்டி இயக்கும் பொறுப்பை தர முடிவுசெய்து ஒப்பந்தங்கள் போட
ஆரம்பித்துவிட்டது. அதற்கு வழி செய்யும் 123 ஒப்பந்தத்தைத்தான்
மன்மோகன்சிங் இடது சாரிகள், பி.ஜே.பி ஆகியோரின் எதிர்ப்பை மீறி
அமெரிக்காவுடன் செய்தார். அப்போது ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு
எம்.பிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்பது இப்போது
விக்கிலீக்ஸ் அமபலப்படுத்தியிருக்கும் அமெரிக்க தூதர்களின் ரகசியச் செய்திகளால் நிரூபணமாகியிருக்கிறது.
 
அதையடுத்து மன்மோகன் அரசு அவசர அவசரமாக கொண்டு
வந்த இன்னொரு சட்டம் நியூக்ளியர் லயபிலிட்டீஸ் பில் எனப்படும்
அணு உலை விபத்து இழப்பிடுக்கான சட்டம். இந்த சட்டப்படி
தனியார் நிறுவனங்கள் நிர்மாணிக்கும் அணு உலையில் விபத்து
ஏற்பட்டால், நஷ்ட ஈட்டை ஓரளவுக்கு மேல் தரமுடியாது என்றும்
இந்திய அரசேதான் தரவேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதன்படி தனியார் முதலாளியின் அதிகபட்ச பொறுப்பு 30 கோடி
டாலர்தான். அதாவது சுமார் 1500 கோடி ரூபாய். இதற்கு மேல்
ஆகும் விபத்து இழப்பீடு செலவில் 500 கோடி ரூபாயை இந்தியாவில்
உலையை நடத்தும் ஆப்பரேட்டர் இந்திய அரசின் நியூக்ளியர் பவர்
கார்ப்பரேஷன் (அதாவது அதுவும் அரசுதான்) கொடுக்க வேண்டும்.
மேற்கொண்டு ஆகும் இழப்பீட்டு செலவு எல்லாம் அரசுடையதுதான்.
அதாவது மக்கள் பணம். நம் பணம்.

மன்மோகன் போட்டிருக்கும் அற்பமான இழப்பிட்டு தொகையைக்
கூட அமெரிக்க, ரஷ்ய அரசுகள் ரத்து செய்ய நிர்ப்பந்தித்து வருகின்றன. கூடங்குளம் உலைகளில் விபத்து ஏற்பட்டால் தனக்கு ஒரு பைசா கூட லயபிலிட்டி கிடையாது என்றே ரஷ்யா மன்மோகனுடன் போட்ட ஒப்பந்தத்தில் சொல்லியிருக்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா மன்மோகன் போட்ட துக்கிளியூண்டு இழப்பீடுச் சட்டத்தையும் காலி பண்ண தந்திரமாக வேலை செய்கிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் தீர்மானங்களின்படி அணு உலை சப்ளையர் ஒரு பைசா கூட நஷ்ட ஈடு தர வேண்டியதில்லை. இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா அங்கீகாரம் அளிக்குமென்று ஹிலாரி க்ளிண்ட்டனிடம் மன்மோகன்
ஒப்புக் கொண்டிருக்கிறார்.அதன்படி இந்திய அரசு ஒப்புதல் அளித்தால், சர்வதேச சட்டத்துக்கு விரோதமாக லயபிலிட்டி சட்டம் இருக்க முடியாதென்று காரணம் சொல்லி பாராளுமன்றத்தில் இழப்பீடு சட்டத்தை ரத்து செய்யலாம். இதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
மன்மோகன் போட்டிருக்கும் சொத்தையான சட்டப்படி அணு
உலை விபத்து ஏற்பட்டு நாம் பாதிக்கப்பட்டால் நாம் இழப்பீடு
கேட்டு கோர்ட்டுக்கும் போக முடியாது. அரசு நியமிக்கும் இழப்பீட்டு
கமிஷனரிடம் தான் விண்னப்பிக்கவேண்டும். அவர் தருவதை வாங்கிக் கொள்ளவேண்டும். அவர் உத்தரவுக்கு மேல் முறையீடாக கோர்ட்டுக்கு செல்ல முடியாது என்கிறது சட்டம். ஆனால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் கோர்ட்டுக்குப் போக அந்தக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது !

போபால் விபத்தில் நஷ்ட ஈடு பிரச்சினையே இன்னும்
தீரவில்லை. சாதாரண ரசாயன ஆலை விபத்து அது. அதுவே பல
தலைமுறைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துவிட்டது.
அணு உலை விபத்து பல மடங்கு அதிகமாக பாதிக்கக்கூடியது
என்பதற்கு ரஷ்யாவும் ஜப்பானும் சாட்சிகள்.

அணு உலை தொடர்பான இன்சூரன்ஸ் நிலையை ஆராய்ந்த
பொறியாளரும் தொழிற்துறை ஆலோசகருமான சி.ஈ. கருணாகரன்
தரும் விவரங்களைப் பார்ப்போம். அமெரிக்கா உள்ளிட்ட மேலை
நாடுகளில் தனியார் நடத்தும் அணு உலைகளுக்கு முழு இன்சூரன்ஸ்
செய்ய இன்சூரன்ஸ் கம்பெனிகள் முன்வருவதே இல்லை. விபத்து
ஏற்பட்டால் இழப்புச் செலவை அரசும் பாதிக்கப்பட்டவரும்தான்
ஏற்கவேண்டும். தனியார் கம்பெனியும் இன்சூரன்சும் சின்ன அளவிலேயே ஏற்பார்கள். செர்னோபில் விபத்தில் இழப்பீடு அறுபதாயிரம் கோடி டாலர்கள். புகோஷிமா மதிப்பீடு 25 ஆயிரம் கோடி டாலர்கள். அமெரிக்க சட்டப்படி புகோஷிமா அணு உலை ஆபரேட்டர் 30 கோடி டாலர்தான் தரவேண்டும். மீதி அரசு செலவு. இந்தியாவில் மன்மோகன் சட்டப்படி,சுமார் 12 லட்சம் கோடி இழப்பீட்டுக்கு உலை விற்றவர் வெறும் 1500 கோடிதான் தரவேண்டும்.

உலகத்தில் எங்கேயும் அணு உலை விபத்துக்குத் தனி நபர்
இன்சூரன்ஸ் கிடையாது. நம்முடைய ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியில், விபத்து இன்சூரன்ஸ் பாலிசியில் மெடிகல் இன்சூரன்ஸ் பாலிசியில் எல்லாம் நியூக்ளியர் விபத்துக்கு விதிவிலக்கு பொடி எழுத்தில் தரப்பட்டிருக்கும்.

அணு தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்று ஓயாமல் சொல்லும்
அப்துல் கலாம் போன்றவர்கள், ஏன் இன்சூரன்ஸ் கம்பெனிகளை
தைரியமாக அதற்கு இன்சூரன்ஸ் தரும்படி சொல்லக்கூடாது ?
விபத்து நடக்காது, கதிரியக்கத்தால் நோயே வராது என்று திரும்பத்
திரும்பச் சொல்லும் அணு உலைமுதலாளிகள் ஏன் சட்டத்தில்
தாங்கள் தரவேண்டிய இழப்பீட்டு தொகையை மிகக் குறைவாகவே
வைக்க இவ்வளவு நிர்ப்பந்திக்கிறார்கள்

எனவே அணுமின்சாரம் என்பதில் தயாரிப்புச் செலவும் அதிகம்.
விபத்து ஏற்பட்டால் சேத அளவும் அதிகம். இழப்பீடு குறைவு. எந்த
விதத்திலும் அணு மின்சாரம் மலிவானதே அல்ல.

1 கருத்து:

SURESHJI சொன்னது…

Good points.
I will try to spread this message.
Regards,
SURESH
Chennai

கருத்துரையிடுக