வெள்ளி, பிப்ரவரி 05, 2010

பி.டி.​ கத்தரிக்காய் கூடாது:​ மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்

பி.டி.​ கத்தரி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிடக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை மருத்துவ நிபுணர்கள் குழு வியாழக்கிழமை (04-2-2010) சந்தித்து வலியுறுத்தியது.

டாக்டர் மீரா சிவா ​(புது தில்லி),​​ டாக்டர் ஜி.பி.சிங் ​(சண்டிகர்),​​ ​டாக்டர் பாரத் ஷா ​(பரோடா),​​ டாக்டர் ஜி.சிவராமன் ​(சென்னை)​ ஆகிய நால்வர் குழு,​​ அமைச்சரைச் சந்தித்து எந்தந்த வகையில் பி.டி.​ நச்சு புரதம்,​​ பொது மக்களின் உடல் நலனில் பாதிப்பை உண்டாக்கும் என்பதை விரிவாக விளக்கினர்.​ ​

மேலும் குழந்தைகளுக்கு உடல் எடை குறையும் வாய்ப்பு மற்றும் ஒவ்வாமையை ​

பி.டி.​ கத்தரிக்காய் ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும் சான்றுகளுடன் விரிவாக விளக்கினர்.

​ சித்த,​​ ஆயுர்வேத மருந்துகளில் நீண்ட காலமாக இப்போதுள்ள கத்தரிக்காய் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து சித்த மருத்துவ நிபுணரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவருமான ஜி.சிவராமன் விளக்கினார்.

​அதே சமயம்,​​ மத்திய அரசின் மரபணு மாற்ற தொழில்நுட்ப அனுமதிக் குழு (ஜிஇஏசி)​ வெளியிட்ட முடிவில்,​​ பி.டி.​ கத்தரியின் ஆல்கலாய்டுகள் பெருவாரியாக மாறியுள்ளதையும் இது கத்தரியின் மருத்துவக் குணத்தை மாற்றி விடும் ஆபத்தையும் ​

குறிப்பிட்டனர்.​ இதனால் ஜீன் கலப்படமடைந்து அதே குடும்பத்தைச் சேர்ந்த ​ பிற மருத்துவக் குணமுள்ள தாவரங்கள் பாதிக்கப்படும் அபாயத்தை அமைச்சரிடம் ​ விவரித்தனர்.

​மருத்துவ நிபுணர்கள் குழு கூறிய விஷயங்களை ஆவணப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,​​ வரும் 10-ம் தேதி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

நன்றி: தினமணி 05-02-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக