வெள்ளி, செப்டம்பர் 24, 2010

மிரட்டும் தார் உருண்டைகள்!! ----மாசாகும் கடல் பகுதி

"உலகிலேயே மிக நீளமான கடற்கரைகளைக் கொண்ட இந்தியா, மேற்கத்திய நாடுகளையும், அண்டை நாடுகளையும் பொறாமை கொள்ளச் செய்கிறது. அதிகளவு கப்பல் போக்குவரத்தும், அந்நியச் செலாவணியும் ஈட்டித் தரும் கடல் சார் அமைப்பை உடைத்தெறியும் நோக்கோடும், கோட்பாடுகளை வகுத்து அவை இயங்கி வருகின்றன. இந்நிலையில், இவற்றின் அருமை பெருமை பற்றியும் , பாதுகாப்புத் தன்மை குறித்தும், சிறிதளவு அக்கறையோ, அறிவோ கூட இல்லாமல் அரசுத் துறை மெத்தனமாக இயங்கி வருகிறது". இவ்வாறு நான் கூறவில்லை, நமது சுப்பிரமணிய சுவாமி டெல்லியில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் ஒரு பாகம் இது. அவர் கூறிய வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மையானவை என நிரூபிக்கும் அளவு சம்பவங்கள் நடந்தவாறு உள்ளன. சமீபத்தில் கோவா கடற்கரையில் "மிதந்த தார் உருண்டைகள்" இப்படியான நிகழ்வு. இதை அரசு துறை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது. ஊடகங்கள், சூழலியலாளர்களின் தொடர்ச்சியான அழுத்தமும் , பொது மக்களின் எதிர்ப்பும் மத்திய அரசையும் ,மாநில அரசையும் பிரச்சினை நோக்கி திரும்ப வைத்துள்ளது.

சென்ற மார்ச் மாதம் துவங்கி , டன் கணக்கில் தார் உருண்டைகள் கோவாவின் கடற்கரையில் முக்கிய பிரதேசங்களில் ஒதுங்கத் துவங்கியது. தெற்கு கோவா கடற்கரை மற்றும் வடக்கு கோவாவின் சில பகுதிகள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின. உருண்டைகளின் வரத்து இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கப்பல் படை ,துறைமுக காவல் படை,மற்றும் கடலியல் அறிவியலாளர்கள் தங்கள் மூளையைக் கசக்கி தீர்வு காண விரைந்துள்ளனர்.


இனி வரும் கால கட்டத்திலாவது இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கோல்வா, பீட்டல் பாட்டிம், சென்னாபாட்டிம், சிகுரிம் மற்றும் காண்டோளம் போன்ற புகழ்வாய்ந்த கடற்கரைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறையின் டைரக்டர் சுவபில் நாயக் ,அரசின் மெத்தனப் போக்கைப் பிரதிபலிக்கும்படி , "இது எப்போதும் நடக்கும் சாதாரண நிகழ்வு தான் , பத்திரிகைகள் தான் பெரிது படுத்துகின்றன " என்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் நீல் காந்த் ஹாலான்கரின் உத்தரவுப்படி ,லாரிகளில் சேமிக்கப்படும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் உருண்டைகள் மிதந்து வருகின்றன. இந்நிகழ்வு கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகின்றது.


இந்த வருடம் அதிகளவு உருண்டைகள் மிதந்து வருவது சுற்றுலாத்துறையை நிச்சயம் பாதிக்கும். இதற்குப் பின்னணியில் ஏதேனும் நாசகார சக்தி இருக்கலாம் என்கிறார் நேஷனலிஸ்ட் பார்ட்டி தலைவர். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓசனோகிராபி (NIO) பல திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளது .யாருக்கும் தெரியாமல் இந்தியக் கடல் பகுதிகளில் சில கப்பல்கள் கழிவு எண்ணையைக் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றன. போதுமான கருவிகளோ பாதுகாப்பு திறமையோ இல்லாமையே இத்தகைய செயல்கள் செய்ய அவர்களுக்குத் தைரியம் தருகிறது. குறைந்தபட்சம் இந்த தார் உருண்டைகளால் கடல் பகுதிக்கு எந்த பாதிப்பும் வராமல் NIO பார்த்துக் கொள்ளும் என அக்கறையோடு கூறும் ஒரே மனிதராக காட்சி தருகிறார் இதன் டைரக்டர்.

சாக்லேட் படிமம் போல நீரின் மேலே பாய் விரித்தாற் போல இவை பரவுகிறது. 6" தடிமனும் ,15 செ.மீ நீளமும் கொண்ட இவை ஒட்டும் தன்மை, நீட்சித் தன்மை கொண்டு காற்றாலும் ,அலையாலும் தள்ளப்படும் போது பல துண்டுகளாகவும் ,உருண்டைகளாகவும் மாறி விரவிப் பரவுகின்றன. இதன் மேல் பகுதி எண்ணையானது ,மிக லேசாக உள்ளதால் ஆவியாகிவிடுகின்றது. அடிப்பகுதி மட்டும் தேக்கம் கொள்கிறது. கடலின் ஆக்ஸிஜன் பரிமாற்றம் இதனால் முற்றிலும் தடைபடுகிறது. பற்றாக்குறைக்கு கடலின் மேல்புறம், எண்ணை ஆவியாவதால் பனி போல் காற்றுடன் கலந்து மூடிக் கொள்கிறது. இதனை சுவாசிக்கும் மனிதர்கள் சுவாச நோயால் பாதிக்கப்படுகின்றனர்.


பறவைகள், எண்ணை பிசுக்கில் மாட்டிக் கொண்ட ,விஷம் தோய்ந்த மீனை உண்ணுவதால் பார்வை இழப்பு ,தோல் நோய், அஜீரணக் கோளாறு போன்ற கூடுதல் பாதிப்பால் கொத்துக் கொத்தாக இறந்து விடுகின்றன. பறவைகள் மட்டுமல்ல, பெரும் பாலூட்டிகள்,அறிய கடல் சார் உயிரினங்கள் ,பவளப்பாறைகள் , தாவரங்கள் என பட்டியல் நீண்டு இயற்கை சங்கிலி முற்றிலும் அறுந்து போகும் நிலை உருவாகி உள்ளது.

தார் உருண்டைகள் என்றால் என்ன? இவை ஏன் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்? குரூட் ஆயில் எனப்படும் சுத்தம் செய்யப்படாத எண்ணையிலிருந்து பென்சீன் எடுக்கப்படுகிறது. இது விமானங்களுக்கு எரிப்பொருளாக பயன் படுத்தப்படுகிறது. இந்த பென்சீனிலிருந்தே பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக ,ஹை ஸ்பீட் டீசல் தயாரிக்கப்படுகிறது. இது வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயனாகிறது. இதன் அடுத்த நிலையே மெரைன் டீசல் ,கப்பல்களுக்கு இவையே தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது . இதன் உப பொருளாக மண்ணெண்ணை வருகிறது. இதிலிருந்து ஹெவி ஆயில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதிகளவு "பாய்லர் " எனப்படும் எரிகொல்கலன்கள் சூடேறப் பயன்படுகிறது. மேலும் நீராவி என்ஜின்கள் பொருத்தப்பட்ட கப்பல்கள் ,ஒருசில ரயில் என்ஜின்களிலும் இது பயன்படுகிறது. இவை கிட்டத்தட்ட திட நிலையிலேயே காணப்படும். 120 டிகிரி சூடான பின்னரே கப்பல்களுக்கும், இன்னபிறவற்றிற்கும் உபயோகம் ஆகிறது. இதற்குப்பிறகு பியூரிபிகேஷன் என்ற சுத்தப்படுத்தும் சுழற்சிக்குப்பிறகு , பிஸ்டன் என்ஜின் பொருத்தப்பட்ட மோட்டார்களுக்கு உபயோகிக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் கழிவே தார் உருண்டைகள். சில நாடுகள் இவைகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. உதாரணமாக சீனா. இது தங்கள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களில் உள்ள தார் உருண்டைகளை விலை கொடுத்து வாங்கி அங்குள்ள தொழிற்சாலைகளின் எரிபொருளாக மாற்றுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் ,கப்பல் உரிமையாளரிடம் காசும் வாங்கிக் கொண்டு தார் உருண்டைகளையும் பெற்றுக் கொண்டு ,அவைகளை பாலைவனத்தில் கொண்டு போய் அழிக்கிறது. இந்திய நிலைமை இன்னும் மோசமானது. நாம் வாங்குவதுமில்லை, விற்பதுமில்லை. இந்த கழிவு எண்ணை உபயோகம் உள்நாட்டில் இல்லாதது பெரும் குறை.மேலும் சிறிய கப்பல்கள் யாருக்கும் தெரியாமல் கடற்கரையில் கொட்டிவிட்டுச் சென்று விடும். பொதுவாக இந்த எண்ணை உருண்டையை எரித்து சாம்பலாக்கும் வசதி கப்பல்களில் பொருத்தப்படவேண்டும் என்பது விதி. பல கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பதால் பல கப்பல்களின் உரிமையாளர்கள் இதைப் பொருத்துவதே இல்லை.

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் கடலில் , ஏதேனும் எண்ணை கசிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காக ,கடுமையான சோதனை அமைப்புகளையும், விதிகளையும் ,அமைத்தும் ,செயற்கைக்கோள் முலம் கண்காணித்தும் வருகின்றன. இந்தியாவில் நேற்றுவரை இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை. அதை நடுவண் அரசும் ஒரு கருத்தாகக் கொள்ளவில்லை போல் தெரிகிறது. இதைத் தவிர பல கப்பல்கள் நம் நாட்டு எல்லையைக் கடக்கும் போது ,குப்பைகளையும் கொட்டிவிட்டு, சென்றுவிடுகின்றன. இதனால் பல "பீச்சுகள் " துர்வாடை அடிக்கும் சுற்றுலாத் தளமாக குறைப்பட்டுப் போனது. மேலும் கொள்ளை, கற்பழிப்பு ,கடத்தல் போன்ற குற்றங்களும் நம் கடற்கரையில் நடப்பது அதிகரித்துள்ளது.

சென்ற மாதம் கோவா கடற்கரையில் பூனே மாநில இளம் தம்பதியினரிடம், இரு ஆங்கிலேயரிடமும் , துப்பாக்கி காட்டி மிரட்டி ,ரூ 15,000 ,இரு சக்கர வாகனமும் பிடுங்கப்பட்டன. காவல் துறை தூங்கியவாறே உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை சுமார் 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் சுற்றுலா மேற் கொள்வர். அதில் அரை மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள். இவர்கள் மூலமான அந்நியச் செலாவணி மொத்த வரவில் 16 சதவீதம் என்கிறார் ஜூடித் அல்மெடா. அவர் கோவா சோஷலிஸ்ட் ஒர்க்கர் அமைப்பைச் சேர்ந்தவர்.

நமது சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இனி பீச்சுகளும் ,துறைமுகங்களும் ,கடுமையான ஆய்விற்கும் ,பாதுகாப்பிற்கும் உட்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்தியப் பரப்பில் 50 சதவீதத்திற்கு மேல் உள்ள கடல் பகுதி "மாசுபடுமேயானால் " நம் அழிவு நிச்சயம். இதை உறுதிப்படுத்தி உள்ளார் கப்பல் படை தளபதி.இந்தியர்கள் அனைவரும் இதை நினைவில் கொள்வோமா?

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
(kannan233@gmail.com)

நன்றி: உயிர்ம்மை இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக