வியாழன், டிசம்பர் 29, 2011

ராஜா வீட்டு கன்னுக்குட்டி(ராகுல் காந்தி)யே... ரவுசு பண்ணாதீங்க!

எதிர்கால பாரதத்தோட பிரதமர்; கல்லாகட்டி கல்லாகட்டி நாட்டையே வித்துப் போடத் துடிக்கற கலப்படக் கதர் சொக்காகாரங்களோட கனவு நாயகன்; இன்னும் இருநூறு வருஷத்துக்கும் இளைஞர்களோட நம்பிக்கை நட்சத்திரம்; இந்தியாவைப் பரம்பரையா ஆள துடிக்கற பண்டிட் குடும்ப வாரிசு... ராகுல் காந்திக்கு, 'காங்கிரஸ் ஆட்சியில ஏதோ இந்த அளவோட தப்பிச்சோமே'னு கோவணத்தோட திரியற தென்னாட்டு கோவணாண்டி கும்பிடு போட்டுக்கறான்!


''சில்லறை வணிகம் மூலமா, அன்னிய நாட்டு மூலதனம் இந்தியாவுல குவிஞ்சா, இங்க பெரிய பெரிய குடோன் கட்டுவாங்க, குளுகுளு குடோனா கட்டுவாங்க. விவசாயியோட தோட்டத்துக்கே வந்து காய்கறிகள வாங்குவாங்க. இடைத்தரகர் கமிஷன் தொல்லையெல்லாம் தொலைஞ்சுடும். விவசாயிங்க வீட்டுல பணமா குவியும்'னு உத்தரபிரதேச கூட்டத்துல, பொளந்து கட்டிட்டீங்களாமே! எங்க ஊரு இங்கிலீபீசு வாத்தியாரு சொன்னாருங்க தம்பி.

ஆமாம், அதெல்லாம் நெசந்தானா? எங்கள வெச்சுக்கிட்டு காமெடி, கீமெடி பண்ணலயே! ஏன்னா, 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்'னு, ஏற்கெனவே பலருகிட்டயும் பல தடவை அடிபட்டு நொந்து நூலாகிக் கிடக்கறோம்! அடச்சே... நீங்க, ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி; பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு முடிச்சவரு; நீங்க போய் பொய் சொல்லவா போறீங்க?


'அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்துயெல்லாம் காய்கறிங்க... கிலோ 4 டாலர், 6 டாலர், 8 டாலர்னு விக்குது. நம்ம நாட்டு மதிப்புக்கு, 200 ரூவா, 300 ரூவா, 400 ரூவா வரும்'னு இங்கிலபீஷ் வாத்தியாருதான் சொன்னாரு தம்பி. அப்படி அந்த நாட்டு கம்பெனிக நம்ம நாட்டுக்குள்ள வந்தா... அங்க விக்கிற விலையைக் கொடுத்துத்தானே வாங்குவாங்க. ஒரு கிலோ கத்திரிக்காய்க்கு 200 ரூவா, பாவக்காய்க்கு 300 ரூவா, தக்காளிக்கு 400 ரூவானு கொடுப்பாங்கதானே தம்பி? பின்ன எதுக்காக எல்லாரும் இந்த சூப்பர் திட்டத்தை எதுக்கறானுங்கனு தெரியலயே! பேசாம, நீங்களே இதுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுத்துப் போடுங்க! அதாவது, 'குறைஞ்சபட்சம் எந்தக் காய்கறியும் கிலோ 200 ரூபாய்க்குக் குறையாம கொள்முதல் செய்யப்படும்'னு அறிவிச்சுடுங்க. இந்த நாட்டுல இருக்கற அத்தனை கோவணாண்டியும் ஒங்க பின்னாடி ஓடி வந்துடறோம்!

ஆனா, கொஞ்ச காலத்துக்கு முன்ன, இப்படி சொல்லிக்கிட்டு வந்த அம்பானியோட ரிலையன்ஷ் ஃபிரஷ், அடுத்த ஆளோட பிக்பஜார் இவங்கள்லாம், ஆரம்பத்துல தேன் ஒழுக பேசிட்டு... இப்ப தேடிப் போனாலும், வாங்க மாட்டேங்கறாங்களே! இதை நினைச்சாத்தான் நீங்க சொல்றத முழுசா நம்ப முடியல!

பாம்பு பார்க்கறதுக்கு அழகா, பளபளப்பாதான் இருக்கும். ஆனா, எலி வளைக்குள்ள புகுந்துடுச்சுனு வெச்சுக்கோங்க... குடும்பத்தோட எலி காலி! எங்களை எலி கணக்கா காலி செய்றதுனு முடிவு எடுத்துட்டீங்களோனும் சந்தேகம் எட்டிப் பார்க்குது தம்பி... வேற ஒண்ணும் இல்ல!

'குளுகுளு குடோன்ல உருளைக் கிழங்கைப் பாதுகாத்து... கூடுதல் விலைக்கு விக்கலாம்'னு வேற உத்தர பிரதேசத்துல சொல்லி இருக்கீங்களாம். நல்லா சொன்னீங்க யோசனை. எங்காளு ஒருத்தரு இப்படித்தான் ஈரோட்டுல மஞ்சள் விற்க போனாரு. குவிண்டால் 11 ஆயிரத்துக்குக் கேட்டாங்களாம். உங்கள மாதிரியே யோசிச்சு, குடோன்ல இருப்பு வெச்சுட்டு வந்துட்டாரு. ஆறு மாசம் ஆச்சு, ஒரு வருஷம் ஆச்சு... இப்ப வெறும் நாலாயிரத்துக்குத்தான் கேட்கறாங்களாம். குடோன் வாடகைக்கும், வட்டிக்கும் எங்க போறது? பொண்டாட்டி கழுத்த தடவலாமா... கழுத்துல சுருக்கு போட்டுக்கலாமானு பித்து பிடிச்ச மாதிரி அலையறாரு தம்பி. குவிண்டால் நாலாயிரம், ஐயாயிரம் விக்கிற மஞ்சளுக்கே இந்த கதினா... கிலோ ஒரு ரூவா, ரெண்டு ரூவானு விக்கிற உருளைக்கிழங்கை நெனைச்சா... கதி கலங்குது தம்பி! இதுதான், நீங்க சொல்ற அந்நிய முதலீட்டை நினைச்சு அலற வெக்குது தம்பி!

இதையெல்லாம் மீறி, நீங்க சொல்றத தைரியமா நான் நெஞ்சுல ஏத்திக்கத்தான் பாக்கறேன்... ஆனா பாருங்க, அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன வந்த அந்நிய நாட்டு விதைக் கம்பெனிக விஷயம், அதுக்கும் தடைபோடுது. விவசாயிக கோடி கோடியா பணத்தை அறுவடை செய்யலாம்னு அந்தக் கம்பெனிளுக்கு கதவுகளைத் திறந்து விட்டாங்க உங்க முன்னோருங்க. ஆட்டம், பாட்டத்தோட வந்த அமெரிக்க மான்சான்டோ கம்பெனி... 400 கிராம் பி.டி. பருத்தி விதையை, 1,800 ரூவா, ரெண்டாயிரம் ரூவானு வித்துச்சு. பருத்திக் காட்டுல பணமா தொங்கும்னு ஆசை காட்டுச்சு. இப்ப ஆந்திரா, மகாராஷ்டிராவுலயெல்லாம் பி.டி. பருத்தி போட்ட காட்டுல விவசாயிங்க... பிணமா தொங்குறாங்களே தம்பி. நினைச்சாலே நடுநடுங்குது!

பொறந்ததுல இருந்து சாகற வரைக்கும் ஒட்டுக் கோவணத்தோடு... பொட்டல் காட்டுலயும், மொட்ட வெயிலுலயும் கிடக்குற விவசாயிக்கே, அவன் படுற கஷ்டம் இன்னும் புரியல. நீங்க என்னடான்னா... ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு விவசாயியோட குடிசையில போய் கொஞ்சம் போல தண்ணிய வாங்கிக் குடிச்சுட்டு, 'விவசாயிங்க கஷ்டத்தை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்'னு மேடைக்கு மேடை பொளந்து கட்டுறத கேக்கறதுக்கு நல்லாவே இருக்குதுங்க தம்பீ. ஆனா, நம்பத்தான் முடியல!


எனக்கென்னவோ... நீங்க எங்களுக்கு யோசனை சொல்றதவிட, நான் ஒங்களுக்கு யோசனை சொல்றதுதான் சரியா இருக்கும்னு தோணுது! கலப்பட கதர் சொக்காகாரங்க... ஒங்களக் காட்டியே ஓட்டு வாங்கி, பதவியில குந்திகிட்டு, தொடர்ந்து கொள்ளை அடிக்கப் பாக்கிறாங்கனு நினைக்கிறேன். இதுல எதுக்காக நீங்க தலையைக் கொடுத்துக்கிட்டு? என்னமோ அயர்லாந்துகாரியையோ... ஆஸ்திரியாகாரியையோ லவ்வு பண்ணிக்கிட்டிருக்கீங்களாமே! அவுங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு, அடக்க ஒடுக்கமா குடும்பம் நடத்தப் பாருங்க.


'அண்ணன் ராகுலுக்கு வயசு 40 ஆகுது. கல்யாணம் பண்ணிக்காததால அவரு இன்னும் இளைஞரு'னு கலாய்க்கறாரு உங்க தம்பி வருண் காந்தி. இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

கதருங்கள நம்பி, ரவசு பண்ணி உங்க பொழப்பக் கெடுத்துக்கறதோட... எங்க பொழப்பையும் கெடுத்துப்புடாதீங்க. இதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்கனுதான் தோணுது... அப்புறம் உங்க இஷ்டம்!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமை விகடன், 10 ஜனவரி 2011

வியாழன், டிசம்பர் 22, 2011

அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1

கூடங்குள அணுஉலைகளின் கட்டுமானத்திற்காக 13,147 கோடி ரூபாயைச் செலவு செய்தபின், இயக்கவிருக்கின்ற நேரத்தில் மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே தடுத்து நிறுத்தியிருக்கலாமே! என்ற வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.

அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது அணுஉலையே அதற்குத் தீர்வு அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது.

வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலன் களையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!

இந்திய மின் நிலவரம்: மின்சாரம் நமக்கு இன்றியமையாத ஆற்றலாக இருந்து வருகிறது. இதே போன்று நமக்கு இன்றியமையாத ஆற்றல்களாக இருந்து வருபவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்கள். தொழில்துறை, விவசாயம், போக்குவரத்து, வணிகம், வீட்டு உபயோகம், பொதுப்பயன்பாடு என எண்ணற்ற துறைகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட இந்தப் பல்வேறு ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.

இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில், நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் 65.09%, புனல்மின் 21.22%, சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% அணுமின் 2.62% என நிறுவுதிறன் விகிதம் உள்ளது. மொத்த நிறுவுதிறன் 1,82,344 மெகா வாட்டாக (மெ.வா.) உள்ளது.

அதிகளவில் மின்சாரம் தேவைப்படும் துறைகளாக தொழில்துறையும் விவசாயமும் இருந்து வருகின்றன. தொழில்துறையில் அதிகளவிலான ஆற்றல் தேவைப்படும் தொழில்கள் (Energy intensive industries) என அலுமினியத் தொழில், காரக் குளோரின் (Chlor – Alkali), இரும்புத் தொழில், சிமெண்ட் தொழில், உரத் தயாரிப்பு, நூற்புத் தொழில் போன்றவைகள் பல காலமாக அறியப்பட்டு வருகின்றன.

விவசாயத்துறையில், கணிசமான மின் பயன்பாடு இருக்கிறது. இந்தியாவில் 200 லட்சம் பம்ப் செட்டுகள் இயங்கிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை திறம்பட மின்சக்தியைப் பயன்படுத்துவதில்லை.

இதையடுத்து பெருமளவில் ஆற்றலை உறிஞ்சுவது, மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சக்தியைப் பயன்படுத்துவோரின் இடத்திற்கு வந்துசேர்வதற்கு இடையில், மின்கடத்தல் மற்றும் பகிர்மானத்தில் (Transmission and distribution) நடத்தப்படுகிற செலவாகும். இதை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்புகள் (Aggregate Transmission & Commercial losses) என்ற பெயரில் அழைக்கின்றனர். உலக நாடுகளில் தயாரிக்கப்படும் மின் ஆற்றலில் இது அதிகட்சமாக 15% என்று உள்ளது. நம் நாட்டில் இது சில மாநிலங்களில் 50% - ஐத் தாண்டுகிறது இந்திய சராசரியாக 2007-08 கணக்குப்படி இது 31.65%. அதாவது, நம் நாட்டில் சராசரியாக தயாரிக்கப்படும் மின்சார ஆற்றலில் 31%-க்கு மேல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப, வணிக மின் இழப்பு!

மின் பற்றாக்குறை: தற்போது நமக்கு மின்தட்டுப்பாடு இருந்து வருவது உண்மைதான். இதற்குத் தீர்வு பற்றிச் சிந்திக்கும்போது, வழக்கமாக சூரியஒளி, காற்றாலை, Biomass போன்றவற்றை மூலங்கள் எனக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து பெறக்கூடிய மின்சக்தி பற்றிக் கணக்கில் எடுத்து வருகிறோம். இவை தற்போதைய மின் தேவையை நிறைவு செய்யப் போதுமானவையா என்ற கேள்வி எழும்போது சரியான மாற்று என்ன என்பது நம்முன் பெரும் சவாலாக நிற்கிறது!

விஷ‌யம் இந்தியாவில் இப்படி இருக்க, உலகநாடுகள் அனைத்திலும் என்ன நடக்கிறது? உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படுகிற அமெரிக்கா ஜப்பான், பிரான்சு என அனைத்திலும் பாதுகாப்புக் காரணங்களால் புதிய அணுஉலைகளைத் துவக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடச் சொல்லி வருகிறார்கள்.

ஆக, இன்று இந்தியா சந்திக்கிற மாதிரியான சிக்கலைத் தானே அந்நாடுகளும் சந்திக்கும்? அவர்கள் முற்றும் துறந்தவர்களாகக் காட்டிற்கு ஏதும் சென்றுவிடவில்லையே! அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே! அந்நாடுகளில் காற்று, சூரியஒளி போன்ற மின் ஆற்றல் மூலங்கள் நம் நாட்டைக் காட்டிலும் குறைவு என்பது தானே உண்மை! அவர்கள் எப்படி ஆற்றல் தன்னிறைவை அடையமுடிகிறது? நமக்கு தெரியாத ரகசியமான ஆற்றல் திட்டங்கள் ஏதும் அவர்கள் வைத்திருக்கிறார்களா?

இப்போது நம் நாட்டிற்கும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம்.

தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்: அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சனையின் போது (Energy Crisis), பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு (Energy Conservation) முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல் விலைகளை, பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது! அந்த முறை தான் “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency)”.

அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் (Energy Efficiency Measures), 1970களில் துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது. திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம். பழைய தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால், அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் குறைத்தது” என்கின்றனர்.

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர் மின், சூரியசக்தி, காற்றாலை என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப் பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency): இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி, ஒரே ஆற்றல் சேவைக்கு (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு ஆகும் ஆற்றலை) ஆற்றல் விரையத்தைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆற்றல் செலவைக் குறைக்க முடியும்.

ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம். தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும்போது விரையம் செய்து வந்தததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில் தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாதபோது, மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும், அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு குறையவில்லை. விரையம் செய்வதைத் தவிர்த்ததால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார் அரூபமாக உருவாக்கியதாக (Virtual Generation) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதையே திறன் உருவாக்கம் (Capacity Creation) என்று சொல்லி அழைக்கின்றனர். ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுமுறை.

அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயனிப்பவர்களுக்கு “எ” அளவு பெட்ரோல் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச் செய்து அதே நபர்கள் அதே பயணத்தூரத்தை “எ” அளவைக் காட்டிலும் குறைவான பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில் மிச்சமாகிறது.

இதேபோல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது “அ” அளவு மின்சக்தி தேவையாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே வேலையை செய்வதற்கு “அ” அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு நேரம் நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும் பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின் கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத் தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் என்று அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய மோட்டாருக்கு கொடுக்கப் பயன்படும்.

இம்முறையைச் செயல்படுத்துவதற்குக் கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1 முதல் 3 வருடங்களுக்குள் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று விடுவர். ஆக இம்முறையில் நமக்குப் பயன். இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது என்பது இரண்டு, இரண்டரை யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும். இதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல் தான் பெட்ரோல், எரிவாயு செலவு குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.

திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டில் அமெரிக்க அனுபவம்: 1980களிலேயே அமெரிக்க ஆற்றல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்தரவாத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழி” என்று அலசிப் பார்த்துக் கூறினர். அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அந்த ஆற்றல் விஞ்ஞானிகள் 1980களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச் சிந்திக்கவும்!

அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபுசாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு உள்ளது. இதிலும், பெயரில் உள்ள வரிசைக் கிரமம் மிக முக்கியமானது! ஆற்றல் சிக்கலுக்கான முதன்மையான மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் பின்னர் தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு அறியும்.

2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை:

1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!

2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!

மேற்சொன்ன அமெரிக்க சபை, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:

“இது பயனீட்டாளர் அமைப்பிலிருந்து உருவாகிற மூலமாக (Utility System Source) மதிக்கப்படுகிறது. இது புவி வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases)) குறைப்பதோடு பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின் காரணமாக சட்டமன்றங்களும், கட்டுபாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுக்கு முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை செய்கின்றனர்”.

இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.

உலகில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம் (Energy Efficiency):

CFL_330நமக்கு மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப்பை CFL பல்ப்பைக் கொண்டு மாற்றுவது பற்றித் தெரியும். மின் மோட்டர்கள்தான் மின்பளுவில் (Electrical Load) முக்கியமான பங்கு வகிப்பவை. தொழிற்சாலைகளில் 70மூ-க்கும் மேலான மின்பளு இவற்றினால்தான். விவசாயத்தில் கிட்டத்தட்ட முழுமையான மின்பளுவும் மின்மோட்டர்களால்தான்.

எப்படிப்பட்ட மின்மோட்டர்களை வாங்குவது, ஒரு பயன்பாட்டிற்கு அதன் சக்தி என்னவாக இருக்க வேண்டும், அதை எந்நேரத்தில் இயக்குவது, அதில் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்த வேறேதும் வழிகள் உண்டா? என்பவை போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள்.

மோட்டார்களில் ஒரு சிறிய அளவு சேமிப்பு செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்து தான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலை சேமித்து வருகின்றன. நம் நாட்டில் இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில் வடிவமைக்கப்படுகன்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளில், மின் ஆற்றல் (Electrical Energy), வெம்மை ஆற்றல் (Thermal Energy), காற்றழுத்தத் தேவைகளுக்கான ஆற்றல்களின் (Air Compressor) தணிக்கை என நுண்மையாக பல ஆற்றல் தணிக்கைகளைச் (Energy Audit) செய்து திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகுக்க முடியும்!

அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளூர் அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத் தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும் வெற்றியடைகின்றனர்! வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத் தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்!

உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?

இந்தியாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவு: இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது. அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர். அமூல்யா ரெட்டி மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல் தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத் துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும் செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.

இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (National Productivity Council), அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம் (Center for Energy and Environmental studies of Princeton University, USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல் செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient Energy use – Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கிஷ‌த்தை வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை ஆராயும் கவுன்சில் (Technology. Information, Forecasting & Assessment council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore, India) ஆகியன.

இந்த தொழில்நுட்ப பட்டியல் 1994 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்படுபவை மிகவும் முக்கியமானவை: “மின்சாரத்திற்கான அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு, புதிய மின்நிலையங்களை அமைப்பதைக் காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைநிலையில் (End use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சாரப் பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின் சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.”

“இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு. இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள் (Data) இல்லை என்பது தான்”.

அவர்கள் சொன்னவை இன்றளவும் இந்தியாவிற்குப் பொருந்தும். வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக் கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India) இதற்கான தரவுகள் இருக்காது என்பது நிச்சயம்!

அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! இவ்வளவு அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டில் பொதுவெளிக்கு வராமல் போனது தற்செயல்தானா? இது பற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist) அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர்? தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்?

நம் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில பெருந்தொழில் நிறுவனங்கள், 1999 முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதை சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர்.

இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது அதுதான் நமக்குத் தேவை என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?

பிரதமருக்கு இந்த மூலம் (Energy Source) பற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? Integrated Energy Policyயைத் தீட்டும் Planning Commissionம் முறையின் முக்கியத்துவம் பற்றி பிரதமருக்கு விளக்கியதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!

திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு என்ற மூலத்தைப் பற்றி கணக்கிடக் கூட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில், அதில் அரூபமாக ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வெளிக்குக் காட்டாமல் நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல் வளர்ச்சிக்கு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞானப்பூர்வமான விவாதம்?

- கோபால்

( sugiprakash@gmail.com)

தொடரும்...

நன்றி: கீற்று இணையதளம்

பேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் - வல்லரசுக் கனவிற்கான விலை

கூடங்குளத்தில் அணு மின்சக்தி உலைகளை எதிர்த்து தீவிரமான போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை சீர்குலைக்கவும் தடுத்து நிறுத்தவும் எத்தனையோ சதிகள் கேடு கெட்ட முயற்சிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது அந்நிய சக்திகளின் கைக்கூலிகளால் நாட்டின் வளர்ச்சியை முடக்கிட நடத்தப்படும் போராட்டம் என்று முதலில் பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பயனளிக்காது போகவே அடுத்த ஆயுதமாக ஒன்றுக்கு உதவாத சட்டசபை தீர்மானம் இயற்றப்பட்டது . அத்தீர்மானம் பக்கத்து மாநிலத்தில் கூட எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது அரசுக்கு தெரியாதது அல்ல. அந்த தீர்மானம் புஸ்வானமாகி போனதும் அடுத்ததாக இப்போது முன்னாள் குடியரசுத்தலைவரும் அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாமை ஏவியுள்ளனர். அவர் தினமலரில் 4 பக்கங்களுக்கு உபதேசமும் விஞ்ஞான அருளுரையும் வழங்கியுள்ளார். அந்த நான்கு பக்கங்களையும் சுருக்கினால் ஒரே வரியில் நாட்டை விட நாம் முக்கியமல்ல. எனவே நாடு முன்னேற வேண்டுமானால் தியாகம் செய்யுங்கள். அவர் நாடு என்று இங்கு வெறும் நிலப்பரப்பை குறிப்பிடவில்லை. அவர் நாடு என்பது மக்களை நீக்கி விட்டு யாருடைய நலனைக் குறிப்பிடுகிறார் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.


கலாம் இது வரை நாட்டின் முன்னேற்றதை நேசிப்பவராகவும் இளைய சமுதாயத்தின் இலட்சிய நாயகராகவும் நடமாடியுள்ளார். ஏறத்தாழ நடுத்தர மற்றும் மேட்டுக்குடி இளைய தலைமுறையினரின் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். தனி நபர் சமூக யதார்த்தம் நாட்டின் அரசியல் கொள்கைகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது கடுமையாக உழைத்தால் முன்னேறி விடலாம் என்ற மிகப்பழைய உடமை வர்க்கத்தின் கருத்தியல் பரப்பலுக்கு கலாமையே பெரிதும் அவர்கள் நம்பியிருந்தனர். அவரின் கருத்தியலில் ஒளிந்து கிடப்பது என்ன? அப்பட்டமான சுயநலம் தனிநபர்வாதம்தான். இவற்றில் ஏற்கனவே மூழ்கி கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் அற்பவாத கனவுகளுக்கு நாடு வல்லரசு ஆக ஒவ்வொரும் கனவு காணுங்கள் என்று உருவேற்றி வளர்த்தவர்தான் கலாம். கலாம் ஒரு அணு சக்தி அறிவியலாளர் என்ற வகையில் அவரிடம் எந்த சமூகப் பார்வையும் இருந்ததில்லை.. அணு குண்டு தயாரித்து வெடிக்கச் செய்து அதில் நாட்டின் முன்னேற்றத்தை கண்டவரல்ல அவர். அவரிடம் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?.

இந்த அணு சக்தி குறித்தும் அதன் பின்னணி குறித்து மிக விரிவாக இந்த குறு நுhல் அலசுகிறது .அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து தொடங்கும் இந்த குறு ஆய்வு அணு சக்தியின் பின்னே மறைந்திருப்பது இந்திய வல்லரசு கனவுதான். இந்திய ஆளும்வர்க்கங்களின் விரிவாதிக்க கனவுகளுக்கு அடித்தளம் அமைப்பதே அணு சக்தி திட்டங்கள் என்பதை நிறுவ முயற்சிக்கிறது. நடைபெறும் அணுஉலை எதிர்ப்பு போராட்டமானது நியாயமானது என்பதை புரிந்து கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் இனி நூலுக்குள் பயணிப்போம்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வருகை இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டது. இதுவரை இருந்து அனைத்து அரசியல் கட்சிகளின் பம்மாத்து எதிர்ப்பு நாடகம் முடிந்து அமலுக்கு வந்து விட்டது.இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த அதற்கு துணையான அணுசக்தி இழப்பீடு சட்டமும் நடைமுறைக்கு வந்து விட்டது. இழப்பீடு சட்டத்தின் படி எந்த நாட்டினரும் 1500 கோடி ரூபாயை துhக்கி எறிந்து விட்டு அணுசக்தி தயாரிக்கிறோம் என்ற பெயரில் அணுகதிர்களை கசிய விட்டு இந்திய மக்களை பூண்டோடு பல தலைமுறைகளுக்கு அழித்து விடலாம். இதை எதிர்த்து பேசினாலே நாட்டின் முன்னேற்றத்தை தடையானவர்களாக ஒதுக்கி தள்ளி விடலாம்.

அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டதிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியும். அமெரிக்கா தனக்கு சாதகமான ஒப்பந்ததை எப்படி அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து அமல்படுத்துகிறது, எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் எதிர்ப்பு நாடகம் ஆடினர் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல அழுகிறேன் என்ற நாடகங்கள் நடந்து முடிந்து விட்டன. அமெரிக்காவை எதிர்த்து அதிகார பூர்வமான இடதுசாரிகள் உட்பட எந்த கட்சிகளும் செயல்பட முடியாது தெளிவுபட நிரூபிக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி தயாரிக்காவிட்டால் உலகளவில் தனிமைப்பட்டு விடுவோம். அணுசக்திதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றெல்லாம் மன்மோகன்சிங் துவங்கி காங்கிரஸ் பரிவாராங்கள் சொல்வதெல்லாம் கலப்படமில்லாத பொய்களாகும். இவற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை.ஆதாரங்களும் இல்லை. இந்தியா தனது வல்லரசுக் கனவை நிறைவேற்றுவதற்காக எந்த அளவுக்கும் செல்லும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு எடுத்துக்காட்டு. இனி அமெரிக்காவின் கூட்டாளியாக தெற்காசிய முழுவதையும் ஆட்டி படைக்கவும் ஆதிக்கம் செய்யவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முழுமையான கட்டுகடங்காத விரிவாதிக்க வெறியுடன் செயல்பட தொடங்கி விடும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவும் தெற்காசிய நாடுகளில் தனது ஆதிக்கத்திற்கெதிரான சக்திகளை நேரடியாக ஒடுக்கத் தொடங்கி உள்ளது.

இலங்கை பாசிச அரசுடன் இணைந்து விடுதலைப்புலிகளை அழித்ததிலிருந்து இந்த வேகமும் துணிச்சலான மனோபாவமும் கூடியுள்ளதை உணர முடியும். இன்னொரு பக்கம் இந்தியாவின் அரசியல் சுதந்திரம் பறிபோகும், அமெரிக்காவின் அடிமை நாடாக மாறிவிடும் . எந்த கோணத்திலும் மிகவும் அபாயகரமானதே இந்த ஒப்பந்தம். அணுசக்தியை ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இன்னும் சிலர் ரசியாவின் அணு உலை முற்போக்கானது மற்ற நாட்டின் பிற்போக்கானது என்றெல்லாம் பேசித் திரிகின்றன.. அணுகுண்டு வேறு அணுசக்தி வேறு என்று ஒரு மனச்சிதைவு நோயாளி மட்டுமே கூற முடியும். இந்த இரண்டும் வெவ்வேறானவை என்பது அடிப்படையில் ஒரு மாயை ஆகும். இந்த மாயை இக்குறுநூலில் தகர்க்கப்பட்டுள்ளது.

- சேது ராமலிங்கம்

( msethuram61@gmail.com)

நூலினைப் படிக்க இங்கே அழுத்தவும்.


நன்றி: கீற்று இணையம்


புதன், டிசம்பர் 21, 2011

கூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை

கூடங்குளம் அணுமின் திட்டம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும் தமிழ்நாடு, கேரள மக்களின் வாழ்விற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும்

ரா.ரமேஷ்
V.T.பத்மநாதன்
வீ.புகழேந்தி

சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு
பூவுலகின் நண்பர்கள்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

புத்தகத்தினைப் படிக்க இங்கே அழுத்தவும்.

வெள்ளி, டிசம்பர் 16, 2011

'வாழத்தான் விடல... சாகவாவது விடுங்க..' பிரதமரின் நிதி ஆலோசகருக்கு கோவணாண்டி கடிதம்

உலகப் பொருளாதார மாமேதை, பாரத தேசத்தின் நிகரற்ற பிரதம மந்திரி மன்மோகன் ஜி அவர்களின் புதிய நிதி ஆலோசகர், மக்களின்... குறிப்பாக விவசாயிகளின் சதிஆலோசகர் உயர்திரு. ரகுராம்ராஜன் அவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கறான் தென்னாட்டு கோவணாண்டி...

'நான் பிரதமருக்கே யோசனை சொல்றவன்... எனக்கே ஆலோசனையா’னு ஆவேசப்பட்டு, அவசரப்பட்டு கடுதாசியைக் கிழிச்சுப் புடாம... கொஞ்சம் பொறுமையா படிங்கய்யா.

நீங்க ஒலக பொருளாதார மேதைக்கே யோசன சொல்றவரு... பெரிய பெரிய ஆலோசனைகள அள்ளி வீசறவரு... ஒங்களுக்கெல்லாம் போய் நான் யோசனை சொல்ல முடியுங்களா..?

'ஏற்கெனவே நடுக்கடல்ல திக்குத் தெரியாம போயிட்டிருக்கு இந்திய விவசாயம்ங்கிற கப்பல். இதுக்கு நடுவுல ஆளாளுக்குப் புகுந்து பொறப்பட்டு... ஆலோசனைங்கிற பேர்ல சுக்கானை பிடிச்சு அலைக்கழிக்காதீங்க'னு கேட்டுக்கறதுக்காகத்தான் இந்தக் கடுதாசி!

என்ன புரியலையா...?

'நாட்டுல 60 சதவிகிதம் பேர் ஏன் விவசாயத்தைப் பாக்கணும். வெறும் 5 சதவிகிதம் பேர் மட்டும் பாத்தா போதும்’னு அரசுக்கு நீங்க சொன்ன 'அடடே...' ஆலோசனையைப் பத்திதான்யா சொல்றேன். ஒங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் மூளையில இருந்து அறிவு பொங்கி ஒழுகறத நினைச்சா... புல்லரிக்குதுங்கய்யா!

'அடே குசும்புக்காரக் கோவணாண்டி, தொழில் செய்றதுக்கு இஷ்டம் போல நிலத்தை வளைக்க முடியல; சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க முடியல; விளைநிலத்தை விழுங்கி விமான நிலையத்தைக் கட்ட முடியல, தங்க நாற்கரம், வைர முக்கோணம்னு நினைச்ச இடத்துலயெல்லாம் நிலத்துல ரோடு போடமுடியல!

இதுக்கெல்லாம் இடைஞ்சலா இருக்கறதே இந்த விவசாய இம்சைங்கதான். இவங்க இருந்தாத்தானே பிரச்னை, பேசாம விவசாயத்தையே அழிச்சுடலாம்னு நாங்களும் எவ்வளவோ நாளா திட்டம் போடுறோம். ஆனா, எவ்வளவு அடிச்சாலும், தாங்கிக்கற 'ரொம்ப நல்லவன்' கணக்கா... விடாம விவசாயத்தைப் பாக்கறாணுங்க. அதனாலதான் ஒட்டுமொத்தமா வெளியேத்தலாம்னு முடிவு பண்ணிட்டோம். நான் சொன்னதுல ஏதாச்சும் தப்பு இருக்குதா?'னுதானே கேக்க வர்றீங்க!

சபாஷ்... நீங்க சொல்றதுதான் சரியான யோசனை. ஆனா, இதுக்காக நீங்க ரொம்பவும் மெனக்கெட வேணாம். சத்தமில்லாம ஏற்கெனவே சாகடிச்சுக்கிட்டிருக்கீங்களே... அதையே தொடர்ந்துட்டீங்கனா... கூடிய சீக்கிரம் ஒட்டுமொத்தமா 'கோயிந்தா... கோயிந்தா...'னு சொல்லிட்டு போயிடலாம்.

அதாவது, புதிய பொருளாதாரக் கொள்கைங்கற பேருல... ஏற்கெனவே பல லட்சம் விவசாயிகள் மண்டையைப் போட வெச்சாச்சு; 'சிறப்புப் பொருளாதார மண்டலம்'ங்கற பேருல பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை பல நாட்டு கம்பெனிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்தாச்சு; அவங்க தயாரிக்கற பொருளுங்கள கப்பல், பிளேன்லயெல்லாம் ஏத்திவிடறதுக்காக 4 வழி, 6 வழினு சாலை போடுறதுக்காக பல லட்சம் ஏக்கரை அழிச்சாச்சு; ரியல் எஸ்டேட்காரங்களும் அவங்க பங்குக்கு விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி வீட்டடி மனையாக்கியாச்சு... இதே நிலை நீடிச்சா, இன்னும் சில வருஷத்துல 5 சதவிகிதமில்லை... 0 சதவிகிதமாயிடும் விவசாயிங்களோட எண்ணிக்கை.

'அவ்வளவு நாளைக்கெல்லாம் பொறுக்க முடியாது. உடனடியா குறைக்கணும்'னு நினைச்சா... மாஜி நிதி மந்திரி ப.சி, செஞ்ச மாதிரி, விவசாயிகளுக்குக் கடன கொடுத்து, விளைஞ்ச பிறகு, விலையை தடாலடியா குறைங்க. கடன் கட்ட முடியாம தற்கொலை செஞ்சே செத்துப் போயிடுவானுங்க விவசாயப் பதறுங்க.

அய்யா ஆலோசகரே... விவசாயிகளையெல்லாம் விவசாயத்தை விட்டு விரட்டியடிச்சுப்புட்டு, அவனுங்களுக்கு எப்படி சோறு போடப் போறீங்க. என்னமோ தொழில்வளத்துல நாடே கொழிக்கற மாதிரி... 'நாடு வளருது... நாடு மிளிருது'னு கொஞ்ச வருஷமா ஃபிலிம் காட்டினீங்க. இப்ப அதுவும் கவுத்துடுச்சு.

உங்க பாஷையில சொல்லப் போனா... 8 சதவிகிதம், 9 சதவிகிதமா இருந்த தொழில் வளர்ச்சி, இப்ப 6 சதவிகிதம், 5 சதவிகிதம்னு பின்னோக்கி வளர்ந்துகிட்டு இருக்குது. இதை நம்பி விவசாயத்தை விட்டு நகரத்துக்குப் போனவனெல்லாம், பொரணியில அடி வாங்கினது கணக்கா ஊரைப் பார்க்க வந்து சேர்ந்துக்கிட்டிருக்கானுங்க. இதத்தானே செஞ்சுருக்கு உங்க பொருளாதாரப் பொரட்சி. இந்தப் பிரச்னை தீர்றதுக்கு ஒரு வழி சொல்ல யோக்கியதை இல்ல... விவசாயத்துக்கு வேட்டு வைக்க கிளம்பிட்டீங்க.

நீங்க என்ன பண்ணுவீங்க? 'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ங்கிறது கணக்கா... 'சகலத்துக்கும் இளைச்சவன் சம்சாரி’னு ஆகிப்போச்சு. போறவன், வர்றவனெல்லாம் ஆட்டி வைக்கறான். விளைச்சலைக் கூட்டணும்னா, 'கடனை கூட்டணும்’னு ஒருத்தர் சொல்றாரு; 'ரசாயன உரங்கள கூட்டணும்’ங்றாரு இன்னொருத்தர்: 'இயந்திரமயமாக்கணும்’னு ஒரே போடா போடறாரு மற்றொருத்தர்.

ம்... வல்லுநர்கள், ஆலோசகர்கள்னு சொல்லிக்கிட்டு திரியற யாருக்கும் விவசாயத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாதுங்கறதுதானே உண்மை. 'பசுமைப் புரட்சி'யை உருவாக்கி, இன்னிக்கி 'பசுமை வறட்சி'க்கு காரணமா இருக்கறதும், வல்லுநர்னு சொல்லிக்கிட்டு சில பல வருஷத்துக்கு முன்ன கூடி கும்மியடிச்ச கூட்டம்தானே!

சரி, என்ன பேசி... என்ன ஆகப்போகுது. நீங்க சொன்னபடியே 5 சதவிகிதமாக்கறதுக்கு உண்டான வேலைகளை சட்டுபுட்டுனு பாருங்க. நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் கஷ்டப்பட்டுகிட்டே இருக்குறது. நிலத்தை வுட்டுட்டு, ஊரெல்லாம் எதை திங்குதோ... அதையே நாங்களும் தின்னுட்டு, விதி வந்தா செத்துப் போறோம். காலமெல்லாம் உங்கள மாதிரியான ஆளுககிட்ட போராடி, போராடியே உசுர விட்டுக்கிட்டிருக்கறதவிட, நிம்மதியா போயாவது சேர்ந்துடறோம்!

இப்படிக்கு,
கோவணாண்டி

நன்றி: பசுமைவிகடன், 25-12-11

வியாழன், டிசம்பர் 15, 2011

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?

இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?

இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

உங்கள் எடுத்துக்காட்டு நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது.

சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா? ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது நம்புவார்களா?

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது.

நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?

ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும்.

vaiko_atomic_640

அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.

ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.

ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.

ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.

ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.

ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.

ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.

ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.

உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.

ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.

ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.

* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.

­* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.

  • தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
  • மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
  • ‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?

உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே!

ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம்.

ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில் கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில் இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.

சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?

இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம்.

எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம்.

அதனால் தான், மக்கள் நடமாட்டம் குறைவான கூடங்குளம் பகுதியில் அணு உலைகளை அரசு நிறுவியிருக்கிறது. அதையும் வேண்டாம் என்றால் என்ன சொல்வது?

மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.

இவை தவிர்த்து உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகளும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.

ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.

இவை தவிர,

  • உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
  • உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை.

நீங்கள் சொல்வது போல் இருந்தால் உலகில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பல, அணுமின் நிலையங்களை வைத்திருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அமெரிக்கா, இரசியா, பிரான்சு, சப்பான், செர்மனி எனப் பல நாடுகள் அணு மின் நிலையங்களை வைத்திருக்கின்றன என்று படிக்கிறோமே!

எங்கே இதையெல்லாம் படித்தீர்கள்?

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இரசியாவின் செர்னோபில் அணு விபத்து (நேர்ச்சி) பற்றிப் பாடப் புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன் சப்பான் நாட்டில் புகுசிமாவில் அணு மின் நிலையம் நில நடுக்கம் வந்த போது பாதிக்கப்பட்டது எனச் செய்தித்தாள்களில் வந்தது.

அங்கெல்லாம் நடந்தது போல் இங்கு நடந்து விடக்கூடாது என்பதால் தான் அணு உலைகளே வேண்டாம் என்கிறோம்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உலகில் செர்நோபில் விபத்திற்குப் பிறகு எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடியிருக்க வேண்டுமல்லவா?

கண்டிப்பாக. செர்நோபில் நேர்ச்சிக்குப் பிறகு இரசிய அரசு அணு உலைகள் அமைப்பதை நிறுத்திவிட்டது. அன்றைய சோவியத்து குடியரசுத் தலைவர் மிகைல் கார்ப்பசேவ், “செர்நோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. மாறாக, இது மொத்த உலகத்தையே பாதித்துள்ள விடயம்” என்று சொன்னார்.

திரும்பத் திரும்ப இரசியாவையே சொல்லாதீர்கள். அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன? அதைச் சொல்லுங்கள்.

  • அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.
  • புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.
  • சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.
  • இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.
  • செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.
  • சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.
  • பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

எதில் தான் நேர்ச்சிகள் (விபத்துகள்) இல்லை? ஒரு பேருந்தில் போனால் கூடத்தான் அடிபடுகிறது; உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி நேர்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேறுவது?

ஒரு பேருந்து நேர்ச்சி என்றால் அதிக அளவு நூறு பேர் இறந்து போவார்கள். அத்துடன் பாதிப்பு முடிந்து விடும். ஆனால் அணு நேர்ச்சி என்பது அப்படி இல்லை. செர்நோபில் உலை வெடித்தவுடன் ஒன்பதாயிரம் பேர் தாம் இறந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். அதாவது நேரடியாக இறப்போர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்! தலைமுறை தலைமுறையாக இறப்போர் இலட்சக்கணக்கில்! இப்போது சொல்லுங்கள் – அணு உலை என்பது உயிருக்கு உலை தானே?

அப்படியே விபத்து என்றாலும் ஆழிப்பேரலை (சுனாமி)யோ நிலநடுக்கமோ வரும்போது தானே!

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்காவின் மூன்று மைல் அணு நேர்ச்சியும் செர்நோபிள் அணு நேர்ச்சியும் நேரக் காரணம் இயக்கத்தில் நடந்த கோளாறும் மனிதத்தவறுகளும் தாம்! அங்கு ஆழிப்பேரலையும் வரவில்லை; நிலநடுக்கமும் வரவில்லை.

ஏற்கெனவே ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?

இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள் தாம்!

மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது. நீங்கள் அது கட்டுக்கதை என்று சொல்கிறீர்கள். எப்படி என்று ஏதாவது புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா?

வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி உரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி உரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி உரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி உரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே?

நல்ல கேள்வி!

ð கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது.

ð அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள் ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய் பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.

ð அணு உலையைச் சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் (சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்) தைராய்டு புற்று நோய் இறப்பு வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும்.

ð இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் மருத்துவர் வீ. புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு உலை நிருவாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே!

நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா?

எப்படி நானூறு பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?

தாராப்பூர் (மும்பை) அணு உலை தொடங்கிய போது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில் பார்த்துப் போய்விட்டார்கள். கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும் ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளை கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும் தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல் உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து போகும். பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர் எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது சொல்லுங்கள் –சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையையே இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா?

chernobyl_child_370அப்படி என்ன உடல் நலக்குறைவு கதிர்வீச்சால் ஏற்பட்டு விடும் என்கிறீர்கள்?

கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.

அணுமின்நிலையம் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் மட்டும் தானே போராடிவருகிறீர்கள்? இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாகத் தானே இருக்கின்றன?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லிவந்த அமைச்சர்களை மராட்டியத்தில் உள்ள மக்கள் புகுசிமாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

ð அதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைத் தலைக்கு ஒரு உரூபா வாங்கிச் சேர்த்து, காசோலைகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டன.

ð குசராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கட்சிப்பாகுபாடு இல்லாமல் அமெரிக்கா நிறுவும் அணு உலையை எதிர்த்து வருகிறார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் உயிரை விட்டிருக்கிறார்கள்.

ð அரியானா மாநிலத்தின் பத்தேபாத்தில் மக்கள் தொடர் போராட்டம், பட்டினிப் போராட்டம் எனப் போராடிவருகிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!

‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?

23) அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.

  • அணு மின்சாரம் மலிவானது.
  • கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
  • அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
  • நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
  • யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:

ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)

ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.

ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?

ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?

2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.

ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?

ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?

3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?

ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.

ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?

ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?

4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.

ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?

ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)

ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

ð ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?

ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)

5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.

ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!

ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).

ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.

6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?

ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!

ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?

அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா?

நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?

புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் அங்கு போராடுபவர்களுக்கு (கூடங்குளம் திட்டத்தில் இரசியாவின் பங்கு இருப்பதால்) அமெரிக்கா பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

கூடங்குளத்தில் மக்கள் சாதி, மதம், கட்சி என எல்லாவற்றையும் தாண்டி ஒற்றுமையாக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அதை ஒடுக்க விரும்பும் அரசே இது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவது வருத்தப்பட வேண்டியது மட்டுமில்லை; வெட்கப்பட வேண்டியதும் ஆகும்.

அரசு பொய் சொல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ð இப்போராட்டத்தை நடத்துபவர்கள் அமெரிக்கத் துணையுடன் அமைக்கப்பட்டுள்ள தாராப்பூர் அணு உலை, பிரான்சு துணையுடன் அமையும் செய்தாப்பூர் அணு உலை ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்த்து வருகிறார்கள். தன்னுடைய துணையுடன் அமைந்துள்ள உலைகளை எதிர்ப்பவர்களுக்குக் காசு கொடுத்து அமெரிக்கா வளர்த்துவிடுமா? இது சொந்தக் காசில் ‘சூனியம்’ வைத்துக்கொள்வது போல் அல்லவா ஆகிவிடும்?

ð ஏற்கெனவே இப்போராட்ட வரலாற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வளவு தான்! அமெரிக்கா தான் இப்போராட்டத்தைத் தூண்டுகிறது என்று சொன்னால் பாபா அணு ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முனைவர் பரமேசுவரன், இசையமைப்பாளர் இளையராசா, நடிகர் நாசர், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசு (அமெரிக்காவின் கோககோலா நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்தவர் இவர்!) ஆகியோருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்கா பணம் கொடுத்து வருகிறது என்று பொருளாகிறது. ‘கேட்பவன் கிறுக்கனாக இருந்தால் கேப்பைச் சட்டியில் நெய் வடிகிறது என்று சொல்வதையும் நம்புவான்’ என்று ஊர்ப்புறத்தில் பழமொழி ஒன்று உண்டு. அரசு நம்மைக் கோமாளியாக்குவதுடன் தானும் வழிதவறிச் செல்கிறது.

சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?

மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.

சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

ð தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

ð தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ð ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

ð தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

ð இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.

- முத்துக்குட்டி

(muthukutti@zoho.com)

தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:

  1. அணு உலைகள் குறித்து, கீற்றில் வெளியான படைப்புகள் அனைத்தும்
  2. ‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, அ.முத்துக்கிருட்டினன், உயிர்மை, 2011 திசம்பர் இதழ்
  3. ‘கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, அ.மார்க்சு, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்
  4. ­www.dianuke.org இணையத்தளத்தின் சில கட்டுரைகள்
  5. ‘அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்’, மாலெ தீப்பொறி, 2011 திசம்பர் தொகுதி 10, இதழ் 5

‘மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்


நன்றி: கீற்று இணையதளம்

புதன், டிசம்பர் 14, 2011

கூடங்குளம் : அப்துல் கலாம் என்னவாக இருக்கிறார்?

உலகளவில் பூகம்ப வாய்ப்புள்ள பகுதிகள் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு நான்கிற்கு மேல் உள்ள பகுதிகள்தாம் பூகம்ப அபாயம் உடையவை. இந்திய நிலப்பகுதிகள் முதல் நான்கு பிரிவுகளில்தாம் உள்ளன. இரண்டு, மூன்று ஆகியவை குறைந்தபட்ச அபாயம் உள்ள பகுதிகளாகும். கூடங்குளம் அணு உலை பூகம்ப அபாயம் குறைந்த பிரிவு இரண்டில் வருவதால் இங்கு நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் அணு உலை அமைந்துள்ள இடம், கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரத்திலுள்ளது. இதனால் பூகம்பம், சுனாமி ஆகியவற்றால் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ஆபத்தில்லை. சப்பான் நாட்டில் அணு உலைகள் பிரிவு ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளதால் பாதிக்கப்பட்டன. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களால் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் தாக்குப் பிடிக்கும். இவை எல்லாம் கூடங்குளம் அணு மின்நிலையத்தைப் பார்வையிட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் (முன்னாள் விஞ்ஞானி) அப்துல்கலாமின் கருத்துகள். இனி வரவிருக்கும் பேரிடர்கள் பற்றியும் கருத்து தெரிவித்த அவர் அணு உலைக்குக் கீழே இருக்கும் பூமியின் உறுதித்தன்மை பற்றிப் பேசவில்லை.

பாதுகாப்பான சுற்றுச் சூழலுக்கான மருத்துவர் குழு, 11 அக்டோபர் 2011 அன்று “கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும், ஏன்?” என்ற அறிக்கையை வெளியிட்டது. மருத்துவர் ஆர். ரமேஷ், மருத்துவர் வீ. புகழேந்தி, மருத்துவர் வி. டி. பத்மநாபன் ஆகியோர் இடம்பெற்ற குழு, சில உண்மைகளை முன் வைத்துக் கேள்விகள் எழுப்பியது.

1) இந்த அணு உலை அமைந்துள்ள இடத்தின் சுற்றுச் சூழல் பற்றி அணுசக்தித் துறை இதுவரை எந்த ஆராய்ச்சியும் நடத்தவில்லை.

2) நடைபெற வாய்ப்புள்ள பின் விளைவுகள் பற்றி எந்தத் தொலை நோக்குப் பார்வையுமில்லாமல், தொழில்நுட்ப முடிவுகள் மனம் போன போக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

3) இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்குப் பின் அரசுத் தொழில்நுட்ப நிர்வாகத் துறையினரின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினைகள்.

4) சட்டப் பிரச்சினைகள்.

இவை முற்றாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை.

அந்த இடத்தின் சுற்றுச் சூழல் தொடர்பாக அணுசக்தி சிவில் சமூகத்தினரே, ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இப்பகுதியின் நில இயல்பு பற்றி அரசுக்கு எதுவும் தெரியாது. இடத்தின் புவியியல் தொடர்பாக நுண்ணிய அளவிலோ பெரிய அளவிலோ ஆராய்ச்சி நடத்தாமல் கூடங்குளம் எவ்வளவு ஆற்றல் கொண்ட நில அதிர்ச்சியையும் தாங்கவல்லது என்று பொத்தாம் பொதுவாக அரசு அமைப்புகள் கூறிவருகின்றன.

குடிமைச் சமூகத்தினரான எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வு பற்றி அரசு நிர்வாகத்திடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள முயன்றோம். பின்னர் ஊடகங்கள் மூலமாக அறியத் தந்தோம். கடைசியாய் 2002 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். நீதிமன்றம் உட்பட அனைத்துத் தரப்பாலும் எங்கள் ஆய்வு புறக்கணிக்கபட்டது. ஆனால் 2002 ஆய்வில் நாங்கள் எழுப்பிய முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று சார்கோனைட் பாறை குறித்தது. அஸ்திவாரத்தின் மேல் பதினான்கு கார்பனாடைட் டைக்ஸ் இருக்கின்றன. இவை உறுதியற்ற நிலப் பகுதிகள். பண்டைய புவி யுகங்களில் உறுதியாக மாறிய எரிமலைக் குழம்புகளால் உருவானவை. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தின் புவியமைப்பியல் துறையைச் சேர்ந்த பிஜி, பேராசிரியர் சர்மா ஆகிய இருவரும் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைச் சென்னை ஐ. ஐ. டியைச் சேர்ந்த முனைவர் பூமிநாதன் என்பவர் எதிர்பாராவிதமாக உறுதிப்படுத்தியிருக்கிறார். 2004 நவம்பர் இதழில் ‘அணு உலைகள் தொடர்பான இந்திய அனுபவங்கள்’ என்னும் ஆய்வுக் கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள அதே முறிவுப் பாதையின் மீது 1998 - 2002 வரை உருகிய பாறைப் பிதுங்கல்கள் ஏற்பட்டுள்ளன. 2003ஆம் ஆண்டில் இந்தப் பலவீனமான இடங்களைப் பற்றிக் கண்டறிந்த பிறகு, அது தொடர்பாக அரசு நிர்வாகம் நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்துள்ளது. இந்த இடத்தை அகழ்ந்தெடுத்து, வலுப்படுத்த அதற்குள் காங்கிரீட் கலவையை ஊற்றியிருக்கிறார்கள். உறுதியற்ற இந்தப் பாறைகளின் ஆழத்தைக் கண்டறிய அவர்கள் முயலவில்லை.

பேரா. ராமசர்மா இந்த உறுதியற்ற பாறைக் கூட்டங்கள் பூமியில் 30 கி.மீ. ஆழத்துக்கு நீண்டிருக்கலாம் என எச்சரித்துள்ளார், “எங்கள் கருத்து இதுதான், கூடங்குளம் அணு உலை தொடர்பாக ரஷ்யர்கள் தயாரித்து, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் சமர்ப்பித்த முதற் கட்டப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் மேற்கண்ட பிரச்சினை பற்றி எந்தத் தகவலும் இல்லை. காரணம், இந்த அறிக்கைக்கான ஆய்வு 1998ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டு, 1999 தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதாவது உருகிய பாறைப் பிதுங்கல்கள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் நிலவியல், அறிவியல் இதழ்களால் மறு ஆய்வு செய்யப்பட்டு, 2001ஆம் ஆண்டுகளுக்குப் பிறகே வெளிவந்தன. இந்தப் பகுதியிலுள்ள பலவீனமான கார்பனாடைட் டைக்ஸ் எதிர்காலத்தில் நிகழக்கூடிய நில அதிர்வு, ஆழிப் பேரலை போன்ற இயற்கைப் பேரிடரால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பவை பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை 2002 சனவரி முதல் நாங்கள் முன் வைத்து வருகிறோம்.

“இந்த ஆராய்சிக்குப் பிறகு, வி. வி. இ. ஆர் 1000, வி. 392 அணு உலைகளில் அந்தப் பகுதியின் நில இயல்புக்கு ஏற்ப வடிவ மாறுதல்கள் தேவை. உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்து நேரடியாக அணு உலையைப் பாதிக்கலாம். பலவீனமான பகுதிகள் காரணமாக லேசான நில அதிர்வுகள்கூட அணு உலையைப் பாதிக்கலாம். இவை போன்ற ஆபத்து நிகழ்ந்தால் அவற்றைக் கையாள அணுசக்தித் துறையிடம் அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப வல்லமையும் திறமையும் இல்லை என்பதே உண்மை.”

இவை போன்ற கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான ஆய்வுகளுடன் பதிலளிக்காமல், குருட்டாம்போக்கில் கலாம் பேசியிருக்கிறார். இந்திய நிலப்பகுதிகள் பூகம்ப அபாயம் இல்லாத நான்கு பிரிவுகளுக்குள் வருகின்றன என்றால், குஜராத்தில் 2001 ஆண்டில் அவ்வளவு மோசமான நில அதிர்வு நிகழ்ந்தது எவ்வாறு?

போலி விஞ்ஞானம் என்பதுபோல் போலி விஞ்ஞானிகளும் இருப்பார்கள்போல.

மின்சாரத்தின் அவசியம் அனை வரும் அறிந்தது. மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதுபோல், அப்துல் கலாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. 7. 11. 2011இல் அவர் அளித்த அறிக்கையில் கிராமங்களில் நகர்ப்புற வசதிகள் கிடைக்க வேண்டும். அதாவது கிராமங்கள் நீடித்த தன்னிறைவு வளர்ச்சி பெற வேண்டும். இந்த வளர்ச்சியைப் பெற மின் உற்பத்தி அவசியம் என்கிறார் கலாம். எல்லாம் சரி அந்தத் தன்னிறைவை அணுவைப் பிளப்பதால் ஏற்படும் மின் உற்பத்தி மூலம்தான் அடைய முடியுமா? அணுவைப் பிளந்து, இந்தியாவிலுள்ள அணு ஆலைகளால் உண்டாகிற மின் உற்பத்தி மூன்று விழுக்காடு. உலகெங்கிலுமுள்ள 400 அணு உலைகளில் திரட்டப்படுகிற மின் சக்தி ஏழு விழுக்காடு. இந்தச் சொற்பமான மின் உற்பத்திக்கு ஏன் இத்தனை ஆயிரம் கோடிகள்? மக்கள் பாதுகாப்புக்கான மருத்துவர்கள் குழு கேள்வி எழுப்பியதுபோல், எதிர்கால அழிவை நம்மால் தாங்கிக்கொள்ள இயலுமா?

ரஷ்ய நாட்டின், சமதர்ம நிர்மாணத்துக்கு மின்சாரம் இயங்குவிசை என்பதை லெனின் கண்டறிந்தார். அதற்கான சாத்தியங்களை விரைவுபடுத்துமாறு நீர் மின்நிலையங்களை அமைக்குமாறு பொறியாளர்களைக் கேட்டுக்கொண்டார். லெனின் எதிர்பார்ப்புபோல், அப்துல் கலாமின் அணுப்பிளப்பு மின்சாரம் கிராமங்களின் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படப்போவதில்லை. உள் நாட்டு, வெளிநாட்டு ஆலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் பயன்படப்போகிறது. கூடங்குளம் தமிழ்நாட்டில் இருந்தாலும் இது தரும் மின்சாரம் தமிழ் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. இந்தியாவின் வல்லரசுக் கனவுக்கான வாய்க்காலாக அது மாறப்போகிறது.

“இந்தியா வல்லரசாகும் என்பதான கருத்துப் பரப்பப்படுகிறது. வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்பது மக்களின் லட்சியம்” என்று மகேசன்களின் இலட்சியத்தை மக்களின் இலட்சியமாகக் கலாம் காணுகிறார். இந்தியா வல்லரசு இல்லையென்றால் உள்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் கால்களைப் பதித்துள்ள இந்தியப் பகாசுரர்களை என்னவென்று அழைப்பது? இந்திய ஆதிக்கச் சக்திகளுக்காக, உண்மையின் மேல் பொய்யைக் கட்டிநிறுத்தும் உரையாசிரியர் பணியை மேற்கொள்கிறார் என்பதல்லாமல், இந்தக் கூடங்குளம் பற்றி அவர் உதிர்க்கும் முத்துகள் எவற்றை முன்வைக்கின்றன?

கிராமங்கள் அணு உலை கேட்கவில்லை. மின்சாரம்தான் கேட்கின்றன. இந்திய முதலாளி தனது தொழிற்சாலையை எங்கு அமைக்கிறானோ அங்குதான் மின்சாரத்தைக் கொண்டுபோவான். அரசும் கொண்டுபோகும். கிராமத்திற்குப் போவதைவிட, அவன் நகரத்துக்குப் போகவே விரும்புவான், கிராமங்களின் தன்னிறைவான வளர்ச்சி பற்றி அவர்கள் மட்டுமல்ல, யார்தான் கவலைப்பட்டார்கள்?

காந்தி கிராமத்துக்குள்ளிருந்து தான் கிராமங்கள் வளர வேண்டும். அப்படித்தான் வளர முடியும் எனக் கண்டவர். இயற்கையை அழித்தல், இயந்திரப் பெருக்கம், பிரம்மாண்டமான திட்டங்கள் என்பதெல்லாம் அவர் புறந்தள்ளியவை. “இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு, அவற்றைப் பொருந்தியவாறு கடைப் பிடிப்பதில்தான் நமக்கு அணுகூலம் உள்ளது என்பதை இயற்கை காலம் காலமாக நமக்கு நினைவூட்டுகிறது.” எங்கெல்சின் இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்துத்தான் வளர்ச்சியை உண்டுபண்ண வேண்டும். இயற்கையை அழிப்பதால் அல்லது மனித குலத்துக்குப் பொருந்தாத, அணுப்பிளப்பு மின்சாரம் போன்ற கொடூரமான செயல்களால் விளைவதல்ல வளர்ச்சி.

ஆனால் அணு ஆயுதச் சோதனை தான் அணுமின் நிலையங்களின் மூல நோக்கம். பொக்ரான் சோதனைக்குக் காரணகர்த்தாவாக இருந்ததால், அப்துல் கலாமுக்கு இந்தியாவின் முதல்குடிமகன் பதவி தரப்பட்டது.

தொழில்வளர்ச்சியில் அல்லது கலாம் சொல்வதுபோல் ஒரு வளர்ந்த நாடாகும் முயற்சியில் விளைந்த செயல்தான் போபால் யூனியன் கார்பைடு விபத்து. அந்த மோசமான பாதிப்புகளை நாம் அறிவோம். கலாமும் அறிவார். 1984இல் நடந்த அவ்விபத்து உடனடியாக 25 ஆயிரம் உயிர்களையும் சிறுகச் சிறுகப் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் காவுகொண்டது. அப்போது கலாம் ஓர் இளம் விஞ்ஞானி. யூனியன் கார்பைடு தொழிற்சாலையும் வளரும் நாடாக இந்தியாவை ஆக்கவே வந்தது. தோல், சுவாச நோய்கள், புற்றுநோய், பிறக்கும் குழந்தைகள் ஊனம் எனப் பெரும் பாதிப்புக்குள்ளாகி மீதியுள்ள மக்கள் மட்டும் மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்திருக்கின்றனர். பல உயிர்களைக் காவுகொண்ட இவ்விபத்திற்குக் காரணமான ஆண்டர்சனைக் குற்றவாளியாக அமெரிக்காவும் கருதவில்லை; இந்தியாவும் அப்படிப் பார்க்கவில்லை. அதன் காரணமாக அவர் மிக எளிதாக டிசம்பர் 3, 1984 விபத்து நடந்த ஓரிரு நாட்களிலேயே அமெரிக்காவுக்குத் தப்பியோட முடிந்தது. யூனியன் கார்பைடின் இந்திய நிர்வாகிகள். அரசு அலுவலர்கள், மேல்மட்ட அமைச்சர்கள், நீதிமன்றம் ஆகியோரின் கூட்டுச் சதியால் வெறும் ரூ 713 கோடி தொகை இழப்பீடு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. வளரும் நாடாவதற்காக முட்டுக்கொடுக்கும் கலாம் அப்போது அணுசக்தித் துறையில் சில லட்சம் ரூபாய்களைப் பெற்றுபவராய் அமர்ந்து, அணு ஆயுதச் சோதனை என்னும் கனவில் மூழ்கியிருந்தார்.

“அணுசக்தி மூலம் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தியாகிறது. எனவே, முடியாது - ஆபத்து - பயம்கொண்ட இயலாதவர்களின் கூட்டத்தின் உபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது” என்னும் கூற்றின் மூலம் போராடும் மக்களைப் பயந்த கூட்டம் என்கிறார்கலாம். அவர்கள் உயிருக்குப் பயந்து தான் போராடுகிறார்கள். உயிர் பிழைக்க வேண்டுமே, போராடாமல் என்ன செய்வது? அவர்கள் போராட முன்வந்தது அவர்களின் உயிர்காக்கும் தன்னலத்தால் மட்டுமல்ல; இனிவரும் தலைமுறைகளைக் காக்கும் பொதுநலத்தால்.

“அணுமின் நிலையங்களின் உற்பத்தியை நிறுத்தி அவற்றை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அப்புறப்படுத்தினாலும் பெரிய இழப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதே சமயம் இப்போதுள்ள தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அணுக்கதிர் வீச்சிலிருந்து தப்பிக்கும்” என இதையேதான் உலக சமாதானத்துக்கான நோபல் விருது பெற்ற ஒன்பது அறிஞர்கள் அறிவித்தார்கள். (20.4.2011, வாசிங்டன்)

“அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறார்கள். தலைவர்கள் அடுத்த தலைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்” எனச் சொல்வதுண்டு.

நம்முடைய நிகழ்கால அரசியல் தலைவர்கள்கூட, அடுத்த தலை முறைகளைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். தங்கள் குடும்பத்தின் வருங்காலத் தலைமுறைகள் பற்றி, சொத்துச் சேர்ப்பது, அரசியல் வாரிசுகளை உருவாக்குவது என்பவற்றில் தலை முறைகளின் தலைவர்கள் இவர்கள். அந்த ஒன்பது அறிஞர்களைப் போல், இனிவரும் தலைமுறைகள் பற்றிச் சிந்திக்காமல், அரசியல்வாதிகளுக்குத் துணைபோகிற உபதேசகராகத் தென்படுகிறார் கலாம்.

நாமல்ல, நாடுதான் முக்கியம் என்கிறார். இது போன்ற வசனங்களை அரசியல்வாதிகள், அமைச்சர்கள் உதிர்ப்பார்கள் அதுபோலவே ஆளும் சக்திகளுக்கும் நாடு முக்கியம். இந்த நாடு மக்களுக்கானதல்ல; தமக்கானது என்பதை அறிவார்கள்.

போதனையாளராக மட்டுமே கலாம் போன்ற பெரிய மனிதர்கள் வாழுகிறார்கள். அதற்குச் சிறிய உதாரணமுண்டு.

“ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது பத்து மரங்கள் நட வேண்டும். மரம் வளர்ப்பதை வாழ்நாள் பணியாகச் செய்ய வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க, காடுகளை வளர்க்க, சுற்றுச் சூழலை மனித வாழ்வுக்கு இணைவுடையதாய் ஆக்க 100 கோடி மரங்களை இந்தவகையில் இந்தியா நட முடியும்” (ஜிலீமீ பிவீஸீபீu 31.12.2009). கலாம் இந்தப் பொன் மொழி உதிர்த்த அதே மாதத்தில் தான், நீலகிரி, குன்னூர் பகுதிகளில் மலைச் சரிவுகள் நிகழ்ந்தன. அவற்றில் சிக்கி 42 பேர் இறந்தனர். நிலச் சரிவு இறப்புக்கும் வன அழிப்புக்கும் சம்பந்தமில்லையெனக் கலாம் கருதுகிறாரா? காடழிக்கும் கொள்ளையர்களாலும் துணைபோகும் அரசியல்வாதிகளாலும்தாம் மத்திய மாநிலங்களில் பழங்குடி மக்கள் எழுந்து போராடுகிறார்கள் எனக் கலாம் வாய்திறப்பாரா? வாய் திறந்திருந்தால் குடியரசுத் தலைவராக முடிந்திருக்காது. ஒரு போராளி ஒருபோதும் குடியரசுத் தலைவர் ஆக மாட்டார். அணு விஞ்ஞானியான கலாம் சமூக விஞ்ஞானியாகவும் மாற வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்னும் முனை முறிந்த ஆயுதத்தை வீட்டுக்குப் பத்து மரம் வளர்க்கக் கூர் தீட்டும் கலாமை நோக்கிச் சில கேள்விகள் கேட்போம். ஓர் அங்குல இடம்கூட உரிமையில்லாமல், தெருவோரத்தில், நடைபாதையில், புறம்போக்கில் வாழ்பவர்கள் எப்படிப் பத்து மரம் நடுவார்கள்? வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் அறுபது கோடி மக்கள், வாடகை வீடுகளில்தாம் வாழ்கிறார்கள். வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படாத இந்த வாடகை வீட்டுக்காரர்கள் எப்படி மரம் வளர்ப்பது?

2034ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூட சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. 2011 அக்டோபர் முதல் வாரம் இதற்கான சட்டவரைவு சுவிட்சர்லாந்து நாடளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

“இது எங்கள் நாடு; இவர்கள் எம் குழந்தைகள். எம் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அணு உலைகளை மூடுவது என்ற முடிவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என நாடளுமன்றத்தில் எரிசக்தித் துறை அமைச்சர் உரையாற்றினார்.

ஜெர்மனி புதிய அணு உலைகள் திறக்கத் தடைவிதித்துள்ளதுடன், முந்தைய அணு உலைகளையும் மூடிவருகிறது. இதனடிப்படையில் இந்த ஆண்டு இரு அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் சிலவற்றை மூடவிருக்கின்றன.

இதற்கு மாறாக மன்மோகன் சிங் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்கிறார். குழந்தைகளின் சிரிப்பையும் அணுவின் வெடிப்பையும் சமமாகக் கண்டு குதூகலிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி அப்துல் கலாம் இத்திட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என ஒத்து ஊதுகிறார்.

சுவிட்சர்லாந்து அமைச்சர் உணர்வதுபோல் இது இவர்களுக்குத் தமது நாடல்ல. தமிழ்நாட்டில் வாழ்வோர் அல்ல. இந்தக் குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் அல்ல.

விஞ்ஞானிகள் சிலர் சிறு பிள்ளைகள் போல் இருக்கலாம். ஆனால் சிறு பிள்ளைத்தனமான விஞ்ஞானிகள் இருக்கக் கூடாது. ஆனாலும் கலாம் அவராகவே இருப்பார். அவர் என்பது மன்மோகன், சிதம்பரம், பிரணாப்களின் பிம்பம்தான்.

-பா. செயப்பிரகாசம்

நன்றி: காலச்சுவடு, டிசம்பர்-2011

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

கூடங்குளம் அணுமின் திட்டம் - அதிர்ச்சி தகவல்கள்

கூடங்குளம் அணுமின் திட்டம் :
அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வு முறையும்,
தமிழ்நாடு, கேரள மக்களின் வாழ்விற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலும்
ரா.ரமேஷ், V.T.பத்மநாபன், வீ.புகழேந்தி

1)      கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்ற தமிழக-கேரள மக்களின் கருத்து அறிவியல் அடிப்படையில் சரியான கருத்தாகும். உடனடியாக அதனை செயல்பட வைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தினரின் கருத்து அறிவியலுக்குப் புறம்பான ஒன்றாகும். இந்தக் கருத்தினை எவ்வித மறு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் நடைமுறைப்படுத்தினால் அது அந்த மின் நிலையத்திற்கும், தமிழக கேரள மக்கள் மற்றும் உயிரினங்களின் வாழ்விற்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் மிகப்பயங்கரமான சவாலாக அமையும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.

2) கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அமைவிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதமும், அதன் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் நிர்வாகத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட விதமும் தேச மற்றும் சர்வதேச அறிவியல் ஆய்வு மரபுகள் மற்றும் சட்டங்களை முற்றிலுமாக புறந்தள்ளுவதாக உள்ளன

3)      கூடங்குளம் அணுமின் நிலயத்தின் அமைவிடம் குறித்த ஆய்வுகளை முறைப்படி மேற்கொள்ளாமலேயே இரண்டு அணு உலைகளை அணு சக்திக் கழகம் கட்டி முடித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த புக்குஷிமா அணு உலை விபத்தானது, முறைப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் அணு உலைகள் கட்டப்பட்டு இயக்கப்பட்டால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சின்னைகளை கண்கூடாக விளக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

4)      புக்குஷிமா போன்ற விபத்து கூடங்குளத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்று அணுசக்திக் கழகம் கூறுவது சரியே. ஏனெனில், அதையும்விட மோசமான விபத்துகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படுவதற்கான அறிவியல் அடிப்படையிலான அனைத்து வாய்ப்புகளும் இந்த அமைவிடத்தில் உள்ளது.

5)      இந்த அமைவிடம் பிதுங்கு எரிமலைப் பாறைகளை (sub volcanic rocks) மிக அதிக அளவில் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அமைவிடத்தின் அடித்தளக் கெட்டிப்பாறை மிகவும் மெலிந்துபோய் காணப்படுகிறது. 40,000 மீட்டர் தடிமனைக் கொண்டிருக்க வேண்டிய கூடங்குளம் அமைவிடத்தின் கண்ட மேலோடானது, பல இடங்களில் வெறும் 150-200 மீட்டர் தடிமனையே கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்கின்ற காலத்தில் அந்த விபத்தைக் கையாளுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை (shielded emergency control room) மற்றும் டீசல் ஜெனரேட்டர் கட்டிடங்கள் ஆகியவை அமைவிடத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளன. இந்த இடத்தில்தான் பிதுங்கு எரிமலைபாறைகளால் (sub volcanic rocks) அடித்தள கெட்டிப்பாறையானது மேலதிகமான அளவில் மெலிந்து போயிருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே, இந்த இடங்களில் பிதுங்கு எரிமலைப் பாறைகளின் செயல்பாட்டால் நில மேலோடு குழிந்து பள்ளமாகி விடுவதற்கோ அல்லது சிறிய அளவிலான எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கோ அதிக சாத்தியம் உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. விபத்து காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் இங்கு நிகழும் பட்சத்தில், அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை மற்றும் கூடுதல் ஜெனரேட்டர்கள் இல்லாமல் விபத்தைத் தடுக்க யாரால் என்ன செய்ய முடியும்? (1)

6)      கூடங்குளம் அணு உலைகளின் அடித்தளத்திற்காக 2001 ஆம் ஆண்டில் குழியைத் தோண்டியபோது 1990-1998 ஆண்டுவரை அணுசக்தித் துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலவியல் ஆய்வுகளால் கண்டறியப்படாத உறுதி குறைந்த பாறைகள் கண்டறியப்பட்டன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 15 மீட்டர் ஆழத்தைக் கொண்ட அந்த பாறைகளைத் தோண்டி அகற்றிவிட்டு அந்தக் குழியில் சிமெண்ட் கலவை கொண்டு உறுதி செய்தார்கள் (consolidation cement grouting) . 1990-98 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலவியல் ஆய்வுகளின் அலட்சியத் தன்மையை சென்னை ஐ..டி பேராசிரியர் டாக்டர் A.பூமிநாதன் 2004 ஆம் ஆண்டில் கரண்ட் சயின்ஸ் சஞ்சிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார். (2) கடைசி நேரத்தில் அதிகாரிகளால் கண்டறியப்பட்ட உறுதி குறைந்த பாறைகளே கூடங்குளம் அமைவிடத்தின் அடித்தளப் பாறைகளுக்குள் ஊடுருவியிருக்கும் பிதுங்கு எரிமலைப் பாறைகளாகும்

7)      பிதுங்கு எரிமலைப் பாறைகளால் நிலத்தடி நீரின் மட்டமும், இயக்கமும் பாதிக்கப்படலாம் என்றும், இதனால் அணு உலைகளின் அடித்தளத்தின் உறுதியானது கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்றும் 2011 மே மாதம் சர்வதேச அணுசக்திக் கழகத்தால் வெளியிடப்பட்ட “அணு உலைகளுக்கான எரிமலைப் பேரிடர்” ஆவணம் கூறுகிறது. இதன் காரணம், இந்தப் பிதுங்கு எரிமலைப் பாறைகள் காணப்படும் இடங்களை அமைவிடமாகக் கொண்ட அணு உலைகளிலும், அணுப் பிளவுடன் தொடர்புடைய பிற ஆலைகளிலும் எரிமலை நிகழ்வுகளினால் ஏற்படும் பேரிடர் குறித்த ஆய்வினை (Volcanic Hazard Analysis) மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆவணம் வலியுறுத்துகிறது.(3)

8)      அமெரிக்காவின் யுக்கா மலைப்பகுதியில் அமையவிருந்த அமெரிக்காவின் அணுக்கழிவுக் கல்லறைத் திட்டத்தை அமெரிக்க அரசு 2010 ஜூலை மாதம் கைவிட்டு விட்டது. இந்த அமைவிடமானது, கூடங்குளத்தில் உள்ள பிதுங்கு எரிமலைப் பாறைகளைப் போன்ற பாறைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 1991 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை இந்தப் பிதுங்கு எரிமலைப்பாறைகளால் அணுக்கழிவுக் கல்லறையின் இயக்கத்திற்கும், பாதுகாப்பிற்கும் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா என்பதற்கான ஆய்வுகள் நடத்தப் பட்டன. இதற்காக சுமார் 10,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடைசியில் இந்தப் பிதுங்கு எரிமலைப் பாறைகளால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது என்ற முடிவு எட்டப்பட்டது. அதன் நீட்டிப்பாக, அமெரிக்க அரசு திட்டத்தைக் கைவிட்டு விட்டது. (4)

9)      யுக்கா மலைப்பகுதியை விட கூடங்குளம் அமைவிடத்திற்குப் பிதுங்கு எரிமலைப் பாறைகளாலும், பிற எரிமலை நிகழ்வுகளாலும் அதிக அபாயம் உள்ளது என்பதை சமீபத்தில் நடந்த இயற்கை நிகழ்வுகளும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் உறுதி செய்கின்றன. (5)

10)  கூடங்குளம் அமைவிடத்தில் இருந்து 26, 66, 96 மற்றும் 156 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆனைக்குளம்-பாண்டிச்சேரி, அபிஷேகப்பட்டி-திருப்பணிக்கரிசல்குளம், சுரண்டை மற்றும் சுக்கலி நத்தம் ஆகிய கிராமங்களில் 1998, 1999, 2001, மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் நடந்த சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் (small volume volcanic eruptions) போன்ற நிகழ்வுகளை அமெரிக்காவின் யுக்கா மலைப்பகுதி சந்திக்கவில்லை. என்றாலும்கூட அங்கு அமையவிருந்த “அணுக்கழிவுக் கல்லறைக்கு” எரிமலையினால் ஏற்பட வாய்ப்புள்ள பேரிடர் ஆய்வு (volcanic hazard analysis) விரிவான முறையில், பல்வேறு ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், யுக்கா அமைவிடத்தைக் காட்டிலும் அதிக எரிமலை அபாயத்தைக் கொண்டிருக்கும் கூடங்குளம் அமைவிடத்திற்கு அப்படிப்பட்டதொரு ஆய்வு இன்றளவும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இங்கு இருக்கின்றது என்பதை, சுதந்திரமான அறிவியல் ஆய்வுகளால் இது பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அணுசக்தி நிர்வாகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது பேசவோ தயாராயில்லை என்பதுதான். இதற்காக உச்ச நீதிமன்றத்தை 2002 மே 20 ஆம் தேதியன்று மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு மக்கள் நாடியபோது, அன்று தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் B.N.கிர்பால் அவர்களால் மக்களின் வாதத்தை மறுக்க முடியவில்லை ; மாறாக, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இது மக்களின் எதிர்காலத்தைத் தீர்மாணிக்கும் பிரச்சினை என்று மக்களின் வழக்குறைஞர் திரு.வெங்கட்ரமணி அவர்கள் மேற்கொண்டு வாதிட்டபோது, மக்களின் சார்பாக வழக்கு தொடர்ந்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மார்க்கண்டன் அவர்களுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகன் அவர்களுக்கும் 1000 ரூபாய் அபராதத்தை அந்த நீதியரசர் விதித்தார் என்பது  எவரும் மறக்கக்கூடாத வரலாற்று நிகழ்வாகும்.

11)  சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் கூடங்குளம் அமைவிடத்தில் நடக்காது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகளை அணு உலை நிர்வாகம் இன்றளவும் மேற்கொள்ளவில்லை. இந்த நிகழ்வுகளின்போது அவை நடந்த இடங்களில் நிலமானது சுமார் 4 மீட்டர் வரைக்கும் தாழ்ந்து போனதாக ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. மேலும் வெடிப்பின்போது எரிமலை முகவாய்களில் இருந்து மேலெறியப்பட்ட லாவாக் குழம்பும், எரிமலைக் கற்களும் அடுத்துள்ள மரங்களையும், கட்டுமானங்களையும் பாதிப்பதாக இருந்தன. எரிமலை முகவாயில் இருந்த வெப்பமானது சுமார் இரண்டு நாட்களுக்குத் தனியாமல் இருந்தது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நிகழ்வொன்று கூடங்குளம் அமைவிடத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படிப்பட்டதொரு நிகழ்வு நடக்கும் பட்சத்தில் அணு உலைக்குக் கீழுள்ள நிலம் குழிந்து பள்ளமாகிப் போவதையும், வெடிப்பிலிருந்து வெளியேறும் லாவா மற்றும் எரிமலைக் கற்களையும் அணு உலைகளால் எவ்விதப் பாதிப்பும் இன்றி தாங்கிட முடியுமா? இவற்றால் ஏற்பட வாய்ப்புள்ள தீ விபத்துகளை அணு உலைகளால் பாதுகாப்பான ரீதியில் எதிர்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கண்டடையவே சர்வதேச அணு சக்திக் கழகம் கூறும் “எரிமலைப் பேரிடர் ஆய்வு” கூடங்குளம் அமைவிடத்திற்கு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாததாகிறது.     

12)  தென் இந்தியாவிலேயே மிக அதிகமான நிலத்தடி வெப்பத்தைக் (sub crustal heat flow) கூடங்குளத்தில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகர்காவில் கொண்டுள்ளது என்பதை சுகந்தா ராய் குழுவினர் 2007 ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளனர். தென் இந்தியாவின் பிற பகுதிகளைவிட இந்தப்பகுதியின் நில மேலோட்டிற்குக் கீழ் உள்ள மேக்மாவானது  அதிகமான அளவில் மேலெழும்பியிருக்கிறது என்றே இதனைப் புரிந்துகொள்ள முடியும். (6) கூடங்குளம் அமைவிடத்திற்கு எரிமலைப் பேரிடர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தேவையை இந்தத் தகவலானது மேலும் உறுதி செய்கிறது.

13)  கூடங்குளம் அணுமின் நிலையம் தன் அணு உலைகளுக்குத் தேவையான குளிர்விப்பான் நீர் அனைத்திற்கும் மன்னார் வளைகுடாவை மட்டுமே நம்பியிருக்கிறது. 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியன்று அணுசக்திக் கட்டுமானக் கழகம் முதல் இரண்டு அணு உலைகளுக்குக் கொடுத்த அனுமதியில் - எக்காரணம் கொண்டும், அணு உலைகளுக்குத் தேவையான குளிர்விப்பான் நீருக்கு ஒற்றை நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. (7) சர்வதேச அணு சக்திக் கழகமும் இந்தக் கருத்தைப் பல்வேறு ஆவணங்களில் வலியுறுத்துகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உலைக்கான முதன்மைக் குளிர்விப்பான் நீரை எடுப்பது அன்றைய திட்டம். பேச்சிப்பாறை அணையிலோ அல்லது அங்கிருந்து அணு உலைகளுக்கு வரும் குழாய்களிலோ பிரச்சினகள் ஏற்பட்டால் அதனை சமாளிக்கத் தேவையான நம்பகமான மாற்று நீர் ஆதாரங்களைக் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் கண்டறிய வேண்டும் என்று அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியது. பேச்சிப்பாறை அணை இல்லாவிட்டால் கோதையாறு அணையில் இருந்தோ அல்லது நிலத்தடி நீரில் இருந்தோ அணு உலையின் நன்னீர்த் தேவையை நிறைவு செய்யும் திட்டத்தை அணுமின் நிலைய நிர்வாகம் முன்வைக்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டின் இறுதியில் திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பேச்சிப்பாறை அணையின் நீர் அணு உலைகளுக்கு உபயோகப்படுத்தப் படமாட்டாது என்று அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்தபோது அவர்களிடம் அவசர கோலத்தில் இஸ்ரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலமாக வாங்கப்பட்ட கடல் நீர் உப்பகற்றி ஆலையைத் (sea water desalination plant) தவிர வேறெந்த மாற்று நீராதாரமும் இல்லை! (8) என்றாலும்கூட, அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தால் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

14)  பேச்சிப்பாறை அணையின் நீரை அணு உலைகளைக் குளிர்விப்பதற்கு உபயோகிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு சுமார் 20 ஆண்டு காலம் கழித்து அந்த அணையின் நீரை உபயோகிக்கப் போவதில்லை என்ற அணுமின் நிலைய நிர்வாகிகளின் முடிவு குமரி மாவட்ட மக்களின் எதிர்ப்பினால்தான் என்று அவர்கள் இன்று கூறுகிறார்கள். என்றாலும் கூட, அந்தக் கூற்றில் இருப்பது பாதி உண்மையே. 20 ஆண்டுகாலம் பேச்சிப்பாறையின் நீரை உபயோகிப்பது என்று அணுசக்தித் துறை கூறிக்கொண்டிருந்தாலும்கூட, அந்த அணையால் நிலையான அடிப்படையில் அணு உலைகளுக்குத் தேவையான நீரை அளிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வுகளை அணு மின்நிலைய நிர்வாகம் அந்த 20 ஆண்டுகாலமும் மேற்கொண்டிருக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியன்று திருநெல்வேலியில் நடத்தப்பட்ட 3-6 அணு உலைகளுக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் சார்பில் அரசிடம் அளிக்கப்பட்ட பேச்சிப்பாறை நீர் நிலையினால் தொழில்நுட்ப ரீதியில் அணு உலைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகிற பிரச்சினை குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றின் பிறகே அந்த முடிவை அணுசக்தி நிர்வாகம் எடுத்தது. (9) இன்றளவும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகத்தின் அறிவியல் செயல்பாட்டு முறை இவ்வாறே தொடர்கிறது

15)  பேச்சிப்பாறை அணையின் நீர் ஆதாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள 20 ஆண்டுகளாக அணுமின் நிர்வாகம் எவ்வாறெல்லாம் மறுத்து வந்ததோ, அது போலவே மன்னார் வளைகுடாவினால் கடல்நீர் உப்பகற்றி ஆலைகளுக்குத் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் ஏதுமின்றி நீரைக் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வுகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது மேற்கொள்ளத் தயாராயில்லை. 1989 ஆம் ஆண்டு அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தால் கொடுக்கப்பட்ட அனுமதியில் கூடங்குளத்தின் கடலோரப் பகுதியில் கடல் அரிப்பு மற்றும் கடற்கரைப் பெருக்கம் ( sea erosion and accretion) குறித்த ஆய்வுகளை அணுசக்தி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்க்கப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஆய்வுகளை அணுமின் நிலைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. அமைவிடத்தின் கிழக்குக் கோடியில் நிறுவப்பட்டுள்ள கடல் நீர் உப்பகற்றி ஆலைகள் உள்ள கடலோரப்பகுதியானது கடுமையான கடல் அரிப்புக்கு உள்ளாகும் பகுதி என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன(10). அமைவிடத்தின் மேற்குப் பகுதியோ கடற்கரைப் பெருக்கப் பகுதியாக உள்ளது என்று அந்த ஆய்வுகள் கூறுகின்றன, என்றாலும்கூட, கடந்த சில ஆண்டுகளாகப் பெருமணல் பகுதியில் சில தனியார் நிறுவனங்களால் கடற்கரை மணலானது சட்ட ரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் கண்மூடித்தனமாக வெட்டி எடுக்கப்படுவதால் கூடங்குளம் அமைவிடத்தின் மேற்குப்பகுதியில் உள்ள கடற்கரைப் பெருக்க நிகழ்வு பாதிக்கும் மேலாகக் குறைந்து போயுள்ளது. அதுபோலவே அமைவிடத்தின் கிழக்குப் பகுதியில் காணப்படும் கடல் அரிப்பு நிகழ்வானது இரட்டிப்பாகக் கூடிப்போயுள்ளது. கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை நிறுவியதோடு தன் பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அணுமின் நிலைய நிர்வாகத்திற்கு இது குறித்தெல்லாம் அக்கறை இல்லை. எனவேதான் பெருமணல் பகுதிகளில் தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றுவரை எவ்வித எதிர்ப்பையும் அது காண்பிக்கவில்லை

16)  2008 ஆம் ஆண்டு நவம்பரில் தமிழகத்தைத் தாக்கீய நிஷா புயலின்போது சென்னைக்குக் குடிநீரை அளிப்பதற்காக நிறுவப்பபட்ட மீஞ்சூர் கடல்நீர் உப்பகற்றி ஆலையின் கடலடிக் குழாய்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின. சேதமடைந்த அந்தக் குழாய்களை வெளியில் எடுக்கக்கூட இந்தியாவில் ஆட்கள் இல்லை. எனவே நெதர்லாந்தில் இருந்து வான் ஊர்து நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பணி நிறைவடைய ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது (11). இதைபோல ஒரு சூழ்நிலை கூடங்குளம் அமைவிடத்தில் உள்ள உப்பகற்றி ஆலைகளுக்கு நிகழாது என்று கூறமுடியாது. அவ்வாறு நிகழ்ந்தால் ஒருமாதத்திற்கும் மேலான நாட்களுக்கு இந்த உப்பகற்றி ஆலைகளின்றி அணு உலைகள் இயங்கவேண்டி வரும். இன்றைய தேதியில் அணு உலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரின் கொள்ளளவு என்ற அடிப்படையில் பார்த்தால் உப்பகற்றி ஆலைகளின்றி அணு உலைகளால் வெறும் இரண்டரை நாளுக்கு மட்டுமே இயங்க முடியும். 1989 ஆம் ஆண்டிலிருந்து அணு சக்திக் கழகம் விபத்து காலங்களில் உபயோகப்படுத்தக்கூடிய இந்தத் தண்ணீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் இன்றுவரை கூடங்குளம் அமைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 6 கோடி லிட்டர் தண்ணீருக்குப் பதிலாக அங்கு 1.2 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகளே செய்யப்பட்டிருக்கின்றன. (12)

17)   முதலாவது அணு உலைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான குழியைத் தோண்டிக்கொள்வதற்கான அனுமதியை அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகம் கூடங்குளம் அணுமின் நிர்வாகத்திற்கு 2001 அக்டோபர் மாதம் கொடுத்தது. அணு உலைக்கான அமைவிடத்தில் 6 கோடி லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கான கட்டுமானங்களைக் கட்டினால்தான் இந்த அனுமதி செல்லுபடியாகும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் அணு மின் நிலையத்திலிருந்து வெறும் 900 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புச் சுரங்கத்தின் இயக்கத்தை நிறுத்துவதற்கான உடனடியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது. அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இந்த இரண்டு நிபந்தனைகளையும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. என்றாலும்கூட, அணுமின் நிலைய நிர்வாகத்தை எதிர்த்து எவ்வகை நடவடிக்கையையும் எடுக்கமுடியாத, திராணியற்ற நிலையிலேயே அந்த நிறுவனம் உள்ளது. “விபத்து காலங்களில் தேவைப்படும் தண்ணீரின் அளவை தயவு செய்து இன்னும் அதிக அளவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்...” என்று அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இன்றைய தலைவரான டாக்டர் பஜாஜ் இன்றளவும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.(13)

18)  மன்னார் வளைகுடாவின் கடற்கரைப் பகுதியானது உறுதியான நிலவியல் அமைப்பினைக் கொண்டிருக்கவில்லை என்பதையே தென் தனுஷ்கோடியானது 1948-49 ஆம் ஆண்டின் போது உடைந்து விழுந்து கடலில் மூழ்கி அழிந்து போன நிகழ்வு உணர்த்துகிறது (14). அதே மன்னர் வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ள கூடங்குளம் அமைவிடத்தின் கடலோரப் பகுதியில் இப்படிப்பட்டதொரு நிகழ்வு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை இன்றளவும் அணு உலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை . கடந்த நிலவியல் காலங்களிலும் செங்குத்தான இயக்கப்போக்கிற்கு இப்பகுதியின் நிலமேலோடு உள்ளாக்கப்பட்டது என்பதை ஹெல்மட் ப்ரக்னர் தொடங்கி ஆர்ம்ஸ்ட்ராங் ஆல்ட்ரின் சாம் ஆகியோரின் ஆய்வுகள் வரை அனைத்து ஆய்வுகளும் உறுதி செய்கின்றன(15). இந்த ஆய்வுகளுக்குப் பின்னரும் கூட இந்தக் கடற்கரைப் பகுதியானது உறுதி மிக்கது (stable shoreline) என்று மத்திய அரசின் வல்லுனர் குழு கூறியிருப்பதை அறிவியல் பயின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது

19)  மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் எரிமலைகளின் சிகரங்கள்  உள்ளன என்பதை 1975 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வு செய்த பிரசித்திபெற்ற ரஷ்யக் கடலியல் அறிஞரான G.B.உடிண்ட்செவ் தன் Geological and Geophysical Atlas of the Indian Ocean  என்ற புத்தகத்தின் 151 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதுபோலவே ONGC நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளரான V.V.சாஸ்திரி தலைமையிலான குழுவானது 1981 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவில் எரிமலை இருப்பதாகத் தன் ஆய்வுக்கட்டுரையில் பதிவு செய்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவில் பெட்ரோல் துரப்பணிகளுக்காகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் எரிமலைக் கற்கள் வெகு சாதாராணமாகக் காணப்படுவது குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 1994 ஆம் ஆண்டில் G.R.K. மூர்த்தி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மன்னார் வளைகுடாவிற்கான magnetic survey ஆய்வானது, மன்னார் வளைகுடாவின் கடல்தரையில் உள்ள அடித்தளக் கடினப்பாறையானது (basement) வெறும் 1-4 மீட்டர் தடிமனையே கொண்டுள்ளது என்றும், அந்தப் பாறைகளை எரிமலைப் பாறைகள் அடியில் இருந்து ஊடுருவியிருப்பதால்தான் இது நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது. (அதாவது கூடங்குளம் அமைவிடத்தைப் போலவே அதனை அடுத்துள்ள மன்னார் வளைகுடாவின் நிலமேலோடும் எரிமலைப் பாறைகளின் ஊடுருவலால் மெலிந்துபோயுள்ளது என்பதை மூர்த்தி குழுவினரின் ஆய்வுகள் நிறுவுகின்றன.) மேலும், மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) ஒன்று இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த எரிமலை முகவாயானது கூடங்குளம் அமைவிடத்தில் இருந்து வெறும் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது கூடுதல் தகவலாகும். (16)

20)  உறுதி குறைந்த நில மேலோட்டினைக் கொண்ட இந்தப்பகுதியில் நிகழ வாய்ப்புள்ள நிலவியல், கடலியல் மற்றும் காலவியல் (meteorological) பேரிடர்களின்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கடல்நீர்க் குழாய்களாலோ அல்லது உப்பகற்றி ஆலையின் குழாய்களாலோ பிரச்சினைகளின்றி இயங்கிட முடியும் என்பதை சந்தேகங்களுக்கு இடமின்றி நிறுவும் அறிவியல் ஆய்வுகள் இல்லை

21)  ஆக, கூடங்குளம் அமைவிடத்தின் நில மேலோட்டிலும், அதனை சுற்றி அமைந்துள்ள நில மற்றும் கடல் பகுதியில் உள்ள நில மேலோடுகளிலும் பிதுங்கு எரிமலைப் பாறைகள் மிக அதிக அளவில் ஊடுருவியுள்ளன. இதன் காரணம் இந்த மேலோடுகளின் தடிமன் மிக அதிக அளவில் குறைந்து போயுள்ளது. குறைந்த தடிமன் கொண்ட நில மேலோட்டின் ஊடாக செல்லும் அச்சன்கோவில், தென்மலை - கடனா மற்றும் சென்னை-கன்னியாகுமரி  நிலப்பிளவுகளில்தான் குறைந்த அளவு எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால் பிரச்சினை இதோடு முடியவில்லை.

22)   2011 நவம்பர் 26 ஆம் தேதியன்று கூடங்குளம் அமைவிடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள (ராதாபுரத்திற்குத் தெற்கே அமைந்துள்ள) பண்ணையார் குளத்தில் பெய்த மழையின்போது 10 அடி சுற்றளவில் 15 அடி ஆழம் கொண்ட பள்ளம்    ஒன்று உருவானது. சுற்றுப்பகுதியில் தேங்கியிருந்த நீரெல்லாம் இந்தப்பள்ளத்திற்குள் சென்று மாயமாகி மறைந்து போனது. அருகில் தேங்கியிருந்த தண்ணீரை பள்ளத்திற்குள் வெட்டி விட்டார்கள். அதுவும் சட்டென்று உள்ளில் சென்று மறைந்து போனது. இதுபோன்ற நிகழ்வு 2008 ஆம் ஆண்டில் ராதாபுரம் அருகே நிகழ்ந்தது. அப்போது கிண்று ஒன்றில் இருந்த தண்ணீர் மாயமாக மறைந்து போனது. கார்ஸ்ட் நிலப்பகுதிக்கான (karst region) அறிகுறிகளே இவை. (17) கூடங்குளம் அமைவிடமும் ஒரு கார்ஸ்ட்(பாதாள சுண்ணாம்புப் பாறை குகைகள்) பிராந்தியத்தில் அமைந்துள்ளதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அப்படிப்பட்ட சிந்தனை எதுவும் அணுமின் நிலைய நிர்வாகத்திற்கு இல்லை. எனவே, இந்தப்பகுதி கார்ஸ்ட் நிலப்பகுதியா இல்லையா என்பதை அறிந்துகொள்ளத் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

23)   2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இந்தக் கடல்பகுதியில் கடலானது பலமுறை உள்வாங்கியுள்ளது. (18) கடலானது இப்படி உள்வாங்குவதற்கான காரணத்தை இன்னமும் அறிவியல் உலகம் முழுமையாக விளங்கிக் கொள்ள முயற்சித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்காலங்களில், கூடங்குளம் அமைவிடத்தை ஒட்டிய கடல்பகுதியில் கடல் உள்வாங்கக்கூடிய சாத்தியம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் அணுமின் நிலைய நிர்வாகத்திடம் இல்லை. கடல் உள்வாங்கும் நிகழ்வு நடக்கும் தருணங்களில் கடல்நீரை அணு உலையின் தேவைக்காக உள்ளெடுக்கும் கடலடிக் குழாய்களால் கடல்நீரை உள்ளெடுக்க முடியாது. வெறும் காற்றை மட்டுமே உறிஞ்ச வேண்டியிருக்கும்.(dry intake). கடல்நீர் உப்பகற்றி ஆலைகளும் இதே பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும். அணு உலைகளின் பாதுகாப்பை சுனாமி வராத காலங்களிலேயே சீர்குலைக்கும் தன்மை கொண்ட இதுபோன்ற தருணங்களை எவ்வாறு கையாளுவது என்பதற்கான திட்டங்கள் அணு மின்நிலைய நிர்வாகத்திடம் இன்றளவும் இல்லை என்பதுதான் உண்மை. (19)

24)  இந்தியாவின் கடலோரப்பகுதிகளை அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து ஏற்படும் சுனாமிகள் (Near Field Tsunami) தாக்க வாய்ப்பில்லை என்பதுதான் அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை உண்மையானதுதான் என்பதை நிறுவும் அறிவியல் ஆதாரங்கள் அதனிடம் இல்லை. அருகாமையில் உள்ள இடங்களில் சுனாமியை உருவாக்க சாத்தியம் கொண்ட நிலவியல் அமைப்புகள் இங்கும் இருக்கத்தான் செய்கின்றன. அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் கண்களுக்கு அவை இன்றளவும் தென்படவில்லை என்பதுதான் உண்மை. பேரிடர் நிகழ்வுகள் நடந்த பின்னர்தான் கற்றுக்கொள்வார்கள் போலிருக்கிறது. அடுத்துள்ள பகுதியில் சுனாமிகளை உருவாக்க வாய்ப்புள்ள காரணிகளாக மூன்று காரணிகள் சுனாமி வல்லுனர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவை: 1) சக்தி வாய்ந்த பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடிய நிலப்பிளவுகள், 2) கடல் எரிமலைகள் (undersea volcanoes) மற்றும் 3) கடல் தரையில் ஏற்படும் நிலச்சரிவுகள் (submarine landslides). கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு 104 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில், கடலுக்கு அடியில் எரிமலை ஒன்று இருப்பதாகவும், அதற்கு சர்வதேச எரிமலைத் திட்டமானது (Global Volcano Program) 0305-1 என்ற எண்ணைக் கொடுத்துள்ளதாகவும், 1757 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அது வெடித்ததாகவும் 2011 மே மாதம் சர்வதேச அணுசக்திக் கழகத்தால் வெளியிடப்பட்ட “எரிமலைப் பேரிடர் ஆய்வு” குறித்த ஆவணம் கூறுகிறது.(20) கடலடி எரிமலைகளின் வெடிப்பாலோ அல்லது அதன் மேலோடு உடைந்து குழிந்து பள்ளமாகிப் போகும் நிகழ்வாலோ 100 மீட்டர் உயரம் கொண்ட அலைகளைக் கொண்ட மெகா சுனாமிகள் கூட உருவாக முடியும் என்பதை வரலாற்று நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன. என்றாலும்கூட, இதுகுறித்து சிந்தனை செய்ய மறுக்கும் போக்கையே இந்திய அணுசக்திக் கழகம் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. அருகில் உள்ள பகுதியில் இருந்து சுனாமி ஒன்று உருவாகலாம் என்பதற்கான சாத்தியம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு உள்ளதைப் போலவே கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கும் அண்மைப் பிரதேசங்களில் இருந்து சுனாமிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகிகள் அறிந்திருக்கவில்லை என்பதையே அவர்களின் மௌனமும், மேதை அப்துல் கலாம் மற்றும் மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிக்கைகளும் உணர்த்துகின்றன

25)  1982 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவில் வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் லௌரீ ஆகிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் தெரியவந்தது. மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் இரண்டு மிகப்பெரிய சரிந்து சாயும் வண்டல் குவியல்கள் (slumps) இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. 100 மற்றும் 35 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டிருக்கும் இந்த வண்டல் குவியல்களுக்குக் கிழக்குக் குமரி வண்டல் குவியல் மற்றும் கொழும்பு வண்டல் குவியல் என்று அவர்கள் பெயர் சூட்டினர். 50 கிலோமீட்டருக்கும் மேலான அகலத்தைக் கொண்டிருக்கும் இந்த வண்டல் குவியல்கள் கொழும்புவிற்கு அடுத்தும், குமரிக்கு அடுத்தும் உள்ள கண்ட மேலோடுகள் உடைந்து போனதாலே உருவாகியுள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறியது. இந்த வண்டல் குவியல்களில் உடைந்துபோன பல பகுதிகளும், V போன்ற குழிகளும், செங்குத்தாகக் கீழிறங்கும் உடைப்புகளும் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்த வண்டல் குவியல்களில் கடந்த காலத்தில் நிலச்சரிவுகள் ஏறபட்டிருப்பதற்கான ஆதாரத்தையும் அவர்கள் முன்வைத்தார்கள். (21)

26)  உறுதிகுறைந்த இந்த வண்டல் குவியல்கள் கூடங்குளம் அமைவிடத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளன. கிழக்குக் குமரி வண்டல் குவியலானது சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பு வண்டல் குவியல் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. 1994 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவின் கடல்தரையில் G.R.K. மூர்த்தி குழுவினரால் கண்டறியப்பட்ட எரிமலையின் முகவாயானது கிழக்குக் குமரி வண்டல் குவியலுக்குக் கீழ்தான் அமைந்துள்ளது. இந்த வண்டல் குவியல்களின் செயல்பாடுகளை தெற்கு வடக்காக நீளும் இந்திராணி நிலப்பிளவின் செயல்பாடுகள் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று வெஸ்டால் குழுவினர் கருதுகிறார்கள்.

27)  மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் உள்ள இந்த வண்டல் குவியல்களுக்கு அருகாமையிலும், ஊடாகவும் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று M 5.8 சக்தியைக் கொண்ட பூகம்பமும், 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று M 5.2 சக்தியைக் கொண்ட பூகம்பமும் நிகழ்ந்துள்ளன. இவை இரண்டும்  கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்தில் இருந்து 160 கிலோமீட்டர் தென் கிழக்கிலும், தென் மேற்கிலும் நிகழ்ந்தன. கூடங்குளம் அமைவிடத்தின் பாதுகாப்பிற்கு வண்டல் குவியலில் ஏற்பட வாய்ப்புள்ள நிலச்சரிவின் மூலம் சுனாமியை உருவாக்க வல்ல இந்த பூகம்பங்களை மத்திய அரசின் வல்லுனர் குழுவின் அறிக்கை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. மத்திய அரசு வல்லுனர் குழு மேற்கோள் காட்டும் A.K.கோஷ் அவர்களின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பூகம்பப் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கையில் இந்த பூகம்பங்கள் குறிப்பிடப் படாத காரணத்தாலேயே மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை என்று சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது. இதன் காரணமே “அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது

28)  2011 நவம்பர் 19 ஆம் தேதியன்று குமரி முனைக்குத் தெற்கே உள்ள குமரி முகட்டின் அருகாமையில் 5.2 ரிக்டர் சக்தியைக் கொண்ட பூகம்பம் கடலுக்கடியில் ஏற்பட்டது. இதன் அதிர்வலைகள் கொழும்பிலும், திருவனந்தபுரத்திலும் உணரப்பட்டன. இது குறித்து கேரளத்தில் உள்ள Center for Earth Science Studies, India Meteorological Department மற்றும் ஹைதராபாத்தில் உள்ள INCOIS ஆகிய நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டன. மன்னார் வளைகுடாவின் தரையில் அமைந்துள்ள வண்டல் குவியல்களின் இயக்கத்தைத் தீர்மாணிக்கும் திறனைக் கொண்ட இந்திராணி நிலப்பிளவில்தான் இந்த பூகம்பம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதுகுறித்த அறிக்கையை கூடங்குளம் அணுமின் நிர்வாகிகள் வெளியிடுவார்கள் என்று People's Movement Against Nuclear Energy எதிர்பார்த்திருந்தது. அப்படிப்பட்ட அறிக்கை வெளியாகாத காரணத்தால், இந்த பூகம்பத்தை அணு மின் நிலையத்தின் பூகம்பமாணி பதிவு செய்ததா? அவ்வாறு பதிவு செய்திருந்தால் அதன் முடிவுகளை வெளியிடுக என்று அணுசக்தி நிர்வாகத்திடம் PMANE பத்திரிகைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அணு உலை நிர்வாகமோ, மத்திய அரசின் வல்லுனர் குழுவோ இன்றுவரை பதிலளிக்கவில்லை.

29)  இதுபோன்ற பூகம்பங்களின்போது கிழக்குக் குமரி மற்றும் வண்டல்குவியல்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் களிமண் கற்கள் (clay stones) நிறைய இருப்பதாக கடந்த கால பெட்ரோல் துரப்பணி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நிலச்சரிவுகள் எளிதில் நடந்திடும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட நிலச்சரிவினால் சுனாமிகள் உருவாக வாய்ப்புள்ளது. அந்த சுனாமிகள் 100 மீட்டர் உயரத்தைக் கொண்ட மெகா சுனாமிகளாகக் கூட இருந்துவிட வாய்ப்புள்ளது.

30)  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் தகர்த்துவிடும் தன்மையைக் கொண்ட இதுபோன்ற நிகழ்வுகளுக்கான சாத்தியங்கள் குறித்து அறிந்து கொள்ள அணுமின் நிலைய நிர்வாகம் இன்றுவரை அக்கறை காட்ட மறுத்து வருகிறது.

31)  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வழிசெய்யும் Tsunami Hazard Study, Volcanic Hazard Study ஆகியவற்றை அணு மின் நிலைய நிர்வாகிகள் இன்றுவரை மேற்கொள்ளாமலேயே அணு உலையை இயக்க அவசரப் படுகிறார்கள். ரஷ்ய உலைகளின் தொழில்நுடப உன்னதத்தை பெரிய அளவில் பேசி தங்களின் அறிவியலுக்குப் புறம்பான நடத்தைகளை மறைக்க முயன்று வருகிறார்கள்.

32)  அதிகாரிகளின் அவசரத்துக்கு இணங்கி மத்திய மாநில அரசுகள் அணு உலையை இயக்க முடிவு செய்தால், பிதுங்கு எரிமலைப் பாறைகளாலும், கார்ஸ்ட் பாதாள சுண்ணாம்புக் குகைகளாலும், சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகளாலும், சரிந்து சாயும் வண்டல் குவியல்களால் ஏற்பட வாய்ப்புள்ள மெகா சுனாமிகளாலும், உறுதி குறைந்த கடலோர நிலவியல் தன்மைகளால் ஏற்பட வாய்ப்புள்ள கடலோர உடைப்புகளாலும், ஒற்றை நீராதாரத்தினை நம்பியிருப்பதால் ஏற்படபோகும் புக்குஷிமா போன்ற குளறுபடிகளாலும் உருவாக வாய்ப்புள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.   

33)  இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தினை மூடிட வேண்டும் என்ற தமிழக மற்றும் கேரள மக்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது

34)  அணுசக்தி என்ற பொருளாயத சக்தி குறித்து மக்களுக்கு அச்சம் உள்ளது. என்றாலும் கூட அதனைக் கையாளும் அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான செயல்பாடுகள் குறித்தே அவர்கள் கூடுதல் அச்சத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

35)  அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தைப் போக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு இன்றளவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் முன்வைக்க்கப்பட்ட 38 பக்க அறிக்கை இந்த அச்சத்தைப் போக்குவதற்கு பதிலாக அதனை அதிகரிக்கும் பணியையே செய்துள்ளது

36)  இந்த அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் மத்திய வல்லுனர் குழுவின் 38 பக்க அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.

37)  கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்தின் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் குறித்துப் படிக்கத் தவறிய அணுசக்திக் கழகம் மற்றும் அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைக் கமிஷனை மத்திய- மாநில அரசுகள் உடனே அமைக்க வேண்டும். இந்த விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். தவறிழைத்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப் படல் வேண்டும்.

38)  கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவிடத்திற்கான சுனாமி பேரிடர் ஆய்வு, எரிமலைப் பேரிடர் ஆய்வு, மாற்று நீராதாரம், கடற்கரை உறுதி குறித்த ஆய்வுகள் ஆகியவற்றை செய்யுமாறு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

39)  அந்த ஆய்வுகளின் முடிவுகளை மக்களின் முன் வெளிப்படையாக வைக்க வேண்டும்.

40)  அதுவரை கூடங்குளம் அணு உலைகளை இயக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்

41)  இப்படிப்பட்ட நடவடிக்கையே அணுசக்தி அதிகாரிகளின் பொறுப்பற்ற, அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கையைக் கண்டு மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தை நீக்க உதவும். இதுவே மக்களின் நலம் குறித்து அக்கறை செலுத்தும் அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்.

ஆதாரம்:

1.      Ramaswamy R 1987. ”Reactivation of Eastern ghat paleorift system during tertiary and other periods”, Proc. In Nat. Sem. On Tertiary orogeny, Banaras hindu University, Varanasi, 107-127 ; Ramaswamy R 1991. ”Occurrence of Soda-trachyte near Kudangulam village, Tamilnadu”, Current Sci.,61, 401- 402 ; Ramaswamy, R 1995. ”Occurance of olivine Tephorote and carbonate Tepharite in Kudangulam area, near Cape Comorin, Tamilnadu, India”, Journ.Geol.Soc. India, 45, 331-333; Biju Longhinos, K.S.Anand, Mita Rajaram,Sub-volcanic intrusives of Kudamkulam, India - a ground magnetic characterization of sub-surface structure”, Lasi 4 Conference, Physical Geology of Sub Volcanic Systems: Lacoliths, Sills and Dykes, Moab and Mount Hillers, (Utah USA), 22-26 September 2010; M.Ramasamy, “The evidence of late Cenozoic volcano tectonic deformations in Kudangulam, near Cape Comarin, Tamilnadu”, International Geological Correlation Programme (IGCP), 1993; Biju Longhinos, Rama Sarma, “ Seismo Tectonic Signatures in and around Kudankulam, Tirunelveli District, Tamil Nadu”, February 2002, unpublished paper; A.Phillipots, “Introduction to Igneous and Metamorphic Petrology”, Prentice Hall, New Jersy, 1990; S.K. Agrawal, Ashok Chauhan, Alok Mishra, The VVERs at KudanKulam”,Nuclear Engineering and Design 236 (2006) 812–835, p-826
2.      A. Boominathan, "Seismic site characterization for nuclear structures and power plants” CURRENT  SCIENCE, VOL. 87, NO. 10, 25 NOVEMBER 2004
3.      IAEA, “Volcanic Hazards in Site Evaluation for Nuclear Installations”, DS405 DRAFT SPECIFIC SAFETY GUIDE,27 May 2011. pp-54,74,75
4.      http://articles.latimes.com/2009/jul/30/nation/na-yucca30 ;Charles B. Connor, John A. Stamatakos, David A. Ferrill,Brittain E. Hill, Goodluck .Ofoegbu, F. Michael Conway,2Budhi Sagar,and John Trapp, Geologic factors controlling patterns of small-volume basaltic volcanism: Application to a volcanic hazards assessment at Yucca Mountain, Nevada”, JOURNAL OF GEOPHYSICAL RESEARCH, VOL. 105, NO. 1, PAGES 417–432, JANUARY 10, 2000; Greg A.Valentine, Frank V.Perry, Don Krier, Gordon N.Keating, Richard E.Kelley, Afllen H.Cogbill, “Small Volume Basaltic Volcanoes: eruptive products and processes, and post eruptive geomorphic evolution in crator flat (Pleistocene), southern Neveda”, Los Alamos National Laboratory, December 2005; J. Spera and S. J. Fowler,Conceptual model for small-volume alkali basalt petrogenesis: implications for volcanic hazards at the proposed Yucca Mountain nuclear waste repository”, in “Volcanic and Tectonic Hazard Assessment for Nuclear Facilities”, Ed.by Charles B. Connor, Neil A. Chapman,Laura J. Connor, August, 2009; Greg A. Valentine and Naoto Hirano, “Mechanisms of low-flux intraplate volcanic fields--Basin and Range (North America) and northwest Pacific Ocean”,  Geological Society of America,  2010)
5.      G.victor Rajamanickam, N.Chandrasekhar. “Extrusion of Rockmelt in the vicinity of high tension electric line”, Journ. Geol. Soc. India, Vol.55, March 2000; R.Ramasamy, “Molten Rock Extrusions”, Journ. Geol.Soc. India, Vol.55, March 2000; G.Manimaran, P.Sivasubramaniyan, M.Senthiyappan, “ Rock Melt Extrusion at Abhishekappatti, Tirunelvelli district, Tamil Nadu,- A Report” Journ. Geol.Soc. India, Vol.57, 2001;http://www.hindu.com/2005/07/16/stories/2005071615080300.htm ; S.C.Jayakaran, “A note on the occurrence of fulgurite in Tamil Nadu”, Current Science 75 (8): 763 (1998) ; B J SAIKIA, G PARTHASARATHY, N C SARMAH and G D BARUAH, Fourier–transform infrared spectroscopic characterization of naturally occurring glassy fulgurites”, Bull. Mater. Sci., Vol. 31, No. 2, April 2008, pp. 155–158; A. C. KERR, M. KHAN AND I.MCDONALD, Eruption of basaltic magma at Tor Zawar, Balochistan, Pakistan on 27 January 2010: geochemical and petrological constraints on petrogenesis”, Mineralogical Magazine, December 2010, Vol. 74(6), pp. 1027–1036
6.      SUKANTA ROY, LABANI RAY, ANURUP BHATTACHARYA and R. SRINIVASAN, “NEW HEAT FLOW DATA FROM DEEP BOREHOLES IN THE GREENSTONE GRANITE- GNEISS AND GNEISSGRANULITE PROVINCES OF SOUTH INDIA”, Deep Continetal Studies in India Newsletter, Vol.17, No.1, January 2007;  P.Hedervari, “Volcanism and Seismicity in the Indo-Australian Seismic Belt : Manifestations of Intraplate Tectonics”, March 1978 ; P.Hedervari, “ Catalog of Submarine Volcanoes and Hydrological Phenomena associated with Volcanic Events – 1500 BC to December 31, 1899”, Report SE 36, World Data Center A for Solid Earth Geophysics, September 1984
7.      AERB, “Kudankulam Atomic Power Project”
8.      R.Ramesh, “Sea Water Desalination work at the Kudankulam NPP:Possible Solution to the Risk prone Confusion, Indecision and Haste”, DOSE, October 2006
9.      R.Ramesh,“Kudankulam Nuclear Power Project and the Pechiparai Reservoir of Kanniyakumari District :Can Pechiparai reservoir meet KKNPP’s fresh water demand?” DOSE, October 2006
10.  P.Sheik Mujabar, "Quantitative Analysis Of Coastal Landform Dynamics Between Tuticorin and Knyakumari using Remote Sensing And GIS,” M.Phil Thesis, Center for Geotechnology, Manonmaniyam Sundaranar University,  Tirunelveli, February 2010, p-166
12.  Krishnamurthy et al., Interim Report Of Task Force On Safety Evaluation Of The Systems Of KKNPP Post Fukushima Event,” 21 May 2011
13.  T. S. SUBRAMANIAN, AERB for more power, water for nuclear stations”, The Hindu, 12 November 2011
14.  G.G.Vaz, M.Hariprasad, B.R.Rao, V.Subba Rao, Subsidence of southern part of erstwhile Dhanushkodi township, Tamil Nadu - evidences from bathymetry, side scan and underwater videography”, Current Science, Vol.92, No.5, 10 March 2007
15.  BRUCKNER, H., 1988, “Indicators for formerly higher sea levels along the east coast of India and on the Andaman Islands” : Hamburger Geographische Studien, v. 44, p. 47–72 ; Bruckner H 1989 late Quaternary shorelines in India; In: Late Quaternary sea-level correlation and application; (eds) Scott D B, Pirazzoli P A and Honig C A, Kluwer Academic Publishers, pp. 169–194; Ramasamy, S., Armstrong Altrin Sam, J., 1998. Inferences on rhodoids from Neogene carbonates of Kudankulam, Tamil Nadu, India. Geol. Soc. Ind. J. 52, 341–344; S.Aemstrong Altrin, Yang Il Lee, Surendra Varma, S.Ramasamy, “Geochemistry of Sandstones from Upper Miocene Kudankulam Formation, Southern India : Implications for Provenance Weathering and Tectonic Setting ”, Journal of Seimentary Research, Vol. 74, NO. 2, 2004
16.  (G.R.K. MURTY, Y. SATYANARAYANA AND T. PRADEEP KUMAR " Magnetic Profile Across Gulf of Mannar", JOURNAL GEOLOGICAL SOCIETY OF INDIA, Vol.44 , Oct. 1994, pp.443-449). ( SASTRI, V. V . VENKATACHALA, B.S. and NARAYAN, V. (1981) The evolution of East Coast India. Paleogeogr.Palacoclim Palacoeco., pp.366 23-54; PRABHAKAR, K.N. and ZUTSHI, PL. (1993) Evolution of southern part of Indian East Coast Basins.J.Geol.Soc.Ind., v.41, pp.215- 230; NAINI, R. BHOPAL and TALWANI, M. (1982) Structural framework and evolutionary hisotry of the continental margin of western India. In: Studics in continental margin geology. (Eds) WATKINS, J.S. and DRAKE, C.L. Am.Assn.Petrol.Geol. Memoir, v. 34, pp. 167-191; KHALE, HG., TALWANI, M. and ELDKLOM, O. (1976) Geophysical study on the continental margin of south India and west of Sri Lanka. EOS, Trans. Am.Geophys.Union.57.to.933 ; EREMENKO, N.A., and GAGELGANZ. A (1966) New data on the tecionic framework of the New Indian Peninsula, Bull. ONGC, v.3(2), pp-1-3 ; CARL,W.S. (1966) Scismcily of the Indian Ocean, J.Geophy..Res.v.71, pp-2575-2581; Udintsev (1975), Geological and Geophysical Atlas of the Indian Ocean, Moscow, Academy of Sciences, 151 p.)
17.  Malai Malar, 26 November 2011
19.  R.Prasad,”Tsunami Hazard Assessment at Nuclear Power Plant Sites in the United States of America Final Report”, USNRC, March 2009
20.  IAEA, Volcanic Hazards in Site Evaluation for Nuclear Installations”, DS405 DRAFT SPECIFIC SAFETY GUIDE,27 May 2011
21.  William Vestal, Allen Lowrie, “Large Scale Slumps Off Southern India and Sri Lanka",  Geo-Marine Letters, Vol.2, 171-177 (1982)