செவ்வாய், மார்ச் 11, 2014

ஆலிவ் ரிட்லி C/O சென்னை

'ஆலிவ் ரிட்லி பார்க்கப் போலாம்... ஃப்ரைடே நைட்!’ - தோழியிடம் இருந்து மெசேஜ். 'இப்படி ஒரு இங்கிலீஷ் படம் கேள்விப்பட்டது இல்லையே... அதுவும் ஏன் நைட் ஷோ போகணும்?’ என்றுதான் முதலில் தோன்றியது. பிறகுதான் தெரிந்தது, அது 'டர்ட்டில் வாக்’ எனப்படும் ஆமைக் கண்காணிப்புப் பணிக்கான அழைப்பு.
'ஆலிவ் ரிட்லி’ என்பது, உலக அளவில் அருகிவரும் ஆமை இனம். பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் 'கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் மாணவர்கள் கூட்டமைப்பு’ (Students Sea Turtle Conservation Network) ஒவ்வொரு வருடமும் நடத்தும் 'ஆமை நடை’க்கான அழைப்பு.
சென்னை நீலாங்கரை கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் நள்ளிரவில் நடக்க வேண்டும். அப்போது ஆமைகள் போட்ட முட்டைகளைக் கவர்ந்து பாதுகாப்பாகப் பொறிக்கவைத்து, குட்டி ஆமைகளை மீண்டும் கடலில்விட வேண்டும். இதுதான் அசைன்மென்ட்!  
சென்னை கடற்கரைகளில் அரங்கேறும் ஆமை முட்டையிடும் நிகழ்வை, கடந்த கால் நூற்றாண் டுக்கும் மேலாகக் கண்காணித்து, அருகிவரும் ஆமை இனத்தின் நீட்சியைத் தங்களால் முடிந்தமட்டும் நீளச்செய்கிறார்கள் எஸ்.எஸ்.டி.சி.என். அமைப்பினர்.
ஒரு வெள்ளி இரவில் நான் கலந்துகொண்ட 'ஆமை நடை’யின் லைவ் ரிலே இங்கே...  
''சோம்பேறியா இருக்கிறவங்களை 'ஆமை மாதிரி’னு சொல்றது, 'ஆமை புகுந்த வீடு உருப்படாது’... இப்படிச் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் பழக்கம். ஆனா, அந்த நினைப்பை எல்லாம் மாத்திக்கங்க. கடலைச் சுத்தமா வெச்சுக்கிறதுல ஆமைகளின் பங்கு அதிகம். நிலத்தில்தான் ஆமைகள் மெதுவாக நடக்கும். ஆனா, கடலுக்குள் சுறா, திமிங்கலங்களுக்கு எல்லாம் டேக்கா கொடுத்து நீந்தும். ஒரே வருஷத்துல அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு நீந்தி மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பும் அளவுக்கு வேகமாக நீந்தும். நம்மால் ஓடும் வேகத்துக்கு இணையா நீந்த முடியுமா?'' என ஆமைகளைப் பற்றி ஓர் அறிமுகம் கொடுத்தார் எஸ்.எஸ்.டி.சி.என். அமைப்பைச் சேர்ந்த அருண். அவர் கூறிய மேலும் பல தகவல்கள் ஆச்சரியத்தின் உச்சம்.
''உலகில் அருகிவரும் ஏழு வகை கடல் ஆமை இனங்களில் ஆலிவ் ரிட்லியும் ஒன்று. பொதுவா ஆமைகள் எங்கே பிறக்கிறதோ, அங்கேதான் முட்டையிடும். எந்தக் கடலில் இருந்தாலும் முட்டையிடும் பருவத்தில் தான் பிறந்த இடத்தைத் தேடி, கண்டம் தாண்டிகூட வந்துவிடும். அப்படி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை கடற்கரைகளில் பிறந்த ஆமைகளின் சங்கிலித் தொடர்ச்சிதான், இப்போ வரை ஆலிவ் ரிட்லி ஆமைகளை இங்கே ஈர்க்குது!
ஆலிவ் ரிட்லி இன ஆமைகளுக்கு இளஞ்சூடான கடல்நீரும், வெப்பமான கடற்கரையும் தேவை. அதனால்தான் அவை இந்தியப் பெருங்கடலில் நீந்தி சென்னைக்கு வருகின்றன. ஜனவரியில் இருந்து மார்ச் வரை முட்டையிடும். முட்டையிட்ட 45 நாட்கள் கழித்து குட்டி ஆமை வெளிவரும். வெளியே வந்ததுமே, வெளிச்சத்தை நோக்கிப் போகணும்னு அதன் மூளையில் இயற்கை, புரோகிராம் பண்ணியிருக்கு. ஏன்னா, கடல் நிலவொளியைப் பிரதிபலிக்கும். அந்த வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து கடல்ல போய் சேரணும். கடல் நீரைத் தொட்டதும் நீந்த ஆரம்பிச்சிடும். இதுதான் இயற்கையின் புரோகிராம். ஆனா, இப்போ கடற்கரையை ஒட்டி ஏகப்பட்ட விளக்குக் கம்பங்களை வெச்சுட்டதால், அந்த வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு கடலுக்கு எதிர்திசையில் நடந்து ஊருக்குள் போயிடுது. நாய்கள், அதைப் பார்த்தா கடிச்சுக் குதறிடும். சின்னப் பசங்ககிட்ட சிக்கினா, அதைக் கயித்துல கட்டி விளையாடியே கொன்னுடுறாங்க. மிஞ்சுறது வாகனத்துல அடிபட்டுச் செத்துப்போயிரும். அதனால் ஆமையின் முட்டைகளை நாங்க எடுத்து காப்பகத்தில் வைப்போம்.
45 நாள்கள் கழிச்சு குஞ்சுகள் பொறிச்சு வெளிவந்ததும், அதைக் கடல்ல விட்ருவோம். இப்போ நாம ஆமை முட்டை தேடிப் போவோமா?'' என்று அருண் கேட்டபோது, மணி நள்ளிரவு 12.  
மை முட்டைகளைக் கவரும் பயிற்சி பெற்ற சிறு குழுவைப் பின்தொடர்ந்தோம். அந்தக் குழுவைச் சேர்ந்த அகிலா, முட்டைகளை எப்படிக் கண்டுபிடித்துக் கவர்வது என்று தேடுதல் பணிகளுக்கு இடையில் விளக்கினார்.  
''நம்ம கடலுக்கு வரும் ஆலிவ் ரிட்லி 'மாஸ் நெஸ்ட்டிங்’ செய்யும் உயிரினம். அதாவது ஒரே நாளில் 20, 30 ஆயிரம் ஆமைகள் கூட்டமாக வெளியில் வந்து வெதுவெதுப்பான சூடு இருக்கும் நிலத்தில்தான் முட்டையிடும். கரையேறி வந்து, அதன் துடுப்பை வைத்து ஒரு அடிக்கு அழகா பானை வடிவில் பள்ளம் பறிக்கும். பிறகு, மேல் இருந்தவாறே 80 முதல் 150 முட்டைகள் வரை அந்தப் பள்ளத்துக்குள் இடும். ஆமை முட்டையின் ஓடுகள் மென்மையாகவும், ரப்பர் தன்மைகொண்ட டென்னிஸ் பால் அளவுக்கும் இருக்கும். ஒவ்வொரு முட்டையின் மேல்புறமும் சின்னக் குழிவோடு இருக்கும். அதனால், அடுக்கிவைத்ததுபோல அழகாக ஒன்றன் மேல் ஒன்றாக முட்டைகள் செட் ஆகிடும். முட்டையிட்ட பிறகு, ஆமைகள் அந்தக் குழியை மண் தள்ளி மூடிவிட்டு, நடனமாடுவது போல நடக்கும். அந்த இடத்தைச் சமமாக்குவதற்காகத்தான் அந்த நடனம்!'' என்று கூறிக்கொண்டே வந்தவர் சட்டென உற்சாகக் குரலில், ''அங்கே பாருங்க... ஒரு ஆமையின் தடம்!'' என்று சுட்டிக்காட்டிய இடத்தில் ஆமையின் காலடித் தடங்கள்.
ஓர் இடத்தில் அந்தத் தடங்கள் முடிந்து மணலை அமுக்கிவைத்ததுபோல இருந்தது. அந்த இடத்தில் ஒரு குச்சியை மெதுவாக உள்ளே விடுகிறார்கள். கடற்கரை மணல் வழக்கமான இறுக்கத்துடன் இல்லாமல், தளர்வாக இருக்க, அந்த இடத்தைக் குறித்துக்கொள்கிறார்கள். அங்கு கைகளால் மெதுமெதுவாக மணலை அகழ்ந்து பார்த்தால்... ப்பா..! சுமார் 150 முட்டைகள் நிலவொளியில் மணலுக்குள் மினுமினுத்தன! அந்த முட்டைகளைக் கவனமாக எடுத்துக்கொண்டு, அந்தப் பள்ளத்தை அளந்துகொண்டனர். அதே அளவில் காப்பகத்தில் மணல் பள்ளம் அமைத்து முட்டைகளைப் பத்திரப்படுத்துவார்களாம்!
முட்டை தேடும் படலத்துக்கிடையில் ஓர் அதிர்ச்சி காட்சி. முட்டையிட வந்த தாய் ஆமையொன்று நாய் கடித்தோ மீன் வலையில் சிக்கியோ கழுத்து, கால்களில் காயப்பட்டு பெரும் ரத்த சேதத்துடன் பரிதாபமாகத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த ஆமைக்கு நாங்கள் முதலுதவி அளிக்க, மனிதர்களின் அருகாமை காரணமாகப் பதற்றத்தில் துள்ளத் தொடங்கியது. ''ஆமைகள் குளிர் ரத்தப் பிராணி. ரொம்ப நேரம் நம்ம கட்டுப்பாட்டுல வெச்சிருக்க வேண்டாம். ஸ்ட்ரெஸ் ஜாஸ்தி ஆச்சுனா ஆமை மூக்குல இருந்து ரத்தம் வரும். ஏன்னா, மூக்கை ஒட்டித்தான் அதுக்கு மூளை இருக்கு. சீக்கிரம் கடல்ல விட்ருவோம்!'' என்று ஒரு சீனியர் சொல்ல, அதன் மூக்கின் அருகே தடவிக்கொடுத்தபடி விறுவிறுவென முதலுதவியை முடித்து ஆமையை கடலில் விட்டோம். மீண்டும் தொடர்ந்தது முட்டை சேகரிக்கும் பணி.  
அதிர்ஷ்டவசமாக அந்த இரவு நாங்கள் நான்கு 'நெஸ்ட்’களைக் கண்டோம். ஒவ்வொன்றிலும் சராசரியாக 150 முட்டைகள். ஆங்காங்கே பல ஆமைகள் இறந்தும் கிடந்தன. நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கிய 'ஆமை நடை’, அதிகாலை 4 மணிக்கு முடிந்தபோது, சுமார் 550 முட்டைகளைச் சேகரித்துவிட்டோம். இந்த சீஸனில் இதுவரை 40 'நெஸ்ட்’களில் இருந்து முட்டைகளைச் சேகரித்திருக்கிறது எஸ்.எஸ்.டி.சி.என். அதே சமயம் இறந்துகிடந்த ஆமைகளின் எண்ணிக்கை 150.
நாம் கடற்கரையில் வைக்கும் ஒரு சின்ன விளக்கு, ஆமை இனத்தையே அரிதாக்குகிறது. ஆனாலும் மனிதனின் அத்தனை இடையூறுகளையும் கடந்து, நூற்றாண்டுகளாக அடி மேல் அடி வைத்து வருகின்றன ஆமைகள்!
-ந.கீர்த்தனா, படங்கள்: ரா.மூகாம்பிகை

நன்றி: ஆனந்தவிகடன், 12-03-2014

திங்கள், மார்ச் 10, 2014

மீத்தேன் அரக்கன்! காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்

பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.
கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.
மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!  
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.
காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!  
மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது...
''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.  
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால்,                  35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால்          தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த  40 ஆண்டுகளுக்கும்  மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!  
''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.
''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம்  ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!

கூடங்குளம் தரும் படிப்பினை!
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார்.
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
 கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும்.
  கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!

-பாரதி தம்பி
ஓவியங்கள்: ஹாசிப்கான், படங்கள்:கே.குணசீலன்
நன்றி: ஆனந்தவிகடன், 12.03.2014