செவ்வாய், மே 24, 2011

பறவைகளின் தேவ சிற்பி: தூக்கணாங் குருவிகள்

நான் 10 , 11ம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் தேனி சுந்தரம் தியேட்டர் என் கலை ஆர்வத்தின் கற்பனைத் திறவுகோலாக இருந்தது. என் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் அங்கு சென்று விடலாம். இந்த தியேட்டரின் சிறப்பே இரவு 8.30 ஷோ தான். இது இங்கு மட்டுமே .முழுக்க முழுக்க ஆங்கிலப் படங்கள்தான். ஒரு படம் ஒரு நாள் மட்டுமே காண்பிக்கப்படும். அந்தக் காட்சிக்கான டிக்கெட் விலையும் அதிகம். தினமும் எப்படியாவது அந்தக் காட்சிக்கு சென்றுவிடுவேன். அன்டோனியா பண்டாரஸ் எட்டி மர்ஃபி. பில் ஸ்மித் என்று என் ஆகர்ஷன கதாநாயகர்கள் இந்த தியேட்டரின் உபயத்தில் வந்து போனார்கள். ஆக்க்ஷன் படங்களுக்கு இடையே ப்ளூ லாகூன் போன்ற கிளர்ச்சிப் படங்களும் காட்டப்பட்டு இளைஞர்களைக் கிறங்க வைக்கும்.

மெக்கனஸ் கோல்ட் போல் ஆக்க்ஷன் காட்ட முடியாவிட்டாலும், கெளபாய் தொப்பி போட்டு மனது ஆசுவாசப்படும். தியேட்டரைப் போலவே அங்கு வளர்ந்திருக்கும் வாகை, புன்னை மரங்கள் என்னை மிகவும் கவர்ந்ததவை. திராட்சைக் கொத்துகள் தொங்குவது போல பல நூறு தூக்கணாங்குருவி கூடுங்கள்.

சுற்றித் திரியும் பல நூறு குருவிகள், பகல் நேரத்திலும் அங்கு சென்று வர மனதைத் தூண்டும். எப்போதாவது கீழே கிடக்கும் கூடுகள் என் பொக்கிஷமாய் வீடு வரும். தியேட்டரின் எதிரில் எங்களுக்கு சொந்தமான வயல் வெளி இருந்தது. அங்கு சிறு கிணறும், அதை ஒட்டி வளைந்து நிற்கும் வாகை மரமும் நிறைய கூடுகளைப் பூக்களாய்த் தாங்கி நின்றது. பல சமயம் என் பொழுது போக்கு இடம் அதுவாகவே இருக்கும். அங்கு குருவிகளையும், அவை கூடு பின்னும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமூட்டும். சூழ்நிலையின் கட்டாயத்தில் வயல் வெளியை மிகக் குறைந்த விலைக்கு விற்க நேர்ந்தது. வாங்கியவர் முதல் நாளே அங்கிருந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். பதறிப்போன குருவிகளைப் பார்த்து என் மனது பதைபதைக்கத் துவங்கியது. குற்ற உணர்வும், மன வலியும் ஒன்று சேர அன்றிலிருந்து அந்தப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டேன்....

தூக்கணாங்குருவிகள் ஆசியப் பகுதிகள் முழுவதும், குறிப்பாக தென் பகுதி முழுவதும் காணப்படும் பறவை இனம். கூட்டம் கூட்டமாய் வாழும். பெரும்பாலும் வயல் வெளி சார்ந்த பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும். அடர்த்தியான புதர்கள் ,நீரோடை சார்ந்த வனம் மற்றும் ஆற்றங்கரை ,குளக்கரையோரம் அமைந்த மரங்களில் வளைந்த கிளைகள், வயல் வெளி, கிணறுகளில் வளர்ந்த ஆல், அரசு, மரக்கிளைகளில் கூடு அமைக்கும். பெரும்பாலும் முள் மரம் அல்லது மிக உயரமான ,பிற ஜீவராசிகளின் தொந்தரவு இல்லாத நிலையில் மட்டுமே கூடுகளைப் பின்னத் துவங்கும். கூடுகளை நார், இலைகள் கொண்டு பின்னும். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் விரவி, பரவிக் காணப்படும். இவை பிராந்தியம் சார்ந்து தங்கள் குணநலன்களை மாற்றிக் கொள்பவை. குறிப்பாக ,மழை மற்றும் உணவை மையப்படுத்தி, தங்கள் வாழ்வியல் முறையை மேற் கொள்கின்றன.

நாம் தவிட்டுக் குருவிகள் என அழைக்கும் சிட்டுக்குருவிகள் போல் காணப்படும் இவை ஏறத்தாழ அதே வண்ணத்தில், உருவ அமைப்பில் காணப்படுவதால் வித்தியாசம் காண்பது எளிதல்ல. 15 செ.மீ. அளவே உருவம் கொண்ட இவைகளின் பால் வேறுபாடு காண்பது எளிதல்ல. கூர்மையான வலிமையான அலகும், குட்டையான வாலும் மட்டுமே, இதை சிட்டுக்குருவிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். கண்கள் மிகக் கூர்மையான பார்வை சக்தி கொண்டவை. கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படும். வயது வந்த ஆண்கள் பளபளப்பான மஞ்சள் நிறம் பூசிய ,பழுப்பு நிறம் மேலோங்கிய தலைமுடி கொண்டிருக்கும். உணவின் இருப்பிடத்தை ஒரு குருவி அறிந்து விட்டால், தன் கூட்டத்தை மொத்தமாக அழைத்து வரும். இருப்பிடத்தை அடைந்த குருவிகள், பல்வேறு திசைகளிலும் பரவி, உணவை உட்கொள்ளும். முக்கியமாக நெல், கம்பு, கேப்பை போன்றவற்றை உண்ணும், வட மாநிலங்களில் கோதுமை வயல், திராட்சைத் தோட்டம் அமைந்த பிரதேசங்களைத் தேர்ந்தெடுக்கும். உணவு மிகக் குறைவாக இருந்தால் பயிர்களின் குருத்தை உண்ணும். இதனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இதை "தொல்லை தரும் குருவி" என அழைக்கிறார்கள். இதைக் கொல்வதற்காக விசேஷ பூச்சி மருந்து தயாரித்து ,"வயல்வெளிகளைப் பாழாக்கும் குருவிகளைக் கொல்வோம் " என்ற விளம்பரப் படத்துடன் இம் மருந்துகள் அங்கு விற்பனைசெய்யப்படுவது கொடுமை.

கர்ப்ப காலங்களில் தவளை ,மண்புழு , வெட்டுக்கிளி போன்ற சிறு உயிரிகளை உண்ணும். குஞ்சுகளுக்கும் அதையே ஊட்டும். பருவ நிலை மாற்றங்கள் இதன் வாழ்வின் பிரதான காரணிகளாகின்றன. இதன் வாழ்க்கைப் பற்றிய முழு விவரங்களைத் திரட்டுவது இன்று வரை கடினமாக உள்ளது. மிக வேகமாகப் பறக்கும் இவை, சிட்.....சிரிக் ....என குரல் எழுப்புகின்றன. பரபரப்பான சூழலில் சிரீக்...சிரீக்...என நீண்ட அலறலை வெளிப்படுத்தி தன் சகாக்களை எச்சரிக்கை செய்கின்றன. இதைத் தவிர, காமமுற்ற வேளைகளிலும், கர்ப்பம் தரித்த காலத்திலும், முட்டையிடும்போதும் இவ்வாறான நீண்ட அலறலை வெளிப்படுத்துகின்றன. உறவு கொள்ளும்போது, பரவசத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் இவ்வாறான நீண்ட குரலெழுப்புகின்றன.

மழைக் காலங்களையே இவை உறவுக் காலமாகத் தேர்ந்தெடுக்கின்றன. குறைந்தது ஒருமாத காலம், தொடர்ந்து உறவில் ஈடுபடுகின்றன. சூழலுக்கு ஏற்ப, பகலிலும், இரவிலும் கூட இது தொடரும். வெப்ப காலங்களை மிக அரிதாகவே தேர்ந்தெடுக்கின்றன. பருவகாலங்களில் மட்டும் ஆணுக்கு இனப்பெருக்க உறுப்பு ,ஒரு நீட்சி போல உருவாகிறது. விந்து சுரப்பிகளும் அப்போது தான் உருவாகும். நீட்சியைப் பெண்ணின் புழைக்குள் உட்செலுத்துவதன் மூலம் விந்து நீரை பாய்ச்சுகிறது. பெண் கீழ் அமர்ந்து ,கிட்டத்தட்ட படுத்த நிலையில் வாலை செங்குத்தாகத் தூக்க ,ஆண் மேல் அமர்ந்து செயல்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் பருவம் கொண்ட தம்பதியினர் ஒன்று சேர்ந்து ,பல கூடுகளை உருவாக்குகின்றன. ஒரே இடத்தில் கொத்து கொத்தாகப் பல கூடுகளை நாம் காண இயலும். இவற்றின் எண்ணிக்கை 5---30 வரை இருக்கும். கூடு அமையப் பெறும் இடத்தில் உணவு, நீர்,மற்றும் கூடு அமைப்பதற்கான புல், இலை, நார் போன்ற உப பொருட்களும் இருத்தல் வேண்டும். ஆண்குருவிகளே கூடுகளைப் பின்னும். பெண் அவ்வப் போது உதவும். பெண்ணே கூடு கட்டுவதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும். கீழ் நோக்கித் தொங்கும் குழாய் போன்ற அமைப்பு கொண்ட கூடைக் கண்டு பிரமித்த லியனார்டோ டாவின்சி இதை " உலகின் பேரதிசயம்" என புகழ்கிறார்.இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கூடே உலகின் மிகப் பெரிய பறவைக் கூடு என கருதப்படுகிறது.இதன் நீளம் சுமார் 2 அடி.

நீண்ட குழல் போன்ற அமைப்பு கொண்ட இதன் கூடுகள் ,மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ,சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்டதாக இருக்கும். முதல் அறை நுழைவு மற்றும் ஆணின் ஓய்வு அறை, இரண்டாவதாகப் பெண் மற்றும் குஞ்சுகளுக்கான பிரத்யேக அறை ,மூன்றாவது வெளியில் செல்ல ஏதுவாகப் பின்வாசல் அமைப்போடு பின்னப்பட்ட அறை. கடினமான புற்களையும், வைக்கோல் ,மர நார்களைக் கொண்டு கூடு பின்னப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட சுமார் 500---1000 புற்கள் தேவைப்படும். மிக நேர்த்தியாக அடர்த்தியாக அமையப் பெற்றிருக்கும். ஒவ்வொரு புல்லும் 30 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். எப்போதும் இக்குருவிகள், தாம் கட்டும் மரத்தின் தென் பகுதியையே தேர்ந்தெடுக்கும். கிழக்கிலிருந்து வீசும் காற்றும் , மழையும் குஞ்சுகளைத் தாக்காத வாறு ,இதன் கால ,இட தேர்வு அமையும். இதைக் கண்டு, விவசாயிகள் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என அக்காலத்தில் நம்பினர். அதற்கேற்ப குருவிகளும், பருவமும் அப்போது ஏமாற்றவில்லை.கருங்குருவிகள் ,இதன் கைவிடப்பட்ட கூடுகளைக் கையகப்படுத்தி ,தனது இருப்பிடமாக்கிக் கொள்ளும். இளம் குருவிகள் முதிர் குருவிகளின் கூடுகளுக்கு அருகில், கூடு கட்டிப் பழகும்.

பர்மாவில் காணப்படும் குருவிகள் ,வீடுகளின் மாடியில் ஒரு மூலையில் கூடமைக்கும் குணம் கொண்டவை. இது இந்நாட்டுக் குருவிகளுக்கு மட்டுமே உரித்தான குணம். அதற்கேற்ப அம்மக்களும், தங்கள் இல்லங்களின் மூலையில் இதற்கான தனி அமைப்பை உருவாக்கி வைக்கின்றனர். ஆண் குருவி ஒரு கூட்டைப் பின்னி முடிக்க 18--20 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பெண் முதல் கட்ட பணிகளை ஆராய்ந்து, தனது கற்பனைக்கேற்ப கூட்டில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னால் ஆணும் உடனடியாக தலைபடுகிறது. சில நேரங்களில் 75 சதவீத பணி முடிந்த பின்னும் ,பெண் கூட்டை நிராகரித்தால், ஆண் சளைக்காமல் புதிய கூட்டைப் பின்னத் துவங்கும். அப்போது 8 நாட்களில் அவை பின்னி முடிக்கிறது. கூட்டைப் பலப்படுத்தவும், தட்ப வெப்ப நிலையை சீராக வைக்கவும் ,பெண் களிமண் உருண்டைகளைக் கொணர்ந்து கூட்டின் உட்பகுதியில் பூசும். ஆணும் இப்பூச்சு வேலையில் பங்குகொள்ளும். அப்போது காதல் லீலைகளும் நிகழும். ஆண்மைக்கான நிரூபணமாக ,அழகாக களிமண் பூசும் ஆணையே பெண் விரும்புகிறது.

காரல் ஆண்டர்சன் நடத்திய தற்போதைய ஆய்வின் மூலமே இது தெரிய வந்திருக்கிறது. ஆணும், பெண்ணும் ஒரே சமயத்தில் பலருடன் உறவில் ஈடுபடும். ஆண், தனது மனைவியருக்காகப் பல கூடுகளைத் தயார் செய்து கொடுக்கும். சில சமயங்களில் தான் கட்டிய கூட்டிற்குப் பல பெண்களை அழைத்து வரும். இது பெண்களுக்கிடையேயான யுத்தத்தில் முடியும். அபூர்வமாக ஒரே கூட்டில் இரு பெண்கள் முட்டையிடும். 3--4 முட்டைகள் இடும். 14---20 நாட்கள் அடைகாத்தலுக்குப் பின் குஞ்சு வெளிவரும். பெண்ணே, குஞ்சைப் பராமரிக்கும். அவ்வப்போது ,ஆணும் உதவிசெய்யும். 6 மாத காலப் பராமரிப்புக்கு பின், குஞ்சுகள் தன் பெற்றோரைப் பிரிந்து தனி வாழ்க்கை மேற்கொள்ளும். ஒரு வருட வளர்ச்சிக்குப் பின் பருவம் எய்திய ஆணும், பெண்ணும் உறவுக்குத் தயாராகும். குறைந்தது 4 வருடங்கள் வாழும். உடலில் ஏற்படும் வர்ண மாற்றத்தின் மூலம் தாங்கள் பருவமெய்தியதை வெளிப்படுத்தும். காதலின் முதல் நிகழ்வாக ஆணும், பெண்ணும் இறக்கைகளை அடித்து ,மெல்லிய நடன அசைவுகளைப் பறந்தபடியே தரும்.

அபுல் ஃபசல் எழுதிய "அய்னி அக்பரி"யில் அக்பர் காலத்தில், கிளிகளைப் போல் இக்குருவிகளையும் மனிதர்கள் பிடித்து ,பயிற்றுவித்து ,சிறு வித்தைகள் செய்யப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.பயிற்சியாளன் குரல் எழுப்பியதும், கீழே உள்ள கூழாங்கற்களைக் கொத்தி எடுத்து வந்தும், அதே போல் ,கீழே கிடந்த காசை எடுத்து வந்து தந்ததையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். ஜோர்டன் என்ற ஆய்வாளர் 1926ல் தான் எழுதிய கட்டிட கலை தொடர்பான புத்தகத்தில் இதையே செய்திருப்பதுடன்,இவற்றை "சிறந்த கட்டிடக் கலைஞன் " என்ற புகழாரம் சூட்டுகிறார். 1924 ல் டாக்டர் டி.பி. பிளட்சர் எழுதிய "இந்திய தோட்டக் குருவிகள்" என்ற புத்தகத்தில் பஞ்சாபில் நிலவும் ஒரு பழங்கதையை மேற்கோள் காட்டுகிறார். ஒரு குரங்கு தூக்கணாங்குருவிகளைப் பார்த்துக் கேலி செய்து ,அதன் கூட்டைப் பிரித்து துரத்தி அடித்து, தன் உருவத்தோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தியதாம். அக்குருவிகள் பேசாமல் மெளனம் காத்தன. மழைக் காலம் வந்ததும், குருவிகள் தான் கட்டிய வீட்டில் நனையாமல் பத்திரமாய் இருக்க, குரங்கோ மழையில் நனைந்து வீடில்லாமல் ,உணவில்லாமல் வருந்தியதாம். " உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்ற அறநெறி அடிப்படையில் இக்கதை புனைவிக்கப்பட்டிருக்கிறது. மின்மினிப்பூச்சிகளை வெளிச்சத்திற்காக இவை பிடித்துச் சென்று தன் கூட்டில் வைத்துக் கொள்ளும் என்ற புனைவு நம்மிடத்தில் உள்ளது.

புற்றீசல் போல் தோன்றியுள்ள செல்போன் டவர் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகளின் கர்ப்பப்பை மட்டும் தாக்கப்படவில்லை. தூக்கணாங்குருவிகளின் கருவும் கலைந்து ,குருவிகளே அற்றுப் போகும் நிலைக்கு வந்துவிட்டது. வயல் வெளிகளில் தெளிக்கப்படும் கொடூரமான ரசாயன மருந்துகளும் இதன் உயிருக்கு உலை வைத்து விட்டது. தற்போதெல்லாம் தூக்கணாங்குருவிக் கூடுகளை எந்த ஊரிலும் எளிதாக காண இயலவில்லை... வருத்தமாக உள்ளது...

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா


நன்றி: உயிரோசை இணையம்

6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கதிர் வீச்சை கட்டுப்படுத்தும் உபகரணங்களை கண்டறிவந்து உயிரினங்களை காக்க வேண்டும்...

Kousalya Raj சொன்னது…

இந்த குருவியின் கூட்டை மரங்களில் பார்த்து ஆச்சரியபட்டதுண்டு...அதன் குடும்ப வாழ்க்கை, கூடு கட்டும் முறை போன்ற தகவல்களை உங்கள் தளத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

இவ்வளவு அற்புதமான பறவை இனங்களை காக்க முயற்சி எடுக்க வேண்டும்...

மிக நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

venusrinivasan சொன்னது…

மிக அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கீங்க. தூக்கணாங்குருவிகள் மிகவும் கலைநுட்பம் கொண்டவை மட்டும் அல்ல மிகவும் புத்திசாலிப் பறவைகள் என்கி்ன்றன நமது சங்க இலக்கியங்கள். இவைகள் தங்கள் கூடுகளை நீர்ப்பரப்பை நோக்கி தாழ்ந்து இருக்கும் மெல்லிய கிளைகளின் நுனியில் தான் அமைக்குமாம். அப்போது தான் பாம்புகளினால் முட்டைகளுக்குத்தொல்லை இருக்காதாம்.

Sarathy சொன்னது…

இக்கட்டுரையில் உள்ள இரண்டு துணுக்குகளை தொடர்பு படுத்திக் கூற விரும்புகிறேன்.... அதாவது அவை களிமண்ணை கூடு முழுவதும் பூசாது, மின்மினிபூச்சிகளை பிடித்து வந்து அந்த களிமண்ணில் ஒட்ட வைத்து விடும்.

மன்னை முத்துக்குமார் சொன்னது…

அரிய செய்திகள், அருமையான பதிவு..நன்றி. தொடருங்கள்.

கருத்துரையிடுக