செவ்வாய், நவம்பர் 18, 2008

பருவநிலை மாறுதலும், மரபணு மாற்று கொள்ளையும்...!

பருவநிலை மாறுதல் (Climate Change) குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுவரும் நிலையில் பருவநிலை மாறுதலையும் தாக்குப்பிடிக்கும் மரபணுவின் காப்புரிமையை பதிவு முயற்சியும் நடைபெறுகிறது.

பருவநிலை மாறுதல் காரணமாக வழக்கத்திற்கு மாறான, அசாதாரண மழை, வெள்ளம், வறட்சி போன்றவை ஏற்படலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். பருவநிலையில் மேலும் மாறுதல் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஏறக்குறைய அனைத்து அரசுகளும், மற்ற நிறுவனங்களும் ஆலோசனை செய்து வருகின்றன.

இந்நிலையில் பருவநிலை மாறுதலின் பாதிப்புகளை தாங்கும் சக்தி வாய்ந்த பயிர்களை உருவாக்கி உள்ளதாக சில நிறுவனங்கள் கூறுகின்றன. மான் சாண்டோ (Mon Santo), சின்ஜென்டா (Syngenta), டு பாண்ட் (DuPont), பாயர் (Bayer), டெள (Dow) மற்றும் BASF ஆகிய நிறுவனங்கள் பருவநிலை மாறுதலால் பாதிப்படையாத பயிர்வகைகளை உருவாக்கி உள்ளதாக கூறுவதோடு பல்வேறு காப்புரிமை அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காப்புரிமை மனுக்களையும் பதிவு செய்துள்ளன.

ஆனால் இவை அனைத்தும் ஏமாற்றுவேலை என்று சற்று யோசித்தாலே தெரிந்துவிடும்.

தமிழகம் உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சியை தாங்கக்கூடிய வகையிலும், தண்ணீர் தேங்கும் நிலங்களிலும் செழித்து வளரக்கூடிய வகையிலும், மண்ணின் கார-அமிலத்தன்மையால் பாதிக்கப்படாமல் விளைச்சலை கொடுக்கக்கூடிய வகையிலும் பல்வேறு இனப்பயிர்கள் உள்ளன.


இயற்கையிலேயே உள்ள இந்த தாவர வகைகளை, தங்களது கண்டுபிடிப்புப் போல பதிவு செய்ய மேற்கூறிய நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டால் உலகின் மொத்த வேளாண்மையும் அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

இதன்மூலமாக எந்த நாட்டில் எந்த தானியத்தை பயிர் செய்வது என்ற முடிவினை அந்த நாட்டு மக்களோ, அரசோ மேற்கொள்ள முடியாது. விதைகளுக்கான காப்புரிமை பெற்ற விதை நிறுவனங்களே அவற்றை முடிவு செய்யும். இந்த நிலையில் உணவு தானியங்களின் விலையை நிர்ணயிப்பதில் விவசாயிகளுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ எந்த பங்கும் இருக்க வாய்ப்பில்லை.

பருவநிலை மாறுதலுக்கு காரணமாக விளங்கும் பன்னாட்டு நிறுவனங்களே, பருவநிலை மாறுதலால் பாதிக்கப்படாத பயிர்களையும் கண்டுபிடிக்கின்றனவாம். கம்யூட்டரில் வைரஸையும் பரப்பி, ஆன்டி-வைரஸை விற்கும் தந்திரம் மட்டும் அல்ல இது. மாறாக உணவுப் பொருட்கள் அனைத்தையும் வணிகக்கழகங்கள் கையகப்படுத்தி, உலகம் முழுவதையும் அடிமைப்படுத்தும் அராஜகப்போக்கே இது!

என்ன செய்யப்போகிறோம்?


-சுதந்திரன்

2 கருத்துகள்:

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…

உங்களுடைய இடுகைக்கு ஆதாரம் என்ன?.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு patent கோருகிறார்களா இல்லை இயற்கையாக உள்ளவற்றிற்கு கோருகிறார்களா?. பின்னதற்கு patent கோரமுடியுமா?
“இதன்மூலமாக எந்த நாட்டில் எந்த தானியத்தை பயிர் செய்வது என்ற முடிவினை அந்த நாட்டு மக்களோ, அரசோ மேற்கொள்ள முடியாது. விதைகளுக்கான காப்புரிமை பெற்ற விதை நிறுவனங்களே அவற்றை முடிவு செய்யும். இந்த நிலையில் உணவு தானியங்களின் விலையை நிர்ணயிப்பதில் விவசாயிகளுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ எந்த பங்கும் இருக்க வாய்ப்பில்லை.”
இது போல் பொய்களை உங்களால் எப்படி தயக்கமின்றி எழுத முடிகிறது.இந்தியாவில்
விதைகளுக்கு காப்புரிமை பெற முடியாது
என்பதாவது உங்களுக்குத் தெரியும்.
பொய்யின் நண்பர்கள் என்று உங்கள் பெயரை
மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

அறிவாளி நண்பர் ரவி ச்ரீனிவாஸ் அவர்களுக்கு,

எதற்கும் ஆதாரம் கேட்கும் உங்களுக்கு, நாங்கள் பொய்யர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்ற அடிப்படை ஞானம்கூட இல்லையா?

நாங்கள் எழுதுவது பொய் எனக்கூறும் நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இந்த விவகாரங்கள் குறித்து என்ன எழுதியிருக்கிறீர்கள்? பார்ப்பன ஆதரவு கருத்துகளை தவிர?

எது பொய்? எது உண்மை? என்பதை காலம் உணர்த்தும். உங்கள் சான்றுரைகள் தேவையில்லை.

கருத்துரையிடுக