வெள்ளி, டிசம்பர் 24, 2010

பசுமைப் புரட்சியின் கதை: பொய்களைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள்

முகலாயர்கள் சிறிய அளவில் நமது வேளாண்முறையை மாற்றியமைத்தார்கள். ஆங்கிலேயர்கள் அதைப் பெரிய அளவில் மாற்றியமைத்தார்கள். பிறகு சுதந்திர இந்தியாவின் அரசாங்க - தனியார் நிறுவனக் கூட்டணி இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோயிற்று. இந்திய வேளாண்முறையில் ஏற்பட்ட மாற்றத்தின் உச்சகட்டமாகப் பொய்களை விதைத்து வெற்றிகரமாக வளர்த் தெடுக்கப்பட்ட ‘பசுமைப் புரட்சி’யின் கொடுமைகளைப் பற்றித் தோண்டத் தோண்டப் புதிய உண்மைகள் கிடைத்தவண்ணம் உள்ளன. இத்தனை வன்முறையான ஒரு திட்டம் அரங்கேறி, இன்றும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்பதற்கு யார் காரணம்? ‘மொன் சாண்டோ’ என்று ஏதோ நமக்கும் அதற்கும் தொடர்பே இல்லாதது போல் கூறிவிட்டு நம் வேலையைப் பார்க்கப்போவதெல்லாம் இனி செல்லாது; பிரச்சினையை அர்த்தமுள்ள வகையில் தீர்க்கவும் உதவாது!

பள்ளிக்கூடக் கல்வி

தங்கள் பிள்ளைகள் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி, கடினமாக உழைத்து, ஆசிரியரை மகிழ்விக்குமாறு பாடப்புத்தகத்தில் உள்ள ‘பதில்களை’ வரி மாறாமல் ஒப்பித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றால், பாராட்டாமலிருக்கும் பெற்றோர் நம்மில் எத்தனை பேர் இருப்போம்? “ஐயா, புத்தகத்தில் அச்சாகியிருக்கும் தகவல் தவறு.” என்று அதில் இல்லாத வேறொரு தகவலை விடையாக எழுதி, அதனால் பெரிய முட்டை ஒன்றைப் பெற்று, ‘அதிகப்பிரசங்கி’ என்னும் பட்டத்தையும் தலையில் கட்டிக் கொண்டு பிள்ளை வீடு வந்து சேர்ந்தால், கோபித்துக் கொள்ளாமல் பெருமிதம் கொள்ளும் பெற்றோர் நம்மில் எத்தனை பேர் இருப்போம்?

1950-60களில் வேளாண்மைப் பாடநூல்கள் சில ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை நம் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாமென எச்சரித்து, இயற்கை வேளாண் அறிவைப் புகட்டியது பற்றி விரிவாகப் பார்த்தோம் (காண்க: இதழ் 110). ஆனால் அதற்கு நேரெதிராக, அதற்கடுத்த பத்தாண்டுகளில் (70களில்) வெளிவந்த பாடநூல்கள், பசுமைப் புரட்சியை வானளாவப் புகழ்ந்து பிரச்சாரம் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தன. பத்தே ஆண்டுகளில், ‘நமது விவசாயத் தொழில்நுட்பம் பின் தங்கியது. பஞ்சம் பசி பரவலாவதற்குக் காரணமானது. நவீன அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமே பெருகிவரும் மக்கள்தொகைக்குச் சோறு போட முடியும்!’ என்னும் பொய்யை அச்சிடத் தொடங்கிய காலம் அது! அன்றிலிருந்து இன்றுவரை, எந்தத் தடங்கலுமின்றி இந்தக் கதை கோடிக்கணக்கான தாள்களில் அச்சிடப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு, நாம் எல்லோருமே சாட்சிதான். இந்தக் கதையை விடைத்தாளில் எழுதி, உயிரியல் பாடத்தில் நான் முதல் மதிப்பெண்கூட வாங்கியுள்ளேன்!

இன்றைய பாடநூல்கள் இந்திய வேளாண்மையைப் பற்றி என்னதான் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கின்றன என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கினேன். எல்லா வகுப்பு ‘தமிழ்நாடு அரசின் அறிவியல் பாட நூல்’களையும் பக்கம் பக்கமாகப் புரட்டினேன். இவை அனைத்திலும் 13ஆம் பாடத் தலைப்பு ‘பயன்பாட்டு உயிரியல்’. மனிதன், மற்ற உயிரினங்களை எவ்வாறு கட்டுப்படுத்திப் பயன் படுத்திக்கொள்வது? நவீனத் தொழில்நுட்பத்தை அவனுக்குத் தேவையான ஒன்றாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது, இவையே இந்தத் தலைப்பின் முக்கிய உள்ளடக்கங்கள்.

‘அதிக மகசூல் தரும் நெல், கோதுமை மற்றும் இதர பயிர் வகைகள் இவ்வுலகின் பசிப்பிணியைக் குறைத்துள்ளன.’

‘மாலத்தியான், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லிகளைக் கிடங்குகளில் பயன்படுத்தலாம்.’

‘டையெல்ட்ரின், எண்டோசல்ஃபான், மாலத்தியான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதன் மூலம் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.’

எனப் பல பொய்களையும் அபாயகரமான செய்முறைகளையும் (எண்டோசல்ஃபான், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லிகள் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன!) இளம் மனங்களுக்குப் பரிந்துரைக்கிறது, ஏழாம் வகுப்பு நூல்.

ஆனால் பத்தாம் வகுப்புக்கு வந்ததும் எப்படியோ “இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் மண்ணுக்கும் உடல் நலத்துக்கும் நல்லதல்ல. அதனால் ‘நீடித்து நிற்கும் வேளாண்மை’ (sustainable farming) மற்றும் ‘சுற்றுச்சூழலுக்கு இசைவான விவசாயத்தை’ (eco-friendly farming) கடைப்பிடிக்க வேண்டும்” எனச் சொல்கிறது. படித்தவர்கள் கூறும் பசுமைப் புரட்சியின் கதைச் சுருக்கத்தை மேலும் சுருக்கி அச்சிட்டுவிட்டு, இந்தப் பாடநூல் தரும் சில பொய்யான தகவல்களைப் பார்ப்போம். (விவரங்களுக்குக் காண்க: பசுமைப் புரட்சியின் கதை அத்தியாயங்கள் இதழ் 118, 124,)

* அரிசியில் இரண்டு வகை உண்டு.

- பாரம்பரிய நெட்டை வகை. (இவை மிகக் குறைந்த மகசூலையே அளிக்கின்றன . . . இவை சூரிய ஒளியைத் திறமையாகப் பயன்படுத்த இயலாத வகையிலும் மண்ணிலிருந்த ஊட்டச் சத்துக்களைத் திறனுடன் பெற இயலாத வகையிலும் உள்ளதால் . . .)

- அதிக மகசூல் தரும் குட்டை வகை.

* கலப்பினத் (hybrid) தாவரங்கள்... நோய், பூச்சி, வறட்சி எதிர்ப்புத் திறனை அதிகம் பெற்றுள்ளன.

பல தரப்பட்ட எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வைட்டமின் கி பொருத்தப்பட்டுள்ள மரபணு மாற்றப்பட்ட ‘தங்க அரிசி’யைக்கூட இந்தப் பாடம் சர்வ சாதாரணமாக முன்னிறுத்துகிறது.

‘ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு, 40 கி தழைச்சத்து (N), 20 கி மணிச்சத்து (P), 20 கிலோ சாம்பல்சத்து (K) கொண்ட உரம் தேவைப்படுகிறது’ என்னும் கணக்கையெல்லாம் கொடுத்து, மண்வளம் என்பது ஏதோ சோதனைக் குழாயில் ரசாயனங்களைச் சேர்த்து உருவாக்குவது என்பது போன்ற தவறான கொள்கைகளைப் பிஞ்சு மனங்களில் திணிக்கிறது.

இன்று வேளாண் துறையின் அடிப்படையாக இருந்துவரும் ‘NPK’ கோட்பாட்டை முன்வைத்த வேதியியலாளர் வான் லீபிக்கூடத் தனது தவறான அணுகுமுறைக்காகத் தனது கடைசிக் காலத்தில் வருந்தினார். “நம்மை உருவாக்கிய படைப்பாளியின் பேரறிவுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்.” என நேர்மையாக வாக்குமூலம் தந்த அவர் இப்படிக் கூறியிருக்கிறார்:

“அறிவுக்கூர்மையும் உயிர்த் துடிப்பும்கொண்ட வேளாண்மைக் கோட்பாடுகளின் அழகை நாம் அங்கீகரிக்கத் தவறிவிட்டோம். அறியாமை நிறைந்த, அறிவியலுக்குப் புறம்பான, குறுகிய நோக்கம்கொண்ட ஆசிரியர்கள் உலகளாவிய தீர்வுகளைக் கைக்கொள்ளும் படி விவசாயியைத் தூண்டுவதன் மூலம் வேளாண்மை என்னும் கலை காணாமல் போய்விடும். உலகளாவிய தீர்வு என்ற ஒன்று இயற்கையில் இல்லை. இந்த அறிவுரையைப் பின்பற்றி, தற்காலிக வெற்றியால் கண் மறைக்கப்படும் விவசாயி மண்ணைப் பற்றியும் தனது பாரம்பரிய மதிப்பீடுகளையும் அவற்றின் தாக்கங்கள் பற்றியும் மறந்துவிடுவார்”.

இந்த உண்மையை அந்தப் பிஞ்சு மனதுக்குப் புரியவைக்கும் பொறுப்பு யாருடையது?

இவற்றையெல்லாம் தாண்டி, பதினொன்றாம் வகுப்பு தொழிற் கல்விப் பாடத்தில் ‘வேளாண் செய்முறைகள்’ என்னும் பகுதிக்கு வந்தேன். ‘இந்திய வேளாண்மை வரலாறு மற்றும் எழுச்சி’ என்னும் முதல் பாடத்தைப் படித்துப்பார்த்த போது, அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை! கி. மு. 1500 கற்காலம், உலோகக் காலம், சோழர் காலம், திருவள்ளுவர் காலம் என்று ஒரு சில பக்கங்களுக்கு எழுதிவிட்டு, நேரடியாக ஆசிரியர் குழு 1943இல் வங்காளப் பஞ்சத்திற்குத் தாவிவிடுகிறது. இதையும் சில வரிகளில் கூறிவிட்டுப் பசுமைப் புரட்சியின் ‘சாதனைக’ளைப் பெருமையாகப் பட்டியலிடுகிறது. அது நடுவில் கழிந்த 3,400 ஆண்டுகளும் ‘நம் விவசாயி ஏதோ அறியாமையில் மண்ணைச் சுரண்டிக்கொண்டு, பரிசோதனைகளைச் செய்து, பெரிதாக எந்தப் பலனும் கிடைக்காமல், வெள்ளைத் தோல் விஞ்ஞானிகளின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தான்!’ என்றுதானே சராசரி மாணவன் மனத்தில் பதியும்? இதைத்தான், ரசாயன இடு பொருட்களைத் தயாரித்த யூனியன் கார்பைட் வெளியிட்ட ஆணவமான இந்த விளம்பரம் காட்டுகிறது.

அதற்கடுத்த பாடங்களில், மிகவும் சர்ச்சைக்குள்ளாகிய ‘மரபணு மாற்றுத்’ தொழில்நுட்பம், ஏதோ பிரச்சினையே இல்லாத, சுலபமாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுவரும் சாதாரண ஒரு தொழில்நுட்பத்தைப் போன்று எழுதியுள்ளனர்.

‘நவீன அறிவியல் முறையான மரபணு மாற்றத்தின் மூலம் பயிர்களின் அளவும் தரமும் மேம்படுத்தப்பட முடியும்’ என்னும் வாக்கியத்தை திரும்பத் திரும்பச் சொல்லிப் பாருங்கள்! சரியாக இருக்குமோ எனத் தோன்றும்.

கல்லூரிக் கல்வியும் வேளாண் ஆராய்ச்சியும்

பள்ளிக்கூடப் புத்தகங்களே இவ்வளவு சேதம் செய்யும்போது, தனியார் நிறுவனங்கள் தங்கள் கைகளுக்குள் போட்டுக்கொண்டிருக்கும் ‘கல்லூரிக் கல்வி’யைப் பற்றிக் கேட்கவா வேண்டும்!? இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு சார்ந்த முன்முயற்சி (India-US Agriculture Knowledge Initiative) ஒப்பந்தம் ஒன்று இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் நிர்வாக அமைப்பில் இடம்பெறும் முக்கிய நிறுவனங்களுள், அமெரிக்கத் தனியார் வேளாண் நிறுவனங்களான மொன்சாண்டோ, சிஞ்சென்டா, கார்கில் ஆகியவை உள்ளன. நம் நாட்டின் அனைத்து வேளாண் பல்கலைக் கழகங்களில் எத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமென இந்த நிறுவனங்களே முடிவு செய்யும். அது மட்டுமல்ல. இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளை எப்படித் தங்களுக்குச் சாதகமான விதத்தில் முன்வைப்பது, எவ்வாறு ‘அதற்கேற்ற’ புள்ளிவிவரங்களைத் தயாரிப்பது என்பதில்கூட நல்ல பயிற்சி கிடைக்கும். கொடுத்த பதில்களை உருப்போட்டு, பெரியோர்களிடம் நல்ல பெயர் வாங்க வைத்து, இளம் மனங்களை இத்தகைய வேலைக்கு நாம் ஏற்கனவே தயார் செய்துவிடுகிறோமே!

சென்ற மாதம் கோவையில் ஒருநாள் கூட்டம் போட்ட ‘விவசாயிகள் விடுதலைப் பயணிகள்’ பல விவசாயிகளிடமிருந்து பணம் சேகரித்துத் தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகத்திடம் “நாங்கள் உங்களுக்குப் பணம் தருகிறோம்! எங்களுக்காக ஆராய்ச்சி மேற்கொள்ளுங்கள்!” என்று கோரிக்கை விடுத்தனர்.

“இத்தகைய கல்வியை உள்வாங்கிய பின், அரசாங்கத்தில் மேசையில் உட்கார்ந்துகொண்டு எப்படிக் கைநிறையச் சம்பளம் வாங்கலாம் என்பதுதான் பட்டதாரிகளின் ஒரே குறிக்கோளாக உள்ளது” (காண்க: இதழ் 105) என்று வோல்கர் நம் வேளாண் பல்கலைக்கழகத்தின் போக்கைப் பற்றிக் கூறி நூற்றாண்டுக் காலம் கழிந்துவிட்டது! இன்றைய இளைய தலைமுறை, அடிப்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டங்கள் பெற்றுத் திருப்தி அடைவதில்லை. இவற்றைக்கொண்டு கம்பெனிகளை எவ்வாறு அதிகபட்ச லாபத்தைச் சம்பாதிக்கச் செய்யலாம் என்னும் கலையை எம்.பி.ஏ. பட்டப் படிப்பின் மூலம் கற்பதற்காகப் பிசினஸ் கல்லூரிகளுக்குப் படையெடுக்கின்றனர். உணவு மற்றும் வேளாண் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன எனப் பெற்றோர்கள் கருதுகிறார்கள். இவர்கள் பார்வையில் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு என்றால் நிலத்தில் வேலை செய்வது அல்ல. வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சிகள் முதலான பணிகள்.

இந்தியப் பாரம்பரிய வேளாண்மை பற்றி எதுவுமே தெரியாமல் பசுமைப் புரட்சி பற்றிய கதைகளையும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் குறித்த பசப்புகளையும் படித்து மூளைச்சலவையாகி வெளியில் வரும் பள்ளி மாணவர்களில் பலர், லாபம் சம்பாதிக்கும் இலக்கைக்கொண்ட கல்லூரி மாணவர்களாக மாறுகிறார்கள். ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒத்துழைத்து நல்ல ‘பதவி’களை எட்டிப்பிடித்து வசதியாக அமர்ந்துகொள்ளும் விஞ்ஞானிகளாகி விடுகின்றனர். இப்படிப்பட்ட ‘விஞ்ஞானி’கள் எப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, எப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவர் என்பதற்கு ஆதாரமான சமீபத்திய செய்தி ஒன்றைப் பார்ப்போம்.

மரபணு மாற்றுக் கத்திரிக்காயை (பி.டி. கத்திரிக்காய்) அனுமதிப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் நாட்டின் தலைசிறந்த ஆறு அறிவியல் கல்வி அமைப்புகளை (இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸஸ், த இந்தியன் நேஷனல் அகாடமி ஆஃப் இஞ்சினியரிங், த இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி, த நேஷனல் அகாடமி ஆஃப் அக்ரிகல்சுரல் சயின்ஸஸ், த நேஷனல் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ், த நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்) இவ்விஷயத்தில் பாரபட்சம் அற்ற அறிவியல்பூர்வமான அறிக்கையைத் தயார் செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் கேட்டுக்கொண்டார். ஆறு மாதங்கள் கழிந்து செப்டம்பர் மாதம் வெளியான அவர்களின் அறிக்கை ‘பி. டி. கத்திரிக்காயை உடனடியாக வெளியிட வேண்டும்!’ என்னும் முழக்கத்தை முன்வைத்தது. அறிவியல்ரீதியான எந்த ஆதாரமும் இல்லாத இந்த அறிக்கையை ஜெயராம் கிட்டத்தட்ட தூக்கி எறிந்துவிட்டார்! விஞ்ஞானிகள் உட்படப் பல தரப்பினராலும் இந்த அறிக்கை மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. மரபணு மாற்றுப் பயிர்களை ஊக்குவிக்கும் தனியார் ஒருவரின் அறிக்கையிலிருந்து 60 வாக்கியங்கள் இந்த அறிக்கையில் அச்சு அசலாக நகல் செய்யப்பட்டிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர். நம் நாட்டின் அறிவியல் துறை மிகவும் கீழ்த்தரமாக விலைபோய்விட்டது என்பதற்கு இதற்கு மேல், வேறெந்த ஆதாரமும் தேவையில்லை!

ஊடகங்கள்

ஊடகங்களின் நிலையும் அதே கதைதான். எந்த ஊடக நிறுவனம் யாருக்கு விலைபோயிருக்கிறது என்பதைத் தெரிந்துவைத்துக் கொண்டுதான் இப்போதெல்லாம் செய்தியைப் படிக்க வேண்டியிருக்கிறது. சென்ற ஆண்டு பி.டி. கத்திரிக்காய்க்கு எதிரான பிரச்சாரம் நடந்த சமயத்தில், த ஹிந்து நாளிதழ் அப்பிரச்சினை குறித்து இவ்வாறு தலையங்கம் எழுதியது: பி.டி. பருத்தி விஷயத்தில் விவசாயிகள் பலன் பெற்றது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்திச் செலவு குறைந்து விளைச்சல் அதிகரித்தது... மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மீது ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கும்படி வாதிடுவது அறிவியலுக்குப் புறம்பானதும் அபாயகரமானதுமாகும். மரபணு மாற்றம் எழுப்பும் கேள்விகளுக்கு மேம்பட்ட அறிவியல்தான் விடையாகுமே தவிர, பகுத்தறிவுக்குப் புறம்பான அச்சங்களின் அடிப்படையில் எழும் மாற்றத்துக்கு எதிரான போராட்டம் அல்ல.’

“பி.டி. கத்திரியின் அபாயங்களைப் பற்றிய எங்கள் தகவல், போராட்டம் பற்றிய அறிவிப்பையும் செய்தியையும் வெளியிடுவீர்களா?” எனப் பல முறை கேட்டுக்கொண்டும் அரசாங்க அலுவலகத்தில் பந்தாடப்பட்டது போல் அலைக்கழிக்கப்பட்ட அனுபவம் போராளிகள் சிலருக்கு உண்டு! மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அறிவியல் ஆதாரங்கள் உலகம் முழுவதிலும் பலராலும் முன்வைக்கப்பட்டபோதிலும் இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான கருத்தை ஒரு நாளிதழ் எழுதினால் நமக்கு என்ன தோன்றும்? மாற்றுக் கருத்துகளுக்கு இடம் கொடுக்காத அளவுக்கு மரபணு மாற்றுப் பயிர்களை ஆதரிக்கும் இந்தச் செய்தித்தாளை யார் விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள் எனும் கேள்வி எழத்தானே செய்யும்?

மேலும், பி.டி. பருத்தியின் ‘அமோக விளைச்சலை’ப் பற்றியும் அதனால் ‘விவசாயிகள் பணக்காரர்களானது’ பற்றியும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளிவரும் செய்திகள் சிலவற்றை அலசிப் பார்க்கையில், இந்தச் சந்தேகம் தெளிவானது. சில உதாரணங்கள்: “The rise of Bt-cotton (ஜனவரி 29, 2008), Bt cotton boosts farmers’ income (ஜனவரி 12, 2008) ஆகிய இரண்டு செய்திகளும் பொருளாதார, சமூக ஆய்வு மையத்தின் (Centre for Economic and Social Studies - CESS) அறிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த அமைப்புக்கு நிதியுதவி அளிப்பவை ஃபோர்டு, ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன்கள், யு.எஸ்.எய்ட் (US AID), உலக வங்கி.

‘பி.டி. பருத்தி விவசாயிகளுக்கு அதிக விளைச்சல்’ Bt cotton farmers get more returns (ஜனவரி 29, 2008) என்று எகனாமிக் டைம்ஸில் வெளியான செய்தி, தார்வாட் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிடுகிறது. அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நிதியுதவி அளிப்பது மான்சாண்டோ.

அக்டோபர் மாத Outlook ஊடகங்களின் ஊழலைப் பற்றி எழுதிக் கிழித்துத் தள்ளியிருப்பது போல், ‘யாரெல்லாம் (தங்கள் மன சாட்சிகளை மௌனமாக்கிவிட்டு) பணம் தருகிறார்களோ அவர்கள் சொல்வதை அப்படியே அச்சிடத் தயாராக இருக்கின்றன இன்றைய ஊடகங்கள்!’ இந்த இதழில் இடம் பெற்றுள்ள நோம் சாம்ஸ்கியின் நேர்காணலில் இதை அழகாக விளக்குகிறார்.

கேள்வி: ‘சர்வாதிகாரத்துக்கு வன்முறை என்றால் ஜனநாயகத்துக்குப் பிரச்சாரம்’ என்று ஒருமுறை நீங்கள் சொன்னீர்கள். பிரச்சாரம் மக்களின் மன உறுதியைக் குலைத்து அரசியல்ரீதியாக முடிவெடுக்கும் திறனை மழுங்கடிக்கும் திறனை மேட்டுக்குடியினருக்குத் தருகிறதா?

பதில்: அதுதான் அதன் இலக்கு என்பது தெளிவு. இது வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 1920களில் பிரச்சாரம் சாதாரணமான விஷயமாகத்தான் இருந்தது. 1930களில் நாஜிகள் தலையெடுத்த பிறகு பிரச்சாரம் என்னும் வார்த்தையில் குருதி மணம் ஒட்டிக்கொண்டுவிட்டது. எனவே அதைப் பிரச்சாரம் என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் 1920களில் அப்படி இல்லை. மக்கள் தொடர்புத் துறை மக்களின் போக்குகளையும் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துவதைத் தன் இலக்காகக் கொண்டிருந்தது. தாராளப் போக்குகளுடைய கொண்ட வால்டர் லிப்மேன் போன்ற சிந்தனையாளர்கள், முடிவெடுக்கும் செயல்பாட்டிலிருந்து மக்கள்திரளை விலக்கிவைக்க வேண்டியது பற்றிப் பேசியிருக்கிறார். நாம்தான் பொறுப்புள்ள மனிதர்கள், நாம்தான் முடிவெடுக்க வேண்டும். எனவே ‘ஆட்டுமந்தைகள் போன்ற மக்கள் கூட்டத்திலிருந்து’ நாம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயக நடைமுறையில் நாம்தான் பங்கேற்பாளர்கள். அவர்கள் பார்வையாளர்கள். அவர்கள் அமைதியாகவும் கீழ்ப்படிதலுடனும் இருப்பதை உறுதிசெய்வது அறிவுஜீவிகள், ஊடகங்கள் ஆகியோரின் பணி என்று பேசியிருக்கிறார். இதுதான் லிபரலின் பார்வை. இந்தப் பொருளில் ஊடகத் துறையும் லிபரல்தான் என்பதில் சந்தேகமில்லை.

o

பிரச்சினையை அலசியது போதும்! ‘உணவு கிடைப்பது, விவசாயிகளின் நலம், நம் உடல்நலம், கல்வி , மண்வளம், சுற்றுச்சூழல், பாரம்பரியச் சொத்து, சமுதாயம், அரசாங்கம், அரசியல், விஞ்ஞானம் அனைத்தும் இத்தனை சிக்கலாக ஒரு வலைக்குள் மாட்டிக்கொண்டிருக்கின்றன. இவற்றை மீட்க முடியுமா?’ என்னும் கேள்வி நம் மனத்தில் எழத்தான் செய்யும். உங்கள் குழந்தைகளின், நெருங்கிய உறவினர் களின் பிறந்தநாளின்போது ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று மனப்பூர்வமாக வாழ்த்துவதில் உங்களுக்கு விருப்பமும் நம்பிக்கையும் இருந்தால், உங்களுக்கு இந்தச் சிக்கலான வலையிலிருந்து நமது சமுதாயத்தை மீட்க முடியும் என்னும் நம்பிக்கை இருந்தே ஆக வேண்டும்.

-சங்கீதா ஸ்ரீராம்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

NICE AND TRUTH TOOO... MOST OF THE ISSUES DEALT BY HINDU IS LIKE THIS.. I DONT KNOW WHAT THOSE PEOPLE GOING TO ACHIEVE BY THESE KIND PIMPING...

பெயரில்லா சொன்னது…

±ô§À¡Ð§Á †¢ñÎ °¼¸ Å¢Àº¡Ãõ ¦ºöÔõ ±ýÀÐ º¢Ä ÌÈ¢ôÀ¢ð¼ «È¢Å¢ ƒ£Å¢¸¨Ç ¾Å¢Ã «¨ÉÅÕìÌõ ¦¾¡¢Ôõ. ¿øÄ À¾¢×.

பெயரில்லா சொன்னது…

rain rain go away பாடுகிறார்கள்.கலிகாலம்

கருத்துரையிடுக