புதன், மார்ச் 14, 2012

'ஆத்தாவே, காப்பாத்து... அக்கிரமத்தை தடுத்து நிறுத்து!'

பாசக்கார பாரதத் தாய்க்கு, பணிவோட வணக்கம் சொல்லிக்கறான்... உன் பிள்ளை ரோசக்காரக் கோவணாண்டி.

பங்காளி, பகையாளினு பாக்காம... எல்லாருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கற இயற்கை அன்னை மாதிரி, பல மதம், பல ஜாதி, பல பாஷைனு வாழற அத்தனைப் பேரையும் அன்பா அரவணைக்குற அன்னையே... நாடு மோசமான பாதையில போறதைப் பாத்து பொறுக்க மாட்டாமத்தான், இந்தக் கடுதாசியை உனக்கே எழுதுறேன்!

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுற மாதிரி, உன் பாலைக் குடிச்சு வளந்த பிள்ளைகளே... உனக்கு ஒட்டுமொத்தமா பால் ஊத்த பாக்குறாங்க தாயீ. மனுஷன் உடம்புக்குள்ள ஓடுற ரத்தம் மாதிரிதானே, பூமியில ஓடுற நதிகளும். இப்ப அதுக்கே வெச்சுட்டாங்கம்மா ஆப்பு. இந்த அநியாயத்தைப் பொறுக்க மாட்டாமத்தான் இந்தக் கடுதாசியை எழுதறேன்!

எங்க ஊருல ஓடுற வைகை, தென்பெண்ணை, காவிரி, பாலாறு வத்திப் போச்சுனா... அது செய்தியில்ல. அதுகள்ல தண்ணி வந்தாத்தான் செய்தி. ஆனா, மலை பிறந்த காலத்துல இருந்து, இன்னிவரைக்கும் வடநாட்டுல வத்தாம ஓடிக்கிட்டு இருந்த பிரம்மபுத்திரா நதியே... வறண்டுபோச்சாம். கேக்கும்போதே அடிவயித்துல அக்கினி எரியுது.

''போன வருஷம்கூட வினாடிக்கு 20 லட்சம் கன அடி தண்ணியை சுமந்துகிட்டு வந்து, வங்கதேசத்தைப் பயமுறுத்துன ஜீவநதி, இப்ப வறண்டு போச்சே?''னு எங்க ஊருல காய்ஞ்சு கிடக்கற கோணவாய்க்கா மதகுல உக்கார்ந்துகிட்டு, இங்கிலிபீஸு பேப்பரை கையில வெச்சுக்கிட்டு, குமுறித் தள்ளிக்கிட்டு நிக்கறாரு, எங்க இங்கிலிபீஸு வாத்தியாரு.
'காய்ஞ்சு போன பூமியெல்லாம், வத்தாத நதியைப் பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சுப் போயிட்டா யாரால ஆறுதல் சொல்ல முடியும்’னு 'தங்கப் பதக்கம்' 'சினிமா படத்துல ஒரு வசனம் வரும். அந்தக் கதையா துக்கம் தொண்டையை அடைக்குது தாயே!

''அதிர்ச்சியில மூர்ச்சையான அருணாச்சல பிரதேச மக்கள், இன்னும் எழுந்திருக்கவே இல்லை. 'வத்தாத ஜீவநதி... இப்படி வத்திப் போனதுக்கு காரணம் என்ன?'னு நதியோட போக்குலயே போய் ஆராய்ச்சி பண்ணி பார்த்தா, பிரம்மபுத்திராவோட முகத்துவாரம் இருக்கற திபெத் பகுதியில ஒரு அணையைக் கட்டி, தண்ணிக்குத் தடை போட்டுருக்காம் சீனா.

'ஆத்தையும் (பிரம்மபுத்திரா), அருணாச்சல பிரதேசத்தையும் எனக்குக் கொடுனு கேட்டு, அணையைக் கட்டி, மடையை மாத்தி அழிச்சாட்டியம் செய்யுது சீனா'னு நம்ம எல்லையைக் காக்கற சிப்பாய்க சொல்லுறாங்க.
ஆனா, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல... அணையாவது, சுனையாவது சும்மா கை, கால் கழுவ ஒரு கரையைப் போட்டு இருக்கோம். எங்களால எந்தத் தொல்லையும் இல்லை’னு சொல்லுது சீனா. 'யாரும் பதட்டப்படாதீங்க.... அந்த அணையால நமக்கு பிரச்னை எதுவும் இல்லை’னு வார்த்தைக்கு வலிக்காம வாயைத் தொறந்து இருக்காரு பாரத பிரதமர் மன்மோகன் சிங்''குனு விஷயத்தை விலாவாரிய விளக்கிச் சொல்லி, எங்க வேதனையை ரொம்பவே கிளறிவிட்டுட்டாருங்க எங்க இங்கிலபீஸு வாத்தியாரு!

பாரதத் தாயே... ஏற்கெனவே லஞ்சம், ஊழல், வன்முறைனு உன் உடம்புல முத்திப்போன நிலையில இருக்கு புத்துநோயி. அதையெல்லாம் கண்டுக்கணும்கற அக்கறையே இல்லாம, 'எங்களுக்குத் தேவை பதவி... அதிகாரம்'னு திரியற சுயநலக்கிருமிகளால... இப்ப உன் உசுருக்கே ஆபத்து வந்துருச்சே தாயே. 120 கோடி பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்க அடிப்படை ஆதாரமே தண்ணிதானே. ஆனா, அதைப் பத்தியே கவலைப்படாத 'குடும்பத் தலைவர்'களை வெச்சுகிட்டு, எப்படிம்மா பொழைக்கிறது.

ஏற்கெனவே ஊரு நாட்டுல இருந்த ஆறு, குளம், ஏரிக்கெல்லாம் கால் முளைச்சு... கட்டடமா நிக்குது. அதையும் கண்டுக்கல, இந்தக் கணக்குப்பிள்ளைக. சொல்லப் போனா அதுக்கு காரணமே இவங்கதான். இதனாலதானே, உள்ளூர்லயே தண்ணிக்காக அண்ணன், தம்பிக அடிச்சுக்கிட்டு சாகுறாங்க. இந்த லட்சணத்துல, வத்தாம வந்துகிட்டிருக்கற தண்ணியும் இல்லாம போனா, என்ன நடக்கும்னு யோசிச்சு பாக்கவே பயமா இருக்கு.

'நாலு நல்லி எலும்பைத் தூக்கிப் போட்டா... இந்தியாவுல எதை வேணாலும், செய்யலாம்’ங்கிற தைரியத்துலதான்... அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான்னு பாதையில போறவனெல்லாம் வீட்டுக்குள்ள வந்து பஞ்சாயத்து பண்றான். இதைப் பயன்படுத்திகிட்டு, சீனாக்காரன், சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டப் பாக்குறான். தட்டிக் கேட்க நாதியில்லாம போனதால, நதிகளை நாசமாக்குறாங்க.

இதுல ஏதோ சர்வதேச சதி இருக்குது தாயே... விவசாயத்த ஒழிச்சு, விவசாயிகளை வெளியேத்தினாதான்... அவங்க நினைச்சபடி பூமிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்க முடியும்னு நினைக்கறாங்களோனு சந்தேகமா இருக்கு. அந்நிய முதலீட்டுக்கும், அதுக்கான கமிஷனுக்கும் ஆசைப்பட்டு... காடுகளை அழிச்சு, உர மானியங்களைக் குறைச்சு, வயல்களை ஒழிச்சுனு விவசாயத்தையே துடைச்சி எறியப் பாக்குறாங்க. அப்பத்தான் பன்னாட்டு கம்பெனிகளுக்கு மலிவு விலையில் கூலி ஆளுக கிடைப்பாங்கனு கணக்கு போடுறாங்க போல.
எப்படியோ இந்த களவாணிக ஒண்ணு சேர்ந்து, வளமான உன்னை... வறுமையில தள்ளப்போறாங்க. சத்தமில்லாம இந்தியாவை இன்னொரு சோமாலியாவா மாத்தப் போறாங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன். இவங்ககிட்ட இருந்து எங்களை மட்டுமில்ல... உன்னையும் காப்பாத்திக்கறது... உன் கையிலதான் இருக்கு... ஆமாஞ்சொல்லிப்புட்டேன்!

இப்படிக்கு,
கோவணாண்டி


நன்றி: பசுமை விகடன், 25-03-23

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நமக்கு புண்ணியம் என நினைக்க வேண்டாம் நமது அரசியல்வாதிகள்.இத்தனை ஜனங்களின் பாவத்தை வாங்கி சேர்த்து இந்த வயசான காலத்தில் அப்படி சொத்து சேர்த்து போகும் போது தலையிலா கொண்டுட்டு போகப் போறாங்க.

கூடல் பாலா சொன்னது…

அருமை !

JOTHI சொன்னது…

நாங்க என்ன செய்யனும்னு சொல்லவே இல்லையே கோவணாண்டி....::::(((

கருத்துரையிடுக