புதன், ஆகஸ்ட் 24, 2011

காட்டுயிர் பாதுகாவலர் ஜே.சி.டேனியல் மறைவு


முதுபெரும் இயற்கையியலாளரும் காட்டுயிர் பாதுகாவலருமான ஜே.சி.டேனியல் (84), மும்பை மாஹிம் மருத்துவமனையில் ஆகஸ்ட் 23ந் தேதி காலமானார். புகழ்பெற்ற பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society - BNHS) துணைத் தலைவராக அவர் செயலாற்றி வந்தார்.

ஜீவநாயகம் சிரில் டேனியல் ( - ஆகஸ்ட் 23, 2011) என்ற முழுப் பெயர் கொண்ட இயற்கையியலாளரான அவர் ஜே.சி. என்றும் அறியப்படுகிறார். இந்திய பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர், அவற்றைப் பற்றி நூல்களை எழுதியுள்ளார். யானைகள், பெரியபூனை (புலி) குடும்ப உயிரினங்களை பாதுகாப்பதில் தீவிரமாக இருந்து வந்தார்.

இளம் வயதிலேயே இயற்கை மீது நேசம் கொண்டார். இரவில் நரிகள் ஊளையிடுவதும், அவற்றுடன் ஆந்தைகளின் அலறலும் அவரது குழந்தைப் பருவ நினைவுகளாக இருந்துள்ளன. விலங்குகளின் மீதான அவரது தாயின் பாசமும், அவரது தந்தையின் கல்வித்துறை பாண்டித்யமும் அவரை திருவனந்தபுரம் பொது நூலகத்துக்குச் செல்லத் தூண்டியுள்ளன. இளம் வயதில் இயற்கை பற்றி அறிய வேண்டும் என்ற அவருடைய ஆவலுக்கு அங்கிருந்த ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான நூல்கள் தீனி போட்டன.

இளைஞராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற பறவை நிபுணர் டாக்டர் சாலிம் அலியால் உத்வேகம் பெற்ற அவர், சாலிம் அலி இணைந்திருந்த பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியைத் தொடங்கிய அவர், கடைசி வரை அந்த அமைப்புடன் இணைந்து பணிகளைத் தொடர்ந்து வந்தார். 1950லேயே அந்தக் கழகத்தின் காப்பாளராக பொறுப்பேற்ற அவர், அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பின்னர் மாறினார். 1991இல் ஓய்வு பெற்ற பிறகு, அந்தக் கழகத்தின் கௌரவ உறுப்பினர், கௌரவ செயலராக இருந்து வந்தார்.

தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் (இந்திய ஊர்வன), எ செஞ்சுரி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி அண்ட் கன்சர்வேஷன் இன் டெவலப்பிங் கன்ட்ரீஸ் (வளரும் நாடுகளில் ஒரு நூற்றாண்டு இயற்கை வரலாறும், பாதுகாப்பும்), தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் அண்ட் ஆம்பிபியன்ஸ் (இந்திய ஊர்வன மற்றும் நீர்நில வாழ்விகள்), எ வீக் வித் எலிஃபன்ட்ஸ் (யானைகளுடன் ஒரு வாரம்), சமீபத்தில் பேர்ட்ஸ் ஆஃப் இந்தியன் சப் கான்டினன்ட் எ ஃபீல்ட் கைடு (இந்திய துணைக்கண்ட பறவைகள் கள வழிகாட்டி) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தியன் ஒயில்ட்லைஃப் இன்சைட் கைட்ஸ் என்ற நூலில் சிங்கங்கள் பற்றிய பிரிவை எழுதியுள்ளார். சாலிம் அலியின் நூற்றாண்டு 1996இல் கொண்டாடப்பட்டதை ஒட்டி, அவர் எழுதிய தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ் (இந்திய பறவைகள்) புத்தகத்தை திருத்தி எழுதி 12வது பதிப்பை டேனியல் கொண்டு வந்தார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆய்விதழின் நிர்வாக ஆசிரியராக இருந்ததுடன், ஹார்ன்பில் என்ற இதழையும் அவர் தொடங்கினார். அந்த இதழ் 2001ஆம் ஆண்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. ஆர்வலர்களின் உதவியுடன் மும்பை பகுதியில் உள்ள பழைய மரங்களைப் பற்றி ஆவணப்படுத்தும் முயற்சியை தொடங்கி வைத்தார்.

இந்திய இயற்கையியல், காட்டுரியல் துறைக்கு அவரது பங்களிப்பு மிகப் பெரியது. அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை.

1 கருத்து:

Siraju சொன்னது…

கண்டிப்பாக, இது போன்ற இயற்கை வன உயிர் ஆய்வாளர்களை நாம் இழப்பது, வரலாற்றை இழப்பது போலதான்.

கருத்துரையிடுக